நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் கடும் காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மாகாணத்தில் மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதுடன் வடக்கு , வட மத்திய , மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கடும் காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும்.
அதேபோன்று சீரற்ற கால நிலையினால் காலி, களுத்துறை , கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் குறித்த மாவட்டங்களில் 10 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் களனி கங்கை, களுங்கை , கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் வெள்ள பெருக்கு குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அடுத்துவரும் 24 மணித்தியாலயத்தில் களனி கங்கையின் நீர் மட்டம் மேலும் அதிகரித்து தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக, தொம்பே, கடுவெல, கொலன்னாவ, மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளின் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு கடும் மழை வீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்கம் தெரிவித்துள்ளது.