(எம்.மனோசித்ரா)
ஆளுந்தரப்பின் கூட்டணிக்குள் காணப்படும் பங்காளி கட்சிகள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. அமைச்சர் உதய கம்மன்பிலவையடுத்து தற்போது அமைச்சர் விமல் வீரவன்சவின் அமைச்சுடன் தொடர்புடைய விடயதானங்களில் மாற்றங்களை செய்திருப்பது பங்காளிகட்சிகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள பிறிதொரு தாக்குதலாகும் என்று நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாயணக்கார தெரிவித்தார்.
நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
நாம் ஒன்றிணைந்து ஸ்தாபித்த இந்த அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். இவ்வாறு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றபோதிலும் , ஆளுந்தரப்பின் கூட்டணிக்குள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
அவற்றில் ஒன்று அமைச்சர் உதய கம்மன்பில மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும். தற்போது அமைச்சர் விமல் வீரவன்சவின் நிர்வாகத்தின் கீழ் இருந்த லங்கா பாஸ்பேட் நிறுவனத்தை விவசாய அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாரிய நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த இந்த நிறுவனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக அமைச்சர் விமல் வீரவன்சவே மாற்றியிருந்தார். இது மீண்டும் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான எமக்கு ஏற்படுள்ள தாக்கமாகும். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என்றார்.