கடந்த ஏப்ரல் மாதம் முதல் மக்கா மற்றும் மதீனாவில் உள்ள புனித தலங்களுக்கான பாதுகாப்பு கடமையில் பெண் இராணுவ சிப்பாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மெக்காவில், உலகெங்கிலும் இருந்து வரும் இஸ்லாமியர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் இடத்தில், சீருடையணிந்த பெண் இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டுவரும் நிலையில், சவூதி அரேபிய இளவரசருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மக்காவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டவர்களுக்கு யாத்திரை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை.
இதேவேளை, சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், அங்கு பல்வேறு மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக சவூதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கான தடையை நீக்கியதுடன்,பெண்கள் தங்கள் பாதுகாவலர்களின் அனுமதியின்றி தனியாக பயணம் செய்ய அனுமதியும் வழங்கப்பட்டது.
மேலும், குடும்ப விவகாரங்களில் அதிக உரிமை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்துள்ளார்.