(செங்கலடி நிருபர்)
மாகாணங்களுக்கிடையிலான பிரயாணத்தடையை மீறி கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற மூன்று சொகுசு பஸ்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டிஎம்ஏ சமரகோன் தெரிவித்தார்.
இந்த பஸ்களில் 49 பயணிகள் காணப்பட்டனர் எனவும் பொலிஸார் கூறினர். இவர்கள் அன்டிஜன்ட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது மூவருக்கு கொவிட் 19 தொற்று காணப்பட்டதாக ஏறாவூர் பற்று பிரதேச சுகாதார வைத்தியதிகாரி இ.சிறிநாத் தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை (02) அதிகாலை தும்பாலஞ்சோலை இராணுவ முகாம் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த பஸ்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலிருந்து நான்கு மாகாணங்களைக்கடந்து கொழும்புக்குக்குச் சென்று திரும்பிவரும் வழியில் பாதுகாப்புத் தரப்பினரால் சோதனையிடப்பட்டபோது அவர்களிடம் விசேட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பாதை அனுமதியோ இருக்கவில்லையென தெரிய வந்துள்ளது.
இந்த பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்ட பயணிகள் கரடியனாறு கொவிட் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இந்த பஸ்களிலிருந்த ஏனைய பயணிகள் அன்டிஜன் பரிசோதனையையடுத்து வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.