நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் 14 மரணங்கள் பதிவாகியுள்ளன.
நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களால் 10 பேரும், இதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரும் மரணித்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் நேற்றைய தினம் 121 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
அவற்றில் 12 விபத்துக்கள் அதிவேக நெடுஞ்சாலையில் பதிவாகியுள்ளன.
நேற்று இடம்பெற்ற விபத்துக்களால் 71 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனங்களும் காவல்துறையால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
இந்தநிலைமை இன்று மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் சுற்றுலா உள்ளிட்ட பயணங்கள் செல்லும் போது சாரதிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என காவல்துறை பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் வீதி சட்டங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதோடு மதுபோதையில் வாகனங்களை செலுத்துவதை முற்றுமுழுதாக தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.