உலகம் முழுக்க கொரோனா வைரஸின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை அதிவேகமாகப் பரவிவருவதால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபன தலைவர் டெட்ரஸ் அதனோம் கெப்ரியேஸஸ் தொடர்ந்து எச்சரித்த வண்ணம் உள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: வைரஸ் தாக்கம் குறைந்ததுபோலத் தெரிந்தாலும் இன்னும் நாம் அபாய கட்டத்தைத் தாண்டவில்லை என்றும் எந்த நாட்டு அரசும் ஊரடங்கு விதிகளைத் தவிர்க்கக்கூடாது. புதிதாக பரவிவரும் டெல்டா ரக கொரோனா வைரஸ் காரணமாக உலகம் அபாயத்தில் உள்ளது. இந்தியாவில் உருவாகிய டெல்டா ரக கொரோனா வைரஸ் தற்போது உலகின் 98 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் ரகங்களிலேயே மிகவும் சக்திவாய்ந்த ரகமாக டெல்டா ரகம் திகழ்கிறது.
டெல்டா ரகம் இன்னும் பல்வேறு ரகங்களாக உருவெடுக்கும். பல பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் படுக்கை வசதி இன்றி மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பைசர் பயோடெக் மொடர்னா உள்ளிட்ட தடுப்பு மருந்து நிறுவனங்கள் எம்-ஆர்என்ஏ தொழில்நுட்பத்தை உலக நாடுகளின் நலத்தை கருத்தில்கொண்டு வெளியிடவேண்டும் தடுப்பு மருந்துகளை விரைவாக உருவாக்கி பிரயோகித்தால்தான் விரைவில் வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியும். எனவே இதற்கு உலக நாட்டு தடுப்பு மருந்து நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு டெட்ரஸ் கூறியுள்ளார்.