நாடு தற்போது மிகவும் மோசமானதொரு பாதையில் சென்றுகொண்டிருக்கும் நிலையில், அதிலிருந்து மீட்சி பெற வேண்டுமெனின் இனியும் குறுகிய அரசியல் நோக்கங்களை நம்பாமல், உண்மையான தேசப்பற்று என்றால் என்னவென்பதை சாதாரண பொதுமக்களுக்கு உணர வைக்க வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
எனவே இனியும் தாமதிக்காமல் இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டும். ‘உண்மையான தேசப்பற்றாளர்கள்’ அமைப்பு அதனை இலக்காகக் கொண்டு செயற்படும் என்றும் மங்கள சமரவீர தெரிவித்திருக்கின்றார்.
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ‘உண்மையான தேசப்பற்றாளர்கள்’ அமைப்பின் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இலங்கையின் வரலாற்றில் மிகமோசமான கரிநாளாகக் கருதப்படும் ‘கறுப்பு ஜுலை’ இனக்கலவரங்கள் இடம்பெற்று 38 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையிலேயே நாம் ‘உண்மையான தேசப்பற்றாளர்கள்’ சார்பில் இந்த முதலாவது ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்துகிறோம்.
தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்கு வழிவகுத்த மிக முக்கிய காரணியாக ‘கறுப்பு ஜுலை’ இனக்கலவரங்களைக் குறிப்பிடமுடியும். இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னரான காலப்பகுதியில், ஜப்பானுக்கு அடுத்தநிலையில் காணப்பட்டது.
இலங்கையைப் போன்று சிங்கப்பூரை மாற்றியமைக்க வேண்டும் என்று லீ குவான் யூ கூறுமளவுக் கு அனைத்துத் துறைகளிலும் எமது நாடு சிறந்து விளங்கியது. அவ்வாறு சிறந்து விளங்கிய, இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்பட்ட எமது நாடு இப்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகமோசமான வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. அதுமாத்திரமன்றி சர்வதேசத்தின் மத்தியில் தனித்துவிடப்பட்ட தோல்வியடைந்த அரசாகவும் இலங்கை மாறியிருக்கிறது என்றார்.