Our Feeds



Thursday, July 30, 2026

ShortNews

ஜெர்மனியை வதைக்கும் கடுமையான வெப்பம் - 9,800 பேர் பலி!


இந்த ஆண்டில் இதுவரை ஜெர்மனியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக சுமார் 9,800 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் RKI சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று (30) வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானோர் 75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட முதியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் ஒரு வாரத்தின் சராசரி வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை விட அதிகரித்ததன் காரணமாக, இந்த மரணங்களின் சதவீதம் வேகமாக உயர்ந்துள்ளது.

அதேவேளை, வரும் நாட்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் எல்லையைத் தாண்டக்கூடும் என்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

ShortNews

பாகிஸ்தானில் பொலிஸ் சாவடி மீது தாக்குதல் - 11 பொலிஸார் உயிரிழப்பு


வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் சாவடி மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட கொடூர தீவிரவாதத் தாக்குதலில் 11 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதனையடுத்து இடம்பெற்ற ஒரு மணிநேரத் துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படையினர் 15 தீவிரவாதிகளைக் கொன்றதாக பொலிஸ் அதிகாரி இர்ஃபான் கான் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாக உரிமை கோரவில்லை. இருப்பினும், சமீபத்திய மாதங்களில் அப்பகுதியில் உள்ள பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் மீதான தாக்குதல்களை அதிகரித்து வரும் பாகிஸ்தான் தாலிபான் (TTP) மீது சந்தேகம் வலுத்துள்ளது.

மாகாண பொலிஸ் அறிக்கையின்படி, கூடுதல் படைகளுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தியார் கான் என்பவரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர். 

மேலும் 20 க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

தீவிரவாதிகள் கனரக ஆயுதங்களைக் கொண்டு பொலிஸ் சாவடி மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்ட கூடுதல் படைகள் வழியிலேயே மறித்துத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன. இதன்போது கவச வாகனம் ஒன்றும் சேதமடைந்தது, பின்னர் பொலிஸார் எதிர்த்தாக்குதல் நடத்தினர்.

சமீபத்திய ஆண்டுகளில் பாக்கிஸ்தானில் தீவிரவாத வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதற்குக் காரணம் 2021 இல் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஆப்கான் தாலிபான்களின் நெருங்கிய கூட்டாளியான TTP அமைப்புதான் எனப் குற்றம் சாட்டப்படுகிறது. 

TTP தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு புகலிடம் அளிப்பதாக இஸ்லாமாபாத் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வரும் நிலையில், காபூல் அக்குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றது.

ShortNews

கோட்டாபயவின் தொலைபேசி உரையாடல் கசிவு விவகாரம் - விசாரணை கோரி முறைப்பாடு!


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை தொலைபேசியில் அழைத்து அச்சுறுத்தும் வகையில் உரையாடலை பதிவு செய்து வெளியிட்டதாகக் கூறப்படும் சான் கணேகொட என்பவருக்கு எதிராக இன்று(30) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் மற்றும் மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல ஆகியோர் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளதோடு, இச்சம்பவம் தொடர்பிலும் அதற்குப் பின்னால் உள்ள வெளிநாட்டுச் சக்திகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ShortNews

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு நாளை!


2026 ஜூலை மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு நாளை (31) பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் பலன்கள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 621,638 முதியோர்களுக்காக 3,108,190,000 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 77,324 முதியோர்களுக்காக 386,620,000 ரூபா நிதி வைப்பிலிடப்படவுள்ளது.

அதற்கமைய, இரண்டு கட்டங்களின் கீழ் 698,962 பயனாளிகளுக்குக் செலுத்தப்பட வேண்டிய மொத்தத் தொகை 3,494,810,000 ரூபாவாகும்.

உரிய பயனாளிகள் நாளை முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

ShortNews

மாகாணத் தேர்தலை நடத்த எல்லை நிர்ணயம் அவசியம் - அமைச்சர் நளிந்த!


சட்டத்தில் நிலவும் ஒருசில குறைபாடுகளின் காரணமாகவும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாலும் மாகாண சபைத் தேர்தலில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டத்தின் பிரகாரம் எல்லை நிர்ணயமொன்றை செய்ய வேண்டியது அவசியமென அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நேற்று (29) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

‘‘ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல், உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பன உரிய நேரத்தில் இடம்பெற்றுள்ளன. மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. இருந்தபோதும் தற்போது சட்டத்தில் நிலவும் ஒருசில குறைபாடுகளின் காரணமாகவும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று தேர்தல் சட்டத்தின் பிரகாரம் எல்லை நிர்ணயமொன்றை செய்ய வேண்டும்.

அதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்றத் தினூடாக செய்து கொடுக்கப்பட்டவுடனேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம். அதன்போது மக்கள் நிலைப்பாட்டை அவதானிக்க முடியும்.

பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் உயிர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராகவே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நீண்டகாலம் விசாரணை நடத்தி இந்த தீர்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் கருத்துத் தெரிவிக்கிறார் என்றால் அதுவே நீதிமன்ற சுயாதீனத் தன்மைக்குள்ள பிரச்சினையாகும்.

இதற்கு முன்னரும் பாராளுமன்ற சிறப்புரிமை என்ற போர்வையில் வழக்கு விசாரிப்பவர்கள் தொடர்பில் அவநம்பிக்கை மற்றும் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைக்கிடை கருத்து வெளியிட்டுள்ளார்கள். இதுவே நீதிமன்றம் மீதான அச்சுறுத்தல். நீதிமன்றம் சுயாதீனமாக இயங்கிவரும் சந்தர்ப்பத்தில் வழக்கு விசாரணை செய்பவர்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சந்தேகம் ஏற்படும் வகையிலான கருத்துகளை முன்வைக்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளினூடாகவே நீதிமன்றத்துக்கு அச்சுறுத்தல் விடுக்க முயற்சிக்கிறார்கள். இதுவே நீதித்துறை மீதான அவதூறு.

நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை வைக்கும்போது, வழக்கு விசாரணைகள் இருப்பவர்கள் இதுபோன்ற கருத்துகளை முன்வைப்பது அதிசயமான விடயமல்ல. ஒருவேளை எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் அதுதொடர்பில் பரிசீலனைக்கு உட்படுத்தப்படலாம்.

பிரதம நீதியரசருக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, ஒருசில மேன்முறையீட்டு வழக்குகளை அந்தப் பிரதேசங்களில் விசாரணைக்குட்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளோம். அவ்வாறு செய்தால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டி ஏற்படும். அதேபோன்று உயர் நீதிமன்றத்தில் நிலவும் தற்போதைய பதவி வெற்றிடங்களை பூர்த்தி செய்ய எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்போம்.

இதற்கிடையில், நீதிபதிகளை புதிதாக சேவைக்கு இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பது நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது போன்றே, தற்போதுள்ள நீதியரசர்கள், நீதிபதிகளிடம் அதிக சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக அவர்களின் ஓய்வு வயதெல்லையை இரண்டு வருடங்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

வழக்கு விசாரணைகளை விரைவுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சட்டத்துறை சார்ந்தவர்களும் வழக்கு விசாரணைகளை விரைவாக நிறைவு செய்யவே விரும்புவார்கள் என்பதால், அவர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

ShortNews

பிணை கிடைத்தும் சிறை சென்ற சரித் அபேசிங்க விடுவிக்கப்பட்டார்!



பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய முடியாமையினால் அண்மையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சரித் அபேசிங்க இன்று (30) பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ததை அடுத்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'ஹரக் கட்டா' என்பவரின் மனைவியிடம் இருந்து 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ரக்கித ராஜபக்ஷ, சரித் அபேசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 28ஆம் திகதி காலை பிணை வழங்கி உத்தரவிட்டது.


ரக்கித ராஜபக்ஷ உள்ளிட்ட இரு சந்தேகநபர்கள் பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தமையினால் அவர்களைச் சிறைப் பொறுப்பிலிருந்து விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

எனினும், சந்தேகநபரான சரித் அபேசிங்க என்பவரால் பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய முடியாமையினால் அவர் மீண்டும் சிறைப் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

ShortNews

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் விபத்து!


சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் வென்னப்புவ உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (30) நண்பகல் முச்சக்கர வண்டி ஒன்றும் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் ஒன்றோடொன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி வென்னப்புவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ShortNews

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழிவை உடனடியாக மீளப் பெறவும் - இலங்கைத் திருச்சபை கோரிக்கை!


மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு இலங்கைத் திருச்சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாக இலங்கைத் திருச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைத் திருச்சபையின் (அங்கலிக்கன் திருச்சபை) கொழும்பு ஆயர் துஷாந்த ரொட்ரிகோ மற்றும் குருணாகல் ஆயரும் தலைமை ஆயருமான நிஷாந்த பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ShortNews

அமெரிக்க தூதுக்குழுவை சந்தித்த சஜித்!


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதியும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும், பாராளுமன்றத்தின் ஆயுதப் படை மற்றும் புலனாய்வுக் குழுக்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்து வருபவருமான அமெரிக்க பிரதிநிதி கிறிசி ஹௌலகன் (Chrissy Houlahan) தலைமையிலான தூதுக்குழுவினர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது, பொருளாதார ஒத்துழைப்பு, ஆளுகை, கல்வி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை என்பவற்றுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டு, இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. 

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அமெரிக்க தூதுக்குழுவின் முன்பாக வலியுறுத்தினார். 

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பங்காண்மையை வெளிப்படுத்தும் வகையில், கடந்த காலங்களில் ஐக்கிய அமெரிக்க குடியரசு இலங்கைக்கு பெற்றுத் தந்த தொடர்ச்சியான ஆதரவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நன்றியைத் தெரிவித்தார். 

அத்துடன், காலஞ்சென்ற ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட ஒதுக்கீட்டு முறை இலங்கையின் ஆடைத் துறையை விரிவுபடுத்துவதற்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதாகக் குறிப்பிட்டு அவர் ஆடைத் துறை குறித்து விசேடமாகத் தெரிவித்தார். 

இலங்கையின் ஆடைத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கா ஆற்றிய முக்கிய பங்குக்காக அவர் இதன்போது தனது நன்றியைத் தெரிவித்தார். 

அமெரிக்க பாராளுமன்றப் பிரதிநிதியும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான கிறிசி ஹௌலகன், ஜனநாயக விழுமியங்கள், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் இலங்கையுடனான தொடர்ச்சியான உறவுக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினார். 

ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துதல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துதல், கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் இலங்கை மக்களுக்கு நிலைபேறான பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பரஸ்பர முன்னுரிமைகள் குறித்தும் இரு தரப்பினரும் பெறுமதியான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். 

இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மைகளைப் பயக்கும் வகையில், இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இச்சந்திப்பு முடிவுற்றது.

ShortNews

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியைச் சந்திக்க கோரிக்கை!


நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய மற்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நானயக்கார ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் நேற்று (29) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த ராஜீவ் அமரசூரிய, குறித்த திருத்தச் சட்டம் இந்தச் சமயத்தில் நிறைவேற்றப்படக் கூடாது என்ற சங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சரிடம் விளக்கியதாகத் தெரிவித்தார்.

நேற்று சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்தில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கையை நீதி அமைச்சரிடம் கையளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அறிக்கையானது முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பான சங்கத்தின் நிலைப்பாட்டை விளக்குவதுடன், 2023 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வின் பரிந்துரைகளையும் சுட்டிக்காட்டுகிறது.

அத்துடன், ஜனாதிபதியைச் சந்தித்து இது குறித்துக் கலந்துரையாட அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கோரிக்கையை ஜனாதிபதியிடம் சேர்ப்பிப்பதாக நீதி அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ராஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.

சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை கவனமாக ஆராய்ந்து, ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்த பின்னர் அமைச்சர் பதிலளிப்பார் எனத் தெரிவித்த அவர், இது குறித்து மேலும் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

இதனிடையே, இந்தச் சந்திப்புக்குப் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான போராட்டங்கள் குறித்து எங்குமே கலந்துரையாடப்படவில்லை அல்லது அத்தகைய எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

ShortNews

பிள்ளையானின் மனுவை விசாரணைக்கு அழைக்க தீர்மானம்!



தம்மைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதற்கமைவாக, குறித்த மனுவை ஜனவரி மாதம் 19 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ShortNews

‘‘அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தத் தயாராகவுள்ளதா? - நாமல் எம்.பி.


‘‘அரசாங்கம் தேர்தலை நடத்தத் தயாராகவுள்ளதா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. நிறுவனங்களுக்கு பணம் செலவழித்து கருத்துக்கணிப்புகள் நடத்திக்கொண்டிருப்பதற்குப் பதிலாக மாகாண சபைத் தேர்தலை நடத்தியிருந்தால், ஜனாதிபதியை எத்தனை சதவீதம் மக்கள் ஆதரிக்கிறார்கள் அல்லது எதிர்க்கிறார்கள் என்பதைத் தெளிவாக அறிய முடியும். அதன் மூலம் மக்களின் உண்மையான விருப்பத்தையும் தெரிந்துகொள்ள முடியும்’’ என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று (29) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது,

‘‘அரசு இன்று மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது. எனவே எங்கள் கட்சி எந்த நேரத்திலும் எந்தத் தேர்தலுக்கும் தயாராக உள்ளது.

இந்த நாட்டின் மக்களின் விருப்பத்துக்கும் தொழில்முறை நிபுணர்களின் கருத்துகளுக்கும் குறிப்பாக சட்ட மா அதிபர், சட்டத்துறையில் உள்ளவர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம், ஆசிய சட்டத்தரணிகள் சங்கம், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மொத்தமாக நாட்டின் மக்களின் கருத்துகளுக்கும் எதிராக அரசாங்கம் தனது விருப்பப்படி அரசியலமைப்புத் திருத்தங்களை கொண்டு வந்து அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தால் அது தவறான எண்ணமாகும்.

வரலாற்றில் இவ்வாறான செயல்களை மேற்கொண்ட அரசுகள் எவ்வாறு முடிவுகளை சந்தித்தன என்பதை தற்போதைய அரசு கவனத்திற்கொள்ள வேண்டும். அரசு தனது கடமைகளைச் செய்யாதபோது, அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதபோது, அதிகாரத்தை பலவந்தமாகத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறது.

ஆனால், அது இன்று சாத்தியமில்லை. கடந்த காலத்தில் கதிர்காமம் எசல பெரஹராவின்போது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இன்றும் வாசனா யானை ராஜாவின் உடலில் அந்தக் குண்டுத் தாக்குதலின் காயங்கள் உள்ளன.

ஆனால், அன்றைய அரசு தேவையான பாதுகாப்பை வழங்கி கதிர்காமத் திருவிழாவை நடத்தி வைத்தது. அதைப்போலவே, தலதா மாளிகை மீதும் எல்.ரி.ரி.ஈயும் ஜே.வி.பியும் குண்டுத் தாக்குதல் நடத்தின. இருந்தபோதிலும் தலதா பெரஹரா நடைபெற்றது.

ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு காலத்துக்கு காலம் பல்வேறு சவால்கள் ஏற்படும். ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் அச்சுறுத்தலை அடிப்படையாகக் கொண்டு பெரஹரா நடைபெறுமா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியிருந்தால், அப்படியானால் அரசாங்கம் எதற்கு? எனவே அரசு பெரஹராவில் பங்கேற்கும் காவடி நடனக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், யானைகள், நிலமே (தலைமை அதிகாரி), வழிபாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

இப்போது எந்தத் தேர்தலும் அறிவிக்கப்படவில்லை. அரசியலில் நாங்கள் மறைமுகமாக செயற்படுவதில்லை. எதிர்க்கட்சியுடன் பேச வேண்டியிருந்தால் வெளிப்படையாகவே பேசுகிறோம். மறைமுக அரசியலால் பாதிக்கப்பட்டவர்கள் நாங்களே. எங்கள் கட்சி உடைந்து பலவீனமானதற்கும் அந்த மறைமுக அரசியலே காரணம்.

எனவே, எங்களால் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் அது வெளிப்படையாகவே நடைபெறும். இரகசியமாக அல்ல. ஏனெனில் இறுதியில் அனைவரும் மக்களிடம் செல்ல வேண்டியவர்களே. மக்களின் தேவைகளையும் நாட்டின் நலனையும் அடிப்படையாகக் கொண்டு மட்டுமே நாங்கள் கூட்டணிகளை அமைப்போம். தனிநபர்களின் தேவைக்காக கூட்டணிகளை அமைக்க மாட்டோம்.

எங்களுக்கு யாருடனும் விசேடமாகப் பேச வேண்டிய அவசியமில்லை. எங்கள் கொள்கையை ஏற்றுக்கொள்பவர்கள், அதில் நம்பிக்கை வைப்பவர்கள், நாட்டுக்கு ஏற்ற அரசியல் திட்டம் எங்களிடம் உள்ளது என்று நம்புபவர்கள் எவராக இருந்தாலும் எங்களுடன் இணையலாம்.

கடந்த காலத்தில் பல காரணங்களால் எங்கள் கட்சியிலிருந்து சிலர் விலகினர். அதே நேரத்தில் புதிய குழுக்களும் எங்களுடன் இணைந்தனர். இவ்விரு தரப்பினரையும் ஒருங்கிணைத்து வலுவான அரசியல் சக்தியை உருவாக்குவது எனது பொறுப்பாகும்.

நாமல் ராஜபக்ஷவின் அரசியல் பயணம் வெற்றிகரமாக இருந்தாலும், மக்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அது தீர்வாக இல்லையெனில் அதற்கு அர்த்தமில்லை. வரவிருக்கும் காலத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பாதையை நல்லதாக்குவதே எனது முதல் பொறுப்பு. அதற்காக இந்த அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.

ShortNews

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30) ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரது விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டிருந்தது.