பெண்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக குறிவைத்து செயற்படுத்தப்படும் இணையத்தளங்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அவ்வாறான இணையத்தளங்களின் உரிமையாளர்கள் மற்றும் தொடர்பாளர்களை கைது செய்யவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறான கண்காணிப்ப நடவடிக்கைகளை முதற் தடவையாக இந்தப் பிரிவு முன்னெடுத்துள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவின் பரிசோதகர் மனோஜ் சமரசேகர தெரிவித்தார்.இதற்காக குற்றப் புலனாய்வு பிரிவின் கணினி மற்றும் டிஜிடல் ஆய்வு பிரிவின் ஒத்துழைப்புகள் பெறப்பட்டுள்ளன.
15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளம் ஊடாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமை மற்றும் கொள்வனவு செய்தமை என பல நடவடிக்கைகள் குறித்து அண்மையில் தகவல் வெளியாகின. இதனடிப்படையில் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க வேண்டிய அவசிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே பாலியல் நடவடிக்கைகளை மையப்படுத்தியும் பெண்கள் மற்றும் சிறுவர்களை குறிவைக்கும் இணையத்தளங்கள் குறித்து விசேட கண்காணிப்புகள் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்