(எம்.ஆர்.எம்.வசீம்)
அத்துடன் சிறுவயதுடைய பிள்ளையை வீட்டு வேலைக்கு அமர்த்திய ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஏன் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஸம்மில் கேள்வி எழுப்பினார்.
தேசிய சுதந்திர முன்னணி கட்சி காரியாலயத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும். நாட்டின் சட்டங்களை அமைக்கும் நாடாட ளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் சிறுவர்களை வீட்டு வேலைக்கு அமர்த்தியமையானது பாரிய குற்றமாகும்.
ரிஷாத் பதியுதீனின் வீட்டில் மரணித்த ஹிஷாலினி 15 வயது சிறுமியாகும். இது தெரியாமலா அவர் வீட்டு வேலைக்கு அமர்த்தியிருக்கிறார் என கேட்கிறோம். அத்துடன் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் மலையகத்தைச் சேர்ந்த 11பேர் இதுவரை வீட்டு வேலைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றனர். அவர்களின் அதிகமானவர்கள் சிறுவர்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது..
மேலும் நாட்டில் சாதாரண விடயங்கள் இடம்பெற்றாலும் அதற்கு எதிராக கடுமையாக எதிர்ப்பு அறிக்கை விடும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ரிஷாத் பதியுதீனின் வீட்டில் மரணித்த சிறுமியின் மரணம் தொடர்பில் நழுவல் போக்கிலேயே எதிர்ப்பு அறிக்கை விட்டிருக்கின்றார். ரிஷாத் பதியுதீன் ஐக்கிய மக்கள் சக்தியின் மிக முக்கியமான ஒருவர் என்பதனாலே இவ்வாறு செயற்பட்டிருக்கின்றார் என்பது தெளிவாகிறது.
அதேபோல் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ரிஷாத் பதியுதீனின் வீட்டில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகவும் இதுவரை ஐக்கிய மக்கள் சக்தி அறிவிக்கவில்லை.
மேலும் இஷாலினியின் மரணம் தொடர்பில் தற்போது பல்வேறு தகவல்கள் வெளிப்பட்டு வருகின்றன. இந்த விடயங்கள் சட்டத்துக்கு முன்னால் ஒப்புவிக்கப்பட சிறிது காலம் செல்லும். என்றாலும் ஏனையவர்களுக்குபோல் ரிஷாத் பதியுதீனுக்கும் சட்டம் முறையாக செயற்படும் என நாங்கள் நம்புகின்றோம்.
அதேபோல் மரணித்த ஹிஷாலினிக்காக மலையகத்தில் பல பிரதேசங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், திகாம்பரம் ஆகியோர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். மலையக சிறுவர்கள் இவ்வாறு தொழிலுக்கு அமர்த்தப்படுவது இதற்கு முன்னர் இவர்களுக்கு தெரியாதா என கேட்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.