(எம்.மனோசித்ரா)
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் அவர் போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி கடந்த 2019 இல் சவூதிக்குச் சென்றுள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பெண்களைத் தனிமைப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்று வெயாங்கொட பொலிஸ் பிரிவில் – நைவல பிரதேசத்தில் அமைந்துள்ளது.
நைவல தொழிநுட்ப வித்தியாலத்துக்கு அருகில் அமைந்துள்ள குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவர் சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் , அவரால் குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்திலுள்ள ஏனைய பெண்களின் தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும் அங்கிருந்த அதிகாரிகளால் அளிக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கமைய வெயாங்கொட பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய குறித்த பெண் 2019 பெப்ரவரி 6 ஆம் திகதி அஸ்மா உம்மா என்ற போலிப் பெயரில் சவூதி அரேபியாவுக்கு சென்று நாடு திரும்பியவர் என்பது தெரிய வந்துள்ளது. குறித்த பெண் தவறான முறையில் போலியான அடையாள அட்டையைக் காண்பித்து இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளார்.
முல்லைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா ரம்சானியா என்ற பெண்ணே இவ்வாறு போலியான அடையாள அட்டை ஊடாக வெளிநாடு சென்றுள்ளார். கடந்த திங்கட்கிழமையுடன் குறித்த பெண்னின் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்ததையடுத்து , அவர் வெயாங்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த ஏனைய பெண்கள் தொடர்பான தகவல்கள் இவரால் எதற்காக சேகரிக்கப்பட்டன என்பது தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெயாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்றார்.