தன்னை திருமணம் செய்துக் கொள்ள மறுத்த பாடசாலை மாணவி ஒருவரை 26 வயதுடைய இளைஞன் ஒருவன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் குறித்த மாணவி படுகாயம் அடைந்துள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தம்புள்ளை பன்னம்பிடிய, மெனிக்தென பிரதேசத்தை சேர்ந்த அனுஷா செவ்வந்தி என்ற 16 வயதுடைய சிறுமியின் பெற்றோர் உயிரிழந்துள்ள நிலையில், சிறுமி மற்றும் அவரது இளைய சகோதரன் தனது பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சிறுமியிடம் இளைஞன் ஒருவன் தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு கோரி வந்துள்ள நிலையில் அதனை சிறுமி நிராகரித்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 30 ஆம் திகதி குறித்த சிறுமியின் வீட்டுக்கு வந்த குறித்த இளைஞன் கூரிய ஆயுதத்தால் சிறுமியை கொடூரமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் பாட்டி தெரிவித்ததாவது,
என்னிடம் ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டான், நானும் கொடுத்தேன். பின்னர் வீட்டுக்கு வந்த நபருக்கு தேனீர் வழங்குவதற்காக நான் சமையல் அறைக்கு சென்றேன். சமையல் அறையில் இருக்கும் போது எனக்கு சத்தம் ஒன்று கேட்டது. அப்போது மகள் மேசைக்கு அருகில் இருந்து அம்மோ என்று சத்தமிட்டாள். தலை மேசையில் இருந்தது. அவன் தப்பித்து ஓடினான். பின்னர் நான் அவனை பின்தொடரவில்லை.
தாக்குதலில் படுகாயம் அடைந்த சிறுமி தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
26 வயதுடைய சந்தேகநபர் பன்னம்பிட்டி மெனிக்தென பிரதேசத்தில் பதுங்கி இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இரண்டு பொலிஸ் குழுக்கள் அவரை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.