பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகைக்கு பின்னர் அரசியல் மட்டத்தில் பல மாற்றங்கள் ஏற்படும் என தெரிவித்த துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் ஒத்துழைப்பு அவசியமானதாகும் என்றார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலமையகத்தில் நேற்று (5) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகை குறித்து எதிர் தரப்பினரே அதிக அச்சம் கொண்டுள்ளார்கள் எனத் தெரிவித்த அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் பொருளாதார விவகாரங்களை இவரே பொறுப்பேற்றார். அக்காலக்கட்டத்தில் பல சவால்கள் காணப்பட்டன. அனைத்து சவால்களுக்கு மத்தியில் தேசிய பொருளாதாரம் சீரான நிலையில் முன்னேற்றமடைந்தது என்றார்.
‘அரசாங்கம் தோல்வி’ என எவராலும் குறிப்பிட முடியாது. கொவிட் -19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் அரசாங்கம் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது எனத் தெரிவித்த அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் அபிவிருத்தி செயற்றிட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்கிறது.
நாட்டின் அபிவிருத்தி பணிகள் எக்காரணங்களுக்காகவும் தடைப்படாது என்றார். பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகை தேசிய பொருளாதரத்தை பலபடுத்தும் வகையில் அமையும்.
அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்று பலமான அமைச்சு பதவியை பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி பிரதமர் பல முறை எடுத்துரைத்துள்ளார்கள் அதற்கமைய பஷில் ராஜபக்ஷ இவ்வாரம் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவரது பாராளுமன்ற வருகையை தொடர்ந்து அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும் என தெரிவித்த அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகள் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஒரு சில பங்காளி கட்சி தலைவர்களின் செயற்பாடுகள் கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் அமைகிறது. என்றார்.