Our Feeds



Thursday, July 9, 2026

Zameera

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 10,000 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்


 இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும், சுமார் 10,000 கிலோ கிராம் எடையுடைய 60,448 கடல் அட்டைகளுடன் 26 மீனவர்கள் இன்று (09) மன்னார், சௌத்பார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் கடத்தப்படுவதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தச் சட்டவிரோத கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 12 படகுகளும், அவற்றில் இருந்து சுமார் 10,000 கிலோ கிராம் எடையுடைய 60,448 கடல் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் கடல் அட்டைகள் சௌத்பார் கடற்கரைக்குக் கொண்டு வரப்பட்டு, முதற்கட்ட நடவடிக்கைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

மீட்கப்பட்ட கடல் அட்டைகள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு, பொலித்தீன் பைகளில் பொதியிடப்பட்ட நிலையில் காணப்பட்டன. இது குறித்து கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் இன்று (09) மாலை கடற்படை மற்றும் பொலிஸார் முன்னிலையில் பகிரங்க ஏல விற்பனை செய்யப்பட்டன.

அதேவேளை, கைது செய்யப்பட்ட 26 மீனவர்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகுகள் உள்ளிட்ட ஏனைய பொருட்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


-மன்னார் நிருபர் லெம்பட்-

Zameera

பணம் தூய்தாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம் நிறைவேற்றம்


 பணம் தூய்தாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது வாசிப்பு, பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார்.

இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டுள்ளன.

Zameera

வனவிலங்கு உடல் பாகங்களால் ஆபரணம் தயாரித்தவருக்கு ரூ.21 இலட்சம் அபராதம்


 வனவிலங்குகளின் உடல் பாகங்களைப் பயன்படுத்தி ஆபரணங்களைத் தயாரித்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்து வந்த தங்க நகைக் கடை உரிமையாளர் ஒருவருக்கு 21 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

பொல்கஸ்ஓவிட்ட, கஹதுடுவ பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கே நேற்று (08) ருவான்வெல்ல நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 

அவரது தங்க நகைக் கடையில் விலங்குகளின் முடிகள் மற்றும் உடல் பாகங்களைப் பயன்படுத்தி தாயத்துக்கள், மோதிரங்கள் உள்ளிட்டவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வந்தபோது, புலத்கொஹுபிட்டிய வனவிலங்கு அதிகாரிகளும் குருணாகல் வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகளும் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டிருந்தனர்.

 

இந்தச் சோதனை கடந்த ஜூன் 24ஆம் திகதி நடத்தப்பட்டதுடன், வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ருவான்வெல்ல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், மீண்டும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தார்.

 

சந்தேக நபர் வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை மீறி, வனவிலங்குகளின் உடல் பாகங்களை இவ்வாறு மோதிரங்கள் மற்றும் மாலைகள் உள்ளிட்டவற்றுக்காகப் பயன்படுத்தியுள்ளார் என்று வனவிலங்கு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

 

கருப்பு பவளம், புலிப் பற்கள், யானை முடிகள், யானைத் தந்தங்கள், விசேட கடல் சிப்பிகள், யானை தொடைகள் போன்றவற்றை மாலைகள், மோதிரங்கள் எனத் தயாரித்து, "இவற்றை அணிந்தால் கிரக தோஷங்கள் நீங்கும்" என்று கூறி ஏமாற்றி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

 

இதற்கமைய, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதவான் அவருக்கு 21 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

 

குறித்த அபராதத் தொகையை மூன்று தவணைகளில் செலுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், அதன் முதல் தவணையான 7 இலட்சம் ரூபாயை ஓகஸ்ட் 8ஆம் திகதிக்குள் செலுத்தி முடிக்குமாறும் அறிவித்துள்ளார்.

Zameera

கொழும்பில் 8 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு தொற்று


 டெங்கு ஒழிப்புப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்து வரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 8 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளது.


 


இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்தச் சங்கத்தின் கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவர் அமித் குமார இதனை வெளிப்படுத்தியுள்ளார்.


 


சுகாதார ஊழியர்கள் சிலருக்கும் டெங்கு நோய் தொற்றியுள்ளதாகவும், கொழும்பு மாவட்டம் முழுவதும் தற்போது டெங்கு தொற்று வேகமாக பரவி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


 


கடந்த ஜூன் மாதம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்புச் சோதனைகளின் போது, தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் சரிவர நிறைவேற்றாத 1,186 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் ஒரு கோடியே 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் (10,225,000) அபராதப் பணம் வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாக அமித் குமார தெரிவித்துள்ளார்.


 


ஜூன் மாதத்தில் மாத்திரம் 494 வீடுகள், 134 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், 4 பாடசாலைகள் மற்றும் 2 வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களிலும் எவ்வித தராதரமும் பாராது சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமித் குமார மேலும் கூறினார்.

Zameera

நீர்கொழும்பு சிறை மோதல்: 8வது சிறை அதிகாரியும் உயிரிழப்பு


 நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தின் போது உயிரிழந்த 8-வது சிறைச்சாலை அதிகாரியான, சிறைச்சாலை காவலர் எம்.ஜி. உபாலி அவர்களின் உடல் இன்று (09) கம்புருபிட்டியவில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

தனது கடமையின் போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது, கைதிகளின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை காவலர் மத்தக கமகே உபாலி நேற்று நண்பகல் தனது இறுதி மூச்சை விடுத்தார்.

42 வயதான சிறைச்சாலை காவலர் உபாலி, கடற்படையில் 12 ஆண்டுகள் சேவையாற்றிய பின்னர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிறைச்சாலை சேவையில் இணைந்திருந்தார்.

மாத்தறை கம்புருபிட்டிய கொரபாவித்த பகுதியைச் சேர்ந்த அவர், 06 மற்றும் 09 வயதுடைய இரண்டு சிறுவர்களின் அன்புத் தந்தையாவார்.

சிறைச்சாலை காவலரின் உடல் இன்று பிற்பகல் கம்புருபிட்டிய கொரபாவித்த பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலை பதற்றத்தின் போது உயிரிழந்த சிறைச்சாலை காவலர் எஸ்.டி.எஸ். அபேவர்தன அவர்களின் உடல் வைக்கப்பட்டுள்ள குருநாகல் வத்தேகெதர இல்லத்திற்கு இன்று காலை நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார அவர்கள் வருகை தந்திருந்தார்.

மேலும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் தாக்குதலினால் உயிரிழந்த சிறைச்சாலை ஜெயிலர் எஸ்.எச்.எஸ் சந்திரவங்ச உள்ளிட்ட பல அதிகாரிகளின் உடல்களுக்கான இறுதிச் சடங்குகள் இன்று (09) பிற்பகல் நடைபெறவுள்ளன.

Zameera

பேரை ஏரியைச் சுத்தம் செய்ய கடல் நீர் உட்புகுத்தும் திட்டம்


 உடனடி மற்றும் குறுகிய கால தீர்வாக, பேரை ஏரிக்குள் கடல் நீரை உட்புகுத்தி, அதன் மூலம் ஏரியைச் சுத்தம் செய்யும் விசேட தொழில்நுட்பத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக முழுமையான நிதிப் பங்களிப்பை வழங்குவதற்கு நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான பொறியியலாளர் நஹில் விஜேசூரிய சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஏரியின் தூய்மையையும் அழகையும் நிலையான முறையில் பேணுவதற்கான நீண்ட கால திட்டங்களை, இந்த வருட அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட  நிதியின் கீழ் செயல்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக கொழும்பு மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளன.

ஹுனுபிட்டிய கங்காராம விகாராதிபதி, வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரரின் தலைமையில் மற்றும் அவரது ஆலோசனையின் பேரில், பேரை ஏரியைச் சுத்தம் செய்வதற்கும் அழகுபடுத்துவதற்கும் அரச மற்றும் தனியார் துறைகளை ஒருங்கிணைத்த விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (09) அந்த விகாரையில் நடைபெற்றது.

இதன்போது, இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது குறித்த மேலதிக விபரங்கள் கலந்துரையாடப்பட்டன.

SHAHNI RAMEES

நீர்கொழும்பு சிறையில் கைதிகளை தடுத்து வைக்காதிருக்க தீர்மானம்!

 

கடந்த ஜூலை 05 மற்றும் 06 ஆகிய இரண்டு தினங்களில்
Zameera

பல கோடி ரூபாய் தங்கத்துடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது


 ஒரு கோடியே 18 இலட்சத்து 85 ஆயிரத்து 514 ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் நபர் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார். 


முறையான அனுமதிப்பத்திரங்கள் இன்றியும், சுங்கத் திணைக்களத்திற்கு அறிவிக்காமலும் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட இந்தத் தங்கத்தை, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற ஒருவரே நேற்று (08) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய வர்த்தகர் என தெரியவந்துள்ளது. 


அவர் நேற்று காலை 06.30 மணியளவில் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 


இதன்போது, அவர் கொண்டு வந்த பயணப் பொதிகளுக்குள் 271 கிராம் மற்றும் 480 மில்லிகிராம் எடையுடைய 12 தங்க மாலைகள், 10 காப்புகள் மற்றும் 2 தங்கக் கட்டிகள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்துள்ளார். 


பின்னர், இது குறித்த மேலதிக விசாரணைகளுக்காக இன்று காலை சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். 


அங்கு நடத்தப்பட்ட முறையான சுங்கப் பரிசோதனையின் பின்னர், குறித்த தங்கம் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சந்தேகநபருக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Zameera

நாட்டில் டெங்கு மரணங்கள் 45 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 


டெங்கு ஒழிப்பு பிரிவு இன்று (9) காலை வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 65,034 ஆகும். 


ஜூலை மாதத்தின் முதல் 08 நாட்களில் மாத்திரம் 9,654 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 


இந்த ஆண்டில் இதுவரையில் மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள நோயாளர்களின் அடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் 13,332 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 


கொழும்பு மாவட்டத்தில் 13,150 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 4,600 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 4,354 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

SHAHNI RAMEES

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

 

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக,
SHAHNI RAMEES

நீர்கொழும்பு சிறை மரணம் மனிதப் படுகொலை; தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவர் – நீதி அமைச்சர்!

 


நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின்

Zameera

கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்களுக்கு டெங்கு பாதிப்பு


 கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். 


அவர்களில் 5 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 


பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் பெரும்பாலானோர் கலைப்பீடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் கல்விச் செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தி, ஒரு வார காலத்திற்கு பல பீடங்களின் விரிவுரைகளை மாத்திரம் இணையவழி மற்றும் கலப்பு முறையில் முன்னெடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரசபை தீர்மானித்துள்ளதாக துணைவேந்தர் மேலும் குறிப்பிட்டார். 


டெங்கு பரவலுக்கு மத்தியில், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பல்கலைக்கழகத்தினால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் உடல்நிலை குறித்து தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாகவும் பேராசிரியர் இந்திக்க கருணாதிலக்க தெரிவித்தார். 


டெங்கு நோய் தொற்றின் போது ஓய்வு என்பது அத்தியாவசியமான ஒன்று என்பதால், இவ்வாறு விரிவுரைகளை இணையவழி ஊடாக நடத்துவதற்குத் தீர்மானித்ததாக அவர் சுட்டிக்காட்டினார். 


தற்போது பல்கலைக்கழகத்திற்குள் நிலவும் சூழல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட துணைவேந்தர், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் காணப்பட்டால், தயவுசெய்து அதற்குரிய மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு மாணவர்களிடம் கோரியுள்ளார். 


இந்தச் சூழ்நிலையில் எந்தவொரு வகையிலும் பல்கலைக்கழகம் மூடப்படவில்லை என்பதை வலியுறுத்திய துணைவேந்தர், அவ்வாறு பல்கலைக்கழகத்தை மூடும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

Zameera

நீர்கொழும்பு சிறை மோதல்: பக்கச்சார்பற்ற விசாரணை உறுதி - ஹர்ஷன நாணயக்கார


 (செ.சுபதர்ஷனி)


நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த அதிகாரிகள் மற்றும் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும். விசாரணையின் மீது நம்பிக்கை வையுங்கள். இதுவொரு சாதாரண மரணம் அல்ல, இதுவொரு மனிதப் படுகொலை. தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார தெரிவித்தார்.


பொரல்லை சிறைச்சாலை தலைமையகத்தில் புதன்கிழமை (8) உயிரிழந்த அதிகாரிகளின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், அங்கு வருகை தந்திருந்த போதே அமைச்சர் சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கையில்,


தற்போது உயிரிழந்தவர்களுக்கான இறுதி மரியாதையைச் செலுத்துவது அவசியம். ஆகையால் அவர்களது இறுதிக்கிரியைகளை மேற்கொள்ள வேண்டிய தருணமிது. இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து முழுமையான நம்பிக்கை வையுங்கள். இதுவொரு சாதாரண மரணம் அல்ல, இதுவொரு மனிதப் படுகொலை. தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், சாட்சி மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அவர்களுக்குரிய தண்டனை பெற்றுத்தரப்படும். இந்த விவகாரத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளுக்கோ அல்லது பக்கச்சார்பான நிலைப்பாடுகளுக்கோ இடமளிக்கப்பட மாட்டாது . பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன்" என்றார்.