கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுவதாக சுற்றுலா அதிகாரசபை அறிவித்துள்ளது.
அனைத்து சுற்றுலாப் பயணிகளும், இலங்கை வருவதற்காக விமானத்தில் பயணிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்கொண்ட பரிசோதனையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கவில்லை என்பதையும், ஆவணம் மூலம் உறுதிப்படுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டுக்குள் நுழைந்த முதலாவது தினத்தில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாகவில்லையாயின், அவர்கள் இலங்கையில் எந்த பாகத்திற்கும் சுற்றுலா மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் என சுற்றுலா அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், சுற்றுலா மேற்கொண்டுள்ள 7 ஆவது தினத்தில், சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை நிலையத்தில், அவர்கள் மீண்டும் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.