ஜனநாயக கட்சியின் மூதூர் தொகுதி முன்னாள் அமைப்பாளர் இஸ்ஹாக் முஹம்மது நஜாத், ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டார்.
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா மாஞ்சோலைச்சேனையை சேர்ந்த இவர் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியின் மூதூர் அமைப்பாளராகவும் இலங்கை தொழிலாளர் முன்னணி, திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளராகவும், ஐக்கிய தேசிய சுயதொழில் சம்மேளனத்தின் மூதூர் தொகுதி அமைப்பாளராகவும் செயற்பட்டதுடன் கடந்த 2015 பாராளுமன்ற தேர்தலிலும் 2018 உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் போட்டியிட்டவராவார்.
அத்துடன் சமூக சேவையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், கிண்ணியா மாஞ்சோலை சேனை ஜனாஸா நலன்புரி சங்கத்தின் தலைவராகவும். கிண்ணியா வாலிபர் ஒன்றியத்தின் அங்கத்தவராகவும் அண்ணல் வாசிகசாலையின் செயலாளராகவும், சிறுவர் பாதுகாப்பு அமைப்பின் செயலாளராகவும், அண்ணல் விளையாட்டு கழகத்தின் தலைவராகவும், திருகோணமலை தேசிய மொழி நடைமுறைப்படுத்தல் சபையின் செயலாளராகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெரும்பான்மை கட்சிகள் பல சிறுபான்மையினரை உள்வாங்கி அவர்களை கறிவேப்பிலையாக பாவித்து விட்டு ஒதுக்கிவிடுவதாலும், முஸ்லிம் ஏமாற்று கட்சிகளும் மக்களை வெறுமனே தேர்தல் பொம்மைகளாக பாவிப்பதாலும் அரசியலில் நேர்மையாகவும், உண்மையாகவும் செயற்பட்டு சமூகத்துக்காகவும் நாட்டுக்காகவும் குரல் கொடுக்கும் ஒரே கட்சி ஐக்கிய காங்கிரஸ் கட்சி என்பதை உணர்ந்ததால் இக்கட்சியில் இணைந்து கொண்டதாக இவர் தெரிவித்தார்.
கட்சியின் உயர் பீட ஆலோசனையின் படி இவர் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளராக தலைவர் முபாறக் அப்துல் மஜீதினால் நியமிக்கப்பட்டுள்ளார்.