Our Feeds


Friday, July 2, 2021

www.shortnews.lk

ஒரு இலட்சம் KM வீதி நிர்மாணப் பணிகள் வேலைத்திட்டத்தை தொடர்ந்து செயற்படுத்தி வருகின்றோம். - பிரதமர் மஹிந்த

 

 


கொவிட் தொற்றை காரணம் காட்டி நாம் இல்லை, முடியாது என்றிருந்தால் மக்கள் இதனைவிட பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (02) அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார்.


445 மில்லியன் ரூபாய் மற்றும் 127 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கபுதுவ பரிமாற்ற நுழைவாயில் மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலையின் முன்னால் சுரங்க வழி பாதசாரிகள் கடவை ஆகியவற்றை திறந்து வைத்த கௌரவ பிரதமர், 4999 மில்லியன் ரூபாய் செலவில் கோட்டை லோட்டஸ் வீதியில் 17 மாடிகளை கொண்டதாக நிர்மாணிக்கப்படும் 'கடல்சார் வசதி மையத்தின்' நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துவைத்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.


கபுதுவ பரிமாற்றத்தின் நிர்மாணப் பணிகள் 5 மாதங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் நிறைவுசெய்யப்பட்டமை விசேடம்சமாகும். பேராதனை சுரங்க வழி பாதாசாரிகள் கடவை 12 மாதங்களில் நிறைவுசெய்யப்பட்டது. இன்று நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட கடல்சார் வசதி நிலையத்தை 24 மாதக் காலப்பகுதிக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகிறது.


இதன்போது கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,


நாம் நாட்டின் அபிவிருத்தி குறித்து கதைக்கும்போது அந்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சாலை அமைப்பு குறித்து விசேட கவனம் செலுத்துவோம்.


அதேபோன்று உள்நாட்டு உற்பத்தி பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டுமாயின் நிச்சயமாக நாட்டின் சாலை அமைப்பை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதிவேக நெடுஞ்சாலை அமைப்பின் வசதியை அனுபவிக்கும் மக்கள் அதனை நன்கு அறிவார்கள். அன்று கஷ்டமான பிரதேசங்கள் என கைவிடப்பட்ட எத்தனை கிராமங்கள் இந்த அதிவேக நெடுஞ்சாலை அமைப்பின் ஊடாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன? அந்த மக்கள் இன்று வைத்தியசாலைக்கு செல்வது, தமது அறுவடைகளை விற்பனை செய்வது, நகருடன் தொடர்புபடுவது அனைத்தும் இந்த அதிவேக நெடுஞ்சாலை ஊடாகவாகும்.


அதுமாத்திரமன்றி பல தசாப்தங்கள் காணாத அபிவிருத்தியை கிராமத்திற்கு கொண்டு செல்வதற்கான ஒரு மார்க்கமாக மக்கள் இந்த அதிவேக நெடுஞ்சாலை அமைப்பை காண்கின்றனர்.


இன்று மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ள தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கபுதுவ பரிமாற்றம் ஆரம்ப திட்டத்தில் காணப்படவில்லை. அம்மக்கள் தொடர்ந்து பரிமாற்ற நுழைவாயில் கோருவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அமைச்சர் லன்சாவுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்து என்னிடம்; தெரிவித்தார்.


அதனால் இது தொடர்பில் ஆராய்ந்து அப்பிரதேச மக்களின் தேவையை நிறைவேற்றுமாறு தெரிவித்தோம். எவ்வித சொத்து கையகப்படுத்தலையும்; மேற்கொள்ளாது இன்று அம்மக்களின் எதிர்பார்ப்பை ஐந்து மாதங்கள் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் நிறைவேற்ற எமக்கு முடிந்துள்ளமை குறித்து மகிழ்ச்சி அடைகின்றோம்.


அதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.


தற்போது கபுதுவவிலிருந்து மாத்தறை நகருக்கு 7 கிலோமீற்றர் தூரமாகும். இங்கிருந்து கும்புறுபிட்டிய நகருக்கு இடையே 10 கிலோமீற்றர் தூரம் காணப்படுகிறது. அதுமாத்திரமன்றி இப்பிரதேசங்களில் வாழும் விவசாய சமூகத்திற்கு இது பெரும் உதவியாக அமையும்.


நாட்டின் அபிவிருத்திக்காக மக்களுக்கு முறையான சாலை அமைப்பை ஏற்படுத்தி கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதிவேக நெடுஞ்சாலை மாத்திரமன்றி நாட்டின் பிற கிராம வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு நாம் ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி நிர்மாணப் பணிகள் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து தொடர்ந்து செயற்படுத்தி வருகின்றோம்.


கொழும்பு நகரில் காணப்படும் வாகன நெரிசலுக்கு தீர்வு வழங்கும் வகையில் நாம் அண்மையில் தூண்களின் மேல் அமைக்கப்படும் நெடுஞ்சாலை திட்டமொன்றை ஆரம்பித்தோம். தற்போது அதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் கொழும்பில் அதிக வாகன நெரிசல் காணப்படும் இடங்களை இனங்கண்டு அங்கு மேம்பாலங்களை நிறுவ நடவடிக்கை மேற்கொண்டோம்.


கொழும்பில் மாத்திரமல்ல கண்டியிலும் வாகன நெரிசல் அதிகம். அதற்கு தீர்வு காண நாம் பல திட்டங்களை ஆரம்பித்தோம். அண்மையில் கெட்ம்பே சந்திக்கு மேம்பாலமொன்றை அமைத்தோம்.


இந்த மேம்பாலத்தின் மூலம் மாத்திரம் பேராதனை வாகன நெரிசலுக்கு தீர்வு காண முடியாது என்பதால் சீன எக்சிம் வங்கி நிதியுதவியின் கீழ் பேராதனை போதனா வைத்தியசாலையின் முன்னால் சுரங்க வழி பாதசாரிகள் கடவையொன்றை அமைத்தோம்.


இது பாதசாரிகளுக்கு பாதுகாப்பாக அமைவதுடன் பேராதனை வைத்தியசாலை, கெடம்பே விகாரை, அறநெறி பாடசாலை, பல்கலைக்கழகம், வங்கி மற்றும் அங்குள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்வோருக்கும் வசதியாக அமையும்.


சுரங்கவழி பாதசாரி கடவை நிர்மாணத்தின் போது வீதியோர விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்களுக்காக சுரங்க பாதையில் விற்பனை நிலையங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் அவர்கள் குறிப்பிட்டார்.


எமது இந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி பல்வேறு விமர்சனங்களை மேற்கொள்கின்றன. கொவிட் பிரச்சினை முடியும் வரை இந்த அபிவிருத்திகளை செய்யாதிருக்குமாறு சிலர் கூறுகின்றனர். வீதிகளை நிர்மாணிக்க வேண்டாம் என்கின்றனர்.


கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாம் இதுவரை 262 பில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளோம். நம் நாட்டு மக்களை பாதுகாப்பதற்காகவே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்தோம். அவர்களது வாழ்க்கையின் முக்கியத்துவம் அறிந்;ததால் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை நாம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். அதனை நாம் நிறுத்த மாட்டோம்.


கொவிட் தொற்றை காரணம் காட்டி நாம் இல்லை, முடியாது என்றிருந்தால் மக்கள் இதனைவிட பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும். நாம் எமது மக்களை பாதுகாத்துக் கொள்வோம். அதற்கான பலத்தை நீங்கள் எமக்கு அளிக்க வேண்டும். தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் அதேவேளை உங்கள் பலத்தை நாட்டிற்கு வழங்குங்கள். அனைவரும் ஒன்றிணைந்தால் நம்மால் செய்ய முடியாதது எதுவும் இல்லை.


இன்று மக்கள் மயப்படுத்தப்பட்ட இத்திட்டம் போலவே, கொழும்பு துறைமுகத்தில் இன்று நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்க 17 மாடிகளை கொண்ட 'கடல்சார் வசதி மையம்' இலங்கை துறைமுக அதிகாரசபையின் நடவடிக்கைகளை மேலும் சீராக்க உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.


ஒன்லைன் முறையை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படும் இந்த மையத்திற்கு இலங்கை துறைமுக அதிகாரசபையின் அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்படும் போது, அதன் செயல்திறனும் உற்பத்தித்திறனும் அதிகரிக்கும். அந்த நிறுவனங்களுடன் கொடுக்கல்வாங்கல் மேற்கொள்ளும் அனைவருக்கும் இது மிகவும் பயனளிக்கும்.


எனவே, இப்பணியை ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து விரைவாக நிறைவுசெய்ய வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை துறைமுக ஆணைக்குழுவிற்கு பலம் மற்றும் தைரியம் கிடைக்க பிரார்த்திக்கின்றேன் எனத் தெரிவித்தார்.


 

நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாண்டோஅவர்கள்,


நாம் ஆட்சியை பொறுப்பேற்று ஓராண்டுக்குள் பல தடைகளுக்கு முகங்கொடுத்தோம். கடந்த அரசாங்கத்தினால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை எவ்வாறு மீள கட்டியெழுப்புவது என்பது முதலாவது தடை, அதுவே, அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர், எமது அரசாங்கத்திற்கு இருந்த முதலாவது சவால்.


2015ஆம் ஆண்டு அரசாங்கத்தை ஒப்படைக்கும் போது நாம் சீன பொருளாதார வளர்ச்சி வேகத்தில் மாத்திரமே இரண்டாம் நிலையில் இருந்தோம். மிகவும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரமொன்றையே அவர்கள் எமக்கு ஒப்படைத்தனர்.


அவ்வாறு பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்தவர்கள் இன்று எமது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட எமது அரசாங்கத்திற்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது குறித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர்.


முழு உலகிற்கும் சவாலாகவுள்ள இந்த கொரோனா வைரஸே இரண்டாவது சவாலாகும். இவ்வனைத்து சவால்களையும் நாம் எதிர்கொண்டோம். இன்றும் அதற்கு முகங்கொடுத்து வருகின்றோம்.


அவ்வாறு முகங்கொடுத்த வண்ணமே நாம் பாரிய அபிவிருத்தி செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றோம். கொரோனாவை காரணம் காட்டி அரச துறையில் உள்ளவர்களுக்கு ஊதியம் வழங்க முடியாது எனவோ, கடன்களை மீள செலுத்த முடியாது என்றோ நாம் கூறவில்லை. அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க வழியில்லை. மிகக் கடினமாகவே கடந்து செல்கிறோம் என நாம் ஒருபோதும் கூறவில்லை.


ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட எமது அரசாங்கம் மிகவும் திறமையான வகையில் திட்டமிட்டு அதற்கு முகங்கொடுத்தோம். இதுதான் யதார்த்தம்.


ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்துவோம் என நாம் தேர்தலின் போது வாக்குறுதியளித்தோம். அதனை அவ்வாறே செயற்படுத்தி அரசாங்கமே தற்போது உள்ளது. அதனை அவ்வாறே செயற்படுத்திய ஜனாதிபதியும், பிரதமரும் எமக்கு உள்ளனர். இதுதான் உண்மை. ஆனால் இந்த உண்மையை வெளிப்படுத்தாது மூடி மறைக்க முயல்கின்றனர்.

 

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் கௌரவ ரோஹித அபேகுணவர்தன அவர்கள்,


கௌரவ பிரதமர் அவர்களே, நீங்கள் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதியான பின்னரே நாம் அதிவேக நெடுஞ்சாலையை நேரில் கண்டோம். அதற்கு முன்னர் தொலைக்காட்சி வாயிலாகவே அதிவேக நெடுஞ்சாலைகளை கண்டிருந்தோம்.


2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிடின் இன்று ஆரம்பிக்கப்படும் இத்திட்டங்கள் ஏற்கனவே மக்கள் மயப்படுத்தப்பட்டிருக்கும்.


நெடுஞ்சாலை திட்டம் மூலம் கொழும்பு வாகன நெரிசலுக்கு தீர்வு கிட்டுவதுடன், கடல்சார் வசதி நிலையம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் ஒரே வளாகத்திற்குள் இலங்கை துறைமுக அதிகாரசபையின் பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொள்ள முடியும்.


அதிமேதகு ஜனாதிபதி, பிரதமர் யுத்தத்தை நிறைவு செய்து நாட்டை காப்பாற்ற முடிந்தது போன்று கொவிட் தொற்றிலிருந்து நாட்டை மீட்டு முன்னெடுத்து செல்வதற்கான பலமும் தைரியமும் கிட்ட வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

 

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ நிமல் லன்சா அவர்கள்,


மாத்தறை கபுதுவ பரிமாற்ற நிர்மாணப் பணிகள் கொவிட் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்படுகிறது.


நம் நாட்டின் அபிவிருத்தி 2015ஆம் ஆண்டு முதல் 2019 வரை பின்னோக்கி நகர்ந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து அது மேலும் பின்னோக்கி நகர்ந்தது. ஆனால் நாம் வித்தியாசமானதொரு நிலைக்கு முகங்கொடுத்துள்ளோம். ஆனாலும் இந்நாட்டை மேலும் பின்னோக்கி நகர்த்த எமக்கு முடியாது. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நாம் நாட்டை திறக்க வேண்டும்.


குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, கௌரவ அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, டளஸ் அழகப்பெரும, கெஹெலிய ரம்புக்வெல்ல, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான நிமல் லன்சா, காஞ்சன விஜேசேகர, லொஹான் ரத்வத்தே, அனுராத ஜயரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான வீரசுமன வீரசிங்க, கருணாதாச கொடிதுவக்கு, குணதிலக ராஜபக்ஷ, தென் மாகாண ஆளுநர் திரு.விலி கமகே, மத்திய மாகாண ஆளுநர் திரு.லலித் யூ கமகே, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டப்.ஆர்.பேமசிறி, துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சின் செயலாளர் யு.டீ.சீ.ஜயலால், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் திரு.சமிந்த அதலுவகே, இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் நிஹால் கெப்படிபொல உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

பிரதமர் ஊடக பிரிவு

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »