
Wednesday, July 22, 2026

நீதிமன்ற உத்தரவுக்கமையவே செம்மணியில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் - அரசாங்கம் அறிவிப்பு!
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக அரசாங்கம் ஏற்கனவே தனது தெளிவான நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. நீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் நடைபெறும் இந்தச் செயற்பாடுகளில் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இது குறித்து வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. நீதிமன்ற மருத்துவ அதிகாரி, நீதி அமைச்சு உட்பட இது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பான குழுவினர் அகழ்வுப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள் அவ்வப்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் அரசாங்கத்திற்கு மறைப்பதற்கு எதுவுமில்லை என்பதால், இந்தச் செயற்பாடுகளில் எவ்வித பிரச்சினையும் இல்லை.
ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினரின் இந்த கண்காணிப்பு விஜயம் குறித்து அரசாங்கத்திற்கு விசேடமாக எந்தவொரு அறிவிப்பும் வழங்கப்படவில்லை.
அகழ்வுப் பணிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் முற்றிலும் சட்ட ரீதியானவையாவே இருக்கும். அந்த வகையில் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளுக்கு அமையவே செம்மணி புதைக்குழி அகழ்வின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குச் செல்ல முடியும் என்றார்.

78,000 ஐத் தாண்டியது டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை!
நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 78,125 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நேற்று (21) ஒரே நாளில் 1,097 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, தற்போது நாடு முழுவதும் உள்ள 162 மருத்துவ அதிகாரிப் பிரிவுகள் அதிஅபாய வலயங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான வளர்ச்சி காணப்படுவதுடன், மே மாதத்தில் 8,590 நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 21,535 நோயாளர்களும், ஜூலை மாதத்தில் கடந்த 21 நாட்களில் மட்டும் 22,749 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இந்த ஆண்டில் டெங்கு நோய் காரணமாக 56 மரணங்கள் சம்பவித்துள்ளதுடன், நோயாளர்களின் இறப்பு விகிதம் 0.07% ஆகப் பதிவாகியுள்ளது.
மாகாண மட்டத்தில் அவதானிக்கும் போது, மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் 52.78% ஆகும் (41,236 நோயாளர்கள்).
தென் மாகாணத்தில் 11,950 நோயாளர்களும் (15.30%), மத்திய மாகாணத்தில் 6,603 நோயாளர்களும் (8.45%) பதிவாகியுள்ளனர்.
மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 16,478 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 15,540 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இவற்றைத் தவிர, மாத்தறை மாவட்டத்தில் 5,454 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 5,228 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 5,135 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
பொதுமக்கள் தங்களைச் சுற்றியுள்ள வளாகங்களைப் சுத்தமாக வைக்குமாறும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதாரப் பிரிவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

யோசிதவுக்கு எதிரான வழக்கு ஆகஸ்ட் 7 வரை ஒத்திவைப்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷவுக்கு சொந்தமான தனியார் வங்கி கணக்கொன்றில் 17 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டமை தொடர்பான வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்திவைத்து ஹோமாகம மேல் நீதிமன்றம் நேற்று (21) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மேற்படி வழைக்கு நேற்றைய தினம் ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி கிரிஷாந்தி அமரதுங்க முன்னிலையில் விசாரணைக்க எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் பூரண விசாரணைகள் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. வழக்கு விசாரணையின் போது பிரதிவாதியான யோசித ராஜபக்ஷ திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தோடு, அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்டிஸ் முன்னிலையாகியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான தனியார் வங்கிக் கணக்கில் 17 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டமை தொடர்பாகப் பணச் சுத்தழகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டு, கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதி ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.
அதன்போது பிரதிவாதியான யோசித ராஜபக்ஷவை தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு ரொக்கப் பிணைகளிலும், தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி கிரிஷாந்தி அமரதுங்க உத்தரவிட்டிருந்தார். அத்துடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்த நீதிபதி, ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேவேந்திரமுனையில் துப்பாக்கிச் சூடு!
தேவேந்திரமுனை, கந்தர பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று (22) அதிகாலை காரில் வந்த சிலர் கைத்துப்பாக்கி ஒன்றினால் இத்துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எவருக்கும் காயம் அல்லது பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதி, தேவேந்திரமுனை பகுதியில் அமைந்துள்ள மீனவர் ஒருவரின் வீட்டின் மீதே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Tuesday, July 21, 2026

எல்.பி.எல் தொடரிலிருந்து விலகிய குசல் மெந்திஸ்!
2026-ஆம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து, கொழும்பு கேப்ஸ் (Colombo Kaps) அணியின் தலைவரான குசல் மெந்திஸ் தொடை தசைநார் காயம் காரணமாக விலகியுள்ளார்.
கென்டி ரோயல்ஸ் அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியின் போது அவருக்கு இந்த காயம் ஏற்பட்டது.
காயம் அடைந்ததைத் தொடர்ந்து, போட்டியின் இடைநடுவே குசல் மெந்திஸ் 'ரிட்டயர்ட் ஹர்ட்' (retired hurt) முறையில் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, அவர் இத்தொடரின் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது கொழும்பு கேப்ஸ் அணியின் தொடர் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
இத்தொடரின் தொடக்கப் போட்டிகளில் கொழும்பு கேப்ஸ் அணியை வெற்றிகரமாக வழிநடத்தியதுடன், துடுப்பாட்டத்திலும் முக்கிய பங்காற்றி வந்த மெந்திஸின் விலகல், லீக் சுற்றின் எஞ்சிய போட்டிகளுக்குத் தயாராகி வரும் அவ்வணிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

ஸ்பெயின் - ஆர்ஜென்டினா வீரர்கள் மோதல் - FIFA விசாரணைக்கு உத்தரவு!
உலகக்கிண்ணக் கால்பந்து இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து, மைதானத்தில் இரு அணி வீரர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் பிபா விசாரணைக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
போட்டிக்குப் பின் நடைபெற்ற விதிமீறல்கள் மற்றும் கைகலப்பு சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்க பிபா வழக்கறிஞர் மற்றும் ஒழுங்குமுறைக் குழுவை நியமித்துள்ளது.
ஸ்பெயின் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஆர்ஜென்டினா வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் வீரர் எரிக் கார்சியாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியபோது, இதைத் தடுக்க வந்த மாற்று வீரர் கேவி-யையும் அவர் கீழே தள்ளிய காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.
அத்துடன், வெற்றியை க் கொண்டாட ஓடி வந்த ஸ்பெயின் அணியின் தலைவர் ரோட்ரியின் வயிற்றில் ஆர்ஜென்டினாவின் தடுப்பாட்ட வீரர் நஹூயல் மொலினா தாக்கியதைத் தொடர்ந்து, மான்செஸ்டர் சிட்டி அணியில் தன்னுடன் விளையாடிய ஆர்ஜென்டினா வீரர் நிக்கோலஸ் ஒட்டமெண்டியுடன் ரோட்ரி காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
எவ்வாராயினும், ஆர்ஜென்டினா பயிற்சியாளர் லயோனல் ஸ்கலோனி மற்றும் பிற வீரர்கள் உடனடியாக தலையிட்டு நிலைமையைச் சமாதானப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி கிண்ணத்தை உயர்த்தியபோது, ஆர்ஜென்டினா வீரர்கள் மேடைக்கு முதுகைக் காட்டியபடி நின்றது சாம்பியன் அணிக்கு அவமரியாதை செய்வதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, ஆட்டத்திற்குப் பின் பரேடெஸுக்கு நேரடியாகச் சிவப்பு அட்டை காட்டப்படாததால், ஆரம்ப கட்ட அறிக்கையில் அவரது பெயர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. விசாரணைக்கான கால அவகாசம் குறித்து பிபா இன்னும் அறிவிக்கவில்லை.

சலேவின் மனு ஒத்திவைப்பு!
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகத் தன்னை கைது செய்து தடுத்து வைப்பதைச் சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவை மேலதிக பரிசீலனைக்காக வரும் ஜூலை 27 ஆம் திகதிக்கு அழைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்மனு இன்று (21) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன தனது வாய்மொழி வாதங்களை நிறைவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, மேலதிக மனு பரிசீலனையை இந்த மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் கருத்துக்களை முன்வைக்கவுள்ளார்.




