(எஸ்.றொசேரியன் லெம்பேட்)
மன்னார் பொலிஸ் பிரிவில் மூன்று இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது இன்று (14) அதிகாலை இனம்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் வயல் வீதி பகுதியில் காணப்படும் இரு சொரூபங்களும் மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் உள்ள சொரூபம் ஒன்றும் கல் வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதன்போது குறித்த சொரூபங்கள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூடுகள் சேதமடைந்துள்ளன.
இது தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார் மற்றும் ‘சோகோ’ பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலை மேலும் மூன்று சிற்றாலயங்கள் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கடந்த மூன்று தினங்களில் 6 கத்தோலிக்க சிற்றாலயங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.