
Thursday, April 16, 2026

ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களின் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் நாளை (17) செயற்படாது என அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.

களனி ஆற்றில் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
கித்துல்கல, நெலிகம பகுதியில் உள்ள களனி ஆற்றில் நீராடச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று (15) உறவினர்களுடன் சுற்றுலா சென்றிருந்தபோதே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கித்துல்கல பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய தேடுதலில், ஆற்றின் ஆழமான குழியொன்றில் சிக்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கித்துல்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன இலக்கத் தகடுகள் குறித்து பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள இலக்கத் தகடுகள் முறையான தரநிலைகளுக்கு அமைய இல்லாவிடின், அத்தகைய வாகனங்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு அமையாத இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தும் வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர், 15,000 முதல் 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த காலங்களில் புதிய வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், அதனை அடுத்த சில வாரங்களுக்குள் சரிசெய்ய முடியும் என்றும் அவர் கூறினார். இலக்கத் தகடுகளைச் சரியான முறையில் எவ்வாறு பொருத்துவது என்பது குறித்து மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகம் வாகன உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட தரத்தின்படி, முன் பக்க இலக்கத் தகடு வெள்ளை நிறப் பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்கள் மற்றும் எண்களையும், பின் பக்க இலக்கத் தகடு மஞ்சள் நிறப் பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்கள் மற்றும் எண்களையும் கொண்டிருக்க வேண்டும்.
இருப்பினும், தற்போது பல்வேறு நிறங்கள் மற்றும் வடிவங்களைப் பயன்படுத்தி இலக்கத் தகடுகளை மாற்றி வாகனங்களை ஓட்டுவது அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறான மாற்றங்களால் விபத்துக்கள் அல்லது குற்றச் செயல்கள் நடக்கும்போது வாகனங்களை அடையாளம் காண்பது கடினமாக இருப்பதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

400க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில், 400க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் 12ஆம் திகதி வரை சுமார் 2,000 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன்போது 12,000க்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அச்சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்தார்.
சுகாதாரத்திற்குப் புறம்பான முறையில் உணவுகளை விற்பனை செய்தமை மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழேயே இந்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான விசேட சுற்றிவளைப்புகள் எதிர்வரும் வசாக் மற்றும் பொசன் பண்டிகைக் காலங்களை முன்னிட்டும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானியக் கப்பலைத் தடுத்து நிறுத்திய அமெரிக்கப் போர்கப்பல்
ஹோர்முஸ் நீரிணை வழியாக வெளியேற முயன்ற மற்றுமொரு ஈரானிய சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படையின் தாக்குதல் கப்பல் வெற்றிகரமாகத் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளது.
ஈரானியக் கொடியுடன் பயணித்த இந்தச் சரக்குக் கப்பலைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் 'USS Spruance (DDG-111)' என்ற அமெரிக்கப் போர்க் கப்பல் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இக்கப்பலுடன் சேர்த்து, ஈரானில் இருந்து புறப்பட்ட சுமார் 10 கப்பல்கள் இதுவரை அமெரிக்காவினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் ஹோர்முஸ் நீரிணை ஊடாக விதிக்கப்பட்ட கடற்படைத் தடைகள் அமுலாகி இன்றுடன் மூன்று நாட்கள் நிறைவடைகின்றன.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள ஹோர்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி, ஈரான் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதே இந்தத் தடையின் நோக்கமாகும்.
இந்த நடவடிக்கையில் 10,000 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர், 12 க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் பல விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஈரானுடன் தொடர்பில்லாத ஏனைய நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணினி நிதி மோசடிகளுக்காக இலங்கை வந்த 9 சீனர்கள் கட்டுநாயக்கவில் கைது
கணினி வழி நிதி மோசடிகளைச் முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த 9 சீனர்கள் இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 2 கோடியே 40 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான மின்னணுத் தொடர்பு சாதனங்களை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சீனப் பிரஜைகள் இன்று அதிகாலை 12:25 மணியளவில் சீனாவின் குன்மிங் நகரிலிருந்து 'சைனா ஈஸ்டர்ன்' ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MU-6912 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்கள் தங்களது உடல் மற்றும் ஆடைகளுக்குள் செல்லோடேப் மூலம் ஒட்டி மறைத்து வைத்திருந்த 383 பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள், 101 டெப் கணினிகள் மற்றும் 06 வைஃபை ரவுட்டர்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
குறித்த சீனப் பிரஜைகளைத் தமது பொறுப்பில் வைத்துள்ள சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் அதிகளவில் திறக்கப்படுவதாக குற்றச்சாட்டு
மின்சார உற்பத்திக்காக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீரை வழக்கத்திற்கு மாறான முறையில் திறந்துவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் வெகுஜனச் செயலாளர் துமிந்த நாகமுவ இன்று (15) நுகேொடையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இதனை வெளிப்படுத்தினார்.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக, வெப்ப மின் உற்பத்தி குறைந்துள்ளதைக் ஈடுகட்டும் ஒரு தீர்வாகவே இந்த நடவடிக்கை எடுக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார். கடந்த மார்ச் 24ஆம் திகதி விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
"தரம் குறைந்த நிலக்கரியால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டீசல் மூலம் மின்சாரம் தயாரிக்க அதிக செலவாகும் என்பதால், அந்தச் சுமையை மக்கள் மீது சுமத்தும்போது ஏற்படும் எதிர்ப்பைத் தவிர்க்க அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீரை குடிநீர் தேவைக்காக கடல் மட்டத்திலிருந்து 422 மீற்றர் மட்டத்தில் பராமரிக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவால் இந்த மட்டம் குறையக்கூடும்" என அவர் தெரிவித்தார்.
மின் உற்பத்திக்காக அதிக நீர் பயன்படுத்தப்படுவதால், கண்டி, குண்டசாலை மற்றும் திகன ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பலகொல்ல நீரேந்து நிலையம் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனால் சுமார் 17,000 நீர் இணைப்புகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், நாளாந்தத் தேவையான 12,000 கன மீற்றர் நீருக்குப் பதிலாக 500 கன மீற்றர் மாத்திரமே விநியோகிக்க முடிவதாகவும் அவர் கூறினார்.
மேலும், பல்லேகல முதலீட்டு வலயத்திலுள்ள சில தொழிற்சாலைகள் நீர் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி மூடப்பட்டதாகவும், இதன் விளைவாக விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரன்தெம்பே நீர்த்தேக்கங்களின் நீர் முகாமைத்துவத்தில் சிக்கல் ஏற்பட்டு விவசாயமும் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்த துமிந்த நாகமுவ, இந்த முட்டாள்தனமான முடிவை அரசாங்கம் உடனடியாக மீளப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

36,700 மெற்றிக் தொன் பெற்றோல் ஏற்றிய கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்தது
உள்நாட்டு எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, இந்தியாவிலிருந்து இந்த பெற்றோல் கையிருப்பு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக எரிபொருள் விநியோகத்தைச் சீராகப் பேணுவதற்கு முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக இது பார்க்கப்படுகிறது.
வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து எரிபொருளைத் தரையிறக்கும் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
தரையிறக்கும் பணிகள் நிறைவடைந்ததும், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குப் பெற்றோலை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கையிருப்பு கிடைக்கப்பெற்றதன் மூலம், சந்தையில் ‘ஒக்டேன் 92’ ரக பெற்றோலுக்கான தட்டுப்பாடு நீங்கி விநியோகம் மேலும் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் விநியோகக் கட்டமைப்பு மற்றும் கையிருப்பு நிலைவரங்கள் குறித்துத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது



