
நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே நாங்கள் அரசியல் செய்கிறோம் - திலித் ஜெயவீர
(க.சிவலிங்கமூர்த்தி)
பாரம்பரிய அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நாட்டை கட்டியெழுப்பும் புதிய வேலைத்திட்டத்துடன் பயணிக்க வேண்டும். நாங்கள் எதிர்க்கட்சித் தலைவராவதற்காக அரசியல் செய்யவில்லை. இந்த நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே நாங்கள் அரசியல் செய்கிறோம் என சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
கண்டி, சுது{ஹம்பொல ரஜமகா விகாரையில் நேற்று முன்தினம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாது மந்திரத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:
உலகில் எந்தவொரு நாட்டை விடவும், எமது உன்னதமான புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் பெற்றமை மற்றும் பரிநிர்வாணம் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளையும் மிகவும் பக்திபூர்வமாகவும், கௌரவத்துடனும் கொண்டாடும் ஒரே நாடு இலங்கையாகும். இத்தகைய உன்னதமான கலாசார மற்றும் மதப் பின்னணியைக் கொண்ட எமது நாட்டில், வரலாற்றுச் சிறப்புமிக்க சுது{ஹம்பொல ரஜமகா விகாரையை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் சமூக மற்றும் மதப் பணிகள் பாரிய முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே எனது பிரார்த்தனையாகும்.
நாட்டின் எதிர்காலத்துக்காக ஒரு நிச்சயமான வேலைத்திட்டத்துடன் எதிர்க்கட்சியில் சிதறிக்கிடக்கும் அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைக்க சர்வஜன அதிகாரம் கட்சி முன்னின்று செயற்படும் என்பதை அரசாங்கத்திற்கு நினைவூட்ட விரும்புகிறேன்
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாடுகள் மற்றும் அரசியல் ரீதியான மௌனம் குறித்து விமர்சிப்பதை விடுத்து, எமது சவாலுக்கு உட்பட்டுள்ள நாகரிகத்தையும் கலாசாரத்தையும் பாதுகாத்து, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் வேலைத்திட்டம் தொடர்பில் சிந்திப்பதே காலத்தின் தேவையாகும். பாரம்பரிய அரசியல் சிந்தனைகளில் இருந்து விடுபட்டு, இன்றைய உலகளாவிய மற்றும் பிராந்திய அரசியல் மாற்றங்களை உணர்ந்து செயற்படும் ஒரு புதிய அரசியல் கலாசாரமே நாட்டிற்கு அவசியமாகின்றது. சஜித் பிரேமதாச, பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்ற தலைவர்கள் வௌ;வேறு திசைகளில் பயணிப்பது, அவர்கள் இன்னும் பாரம்பரிய அரசியல் முறையிலேயே சிக்கியிருப்பதையே காட்டுகிறது. இந்த புதிய உலக மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன்களைப் பெற்று நாட்டை முன்னேற்ற முடியும் எனக் கூறுவது முழுமையான வேடிக்கையாகும். ஒரு வங்கியில் உங்களது சொத்துக்களை அடகு வைத்து கடன் பெற்று, அந்தப் பணத்தில் வியாபாரத்தை கட்டியெழுப்ப முடியாது. அதேபோல, சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களால் மாத்திரம் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பது ஜனாதிபதிக்கும் நன்கு தெரிந்த விடயமாகும்.
தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்த காலப்பகுதியில் அரசாங்கம் முன்னெடுத்த போராட்டங்கள், வன்முறைகள் மற்றும் தீவைப்புகளை விட, தற்போது அவை தவிர்க்கப்பட்டிருப்பதை நாம் நல்லிணக்கத்துடன் பாராட்ட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தாம் கோரப் போவதில்லை;, நாங்கள் எதிர்க்கட்சித் தலைவராவதற்காக அரசியல் செய்யவில்லை. இந்த நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே நாங்கள் அரசியல் செய்கிறோம்.
சர்வஜன அதிகாரம் கட்சி பதவிக்காகவோ அல்லது அந்தஸ்துக்காகவோ அரசியலில் ஈடுபடவில்லை. மாறாக, நபர் சார்ந்து அல்லாமல், நாட்டைக் கட்டியெழுப்பும் ஒரு குறிப்பிட்ட வேலைத்திட்டத்துடனும், தெளிவான அரசியல் தத்துவத்துடனும் எமது பயணம் அமையும். பழைய அரசியல் வரப்பிரசாதங்கள், அதாவது எதிர்க்கட்சித் தலைவர் பதவி, சபாநாயகர் பதவி அல்லது அமைச்சர் பதவிகள் மீது ஆர்வம் காட்டாமல், நாட்டைக் காப்பாற்றுவதற்காக மாத்திரம் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு சகல அரசியல் தரப்புக்களுக்கும் நல்லிணக்கத்துடன் அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.











