
Monday, June 29, 2026

இறைவரித் திணைக்கள அதிகாரி என கூறி பண மோசடி
இறைவரித் திணைக்களத்தின் அதிகாரி எனப் போலி அடையாளத்தைக் காட்டி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறைவரித் திணைக்களத்தின் அதிகாரி எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, சந்தேக நபர் பல்வேறு நபர்களிடம் பணம் மோசடி செய்துள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஆவார்.
சந்தேக நபர் இதற்கு முன்னரும் இது போன்ற பண மோசடி சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!
ரிதீமாலியத்த - குருவிதென்ன, தொட்டிலேயாய பகுதியில் அமைந்துள்ள லொக்கல்லா ஓயா நீர்த்தேக்கத்தில் படகு சவாரி செய்துகொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் கண்டி, கடுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும், கண்டி, பூஜாரப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரும் ஆவர்.
கண்டிப் பகுதியிலிருந்து 33 பேரைக் கொண்ட குழுவினர் நேற்று (28) லொக்கல்லா ஓயா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விவசாயப் பண்ணை என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்த சுற்றுலாத் தலம் ஒன்றிற்கு வருகை தந்துள்ளனர்.
அங்கு பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் ஈடுபட்ட பின்னர், அந்த சுற்றுலாத் தலத்திற்குச் சொந்தமான இரண்டு சிறிய படகுகளை பாதுகாப்பற்ற முறையில் ஒன்றாக இணைத்துக் கட்டப்பட்ட மிதவைப்படகு மூலம், லொக்கல்லா ஓயா குளத்தின் நடுவிலுள்ள சிறிய தீவொன்றிற்கு நீராடுவதற்காகச் சென்றுள்ளனர்.
அவர்கள் அந்தத் தீவில் நீராடிவிட்டு மீண்டும் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது, அந்த மிதவைப்படகு உடைந்து கவிழ்ந்தமையாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து நடந்த தருணத்தில் இந்த மிதவைப்படகில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் இருவர் பாதுகாப்பு அங்கிகளை அணிந்திருக்காததால் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்ததுடன், பொலிஸாரும் கிராம மக்களும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் மூலம் இன்று (29) காலை அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை பதில் நீதவான் எஸ். கோவின்ன இன்று (29) மதியம் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, சடலங்கள் இரண்டையும் மஹியங்கனை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
சம்பவம் தொடர்பில் ரிதீமாலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்கலைக்கழக முறைமையில் நிலவும் சவால்கள் குறித்து பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!
இலங்கையின் பல்கலைக்கழக முறைமையில் நிலவும் சவால்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று, எதிர்வரும் ஜூலை 2-ஆம் திகதி இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளது.
கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
பல்கலைக்கழகக் கட்டமைப்பில் தற்போதுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றுக்கான உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது,பல்கலைக்கழக முறைமையின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நீண்டகாலத் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளது.
பல்கலைக்கழகக் கல்வியின் தரம் மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளைப் பலப்படுத்துவதன் ஊடாக, மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

53,000 ஐ கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!
தொடரும் மழையுடனான வானிலைக்கு மத்தியில், நாட்டிற்குள் டெங்கு நோய் பரவல் மேலும் தீவிரமடைந்து வருகின்றது.
இந்த ஜூன் மாதத்தில் நேற்றைய தினம் வரையில் மாத்திரம் 19,318 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததுடன், இதனுடன் இவ்வருடத்தில் இதுவரையில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 53,000 ஐத் தாண்டியுள்ளது.
அதற்கமைய, வருடத்தின் 25ஆவது வாரம் நிறைவடையும் போது, நாட்டின் 124 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாய வலயங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு இன்று காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று வரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 53,159 ஆகும்.
அத்துடன் டெங்கு நோய் காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆகும்.
வருடத்தின் கடந்த முதல் 5 மாதங்களிலும் மாதமொன்றில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் குறைவான மட்டத்திலேயே காணப்பட்ட போதிலும், ஜூன் மாதத்தின் கடந்த 28 நாட்களில் மாத்திரம் 19,318 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவான மாகாணமாக மேல் மாகாணத்தில் காணப்படுகின்றது.
மேல் மாகாணத்தில் 27,833 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்பதுடன், இது சதவீத அடிப்படையில் 52.36% ஆகும்.
தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, நுளம்புகள் பெருகுவதைத் தடுப்பதற்கும் நுளம்பு முட்டைகள் மற்றும் புழுக்களை அழிப்பதற்கும் தங்களது சூழலைத் தூய்மையாக வைத்திருப்பது குறித்து தீவிர கவனம் செலுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

களுபோவில வைத்தியசாலையில் நோயாளி பராமரிப்பு பிரிவுகள் திறப்பு
கொழும்பு களுபோவில தெற்கு போதனா வைத்தியசாலையில் , சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டுதலின் கீழ் புதிதாக நிறுவப்பட்ட மேம்பட்ட நோயாளி பராமரிப்புப் பிரிவுகள் நாளை (30) பொதுப் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்படவுள்ளன.
இதில் குறிப்பாகஇதய வடிகுழாய் ஆய்வகம்
டிஜிட்டல் சப்ராக்ஷன் ஆஞ்சியோகிராபி யூனிட் லித்தோட்ரிப்ஸி யூனிட் (சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை கற்களை உடைக்கப் பயன்படும் வசதி) என்பன அடங்குகின்றன.
அத்துடன்,இந்த வாரம் அரசு வைத்தியசாலை அமைப்பில் மொத்தம் 4 நவீன லேப்கள் சேர்க்கப்படுவதோடு. இந்த புதிய அமைப்புகள் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான நிகழ்நேரப் படமெடுக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன.
அத்துடன்,இவை கதிர்வீச்சு வெளிப்பாட்டைக் குறைத்து, உயர்தரப் படங்களை வழங்குகின்றன.
இந்த மேம்பட்ட வசதிகள் மூலம் நோயாளிகளுக்கான காத்திருப்போர் பட்டியல் குறைவதோடு, வேகமான, துல்லியமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய சிகிச்சையை நோயாளிகள் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாநகரசபை மேயர் நீக்கம் – ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
வவுனியா மாநகரசபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுநருக்கு ஏதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா பண்டார வன்னியன் சதுக்கம் முன்னால் இன்று (29) குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், அங்கிருந்து மன்னார் வீதி வழியாக ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் காமினி மகாவித்தியாலயம் முன்பாக நின்று கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த 24ஆம் திகதி வெளியிட்டப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபனின் பதவி பறிக்கப்பட்டதுடன், அவரது மாநகர சபை உறுப்புரிமையும் பறிக்கப்பட்டிருந்தது.
இதனை கண்டித்து இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் ''ஆளுநரே ஜனநாயக படுகொலையை நிறுத்து, ஜேவிபியின் முகவராக ஆளுநரே செயற்படாதே, மக்கள் ஆணைக்கு மதிப்பளி, தையிட்டியில் பாராமுகம் மாநகர சபையில் பழிவாங்களா, ஊழல் அறிக்கையை வெளிபடுத்து'' என பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன், ப.சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோதரராதலிங்கம், முத்து முகமது, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், சிவநேசன், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மேம்பாட்டுக்கு அரசு கவனம்
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன் இணைந்து, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, தற்போது வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
வைத்தியசாலையின் சேவைத் தரத்தை உயர்த்துதல், நிர்வாக மற்றும் வள ஒதுக்கீட்டு வசதிகளை மேம்படுத்துதல், நோயாளர்களுக்கான சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.
அத்துடன், வைத்தியசாலையில் நிலவும் ஆளணி பற்றாக்குறை, விசேட வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் தட்டுப்பாடு, மருத்துவ உபகரணங்களின் தேவைகள், சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் மற்றும் நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் அமைச்சர்கள் நேரடியாக கலந்துரையாடி, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், தேவைகள் மற்றும் சேவை மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, வைத்தியசாலையின் பல்வேறு நோயாளர் விடுதிகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் நலன்கள் குறித்து விசாரித்ததுடன், மருத்துவ சேவை வழங்கப்படும் நடைமுறைகளையும் பார்வையிட்டனர்.
இதன்போது உரையாற்றிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மக்களின் சுகாதார சேவையில் மிக முக்கியமான பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பணியாளர்கள் பல்வேறு வளக்குறைபாடுகளுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர்.
அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பில் அரசாங்கம் முழு கவனம் செலுத்தியுள்ளது. அவற்றுக்கு கட்டம் கட்டமாக தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களுக்கும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு தரமான, சமமான மற்றும் திறன்மிக்க சுகாதார சேவையை வழங்குவதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்கும்.

அனுராதபுர பல்முனை போக்குவரத்து மையத்தின் முதற்கட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு
(க.சிவலிங்கமூர்த்தி)
நிதி பற்றாக்குறை காரணமாக நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த அனுராதபுர பல்முனை போக்குவரத்து மையத்தின் கட்டுமான பணிகள் அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் மீண்டும் செயற்படுத்தப்பட்டு விரைவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதன் முதற்கட்டம் கடந்த சனிக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
பேருந்து நிலைய பணிகளை நேரில் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன் போது வட மத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, அனுராதபுர மாநகர முதல்வர் என். கருணாரத்ன, துணை மேயர் சீதா ஹேரத், மாநகர சபை உறுப்பினர்கள், வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் முதித் பிரசன்ன, மாநகர ஆணையர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;
பொசோன் பௌர்ணமியை முன்னிட்டு அனுராதபுரத்துக்கு வருகை தரும் இலட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு இந்த தற்காலிக ஏற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கட்டுமானத்தில் உள்ள இந்த பல்முனை போக்குவரத்து மையத்தின் ஒரு பகுதி தற்காலிகமாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொசோன் பௌர்ணமி காலப்பகுதியில் நகர மையத்தில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், பயணிகள் வசதிகளை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன், பயணிகள் சேவையை விரைவுபடுத்தும் நோக்கில் "டச் அண்ட் கோ'' முறையின் கீழ் பேருந்துகளில் இருந்து பயணிகள் குறுகிய நேரத்தில் இறங்கி மீண்டும் தங்களது பயணத்தை தொடரும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் பேருந்து இயக்க நேரம் குறைக்கப்பட்டு, போக்குவரத்து நெரிசல் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி பற்றாக்குறை காரணமாக ஆரம்பத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த திட்டம், தற்போதைய அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் மீண்டும் செயற்படுத்தப்பட்டு கட்டுமான பணிகள் வேகமாக முன்னெடுக்கப்படுகிறது. தொடக்கத்தில் சுமார் 1100 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டிருந்த இந்த திட்டத்தின் செலவு, பின்னர் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் பணிகள் நிறுத்தப்பட்ட காலப்பகுதி காரணமாக சுமார் 2400 மில்லியன் ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் கீழ் திட்டச் செலவுகள் மீளாய்வு செய்யப்பட்டு, பொதுமக்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திட்ட மேலாண்மை மீண்டும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆலோசக நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில், இந்த பல்முனை போக்குவரத்து மையத்தின் முழு கட்டுமான பணிகளும் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்து பொதுமக்களுக்கு முழுமையாக ஒப்படைக்க திட்டமிட்டுள்ளோம்.
இந்த போக்குவரத்து மையத்தில் பயணிகளுக்காக பல நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அணுகல் பாதைகள், சக்கர நாற்காலி பயணிகளுக்கான வசதிகள் மற்றும் தனி சுகாதார வசதிகள், பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் நடைமேம்பாலம், மின்தூக்கிகள் மற்றும் மின்படிகள், 24 மணி நேர ஏடிஎம் வசதி, பயணிகளுக்கான ஓய்வு அறைகள், தரமான உணவகங்கள் மற்றும் வணிக நிலையங்கள், தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகள், நவீன சுகாதார வசதிகள், நீண்ட ரயில்களை நிறுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட மேடைகள் மற்றும் தானாக இயங்கும் மின்ஜெனரேட்டர் வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கியுள்ளன.
பொசோன் பௌர்ணமியை முன்னிட்டு அனுராதபுர நகரின் போக்குவரத்து ஒழுங்குமுறையை மேம்படுத்தும் முக்கிய கட்டமைப்பு நடவடிக்கையாக இந்த தற்காலிக திறப்பு கருதப்படுகின்றது. இந்த நடவடிக்கை மூலம் நகரில் ஏற்படும் பயணிகள் நெரிசலை குறைத்து, பாதுகாப்பான மற்றும் சீரான போக்குவரத்து சேவையை உறுதி செய்யும் நோக்கம் நிலவுகின்றது என்றார்.

அமெரிக்காவின் புதிய பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்திய ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது சொந்தப் படம் மற்றும் கையெழுத்து டன் கூடிய புதிய சிறப்புப் பதிப்பு பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். சமூக வலைத்தள பக்கத்தில் இந்த பாஸ்போர்ட்டின் மாதிரிப் படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்க வரலாற்றிலேயே பதவியில் இருக்கும் ஒரு ஜனாதிபதியின் படம் அதிகாரப்பூர்வ பயண ஆவணத்தில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க சுதந்திரப் பிரகடன உரையின் பின்னணியில், ஜனாதிபதி ட்ரம்ப் தனது மேஜையில் சாய் வாக நிற்பது போன்ற ஒரு கம்பீரமான புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அதன் கீழே அவரது கையெழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளது.
அடுத்த பக்கத் தில் ஜான் டம்பல் வரைந்த புகழ்பெற்ற "சுதந்திரப் பிரகடனம்" ஓவியமும், அதனுடன் ஒருங்கிணைந்த அமெரிக்க 250 வாசகமும் அச்சிடப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை இந்த சிறப்புப் பதிப்பு பாஸ்போர்ட்டிற்கு "தேசபக்தர் பாஸ்போர்ட்" என்று பெயரிட்டுள்ளது. அமெரிக்கா சுதந்திரம் அடைந்து 250 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் இந்த சிறப்புப் பதிப்பு பாஸ்போர்ட் வெளியிடப்படுகிறது.

இன, மத ஒற்றுமைக்கு அரசு உறுதி – விஜித ஹேரத்

'Tell IGP' சேவை 24 மணி நேரமும் விரிவுபடுத்தப்பட்டது – பொலிஸார்
பொதுமக்களின் தேவைகளை விரைவாக நிறைவேற்றும் நோக்குடன், 'பொலிஸ் மா அதிபரிடம் கூறுங்கள்' (Tell IGP) என்ற விசேட திட்டம் 2026 ஆம் ஆண்டில் மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் மறுசீரமைக்கப்பட்டு, பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான எப்.யு.வுட்லர் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொழும்பு 2 இல் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் பிரதான காரியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள இச்சேவை மையம், 24 மணித்தியாலமும் இயங்கி வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள பிரஜைகள் மாத்திரமன்றி, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் இலங்கையில் ஏதேனும் ஒரு பொலிஸ் பிரிவின் சேவையைப் பெற விரும்பும் வெளிநாட்டுப் பிரஜைகளும் நிகழ்நிலை மூலமாகத் தங்களின் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும்.Travel
முழுமையாக நிகழ்நிலையில் இயங்கும் இச்சேவையினைப் பொதுமக்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பெற முடியும். அதேபோன்று, நாட்டில் உள்ள ஒவரோ அல்லது வெளிநாட்டுப் பிரஜை ஒருவர தங்களின் பெயரைக் குறிப்பிட்டோ அல்லது பெயர் குறிப்பிடாமலோ மிக முக்கியமான மற்றும் இரகசியமான தகவல்களை இத்திட்டத்தின் ஊடாக பொலிஸாருக்கு வழங்க முடியும். குறிப்பாக, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மூலம் நாட்டினுள் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் பாதாள உலகக் குழு செயல்பாடுகள் குறித்து வழங்கப்படும் தகவல்களை நாம் பெரிதும் வரவேற்கிறோம்.
பொதுமக்களும் தமது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் குற்றங்கள், சிவில் தகராறுகள், போக்குவரத்து விதிமீறல்கள், ஊழல் மோசடிகள் அல்லது பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்கள் குறித்தும் இதன் ஊடாக பொலிஸ் மா அதிபருக்குத் தெரியப்படுத்தலாம். இந்த மறுசீரமைக்கப்பட்ட புதிய கட்டமைப்புக்கு அமைய, உங்களின் முறைப்பாடுகள் குறித்த பொலிஸ் வலயங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் ஊடாக, சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு உடனடியாகக் கொண்டு சேர்க்கப்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நியாயமான நீதி கிடைக்கவில்லை என்று கருதினால், அந்த அநீதி குறித்தும் இதன்மூலம் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும். எனவே, பொதுமக்கள் எவ்வித பயமும் தாமதமுமின்றி தங்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறான முறைப்பாடுகள் அனைத்தும் உடனடியாகப் பதிவு செய்யப்பட்டு, அடுத்தகட்ட விசாரணைகளுக்கான ஆரம்பப் புள்ளியாகப் பயன்படுத்தப்படும்.
இச்சேவையை நாடளாவிய ரீதியில் மேலும் வலுப்படுத்துவதற்காக, 48 பொலிஸ் வலயங்கள் உட்பட அனைத்துப் பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் விசேட கணினிப் பயிற்சியளிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் இச்சேவையைப் பயன்படுத்துவதற்கு www.police.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று, அங்குள்ள ‘E-Services’ (ஈ-சேவைகள்) என்ற பக்கத்தில் உள்ள ‘Tell IGP’ என்பதற்குள் நுளைந்து தங்களின் முறைப்பாடுகளையும், அவற்றுடன் இணைக்க வேண்டிய ஏதேனும் ஆவணங்கள் அல்லது புகைப்படங்கள் இருப்பின் அவற்றையும் பதிவேற்றி சமர்ப்பிக்க முடியும். பொதுமக்கள் தங்களின் தேவைகளை விரைவாகவும் இலகுவாகவும் பூர்த்தி செய்து கொள்வதற்காகவே பொலிஸார் இச்சேவையை அர்ப்பணிப்புடன் வழங்கி வருகின்றனர் என்றார்.
