(ஆர்.யசி)
நாட்டில் கொவிட் -19 வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிப்பை காட்டுவதுடன், படிப்படியாக மீண்டும் அச்சுறுத்தலான நிலையை நோக்கி நகர்கிறோமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத நபர்களே அதிகளவில் தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளனர் என்கிறார்.
நாட்டில் மீண்டும் கொவிட் -19 வைரஸ் பரவல் அதிகரிப்பை காட்டுவதாக சுகாதார வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்ற நிலையில் சுகாதார பணியகத்தின் தரவுகள் குறித்து வினவிய போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
சுகாதார வைத்திய நிபுணர்கள் கூறுவதைப்போன்று நாட்டில் மீண்டும் கொவிட் -19 வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் இருந்து தற்போது வரையிலான தரவுகளின்படி, வரைபில் உயர்வு நிலையொன்றை காட்டுகிறது. அப்படியென்றால் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றே அர்த்தமாகும்.
மேலும் கடந்த 23 ஆம் திகதிக்கான கொவிட் -19 மரணங்களாக 52 மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த மரணித்தவர்கள் வயதானவர்கள், மற்றும் தடுப்பூசி ஏற்றாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே மக்கள் விரைவாக தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.