வடமாகாணத்தில் பணியாற்றும் பெண் வைத்திய நிபுணர் ஒருவர் தனது கணவரின் கணினியை சட்டத்துக்குப் புறம்பாகப் பயன்படுத்துவதற்கும் அதிலுள்ள தகவல்களைப் பதிவிறக்குவதற்கும் மற்றும் அவரது உடமையில் கண்காணிப்பு சாதனத்தை பொருத்துவதற்கும் தடைவிதித்து கல்கிஸை மாவட்ட நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
கல்கிஸை மாவட்ட நீதிமன்றத்தில் கணவர் தாக்கல் செய்த சிறப்பு வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் வீட்டில் இல்லாதபோது, மனைவி தனது தனிப்பட்ட கணினியை சட்டத்துக்குப் புறம்பாக தவறாக அணுகியதாகவும், பல்வேறு தகவல்களை பதிவிறக்கம் செய்ததுடன், தனது அறையில் ஒலிப்பதிவு கண்காணிப்பு சாதனத்தை நிறுவி தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்ததாகவும் கணவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் இருவருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கும் அதே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், குறித்த நபர் கொழும்பில் உள்ள ஒரு அரச வைத்தியசாலையில் வைத்தியராக பணியாற்றுகிறார். மனைவி வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு அரச வைத்தியசாலையில், வைத்திய நிபுணராக பணியாற்றுகிறார்.
தனது அனுமதியின்றி தனது வட்ஸ்அப் கணக்கில் உள்ள மின்னணு தகவல் தொடர்புகளை அணுக தனது கணினியை பயன்படுத்த முயற்சித்தது, வட்ஸ்அப் தகவல் தொடர்புகள் வேண்டுமென்றே மனைவியினால் தடுக்கப்பட்டதாக கணவர் குற்றம்சாட்டினார்.
மூடப்பட்டிருக்கும் போது அறைக்குள் நுழைவதன் மூலமும், முடக்கப்பட்ட கணினிக்குள் நுழைவதன் மூலமும் வாதியின் தனியுரிமை குறித்த நியாயமான எதிர்பார்ப்பு மீறப்பட்டதாகவும், நம்பிக்கை மீறல் இருப்பதாகவும் வாதி குற்றம் சாட்டினார்.
விவகாரத்து கோரும் மனைவி, தனக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக வாதி கூறினார். சட்டவிரோதமாகவும், எந்த அங்கீகாரமும் இல்லாமல் தகவல்களைச் சேகரிப்பதில் மனைவியின் நடத்தை, மின்னணு கண்காணிப்பு சாதனத்தை தனது உடைமையில் இணைப்பது போன்றவை கணினி குற்றச் சட்டம் எண் 3 மற்றும் 4 பிரிவுகளின் கீழ் குற்றம் என்றும், 2007 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க கணினி குற்றச் சட்டத்தின் 3 மற்றும் 4 பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், வாதியின் அசையும், அசையா சொத்துக்களில் கண்காணிப்பு சாதனங்களை பொருத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15ஆம் திகதி வரை இந்த கட்டளை அமுலில் இருக்குமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.