எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம், ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர், பிட்டகோட்டையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவுக்கு நேற்று (15) சென்றுள்ளார் என அறியமுடிகின்றது.
அங்கு, கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டாரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில மாதங்களாக வெளிநாட்டில் தங்கியிருந்த பழனி திகாம்பரம் எம்.பி, நாடு திரும்பியதன் பின்னர், ஐ.தே.க.வின் பொதுச் செயலாளரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்புத் தொடர்பில் இருதரப்பில் இருக்கும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எவையும் வெளிவரவில்லை.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியில், பழனி திகாம்பரம் எம்.பி அங்கம் வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே போட்டியிட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.