Our Feeds


Monday, July 5, 2021

www.shortnews.lk

செத்துப் போன சாராவை என் கணவர் எப்படி இந்தியாவுக்கு தப்பிக்க வைத்திருக்க முடியும்? - தேவகுமாரின் மனைவி கேள்வி

 



உயிர்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்ட சாரா என்பவர் உயிருடன் இல்லையென ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.


எனவே, சாராவை இந்தியாவுக்கு தப்பி ஓட உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட எனது கணவரான தேவகுமாரை விடுவிக்குமாறு அவரது மனைவியான டிலோஜினி கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாங்காடு பகுதியிலுள்ள அவரது வீட்டில நேற்று (04) ஊடகவியலாளர்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

எனது கணவரான தேவகுமார் என்பவரை சாரா என்ற புலத்தினியை இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்ததாக சந்தேகத்தில் சிஐடி-யினரால் கடந்த வருடம் 7 மாதம் 11 ம் திகதி வீட்டில் வைத்து கைது செய்தனர்.

இந்த நிலையில் அவர் மீது சாட்டப்பட்ட குற்றம் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை இந்த நிலையில் கொழும்பில் இருந்து கல்முனை நீதிமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் 8 ம் திகதி கொண்டு வந்து மட்டக்களப்பு சிறையில் அடைத்து வைத்துள்ளதுடன் சட்டமா அதிபரிடம் இருந்து ஆவணம் வந்ததும் விடுவதாக தெரிவித்தனர்.

ஆனால் அது தொடர்பாக இதுவரையும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனக்கு 4 பிள்ளைகள் கல்வி கற்று வருகின்றனர் நாங்கள் வாழ்வாதரம் எதுவும் இன்றி வறுமையில் இருக்கின்றோம். நான் மிளகாய் தோட்டத்தில் புல்லு பிடுங்க கூலி தொழிலுக்கு சென்று அதில் வரும் சம்பளத்தில் வருமானம் எதுவும் இன்றி வறுமையிலும் கஷ்டத்திலும் வாழ்ந்து வருகின்றேன்.

இந்த நிலையில் அண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், சாரா என்பவர் உயிருடன் இல்லையென ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துள்ளார். அப்படி இருக்கும் போது எனது கணவர் செல்வராசா தேவகுமார் சாராவை இந்தியாவுக்கு தப்பி ஓட உதவி செய்தது என்பது எப்படி சாத்தியமாகும்.

சாரா உயிருடன் இல்லை என்றால் தப்பிக்க எப்படி உதவி செய்திருக்க முடியும். எனவே எனது கணவர் நிரபராதி. எனவே, எனது பிள்ளைகளின் எதிர்காலம் அவர்களது கல்வி போன்றவற்றில் கவனம் செலுத்தி அவரை விடுவித்து தருமாறு அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »