கொரோனா வைரஸின் தோற்றம் தொடர்பிலான ஆய்வுக்குழு மீண்டும் வுஹான் நகருக்கு செல்வதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் விடுத்த கோரிக்கையை சீனா அடியோடு நிராகரித்துள்ளது.
சீன ஆய்வாளர்களுடனான, உலக சுகாதார ஸ்தாபனம் தலைமையிலான குழு வுஹான் நகரில் நான்கு வாரங்களாக முன்னெடுத்த முதற்கட்ட விசாரணை அறிக்கை கடந்த மார்ச் மாதத்தில் வௌியிடப்பட்டது.
கொரோனா வைரஸ் வௌவாலில் இருந்து வேறொரு விலங்கினூடாக மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என அவ்வறிக்கையின் ஊடாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விலங்குகளில் இருந்து கொரோனா வைரஸ் உருவாகியிருக்கலாம் என்ற மதிப்பீட்டை மீள உறுதிப்படுத்தி, தமது ஆய்வு நடவடிக்கையை ஏனைய நாடுகளிலும் விஸ்தரிக்க ஆய்வாளர்கள் தீர்மானித்தனர்.
அதனடிப்படையில், வுஹான் நகரில் மீண்டும் ஆய்வுகளை முன்னெடுக்க அனுமதியளிக்குமாறு சீனாவிடம் உலக சுகாதார ஸ்தாபனம், கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், ஏற்கெனவே வுஹான் நகரில் ஆய்வுகளை முன்னெடுத்த விசாரணைக் குழுவினர் மீண்டும் அங்கு செல்வதற்கு விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஆச்சரியமடைவதாக சீன தேசிய சுகாதார ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த இரண்டாவது விஜயத்தை விஞ்ஞான அடிப்படையிலானது என ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார்.