ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தேசிய ரீதியில் பலப்படுத்துவதற்காக, புதிய திட்டங்கள், வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதற்காக இந்த வாரத்திலிருந்து, தான் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்தார்.
1951ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குப் பொறுப்பாக இருந்த அனைத்துத் தலைவர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவரும் கட்சியைக் கட்டியெழுப்ப 70 வருடங்களாக செயற்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த அவர், தன்னைப் போலவே கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்கள், உறுப்பினர்கள், அமைச்சர்களும் மாவட்ட ரீதியாக சென்று கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளனர் என்றார்.
கட்சியின் தலைமையகத்தில் நேற்று (28) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “அதேபோல், தமக்கு தேர்தல் குறித்து, தீர்மானம் எடுக்கும் அவசியம் ஒன்றும் இதுவரை எற்படவில்லை” என தெரிவித்த அவர், “தேர்தல் குறித்து தமது தலையில் எதுவும் இல்லை என்பதுடன், கட்சியை ஒருங்கமைப்பது குறித்த சிந்தனை மாத்திரமே இருக்கிறது” என்றார்.
மேலும் தாம் அனைவரும் இணைந்து உருவாக்கிய அரசாங்கத்தின் 2 வருட பதவிக்காலம் கூட இன்னும் நிறைவடையாத நிலையில், கட்சியை ஒருங்கமைப்பது மற்றும் மக்களை ஒன்றிணைப்பதே தமது கடமை மட்டுமன்றி பொறுப்புமாகும் என்றார்.
மேலும் தற்போதைய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கட்சியைப் பலப்படுத்தச் செயற்படுவோம் என்றார்.