Our Feeds



Saturday, March 7, 2026

Zameera

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து


 யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில், எரிபொருள் நிரப்பும் இயந்திரம் ஒன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.

இன்று மதியம் எரிபொருள் தாங்கி ஊர்தியிலிருந்து, எரிபொருள் நிரப்பு நிலையத்தின் நிலக்கீழ் சேமிப்புத் தொட்டிக்குள் எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்த போதே இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக அங்கிருந்த எரிபொருள் நிரப்பும் இயந்திரம் ஒன்றின் ஒரு பகுதி முற்றாக எரிந்து கருகியது.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து செயற்பட்டனர். 

அவர்களின் துரித முயற்சியால் தீ ஏனைய பகுதிகளுக்குப் பரவாமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த விபத்தின் போது பல நூறு லீற்றர் பெற்றோல் தீயில் எரிந்து வீணாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 அதிர்ஷ்டவசமாகப் பெரும் உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


-யாழ். நிருபர் பிரதீபன்-


Zameera

ஈரான் ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலி விநியோகத்திற்கு பாதிப்பு


 மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.



அமைச்சர் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள் வருமாறு:



உணவு விநியோகம் மற்றும் இறக்குமதி



• நெத்தலி விநியோகம்: இதுவரை ஈரான் ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலி விநியோகத்திற்கு, மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


• மாற்று நடவடிக்கை: நுகர்வோருக்குத் தேவையான நெத்தலியைத் தடையின்றி வழங்குவதற்காக, தற்போது தாய்லாந்திலிருந்து அவற்றை இறக்குமதி செய்ய இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



• அண்டை நாடுகளுடனான வர்த்தகம்: இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால், உணவு விநியோகத்திற்கு தற்போது பெரிய அளவில் பாதிப்பு இல்லை என அவர் வலியுறுத்தினார்.



தானிய இருப்பு மற்றும் வரிச் சலுகை



உள்நாட்டு தானிய அறுவடை கிடைப்பதற்கு இன்னும் ஆறு முதல் ஏழு மாதங்கள் வரை காலம் எடுக்கும். எனவே, அந்த காலப்பகுதியில் சந்தையில் தானியத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, சில வகை தானியங்களை வரிச் சலுகையுடன் இறக்குமதி செய்ய வசதிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.


ஏற்றுமதித் துறை முன்னேற்றம்


நாட்டின் ஏற்றுமதித் துறை குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர்:


• ஜனவரி மாதத்தில் மாத்திரம் இலங்கையிலிருந்து 4 மில்லியன் டொலர் பெறுமதியான மீன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.


• இந்த ஏற்றுமதி நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடன் கலந்துரையாடி விசேட உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நெருக்கடி நிலை நிலவினாலும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு அரசாங்கம் முழுமையாகத் தயாராக இருப்பதாக வர்த்தக அமைச்சர் உறுதி அளித்தார்.

Zameera

காலி கடற்பரப்பில் மூழ்கிய ஈரான் போர்க்கப்பலின் பாகங்கள் சீனிகம கடற்கரையில் மீட்பு!


 இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கியின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய கடற்படை கப்பலின் பாகங்களாக இருக்கலாம் என கருதப்படும் சில பொருட்கள், சீனிகம கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.


உள்ளூர் மீனவர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததன்படி, இன்று காலை கடற்கரையில் அடையாளம் தெரியாத உலோக பாகங்கள் மற்றும் கப்பல் உதிரிப்பாகங்களை ஒத்த பொருட்கள் காணப்பட்டுள்ளன. இதையடுத்து அவை அதிகாரிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த பொருட்கள், இந்தியப் பெருங்கடலில் டொர்பிடோ தாக்குதலில் மூழ்கிய IRIS Dena என்ற ஈரானிய கடற்படை கப்பலுக்கு தொடர்புடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


எனினும், கரையொதுங்கிய பொருட்கள் உண்மையில் அந்த கப்பலுக்குச் சொந்தமானவையா என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. இலங்கை கடற்படை மற்றும் தொடர்புடைய பாதுகாப்பு அமைப்புகள் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


மேலும், சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் கடற்பரப்பு இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்படை கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதற்கிடையில், கரையொதுங்கிய பொருட்களின் தன்மை மற்றும் அவை எந்த கப்பலுக்குச் சொந்தமானவை என்பது தொடர்பாக தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன் பின்னரே தெளிவான தகவல்கள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகும் நிலையில், பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

Zameera

நிபந்தனையற்ற சரணடைவுக்கான அமெரிக்காவின் கோரிக்கை, "அவர்கள் தங்களது கல்லறைக்கே கொண்டு செல்ல வேண்டிய ஒரு கனவு" - ஈரான் ஜனாதிபதி


 நிபந்தனையற்ற சரணடைவுக்கான அமெரிக்காவின் கோரிக்கை, "அவர்கள் தங்களது கல்லறைக்கே கொண்டு செல்ல வேண்டிய ஒரு கனவு" என்று ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

ஈரானிய அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட உரையில் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் இந்த அறிக்கையை வெளியிட்டார். 

அதேவேளை, பிராந்திய நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்காக அவர் மன்னிப்பு கோரியதுடன், தெஹ்ரான் அத்தாக்குதல்களை நிறுத்தும் என்றும் உறுதியளித்தார். 

இத்தாக்குதல்கள் படைகளுக்கு இடையிலான தொடர்பாடல் குறைபாடுகளால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், இன்று (07) காலை வளைகுடா அரபு நாடுகள் மீது ஈரான் தீவிரத் தாக்குதல்களை நடத்திய போதே இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன. 

பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகிய நாடுகளின் மீது இன்று காலை மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 

துபாயில் சனிக்கிழமை காலை பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதுடன், தமது வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் செயற்படுத்தப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Zameera

கத்தார் வான்பரப்பு பகுதியளவில் திறப்பு


 மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு வார காலமாக மூடப்பட்டிருந்த கத்தார் வான்பரப்பை அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் பகுதியளவில் திறக்க கத்தார் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


மத்திய கிழக்கில் யுத்தம் ஆரம்பமாகி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், முதல் தடவையாகக் கத்தார் வான்பரப்பு திறக்கப்பட்டுள்ளது. எனினும், இது அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சரக்கு பரிமாற்ற (Cargo) விமானங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கத்தார் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.


இந்த வாரத் தொடக்கத்தில் கத்தாரின் பிரதான சர்வதேச விமான நிலையமான ஹமாட்  விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் (Drone) தாக்குதலை நடத்தியிருந்தது. எனினும், கத்தார் பாதுகாப்புப் படையினரால் அந்தத் தாக்குதல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.



தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்திற் கொண்டு, ஏனைய சிவில் விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் வரும் நாட்களில் எடுக்கப்படும் என ஹமாட் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை பொறுமை காக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் வளைகுடா நாடுகளின் வான்பரப்புகள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், கத்தாரின் இந்த நடவடிக்கை சர்வதேச விநியோகச் சங்கிலியைச் சீர்செய்யும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

SHAHNI RAMEES

போர் பதற்றம்! - சைப்ரஸை வந்தடைந்த பிரித்தானியாவின் 'ட்ரோன் எதிர்ப்பு' உலங்கு வானூர்திகள்!

 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை
SHAHNI RAMEES

ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கியில் 3 அவுஸ்திரேல கடற்படை வீரர்கள்!

 

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் ஈரானியப் போர்க்கப்பலை
SHAHNI RAMEES

வடக்கு இஸ்ரேலை குறிவைத்து Hisபுல்லா அமைப்பினால் சரமாரி ஏவுகணைத் தாக்குதல்கள்!


 நிலவும் மோதல் நிலைமை காரணமாக, இஸ்ரேலின்

Zameera

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்


 ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07) காலை ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. 


இந்த நிலநடுக்கமானது பண்டார் அப்பாஸ் நகருக்கு மேற்கே 74 கிலோமீட்டர் தொலைவிலும், 10 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டுள்ளதாக அதன் தரவுகள் தெரிவிக்கின்றன. 


இதன்படி, கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள் ஈரானில் பதிவான இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். 


கடந்த செவ்வாய்க்கிழமை, பார்ஸ் (Fars) மாகாணத்தின் கெராஷ் (Gerash) பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது. அது 10 கிலோமீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.


SHAHNI RAMEES

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

 

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக
SHAHNI RAMEES

அமெரிக்கா அழுத்தம்: ஈரானிய கப்பல் மாலுமிகளை இலங்கை ஈரானுக்கு திருப்பி அனுப்பக் கூடாது!

 


Zameera

அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன : உண்மையை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் - தயாசிறி


(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


இலங்கை கடற்பரப்பில்  மார்ச் 2ஆம்  திகதியில் இருந்து அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில்  ஈடுபட்டுள்ளன. இது தொடர்பான உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை இந்த அரசாங்கம் முழுமையாக செயற்படுத்துகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.


அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை இந்த அரசாங்கம் முழுமையாக செயற்படுத்துகிறது


பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற  அவசரகால சட்டம் அமுலாக்கம்  நீட்டிப்பு  தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,


அவசரகால சட்டத்தின் அமுலாக்க காலத்தை நீட்டிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வர்த்தமானிக்குரிய ஒழுங்குவிதிகள்  பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. இதனை பற்றி கேட்பதற்காகவே காலையில் உரையாற்றுவதற்கு அனுமதி கேட்டேன்.ஆனால் நாங்கள்  பேசினால்  முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் வெளிவருமோ என்ற  அச்சத்தில் சபாநாயகர் எமக்கு பேசுவதற்கு இடமளிப்பதில்லை.


 சட்டம் அனைவருக்கும் சமம் என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை முன்னிலைப்படுத்தியா இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு செயற்படுகிறது என்ற சந்தேகம் காணப்படுகிறது.


 வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி  மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவகாரத்தில் வழமைக்கு மாறாக துரிதமாக செயற்பட்டு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தது.ஆகவே ஆணைக்குழு குமார ஜயகொடிக்கு ஒரு வகையிலும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிறிதொரு வகையிலும் செயற்படுகிறது.


அரச புலனாய்வு  பிரிவின்  முன்னாள் பிரதானி சுரேஷ் சலே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது விடயத்தில்  பயங்கரவாத தடைச்சட்டமும் மீறப்பட்டுள்ளது.தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவை  பார்க்க வருபவர்கள் பொலிஸ் அறிக்கை பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுரேஷ் சலேவுடன் சட்டத்தரணி உரையாடும் போது அந்த இடத்தில் பொலிஸ் அதிகாரிகள் உள்ளார்கள்.இதுவொரு புதுமையான சட்டம்.


ஈரான் கப்பலை ஜனாதிபதி மனிதாபிமான அடிப்படையில் பாதுகாத்தார், அந்த கப்பலில் இருந்தவர்களை மீட்டார் என்று குறிப்பிடுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இலங்கை கடற்பரப்பில்  மார்ச் 02 ஆம்  திகதியில் இருந்து அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில்  ஈடுபட்டுள்ளன.இது தொடர்பான உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.இந்த உளவு தகவல்களுக்கு அமைவாகவே ஈரான் கப்பல் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.


மக்கள் விடுதலை முன்னணியினர் எதிர்க்கட்சியில் இருக்கும் போது அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதாக குறிப்பிட்டார்கள்.ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன்  அமெரிக்காவுடன் இணக்கமாகவே செயற்படுகிறார்கள். கடந்த கால ஒப்பந்தங்களை முழுமையாக செயற்படுத்துகிறார்கள் என்றார்.


 

Zameera

அவசரகால சட்டம் இந்த மூன்று மாத காலப்பகுதியில் எந்த அடக்குமுறைக்கு பயன்படுத்தப்பட்டது? - பிரதமர்


 (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


அவசரகால சட்டம் இந்த மூன்று மாத காலப்பகுதியில் எந்த அடக்குமுறைக்கு பயன்படுத்தப்பட்டது, யார் கைது செய்யப்பட்டார்கள். எந்த போராட்டம்  மறுக்கப்பட்டது என்பதை எதிர்க்கட்சியினர் ஆதாரமாக குறிப்பிடவேண்டும். அவ்வாறு இடம்பெற்று எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டால் உரிய நடவடிக்கைகளை எடுக்க தயாராகவுள்ளோம். அரசியல் இலாபங்களுக்காக 'அடக்குமுறை' என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல், பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயற்படுத்தப்படும்  திட்டத்தை ஆதரிக்குமாறு எதிர்க்கட்சியிடம் கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற அவசரகால சட்டம் அமுலாக்கம்  நீட்டிப்பு  தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,


'அடக்குமுறை' என்ற வார்த்தையை வெறும் சொல்லாக மாத்திரம் குறிப்பிடாதீர்கள் என்று எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். கடந்த மூன்று மாதங்களில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள் இருந்தால், தயவுசெய்து அவர்களைப் பற்றிய தகவல்களை வழங்குங்கள்.


கடந்த மூன்று மாதங்களாக அவசரகால சட்டம் அமுலில்தான் உள்ளது. இந்த காலப்பகுதியில் அரசாங்கத்துக்கு  எதிராக பல போராட்டங்கள், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடனும் சில போராட்டங்கள் இடம்பெற்றன. 


ஜனாதிபதி, சபாநாயகர் உட்பட அரசாங்கத்தின் பிரதான தரப்பினர் மீது மோசமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள். ஆனால் எவருக்கு  எதிராகவும் அவசரகால சட்டம் பயன்படுத்தப்படவில்லை. ஏனெனில் கருத்து வெளிப்பாடு மற்றும்  பேச்சு சுதந்திரம் ஜனநாயக உரிமைகளாகும். அவற்றை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.


நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது அவசரகால சட்டத்துக்கு எதிராக போராடினோம். ஒவ்வொரு முறையும் போராட்டங்களில் ஈடுபடும் போது அவசரகால சட்டத்தால் இடம்பெற்ற அடக்குமுறை மற்றும் கைதுகளை ஆதாரமாக குறிப்பிட்டோம். 


ஆகவே இந்த காலப்பகுதியில் அவசரகால சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால் எதிர்க்கட்சியினர் அவற்றை குறிப்பிடவேண்டும். அப்போது அந்த தவறையும் எம்மால் திருத்திக் கொள்ள முடியும்.



டித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட  பேரிடர் சூழ்நிலைக்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அவசரகாலச் சட்டம் அவசியம். வீதிகள் மற்றும் பாடசாலை அமைப்புகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி  பராமரிக்க இந்த சட்டப் பின்னணி மிகவும் அவசியம்.


பேரிடரால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து அமைப்பு  மற்றும் பாடசாலை  கட்டடங்களை அவற்றின் முந்தைய நிலைக்கு மீட்டெடுப்பதற்குப் பதிலாக, எதிர்கால பேரிடர்களுக்கு அவை மீள்தன்மை கொண்டதாக இருக்கும் வகையில் அவற்றை அறிவியல் முறையின்படி புதுப்பிக்க முப்படைகளைப் பயன்படுத்த வேண்டும். அதனால்தான் நாங்கள் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துகிறோம்.


பேரிடர் நிவாரணம் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஜனாதிபதி ஒரு சிறப்பு செயலணியை நியமித்துள்ளார். 


மேலும் இந்த மாதம் அந்த அறிக்கையை பெற்றுக்கொள்வோம். அதன்படி, நாட்டின் புனரமைப்பு நடவடிக்கைகள் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு முறையாக மேற்கொள்ளப்படுகின்றன.


நிவாரண முகாம்களில் இன்னும் தங்கியுள்ள மக்கள் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் அவர்களை மீள்குடியேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அரசியல் இலாபங்களுக்காக 'அடக்குமுறை' என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல், பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை ஆதரிக்குமாறு  எதிர்க்கட்சியிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.