பிரேத பரிசோதனைகளை விரைவில் நிறைவு செய்வதற்காக புதிதாக மரண விசாரணை அதிகாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பல மாதங்களாக மருத்துவமனைகளில் உள்ள சடலங்களை கொண்டுச்செல்வதற்கு யாரும் முன்வராமல் இருப்பதன் காரணமாக, சடலங்கள் குவிந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு உயிரிழப்பவர்களின் உறவினர்கள் வெளிநாடுகளில் இருப்பதாலும், தவறான தகவல்கள் வழங்கப்படுவதாலும், இறந்தவரை அடக்கம் செய்ய நிதி வசதிகள் இல்லாததாலும், சில உறவினர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வருவதாலும் தற்போது மருத்துவமனைகளில் உள்ள சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
எனவே, இதனை கருத்திற்கொண்டு கொழும்பு, தெஹிவளை, கல்கிஸை, கோட்டை, மொரட்டுவை உள்ளிட்ட மேல்மாகாணத்தில் உள்ள பல நகரசபைகளில் இலவசமாக உடல்களை தகனம் செய்யும் திட்டமொன்று செயற்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.