Our Feeds



Thursday, August 13, 2026

Zameera

கொங்கோவில் எபோலா பரவல்: உலக சுகாதார ஸ்தாபனம் கடும் எச்சரிக்கை




 கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமடைந்து வரும் எபோலா வைரஸ் பரவல், வரலாற்றிலேயே மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ரெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தற்போதைய பரவல் வேகத்தில் தொடர்ந்தால், 2014-2016 காலப்பகுதியில் 11,000 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்ட கொடூரமான எபோலா அலை சாதனையை இது மிஞ்சக்கூடும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.


கடந்த மே 15 அன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட இத் தொற்றினால், இதுவரை 4,300 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.


இந்த வைரஸ் பெப்ரவரி மாதத்திலேயே பரவ ஆரம்பித்ததாகவும், ஆரம்பத்தில் மலேரியா அல்லது டைபாய்டு எனக் தவறாகக் கணிக்கப்பட்டதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆபிரிக்கப் பணிப்பாளர் வைத்தியர் முகமது ஜனாபி தெரிவித்துள்ளார்.



இம்முறை பரவுவது மிகவும் அரிய வகையான புண்டிக்புகியோ வகை எபோலா வைரஸ் ஆகும். இதற்கு முன் 2007 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே இவ்வகை கண்டறியப்பட்டது.


'புண்டிக்புகியோ' வகை வைரஸுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ இல்லை.


கிழக்கு கொங்கோவில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் ஆயுதப் போராட்டங்கள் காரணமாக, சுகாதாரப் பணியாளர்களால் 30% பாதிக்கப்பட்ட மக்களை மட்டுமே சென்றடைய முடிகிறது.


ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்படும் 'புண்டிக்புகியோ' தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்க பிரித்தானிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.


வேறு மூன்று நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. அத்துடன், ஏற்கனவே உள்ள இரண்டு ஆன்டிவைரல் மருந்துகள் மூலம் நோயாளிகளைக் காப்பாற்ற முடியுமா என உலக சுகாதார ஸ்தாபனம் கொங்கோவில் கள சோதனைகளை நடத்தி வருகிறது.

Zameera

செம்மணியில் மேலும் 8 புதிய எலும்புக் கூடுகள் அடையாளம்

 

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 51 வது நாள் அகழ்வு பணி இன்று இடம்பெற்றது. 


அதற்கமைய இன்றைய தினம் புதிதாக 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 10 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 


மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 56 நாட்களுக்கு அனுமதி வழங்கியது. 


அதனடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 


செம்மணியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களின் கீழான அகழ்வு பணிகளின் போது, 552 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 


அவற்றில் 540 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Zameera

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 93 சந்தேகநபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை


 வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள, இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 93 சந்தேகநபர்களை நாட்டிற்கு மீண்டும் அழைத்து வருவதற்காக சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். 


'நாடே ஒன்றாக'தேசிய திட்டம் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக இன்று (13) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 


அங்கு மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், 2024, 2025 மற்றும் இந்த ஆண்டின் கடந்துபோன காலப்பகுதியில் இந்தச் சிவப்பு எச்சரிக்கைகள் மூலம் 38 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 


இதற்கு மேலதிகமாக, பொலிஸ் மா அதிபரின் நேரடித் தலையீட்டின் பேரில் மேலும் 35 முக்கிய குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவர் மேலும் வெளிப்படுத்தினார். 


இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்களால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட வாகனங்கள், வீடுகள், தங்கம் மற்றும் காணிகள் உள்ளிட்ட பெரும் அளவிலான சொத்துக்களை அரசுடமையாக்கும் விசேட திட்டமொன்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 


இதன்படி, 2024 ஆம் ஆண்டில் 1,490 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும், 2025 ஆம் ஆண்டில் 1,549 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் அரசாங்கம் பொறுப்பேற்பதன் முதற்கட்டமாக, அந்தச் சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


மேலும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் 839 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Zameera

நாளை நடைபெறவுள்ள பௌதிகவியல் வினாத்தாள் இன்று வேறு பெட்டியில் கண்டுபிடிப்பு


 அம்பாலாந்தோட்டையில் உள்ள உயர்தரப் பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையத்தில், நாளை (14) நடைபெறவுள்ள பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் இன்று (13) நடைபெற்ற வினாத்தாள் பொதிகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடி விசாரணையை ஆரம்பித்துள்ளது.

தற்போது உயர்தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் இசை, நடனம் மற்றும் விவசாய அறிவியல் பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் அடங்கிய பெட்டியிலிருந்தே நாளைய பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எனினும், குறித்த வினாத்தாள் பொதிகள் திறக்கப்படவோ அல்லது அவற்றிலுள்ள வினாத்தாள்கள் வெளிப்படுத்தப்படவோ இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.


Zameera

மாத்தறை கூட்டுறவு வங்கி வைப்பாளர்களுக்கு உடனடி தீர்வு தேவை – சஜித்


 மாத்தறை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் வாடிக்கையாளர்களும் வைப்பாளர்களும் தற்போது பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.




மாத்தறை கூட்டுறவு கிராமிய வங்கி வைப்பாளர்கள் சங்கத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.




2026 மார்ச் இறுதி மற்றும் ஏப்ரல் மாதம் வரை வைப்பாளர்கள் தமது வைப்புத் தொகையைப் பயன்படுத்துவதிலும், வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதிலும் எவ்வித பிரச்சினையும் காணப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.




எனினும், தற்போது அதிகாரம் படைத்த சிலரின் செல்வாக்கு காரணமாக கூட்டுறவுச் சங்கத்தின் நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாகவும், இதனால் ஆயிரக்கணக்கான வைப்பாளர்களும் வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.




பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்கான முறையான வழிமுறைகூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




கூட்டுறவுத் துறை நாட்டின் முக்கிய பொருளாதாரக் கருவிகளில் ஒன்றாகும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இத்துறையின் செயற்பாடுகள் முடக்கப்படுவதற்கு அரசாங்கமும் அதன் பிரதிநிதிகளும் காரணமாக உள்ளனரா என்பது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.




கூட்டுறவுத் துறைக்கு பொறுப்பான அதிகாரிகள் வைப்பாளர்களின் பணத்துக்குப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும், அரசாங்கம் உடனடியாக தலையிட்டு வைப்பாளர்கள் தமது பணத்தை மீளப் பெறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.




மேலும், கடந்த சில மாதங்களாக இழந்த வட்டியுடன் கூடிய தமது மூலதனத்தை மீளப் பெறுவதற்கான சந்தர்ப்பத்தையும் வைப்பாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.




பல வருடங்களாக சிறப்பாக இயங்கி வந்த இந்தத் திட்டம் திடீரென முடங்கியதற்கான காரணம் என்ன என்பதையும், இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பதையும் கண்டறிய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.




கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் உள்ளிட்ட பொறுப்பான அனைத்து அதிகாரிகளும் வைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் அவர்கள் நாடாளுமன்றத்திற்கு முன்பாக விளக்கமளிக்க நேரிடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Zameera

VAT செலுத்த ஓகஸ்ட் 20 வரை காலக்கெடு


 2026 ஜூலை மாதத்திற்கான பெறப்பட்ட பெறுமதி சேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


வரி செலுத்தத் தவறுதல் அல்லது தாமதித்து செலுத்துதலுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்தத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. 


காசோலை (Cheque), வங்கி வரைவோலை (Bank draft) அல்லது கொடுப்பனவு உத்தரவு (Payment order) மூலம் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவு குறிப்பிட்ட திகதிக்குப் பின்னர் கிடைப்பதும் தாமதமான கொடுப்பனவாகவே கருதப்படும். 


அத்துடன், ஜூலை மாதத்திற்கான VAT அறிக்கைகளை ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். 


அந்த அறிக்கைகள் இணையவழி (Online) முறைமையின் ஊடாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனிடையே, பிடித்தம் செய்யப்பட்ட வரிகளை (Withholding Tax) ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம், வரி செலுத்துவோரைக் கேட்டுக்கொள்கிறது. 


மேலும், ஜூலை மாதத்திற்குரிய சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை (SSCL) ஓகஸ்ட் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் அந்தத் திணைக்களம் நினைவூட்டுகிறது.

Zameera

இலங்கை விமான போக்குவரத்து பாதுகாப்புத் துறை - முதல் முறையாக பெண்ணொருவர் நியமனம்


 விமானநிலையம் மற்றும் விமானச் சேவைகள் தனியார் நிறுவனத்தின் முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு நியமிக்கப்பட்டுள்ளார்.


இலங்கை சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புத் துறையில் இதுவரை ஆண்கள் மாத்திரமே நியமிக்கப்பட்ட நிலையில் முதன்முறையாக ஒரு பெண் பொறுப்பேற்று புதிய சாதனை படைத்துள்ளார்.


அவரது இந்த நியமனமானது இலங்கையின் சிவில் விமானப் பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுவதுடன், இந்த துறையில் சிறப்புமிக்க பதவிகளை நோக்கிச் செல்ல எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் விமானத் துறையில் பெண்களுக்கான ஒரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாகவும் அமைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ShortNews

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ஹிஸ்புல்லாஹ்!


சுமார் மூன்று மணி நேர விசாரணைகளின் பின்னர்,

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் இருந்து இன்று (13) வியாழக்கிழமை பிற்பகல் 12.46 மணியளவில் வெளியேறினார் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்!

ShortNews

‘பெக்கோ சமன்’ தாயார் மீதான துப்பாக்கிச்சூடு - மோட்டார் சைக்கிள் மீட்பு!


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாயார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று ஊருபொக்க பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மாத்தறை - ஊருபொக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Zameera

சமிந்த குலரத்ன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை


 பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன இன்று (13) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 


சபாநாயகரினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 


பாராளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன உள்ளிட்ட தரப்பினரால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. 


இது தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு அங்கு வருகை தந்துள்ளார்.

Zameera

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி: 9 இந்திய மீனவர்கள் கைது


 இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்களும் படகொன்றும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். 


நேற்று (12) இரவு வேளையில், தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடிப் படகொன்றும், அதிலிருந்த 9 இந்திய மீனவர்களும் இவ்வாறு கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். 


குறித்த மீன்பிடிப் படகு சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து, கடல் அடிவாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் 'அடிமடி வலை' (Bottom Trawling) முறையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளது. 


இதன்படி, கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட 9 மீனவர்களும் மீன்பிடிப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடிப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். 


மேலும், மன்னார் தீவு மற்றும் ஆதாம் பாலத்தை சுற்றியுள்ள மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் தொகுதி சர்வதேச மற்றும் உள்நாட்டு ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மண்டலமாகக் கருதப்படுகிறது. 


எனவே, இந்தப் பகுதி சிறப்பு மீன்பிடி முகாமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக பேணப்பட்டு வருகின்றது.

ShortNews

அவர்கள் அணிந்திருப்பது புர்கா அல்ல - முஸ்லிம் சகோதரிகளின் ஆடை தொடர்பான கோரிக்கை ஏற்புடையதே - கலாநிதி ஜனகன்!


முஸ்லிம் சகோதரிகளின் ஆடை தொடர்பான கோரிக்கை ஏற்புடையது! - கலாநிதி ஜனகன்

முஸ்லிம் சகோதரிகள் முன்வைத்துள்ள ஆடை தொடர்பான கோரிக்கைக்கு நான் முழுமையான ஆதரவை வழங்குகிறேன்.

அவர்கள் அணிந்திருப்பது முகத்தை மறைக்கும் புர்கா அல்ல. முகம் முழுமையாகத் தெரியும் வகையிலான ஹிஜாப் மட்டுமே. எனவே, நோயாளிகளின் பாதுகாப்பிற்கோ அல்லது வைத்தியர்களின் தொழில்சார் கடமைகளை நிறைவேற்றுவதற்கோ இதனால் எந்தவிதமான தடையும் ஏற்படாது என நான் கருதுகிறேன்.

எனவே, வைத்தியர்களும் வைத்தியசாலை நிர்வாகங்களும் இவ்விடயத்தை தேவையற்ற பிரச்சினையாகக் கருதாமல், சம்பந்தப்பட்ட சகோதரிகளின் மத நம்பிக்கைகளையும் அடிப்படை உரிமைகளையும் மதித்து செயற்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

ஒவ்வொரு தனிநபரினதும் மத நம்பிக்கைகளையும் கலாசார அடையாளங்களையும் மதிப்பது இலங்கையின் பன்மைத்துவமான சமூகத்தின் முக்கியமான பண்பாகும். எமது நாட்டில் அனைத்து மக்களும் தமது மதத்தையும் நம்பிக்கைகளையும் சட்டத்தின் வரம்புக்குள் சுதந்திரமாகப் பின்பற்றுவதற்கான உரிமையை அனுபவிக்க வேண்டும்.

பிறரின் நம்பிக்கைகளை மதித்து, வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு, பரஸ்பர புரிந்துணர்வுடன் வாழ்வதே எமது நாட்டின் செழுமையான பண்பாட்டின் அடிப்படையாகும். குறுகிய மனப்பான்மை அல்லது தேவையற்ற தவறான புரிதல்களால் இந்தப் பண்பாட்டுச் செல்வத்தை நாம் ஒருபோதும் பாதிக்கக் கூடாது.

அதேவேளை, வைத்தியசாலைகளில் நோயாளிகளின் பாதுகாப்பு, சுகாதாரத் தரநிலைகள் மற்றும் தொழில்சார் பொறுப்புகள் ஆகியவையும் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, அனைத்து தரப்பினரின் உரிமைகள், பொறுப்புகள் மற்றும் மத உணர்வுகளை சமநிலைப்படுத்தும் வகையில் நீதியானதும் நடைமுறைக்கு ஏற்றதுமான தீர்வொன்று விரைவில் எட்டப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

இலங்கையின் பன்மைத்துவத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில், அனைவரும் ஒருவரது மத நம்பிக்கைகளையும் உரிமைகளையும் மதித்து செயற்படுவோம்.

Zameera

இலங்கை பொருட்களுக்கு இந்தியாவில் வரி விலக்கு


 இலங்கையில் உற்பத்தி செய்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரிவிலக்கு உள்ளதாக தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 


மதுரையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 


மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் இலங்கையின் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த வணிக விளக்கவுரை கூட்டம் இடம்பெற்றிருந்தது. 


இந்நிகழ்வில் தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் உரையாற்றுகையில், இந்தியாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகின்றனர். கடந்தாண்டு சுற்றுலா வந்த 2.5 கோடி பேரில் 33 சதவீதம் பேர் இந்தியர்கள். வரும் 2030 க்குள் இலங்கையின் சுற்றுலா பயணிகள் 5 மில்லியனாக அதிகரிக்கும். 


இலங்கை பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கத்தை சந்திக்கும்போதெல்லாம் இந்தியா உதவுகிறது. இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு சிறப்பு பொருளாதார உதவிகளை செய்துள்ளார். இந்தியாவில் இருந்து பல முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகின்றனர். அவர்களுக்கு நிலம், பத்தாண்டு வரிவிலக்கு, இயந்திர தளவாட சலுகைகளை அளிக்கிறோம். 


ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புகளையும், நீண்டகால விசாவும் இலங்கை அரசு தருகிறது. இலங்கை நிர்வாகம் தொழில் வளர்ச்சிக்காக நிலவளத்தையும் தருகிறது. இலங்கையில் ஆண்டுதோறும் 800 மில்லியன் டொலர் பால்மா நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 


அடுத்து மருந்து வகைகளை ஒரு மில்லியன் டொலர் அளவுக்கு இறக்குமதி செய்கிறது. அவற்றை அங்கு உற்பத்தி செய்யலாம். வரியில்லா வர்த்தக சேவை மூலம் பல்வேறு நாடுகளுடன் வர்த்தகம் செய்ய இந்தியாவுக்கு ஒரு கேட்வே போல இலங்கை அமைந்துள்ளது. 


இந்தியாவின் 5400க்கும் மேற்பட்ட பொருட்கள் ஆண்டுதோறும் 6 பில்லியன் டொலர் அளவுக்கு விற்பனையாகிறது. இதுபோல வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா, தாய்லாந்து, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளுடன் இலங்கை மேற்கொண்டுள்ளது. 


இந்தியாவில் இறக்குமதி வரிவிதிப்பு 22 முதல் 40 சதவீதம் வரி உள்ளது. அதேசமயம் இலங்கையில் பொருட்களை உற்பத்தி செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்தால் அதற்கு வரிவிலக்கு உள்ளது எனக் கூறினார்.