Our Feeds


Tuesday, June 29, 2021

www.shortnews.lk

சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் களனி கங்கையில் மீட்க்கப்பட்ட சடலம் - தகாத உறவு வைத்திருந்த பெண் உட்பட 3 பேர் கைது.

 



(செ.தேன்மொழி)


கைகள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம் 54 வயதுடைய மாந்திரீகர் ஒருவருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மாந்திரீகருடன் தகாத தொடர்பு வைத்திருந்த பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நவகமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரணாலை பகுதி களனி கங்கையில் கடந்த 26 ஆம் திகதி சனிக்கிழமை, சங்கிலியால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டது. இந்தச் சடலமான ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய மாந்திரீகர் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளுக்கமைய, பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட மாந்திரீகர் கைது செய்யப்பட்ட பெண்ணுடன் தகாத தொடர்புகளை பேணி வந்துள்ளதுடன் அவர்கள் இருவரும் ஹங்வெல்ல – எம்புல்கம பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர்.

இதன்போது கடந்த 23 ஆம் திகதி புதன்கிழமை இருவர் மாந்திரீகரை கடத்திச் சென்றுள்ளதாக சந்தேக நபரான பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளார். எனினும் குறித்த பெண்ணுக்கும் எல்புல்கம பகுதியில் சாரதியாக தொழில் புரிந்துவரும் நபரொருவருக்கும் இடையில் காணப்பட்ட மற்றுமொரு தகாத தொடர்பு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்வத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சாரதி, பனுவஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றைய நபர் ஹோமாகம -பிட்டிபன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் பிரதான சந்தேக நபரின் உறவினர் என்றும் தெரிய வந்துள்ளது.

இதன் போது சந்தேக நபர்கள் கொலை செய்வதற்காக பயன்படுத்திய சுத்தியல் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »