நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத 07 அரசியல் கட்சிகள் தேர்தல் முறைமையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக நியமிக்கப்பட்ட தெரிவுக் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளன.
அந்த குழுவின் தலைவர், அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்தில் கூடவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, லிபரல் கட்சி, அகில இலங்கை தமிழர் மகாசபை, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, மற்றும் சமத்துவக் கட்சி உள்ளிட்ட 7 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கான விசேட நாடாளுமன்ற குழு கடந்த ஏப்ரல் மாதம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நியமிக்கப்பட்டது.
இக்குழு மே மாதம் 17ஆம் திகதி முதல் தடவையாகக் கூடியிருந்தது.
இந்த நாடாளுமன்ற விசேட குழுவின் உறுப்பினர்களாக அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பவித்ரா வன்னியாராச்சி, டக்ளஸ் தேவானந்தா, விமல் வீரவங்ச, அலி சப்ரி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுர குமார திசாநாயக்க, கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், எம்.ஏ.சுமந்திரன், மதுர விதானகே, சாகர காரியவசம் ஆகியோர் அங்கத்துவம் வகிக்கின்றனர்.