Our Feeds



Friday, August 28, 2026

Zameera

நேபாள வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 469 ஆக உயர்வு


 நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 469 ஆக அதிகரித்துள்ளது.

இந்தச் இயற்கைச் சீற்றத்தினால் 1,400-க்கும் மேற்பட்டோர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக நேபாள இராணுவத்தினரும் மீட்புக் குழுவினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

இமயமலைப் பகுதியில் பனிப்பாறை திடீரென உடைந்து விழுந்ததன் காரணமாகவே இந்த அதிதீவிர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக உருவான பெருவெள்ளமும் சேறும், எல்லைப் பகுதியில் உள்ள பல கிராமங்களையும் பாலங்களையும் முற்றிலுமாக அடித்துச் சென்றுள்ளன.

திபெத் எல்லைப் பகுதியிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ள நிலையில், சீனத் தரப்பில் 3 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் நேபாளம் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 472 ஆக உயர்ந்திருக்கிறது.

திபெத்தின் சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் புதிதாகத் தற்காலிகத் தடுப்பு ஏரி ஒன்று உருவாகியுள்ளது.

இதில் சுமார் 30 இலட்சம் கன மீட்டர் நீர் தேங்கும் அபாயம் உள்ளதால், சீனா கீழ்நிலைப் பகுதிகளுக்கு 'Level-IV' எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமல் போன நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் மற்றும் யாத்ரீகர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக நேபாள இராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Zameera

‘கெஹெல்பத்தர பத்மே’ பூஸா சிறைச்சாலைக்கு மாற்றம்


 தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில், நீதிமன்றத்தால் எதிர்வரும் மாதம் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட, பாதாள உலகக்குழுவின் முக்கிய புள்ளி என அறியப்படும் கோரளகமகே மந்தினு பத்மசிரி பெரேரா எனும் 'கெஹெல்பத்தர பத்மே' அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையான பூஸா சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.



கொழும்பு நீதிவான்  நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், வெலிசர சிறைச்சாலையில் சந்தேகநபரின்  எதிர் தரப்பினர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால், அவரை பாதுகாப்பு நிமித்தம் வெலிசர தவிர்ந்த வேறு எந்தவொரு சிறைச்சாலையிலாவது தடுத்து வைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.பயண வழிகாட்டிகளை வாசித்தல்


சட்டத்தரணி முன்வைத்த விடயத்தை பரிசீலித்த நீதிமன்றம், சந்தேகநபரை மிகவும் பாதுகாப்பான பொருத்தமான சிறைச்சாலையொன்றில் தடுத்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.  நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு அமைய, சந்தேகநபரை பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசென்று தடுத்து வைப்பதற்கு  சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது. 

Zameera

நீதிபதிகள் மற்றும் நீதித்துறை தொடர்பான பிரச்சினைகள் அரசியலமைப்பு மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு அமைவாகவே தீர்க்கப்பட வேண்டும்


 (நா.தனுஜா



நீதிபதிகள் மற்றும் நீதித்துறை தொடர்பான கரிசனைகள் அரசியலமைப்பு மற்றும் சட்டபூர்வ நடைமுறைகள் ஊடாகத் தீர்க்கப்படவேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், முறையற்ற விதத்தில் நிகழ்த்தப்படும் தனிப்பட்ட தாக்குதல்கள் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிடும் என எச்சரித்துள்ளது.


அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் தொடர்பில் ஏற்கனவே கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது. இவ்வாறானதொரு பின்னணியில் வியாழக்கிழமை (27) அச்சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:


பொது அதிகாரத்தைப் பிரயோகிக்கும் எந்தவொரு கட்டமைப்பையும் போலவே நீதித்துறையும் சட்டபூர்வமான பரிசீலனைக்கும் பொறுப்புக்கூறலுக்கும் உட்பட்டதாக இருக்கவேண்டும். நீதிமன்றத் தீர்ப்புக்கள், நீதிபதிகளின் நடத்தை மற்றும் நீதி நிர்வாகம் என்பன உண்மையின் அடிப்படையிலும், நியாயமான மற்றும் பொறுப்பான முறையிலும் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படலாம்.


எந்தவொரு நீதிபதிக்கும் எதிரான நம்பகரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நியாயமான முறையில், உரிய சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளித்து, பொருத்தமான அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் ஊடாக வெளியக ரீதியில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.



அதேவேளை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தமானது நீதித்துறையின் சுயாதீனத்துவம் மற்றும் பொதுமக்களின் உரிமைகள் தொடர்பில் தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்திருக்கும் பின்னணியில், அதனை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியுடன் முடிவுக்குவரும் பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிப்பதற்காகவே இந்தத் திருத்தம் அவசரமாகக் கொண்டுவரப்படுவதாகப் பரவலான கருத்துக்கள் உள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் பாராளுமன்றத்திலும், சமூகவலைத்தளங்களிலும் முன்வைக்கப்படும் நீதித்துறை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பொறுப்புடன் கையாளப்படும் அதேவேளை, முறையற்ற விதத்தில் நிகழ்த்தப்படும் தனிப்பட்ட தாக்குதல்கள் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிடும் என சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

Zameera

இன்று 75 மி.மீ க்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு


 மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (28) ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

 

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் 07 ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. 

 

அதற்கமைய, இன்று (28) நண்பகல் 12:11 மணிக்கு கொக்குவில், நல்லூர், கொடிகாமம் மற்றும் நாகர்கோவில் ஆகிய பிரதேசங்களுக்கு மேல் சூரியன் உச்சிகொடுக்கவுள்ளது.

Zameera

மாத்தறையில் போதைப்பொருளுடன் அழகுநிலைய உரிமையாளர்களான தம்பதியினர் கைது!


 மாத்தறையில் அழகு நிலையம்  ஒன்றை நடத்தி வந்த தம்பதியினர், சுமார் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் நேற்று வியாழக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


மாத்தறை பிரதேச குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் எடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்களிடமிருந்து 'ஐஸ்'  மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 70 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட தம்பதியினர் இன்று வெள்ளிக்கிழமை  (28) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


இவர்கள் இருவரும் நீண்டகாலமாகவே இப் போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



மேலும், இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Zameera

நேபாள-திபெத் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 392 ஆக உயர்வு


 நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 392 ஆக அதிகரித்துள்ளது.


 


1,400க்கும் மேற்பட்டோர் இன்னமும் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


 


பனிப்பாறை ஒன்று சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட மிகப்பெரிய பனி மற்றும் இடிபாடுகளின் பெருக்கே இந்த பேரிடருக்குக் காரணம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.


 


அந்தப் பெருக்கு காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய சேறு கலந்த வெள்ள நீர், நகரங்கள் மற்றும் கிராமங்கள் ஊடாகப் பாய்ந்து வீடுகள், பாலங்கள் மற்றும் அணைகளை அழித்துள்ளதுடன், வாகனங்களையும் அடித்துச் சென்றுள்ளது.


 


காணாமல் போனவர்களில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், இமயமலைப் பகுதியில் பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் மற்றும் திபெத்திலுள்ள புனித கைலாஷ மலையை தரிசிக்கச் சென்ற அதிகளவிலான இந்து பக்தர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்படுகிறது.


 


இதுவரை 389 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 910 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


 


தொடர்புகொள்ள முடியாதவர்களில் 517 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Thursday, August 27, 2026

ShortNews

செம்மணி புதைகுழியுடன் தொடர்புடையவர்களை தண்டிப்போம் - பிமல்!


செம்மணி மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், புதைகுழி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நீதி அமைச்சு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை(27) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் அடையாளம் காணப்பட்ட 15,966 குடும்பங்களில் 11,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான அடிப்படை ஆவணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக வரவு - செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 25 பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், ஆரம்ப கட்டமாக 101 குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபா வீதம் இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் மருத்துவ அதிகாரிகளின் அர்ப்பணிப்பின் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 585 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்களில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் நீதி அமைச்சு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என மேலும் தெரிவித்தார்.

ShortNews

நேபாளத்திற்கு இலங்கை ஒரு மில்லியன் டொலர் நிவாரண உதவி!


நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நிதிப் பங்களிப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணம் மற்றும் நிவாரண உதவிகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஜனாதிபதி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் நிலவும் நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த சவாலான தருணத்தில் இலங்கை நேபாள மக்களுடன் உறுதியாக நிற்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், நேபாள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சிஷிர் கனாலுடன் இன்று காலை தொலைபேசியில் கலந்துரையாடி இலங்கையின் இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் நிவாரண மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக எதிர்காலத்தில் இலங்கை வழங்கக்கூடிய மேலும் பொருத்தமான ஒத்துழைப்பு முறைகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

ShortNews

அரசு வீழும் வரை காத்திருக்காமல் மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும்!


இந்த அரசு தானாகவே வீழும் வரை பார்த்துக்கொண்டிருக்காமல், நாட்டின் ஜனநாயகத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க மக்கள் அனைவரும் உடனடியாக வீதியில் இறங்கித் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா வலியுறுத்தினார்.

கம்பஹாவில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசை மாற்ற வேண்டும் எனப் பெரும்பான்மையான மக்கள் விரும்பிய போதிலும், அதனை யாராவது ஒருவர் செய்து தருவார்கள் என வீட்டில் காத்திருப்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது. ஜனநாயகப் போராட்டத்தில் மக்களே நேரடியாகக் களமிறங்க வேண்டும்.

தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எதனையும் தற்போதைய அரசு நிறைவேற்றவில்லை. மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலையைக் குறைத்தல், நெல்லுக்கு 150 ரூபாய் நியாயமான விலை வழங்குதல் மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இன்று விவசாயிகள் நெல்லை 95 ரூபாவுக்கே விற்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டில் நீதித்துறை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து அதனை அரசியல் மயமாக்குவதன் மூலம், வடகொரியாவைப் போன்ற ஒரு கட்சி மட்டுமே ஆட்சி செய்யும் சர்வாதிகாரப் போக்கை நோக்கி அரசு நகர முற்படுகின்றது.

மக்கள் பிரதிநிதிகளோ அரச நிறுவனங்களின் தலைவர்களோ சுயாதீனமாகச் செயற்பட முடியாமல், பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளின் உத்தரவுகளுக்கேற்பவே அனைத்துப் பணிகளும் நடைபெறுகின்றன.

எனவே, நாட்டில் ஜனநாயகம் முற்றாக அழிந்துபோவதைத் தடுக்கவும், சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தவும் பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் உடனடியாக ஒன்றுபட வேண்டும்.” – என்றார்.

ShortNews

நீதித்துறை, பொருளாதாரம் பற்றி பேச ராஜபக்ஷர்களுக்கு உரிமை இல்லை - மஹிந்த ஜயசிங்க!


அரசாங்கம் சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர். நீதித்துறை சுதந்திரம் மற்றும் பொருளாதார மீட்சி தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு ராஜபக்ஷர்களுக்கு தார்மீக உரிமை கிடையாது என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

மஹரகம பகுதியில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சியினரே மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்தார்கள். இந்த திருத்தம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சாதகமானதே தவிர, பாதகமானதல்ல.

எதிர்க்கட்சியில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் ஊழல் மோசடியுடன் தொடர்புடையவர்கள், பலர் பிணையில் உள்ளார்கள். கிடப்பில் போடப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்படுகின்றபோது இவர்கள் கலக்கமடைந்துள்ளார்கள். ஊழல்வாதிகள் சிறைக்கு செல்வது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையே தவிர மக்களின் பிரச்சினையல்ல.

அரசாங்கம் சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும்போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர். நீதித்துறை சுதந்திரம் மற்றும் பொருளாதார மீட்சி தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு ராஜபக்ஷர்களுக்கு தார்மீக உரிமை கிடையாது.

இந்த நாட்டில் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை ராஜபக்ஷர்களின் காலத்தில்தான் இல்லாமல் போனது. முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை ராஜபக்ஷர்கள் முறையற்ற வகையில் பதவி நீக்கினார்கள். அதற்காக அவர்கள் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என்றார்.

SHAHNI RAMEES

பல கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்களை மறைத்த குற்றச்சாட்டு -சிக்களில் சிக்கினார், மலேசியாவின் முன்னாள் பிரதமர்!

 

பல கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்களை மறைத்த குற்றச்சாட்டு
ShortNews

இலங்கை மக்கள் அடுத்தடுத்து ஏமாற்றப்பட்ட இரு சந்தர்ப்பங்களை விளக்கிய சஜித்!


இலங்கை மக்கள் அடுத்தடுத்து இரு சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்பட்டதாகவும், 2019-இல் ஏமாந்து நாடு வங்குரோத்தானதாகவும், 2024-இல் ஏமாற்றப்பட்டதால் முழு சமூகமும் முற்றாக முடங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 220 இலட்சம் மக்களும் தற்போது கடுமையான அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அனுராதபுரம் மாவட்டத்தின் மெதவச்சிய தொகுதியின் ரம்பேவ பகுதியில் நடைபெற்ற சமகி ஜன பலவேகயவின் உறுப்பினர் ஊக்குவிப்பு மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, ஒரு நபர் 30 நாட்கள் வாழ்வதற்கு ரூ. 17,315 போதுமானது என்றும், இந்த கணக்கெடுப்பு மாவட்ட மட்டத்திலும் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய அரசின் கொள்கை பொய் தரவுகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தினார்.

இன்றைய அரசாங்கம் பொய்கள் மற்றும் அப்பட்டமான ஏமாற்றங்களின் மீது இயங்கி வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் காலத்தில் வயலில் இறங்கி நெல் சாப்பிட்டு ஒரு கிலோ நெல்லுக்கு ரூ. 150 தருவதாகக் கூறியபோதிலும், இன்று அது ரூ. 120 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணத்தை 33% குறைத்தல், துறைமுகத்தில் இறக்கப்படும் விலைக்கு எரிபொருள் வழங்குதல் மற்றும் 12 இலட்சத்திற்கு விட்ஸ் (Vitz) கார் வழங்குதல் என உறுதியளித்த எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

ShortNews

எதிர்க்கட்சியினர் எதை விதைத்தார்களோ அதனையே இன்று அறுவடை செய்கின்றனர் - சந்தன சூரியாராச்சி!


கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் செய்த தவறுகளையும் ஊழல்களையுமே இன்று எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்கள் விதைத்தவற்றையே இன்று அறுவடை செய்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு வியாழக்கிழமை (27) கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. முந்தைய அரசாங்கங்களின் காலத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டதால், தொழில்நுட்பக் காரணங்களைக் கூறி வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. ஆனால், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தவித அரசியல் தலையீடுகளுமின்றி, பொலிஸ் விசாரணைகள் மூலம் நீதியை நிலைநாட்டி வருகிறது.

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆட்சியின் போது இடம்பெற்ற வீண்விரையங்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்துள்ளன. முன்னாள் சபாநாயகர் ஒருவர் இரண்டு ஆண்டுகளில் கோடிக்கணக்கான ரூபாவை எரிபொருளுக்காக மட்டும் செலவிட்டுள்ளார்.

அப்போதைய பிரதி சபாநாயகர் ஒருவர் தனது தனிப்பட்ட வாகனத்திற்கு பாராளுமன்ற சலுகைகளைப் பயன்படுத்தி 85 இலட்சம் ரூபா மதிப்பிலான எரிபொருளைப் பயன்படுத்தியிருப்பதாக தெரியவந்துள்ளன. எனினும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஆட்சியில் இவ்வாறான ஊழல்கள் மற்றும் வீண்விரையங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 62 முக்கிய குற்றவாளிகள் வரை பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினரின் தலையீட்டினால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்துத் துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் இந்த வெற்றிகளைக் கண்டு எதிர்கட்சியினர் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

பொலிஸ் துறை, நீதித்துறை மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகளுக்கு எதிராகத் தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து வழக்குகளைத் தாமதப்படுத்த எதிர்கட்சியினர் முயல்கின்றனர். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் அரசாங்கம் தொடர்ந்தும் உறுதியாகச் செயற்படும் என்றார்.