நாவலப்பிட்டிய ஹரங்கல இதுக்தென்ன எனுமிடத்தைச் சேர்ந்த 13 வயதும் 10 மாதங்களேயான பாடசாலைக்குச் செல்லும் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், அச்சிறுமியின் தந்தை, சிறுமிக்கு 10 வயதானபோது துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஐவரில், அவருடைய காதலனான 32 வயதான நபரும், அத்துடன் பெண்ணொருவரும் அடங்குகின்றனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
தன்னுடைய மகளை, கடந்த 1ஆம் திகதிமுதல் காணவில்லையென அவருடைய தாய் நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார். இந்நிலையில், காணவில்லையென தெரிவிக்கப்பட்ட அந்த சிறுமியை, சிறுமியின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அதன்பின்னர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே, அச்சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
“அதன்பிரகாரம், தன்னுடைய தந்தையால், 10 வயதில் தான் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டடேன். அதன்பின்னர், என்னுடைய காதலன் துஷ்பியோகம் செய்தார். இந்நிலையில், ஹரங்கல பிரதேசத்திலுள்ள கற்குகைக்கு காதலன் அழைத்துச் சென்றார்.
அங்கு தடுத்துவைத்து இன்னும் சிலர் என்னை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர்” என பொலிஸில் வாக்குமூலமளித்துள்ளார். சிறுமியின் தந்தையும், காதலனும் பிரதான சந்தேகநபர்கள் எனத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, ஏனையோ, பாலியல் வன்புணர்வுக்கு ஒத்துழைப்பு நல்கினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த ஐந்து பேரும் நாவலப்பிட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இந்தச் சம்பவத்துடன் மேலும் ஆறு பேருக்கு தொடர்புள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர்களையும் கைதுசெய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.