
22ஆவது திருத்தத்துக்கு எதிராக ஒன்பது மனுக்கள் தாக்கல்!
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி நேற்று (19) வரை உயர்நீதிமன்றத்தில் 09 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பான எந்தவொரு திருத்தத்தையும் மேற்கொள்வதற்கு முன்னர், பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் போதுமான கலந்தாலோசனைகள் நடத்தப்பட வேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
அனுபவமிக்க மற்றும் அறிவுள்ள நீதிபதிகளின் சேவைகளை மேலும் பெற்றுக்கொள்ள முடியும் எனக் கூறி அரசாங்கம் அவர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் முடிவை எடுத்துள்ளதாக இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் தற்போதைய சட்டபூர்வ ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கு அமைச்சரவை எடுத்துள்ள முடிவு தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை (CBCSL) தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளதோடு, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அதிகாரப் பகிர்வைப் பேண வேண்டிய அவசியத்தையும் அவ்அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளது.

1956ஆம் ஆண்டின் பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் சிறுவர் உழைப்பு தொடர்பான குற்றங்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிப்பதை நோக்காக கொண்ட சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது 10,000 ரூபாயாக உள்ள அபராதத் தொகையை 1 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான குறைந்தபட்ச வயது 14 இலிருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஆபத்தான அல்லது அவர்களின் சுகாதாரம், கல்வி மற்றும் நன்னடத்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தொழில்களில் ஈடுபடுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
சிறுவர்களை ஈடுபடுத்தத் தடைசெய்யப்பட்ட தொழில்களின் எண்ணிக்கையும் 51 இலிருந்து 71 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற வீட்டு வேலைகள், தொழிற்சாலைகள், சுரங்கங்கள், ஆழ்கடல் பணிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் உடற்பிடிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விவரங்களை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இலங்கையில் சிறுவர் உழைப்பை முற்றாக ஒழித்து, அனைத்து சிறுவர்களுக்கும் கட்டாயக் கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவியாக 6,000 ரூபாய் வழங்கப்படுவதுடன், சீருடைகள், பாடநூல்கள், காலணி வவுச்சர்கள் மற்றும் சுகாதாரப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
3 முதல் 5 வயதுக்குட்பட்ட முன்பள்ளி சிறுவர்களுக்கான சத்துணவு கொடுப்பனவும் 60 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண பாடசாலைகளில் பணியாற்றும் அதிபர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வுக்கான நிபந்தனைகள் தொடர்பான விரிவான தகவல்களை பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இலங்கை கல்வி நிர்வாக சேவையின் கீழ் தேசிய பாடசாலைகளில் 133 பேரும், மாகாண பாடசாலைகளில் 27 பேரும் என மொத்தம் 160 பணியிடங்கள் உள்ளன.
அதிபர் பதவிகளுக்காக தேசிய பாடசாலைகளில் 139 பணியிடங்களும், மாகாண பாடசாலைகளில் 7,125 பணியிடங்களும் என மொத்தம் 7,264 பணியிடங்கள் காணப்படுகின்றன. மேலும், மாகாண பாடசாலைகளில் இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்த 2,494 பேர் பதில் அதிபர்களாகப் பணியாற்றுகின்றனர்.
பாடசாலை வகைக்கு ஏற்ப அதிபர்களுக்கு ரூ.4,000 முதல் ரூ.8,000 வரையிலான கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. கஷ்ட மற்றும் அதிககஷ்ட பாடசாலைகளில் பணியாற்றும் அதிபர்களுக்கு மேலதிக கஷ்டக் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன.
தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு எரிபொருள் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட கொடுப்பனவுகளாக அதிகபட்சம் ரூ.25,000 வரை வழங்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 3ஆம் தரத்திலிருந்து 2ஆம் தரத்திற்கும், 2ஆம் தரத்திலிருந்து 1ஆம் தரத்திற்கும் பதவி உயர்வு பெற தலா 6 ஆண்டுகள் சேவைக்காலம் அவசியமாகும்.
மேலும், வேதன ஏற்றங்கள், மொழி மற்றும் இணைப்புத் திறன் தேர்ச்சிகள் மற்றும் திறன் விருத்திப் பயிற்சிகளை நிறைவு செய்திருப்பது பதவி உயர்வுக்கான நிபந்தனைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
1ஆம் தரப் பதவி உயர்வுக்கு முதுகலை கல்வி டிப்ளோமா அல்லது பட்டப்படிப்பு தகுதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் சுகாதார அமைச்சரிடம் இந்தக் கேள்விகளை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்தார்.
கீமோதெரபி, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய் சிகிச்சைகளுக்கு அத்தியாவசியமான ‘பில்கிராஸ்டிம்’ ஊசி மருந்து, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை உள்ளிட்ட பல அரச வைத்தியசாலைகளில் தற்போது பற்றாக்குறையாக இருப்பதாக நோயாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் தன்னிடம் நேரடியாகத் தெரிவித்துள்ளதாக சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக இந்த மாதம் பத்திரிகை ஒன்றில் வெளியான இரண்டு செய்திக் கட்டுரைகளையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அவர், இது சாதாரணமான ஒரு மருந்துப் பற்றாக்குறை பிரச்சினை அல்ல என்றும், புற்றுநோயாளர்களின் உயிருக்கும் அவர்களது சிகிச்சையின் தொடர்ச்சிக்கும் நேரடியாகத் தொடர்புடைய முக்கியமான பிரச்சினை என்றும் சுட்டிக்காட்டினார்.
‘பில்கிராஸ்டிம்’ ஊசி மருந்து தற்போது மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை உள்ளிட்ட அரச வைத்தியசாலைகளில் பற்றாக்குறையாக உள்ளதா அல்லது இல்லையா என்பதை சுகாதார அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட சாணக்கியன் இராசமாணிக்கம், அவ்வாறு பற்றாக்குறை இருந்தால் எந்தெந்த அரச வைத்தியசாலைகளில் இந்தப் பற்றாக்குறை நிலவுகிறது, இந்தப் பற்றாக்குறை எப்போது முதல் ஏற்பட்டுள்ளது என்பதையும் அமைச்சர் சபைக்கு அறிவிக்க வேண்டும் எனக் கோரினார்.
அதேபோன்று, அரச வைத்தியசாலை கட்டமைப்பில் ஒரு நாளைக்கு சராசரியாக எவ்வளவு ‘பில்கிராஸ்டிம்’ ஊசி மருந்து பயன்படுத்தப்படுகிறது, ஒரு மாதத்திற்கு சராசரியாக எவ்வளவு அளவு பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் தினசரி மற்றும் மாதாந்தம் எவ்வளவு அளவு இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக சுகாதார அமைச்சினாலோ அல்லது அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தினாலோ ‘பில்கிராஸ்டிம்’ ஊசி மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான விலைமனுக்கோரல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும் அவர் அமைச்சரிடம் வினவினார்.
விலைமனுக்கோரல் மேற்கொள்ளப்பட்டிருந்தால், எவ்வளவு அளவுக்கு விலைமனுக்கோரல் கோரப்பட்டுள்ளது, அந்த விலைமனுக்கோரல் எப்போது வெளியிடப்பட்டது, எந்த விநியோகஸ்தருக்கு வழங்கப்பட்டுள்ளது, அந்த மருந்துகள் எப்போது அரச வைத்தியசாலைகளுக்கு கிடைக்கப்பெறும் என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், தற்போது விலைமனுக்கோரல் செய்யப்பட்டுள்ள மருந்துகளின் அளவு, தற்போதைய பயன்பாட்டின் அடிப்படையில் எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்பதையும் அறிய வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்தார்.
இன்று ஏற்பட்டுள்ள ஒரு பற்றாக்குறையைத் தீர்ப்பது மட்டும் போதுமானதல்ல என்றும், எதிர்வரும் சில மாதங்களிலும் புற்றுநோயாளர்களுக்கு இந்த அத்தியாவசிய மருந்து தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
அதற்காக சுகாதார அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பதையும் அவர் அமைச்சரிடம் கேட்டார்.
அதேபோன்று, அரசாங்கத்தினாலோ அல்லது அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தினாலோ கடைசியாக ‘பில்கிராஸ்டிம்’ ஊசி மருந்து கொள்வனவு செய்யப்பட்டபோது ஒரு ஊசிக்கு செலுத்தப்பட்ட விலை எவ்வளவு, அந்த மருந்தை விநியோகித்த விநியோகஸ்தர் யார், எவ்வளவு அளவு கொள்வனவு செய்யப்பட்டது, கொள்வனவு செய்யப்பட்ட திகதி என்ன போன்ற தகவல்களையும் அமைச்சர் வெளிப்படையாக பாராளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என சாணக்கியன் இராசமாணிக்கம் கோரினார்.
மிகவும் முக்கியமாக, அரச வைத்தியசாலைகளில் இந்த மருந்து கிடைக்காத காரணத்தால் நோயாளர்கள் தனியார் மருந்தகங்கள் அல்லது தனியார் விநியோகஸ்தர்களிடம் இருந்து ‘பில்கிராஸ்டிம்’ ஊசி மருந்துகளை அதிக விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதா என்பதையும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஒரு ஊசி மருந்து 17,000 ரூபாய் முதல் 23,000 ரூபாய் வரையிலான விலையில் தனியார் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்துள்ள தகவல்கள் உண்மையானவையா என்பதையும் அவர் அமைச்சரிடம் கேட்டார்.
அரச வைத்தியசாலையில் இலவசமாகக் கிடைக்க வேண்டிய ஒரு அத்தியாவசிய மருந்தை பணம் உள்ளவர்கள் தனியார் சந்தையில் அதிக விலைக்கு வாங்கிக்கொள்ள முடியும் என்றாலும், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களால் அதனை வாங்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.
இதனால் ஒரு குடும்பம் தனது நோயாளியின் சிகிச்சையைத் தொடர்வதற்காக பெரும் பொருளாதாரச் சுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகிறது என்றும், ஏற்கனவே புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கும் ஒரு நோயாளியின் குடும்பத்திற்கு இது இன்னுமொரு பாரிய நெருக்கடியாக மாறுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ‘பில்கிராஸ்டிம்’ போன்ற கீமோதெரபி மற்றும் ஏனைய புற்றுநோய் சிகிச்சைகளுக்கு அத்தியாவசியமான மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதன் காரணமாக நோயாளர்களின் சிகிச்சைகள் பிற்போடப்பட்டுள்ளனவா, சிகிச்சை முறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளனவா அல்லது மருந்துப் பற்றாக்குறையின் காரணமாக சிகிச்சையில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டுள்ளதா என்பதையும் அவர் கேள்வி எழுப்பினார்.
அவ்வாறு ஏற்பட்டிருந்தால், இதனால் எத்தனை நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் அமைச்சர் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த அத்தியாவசிய மருந்து அரச வைத்தியசாலைகளில் தொடர்ச்சியாகவும் தடையின்றியும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக சுகாதார அமைச்சு உடனடியாக எடுக்கவுள்ள அவசர நடவடிக்கைகள் என்ன, நீண்டகால அடிப்படையில் மருந்துப் பற்றாக்குறை ஏற்படாத வகையில் எத்தகைய திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதையும் அமைச்சர் சபைக்கு அறிவிக்க வேண்டும் என சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
மேலும், ஒரு சில பகுதிகளில் ‘நியூபோஜென்’ (Neupogen) ஊசி மருந்துகள் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டு, ஒரு ஊசிக்கு 20,000 முதல் 30,000 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இது மிகவும் பாரதூரமான நிலைமை. புற்றுநோயாளர்களுக்கு கீமோதெரபி போன்ற சிகிச்சை முறைகள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் வழங்கப்படாமல் போனால், அது அவர்களது உடல்நிலையிலும் சிகிச்சையின் வெற்றியிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்தப் பிரச்சினையை சாதாரண மருந்துப் பற்றாக்குறையாக பார்க்காமல், புற்றுநோயாளர்களின் உயிருடன் தொடர்புடைய ஒரு அவசர பிரச்சினையாக அரசாங்கம் பார்க்க வேண்டும். இதற்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்” என சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த இந்த முக்கியமான கேள்விகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்.
ஏனையவர்கள் இந்தப் பிரச்சினைகளை சுற்றிவளைத்து பேசியதாகவும், ஆனால் சாணக்கியன் இராசமாணிக்கம் இந்த விடயத்தை மிகவும் தெளிவாகவும் குறிப்பிட்ட கேள்விகளுடனும் பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த ஊசி மருந்துக்கும் அதனுடன் தொடர்புடைய சிகிச்சைக்கும் பற்றாக்குறை காணப்படுகின்றது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உரிய நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு வார காலத்துக்குள் இந்தப் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படும் என்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மேலதிக கேள்வியை முன்வைத்த சாணக்கியன் இராசமாணிக்கம், கடந்த ஜனவரி மாதம் விலைமனுக்கோரல் செய்யப்பட்ட ஊசிகள் கடந்த ஜனவரி மாதத்திலேயே கிடைக்கப்பெற்றதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நடைமுறையில் விலைமனுக்கோரல் மூலம் மருந்துகளை கொள்வனவு செய்யும் செயன்முறையில் தாமதங்கள் ஏற்படுகின்றன என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் இந்தத் தாமதங்களின் இறுதி விளைவை நோயாளர்கள்தான் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஊசிக்கான தினசரி தேவை சுமார் 9,000 ஊசிகள் என்ற நிலையில், குறிப்பாக மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் இதற்கான தேவை மிக அதிகமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அத்தியாவசிய மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், நோயாளர்கள் வெளியிலுள்ள தனியார் மருந்தகங்களில் அதிக விலைக்கு இந்த ஊசிகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே புற்றுநோய் சிகிச்சைக்காக பெரும் பொருளாதாரச் சுமையை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு, அத்தியாவசியமான ஒரு ஊசியைக்கூட அதிக விலைக்கு வெளியிலிருந்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அது அவர்களுக்கு இன்னுமொரு பாரிய நெருக்கடியாகும் என்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும், ஏனைய அரச வைத்தியசாலைகளிலும் இதுபோன்ற நெருக்கடி நிலை காணப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, இந்தப் பிரச்சினையை உடனடியாகக் கண்காணித்து தீர்வு காண விசேட மருத்துவக் குழு ஒன்றை அமைத்து, எந்தெந்த வைத்தியசாலைகளில் எவ்வளவு கையிருப்பு உள்ளது, எவ்வளவு தேவை உள்ளது, எவ்வளவு காலத்திற்கு அந்தக் கையிருப்பு போதுமானது என்பதை தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“இது சுகாதார அமைச்சின் பொறுப்பு. புற்றுநோயாளர்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாகாமல் இருப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பாகும். ஒரு நோயாளி பணம் இல்லாத காரணத்தினாலோ அல்லது அரச வைத்தியசாலையில் மருந்து இல்லாத காரணத்தினாலோ தனது சிகிச்சையை நிறுத்த வேண்டிய நிலை ஒருபோதும் ஏற்படக்கூடாது” என சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, சாணக்கியன் இராசமாணிக்கம் குறிப்பிட்ட விடயங்கள் உண்மையானவை என்பதை ஏற்றுக்கொண்டார்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட மருத்துவக் குழு ஒன்றை அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இந்த ஊசி மருந்தை முறையான கொள்முதல் செயன்முறையின் ஊடாக கொள்வனவு செய்வதற்கு குறைந்தது ஆறு வாரங்களாவது தேவைப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த முக்கியமான பிரச்சினையை நாடாளுமன்றத்தில் தெளிவாக முன்வைத்தமைக்காக சாணக்கியன் இராசமாணிக்கத்துக்கு மீண்டும் நன்றி தெரிவிப்பதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
புற்றுநோயாளர்களின் சிகிச்சையில் மருந்துப் பற்றாக்குறை காரணமாக எந்தவிதமான இடையூறும் ஏற்படக்கூடாது என்பதே தனது நிலைப்பாடு என சாணக்கியன் இராசமாணிக்கம் தொடர்ந்து வலியுறுத்தினார்.
அரச வைத்தியசாலைகளில் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய மருந்துகளை நோயாளர்கள் தனியார் சந்தையில் பல மடங்கு விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வையும், எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற பற்றாக்குறை ஏற்படாத வகையிலான நிரந்தர நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு உறுதி செய்ய வேண்டும் என்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தினார்.

எல் நினோ நிலைமையின் காரணமாக எதிர்காலத்தில் வறட்சி ஏற்பட்டால், நீர் விநியோகத்திற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.
இந்தச் சுற்றறிக்கை ஒகஸ்ட் 6 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல் நினோ நிலைமையால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இன்று (20) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வறட்சியால் பாதிக்கப்படும் பிரதேசங்களுக்கு நீர் வசதிகளை வழங்குவதற்கு மிகவும் இலகுவான மற்றும் துரிதமான தலையீட்டை மேற்கொள்ளக்கூடிய வகையில் தேவையான சட்ட விதிமுறைகள் இந்தச் சுற்றறிக்கையின் ஊடாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

டெங்கு நோய் தாக்கம் காரணமாக நாட்டில் பதிவாகும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.
இந்த நோய் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்றைய (20) நிலவரப்படி 71 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 93,115 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாற்றிலேயே அதிகளவிலான மனுக்கள் மூலம் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தமாக இந்த 22ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் அமையும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில திட்டவட்டமாக தெரிவித்தார்.
குறித்த சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை (19) மனுத் தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
22ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் காணப்படும் பெரும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் எத்தனை மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்பதைப் பார்ப்பதற்காகவே எமது மனுவை தாக்கல் செய்வதில் சற்று தாமதத்தை ஏற்படுத்தினோம். எதிர்வரும் இரண்டு வாரங்களில் இன்னும் ஏராளமான மனுக்கள் நீதிமன்றத்தை வந்தடையும் என எதிர்பார்க்கிறோம்.
வரலாற்றில் இல்லாதவாறு தமக்கு பெரும் மக்கள் ஆதரவு இருப்பதாக அரசாங்கம் நினைத்துக் கொள்கிறது. அரசாங்கத்துக்கு நெருக்கமான ஆராய்ச்சி நிறுவனங்கள் கூட அரசாங்கத்தின் மக்கள் ஆதரவு 100க்கு 75 சதவீதம் என்றே கூறுகின்றன. யுத்த வெற்றியை ஈட்டித்தந்த மகிந்த ராஜபக்சவுக்கு கூட இவ்வாறான மக்கள் ஆதரவு நிலவியதில்லை. எனவே, தங்களது மக்கள் ஆதரவை நிரூபிப்பதற்கும், எதிர்க்கட்சியினரை கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் இந்த சீர்திருத்தத்தை மக்கள் தீர்ப்புக்கு விடும் என நாம் எதிர்பார்த்தோம்.
அரசியலமைப்பில் மக்களின் இறையாண்மை குறித்துக் கூறப்பட்டுள்ள 3ஆவது பிரிவை மீறும் வகையில் இச்சீரமைப்பு அமைந்துள்ளதாக 2022ஆம் ஆண்டில் இலங்கை உயர் நீதிமன்றம் வழங்கிய இரண்டு தீர்ப்புகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு தீர்ப்பில், நீதித்துறையின் சுயாதீனத்தன்மை என்பது மக்களின் இறையாண்மையின் ஒரு பகுதி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மற்றைய தீர்ப்பில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது தொடர்பான விடயம் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை என்ற உப பிரிவின் கீழ் வருவதால், நீதிபதிகளின் வயதை மாற்றியமைக்கும் எந்தவொரு அரசியலமைப்பு சீர்திருத்தமும் இறையாண்மையை பாதிக்கும் என்றும், அது மக்கள் தீர்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் 1610ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் தலைமை நீதிபதியாக இருந்த சர் எட்வர்ட் கோக், 'ஒருவர் தனது சொந்த வழக்கில் தானே நீதிபதியாக இருக்க முடியாது' என்ற உலகளாவிய கோட்பாட்டை முன்வைத்தார். தற்போதைய அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் பயனடைபவராக உயர் நீதிமன்றமே காணப்படுகிறது. அதே உயர் நீதிமன்றமே இது தொடர்பில் தீர்ப்பு வழங்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே, 400 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான உலகளாவிய கோட்பாட்டின் படி, உங்களால் உங்கள் வழக்கை நீங்களே விசாரிக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டி, உயர் நீதிமன்றத்துக்கும் மேலாக உள்ள மக்கள் தீர்ப்புக்கு இதனை அனுப்பி வைக்குமாறு கோருகிறோம். மக்கள் தங்களது முடிவை வாக்கெடுப்பு மூலம் வெளிப்படுத்துவார்கள்.
உண்மையில், அமைச்சரவை இந்த 22ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை வர்த்தமானியில் வெளியிட்ட போதே, இது மக்கள் தீர்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒரு சட்டமூலம் என சான்றளித்திருக்க வேண்டும். அவ்வாறு அமைச்சரவை சான்றளித்திருந்தால், நாம் உயர் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரசாங்கம் இதனை மக்கள் தீர்ப்புக்கு விடும் சட்டமூலமாக அறிவிக்க அமைச்சரவை தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை.
இதன் காரணமாகவே நாம் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். ஒருபுறம் இலங்கை உயர் நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகளும், மறுபுறம் சர்வதேச நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளன. இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு, இந்த சீர்திருத்தத்தை கட்டாயமாக மக்கள் தீர்ப்புக்கு பரிந்துரைக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தை கேட்டுக்கொள்கிறோம். அதன் மூலம் அந்த 100க்கு 75 சதவீத ஆதரவையும் சரியாக உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளக்கக் கூட்டத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பிய கடிதத்தில், சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ரஜீவ் அமரசூரிய இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த விளக்கக் கூட்டத்தில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இருதரப்பாகக் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்த்ததாகவும், இதன் மூலம் முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான தங்களது கவலைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும் என எதிர்பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், கடந்த 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து, இந்த விடயத்தில் இருதரப்பு ஒருமித்த கருத்து இல்லை எனத் தோன்றுவதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, இருதரப்பையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பு உறுதிசெய்யப்படும் வரை குறித்த விளக்கக் கூட்டத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பிய கடிதத்தில், சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ரஜீவ் அமரசூரிய இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த விளக்கக் கூட்டத்தில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இருதரப்பாகக் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்த்ததாகவும், இதன் மூலம் முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான தங்களது கவலைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும் என எதிர்பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், கடந்த 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து, இந்த விடயத்தில் இருதரப்பு ஒருமித்த கருத்து இல்லை எனத் தோன்றுவதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, இருதரப்பையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பு உறுதிசெய்யப்படும் வரை குறித்த விளக்கக் கூட்டத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.