சிரியாவில் எதிர்வரும் மே 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது என அந்நாட்டின் சபாநாயகர் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.
சிரியாவில் சிவில் யுத்தம் ஆரம்மான பின்னர் அங்கு நடைபெறும் இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் இதுவாகும்.
தற்போதைய ஜனாதிபதி பஷர்அல் அஸாத்தை இத்தேர்தல் மீண்டும் அதிகாரத்தில் வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினு; அவர் மீண்டும் போட்டியிடுவாரா என்பதை உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.
இதற்கு முன் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் 88 சதவீதமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியிருந்தார்.
சிரியாவின் 2012 ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி, ஜனாதிபதி ஒருவர் தலா 7 வருடங்கள் கொண்ட இரு தவணைகளில் பதவி வகிக்ககலாம். ஆனால், 2014 ஆம் ஆண்டு தேர்தலில் தெரிவான ஜனாதிபதிக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் குறைந்தபட்சம் தொடர்ச்சியாக 10 வருடங்கள் சிரியாவில் வசித்தவராக இருக்க வேண்டும். இதனால், வெளிநாட்டில் தங்கியுள்ள எதிர்க்கட்சி பிரமுகர்கள் இத்தேர்தலில் போட்டியிட முடியாது போகும்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 35 பேரின் ஆதரவையும் வேட்பாளர்கள் பெற்றிருக்க வேண்டும். தற்போதைய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அஸாத்தின் பாத் கட்சி ஆதிக்கம் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.