Our Feeds



Friday, June 26, 2026

SHAHNI RAMEES

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 589 ஆக அதிகரிப்பு!

 


வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால்

Zameera

சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முறையிட புதிய வட்ஸ்அப் இலக்கம்


 சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக, சுற்றாடல் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வட்ஸ்அப் சேவை இன்று (26) முதல் நடைமுறைக்கு வருகிறது. 


இதற்கமைய, பொதுமக்கள் தமக்குரிய முறைப்பாடுகளை 0702509509 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நேரடியாகத் தெரிவிக்க முடியும். 


இந்தத் தகவல்கள் பரிமாற்றச் செயன்முறையில், ஆதாரங்களுடன் கூடிய ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் உத்தியோகபூர்வ அறிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கத் தீர்மானித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது. 


இந்தச் செயன்முறை ஊடாக, சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு மிகவும் துல்லியமான, விஞ்ஞானபூர்வமான மற்றும் விரைவான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு எதிர்பார்க்கிறது. 


களமட்டத்தில் இடம்பெறும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை உடனடியாக அறிவிப்பதற்கும், சூழல் நட்பு ரீதியான புதிய யோசனைகள் மற்றும் கருத்துகளை நேரடியாக அதிகாரிகளுக்குப் பகிர்ந்து கொள்வதற்கும் இதன் மூலம் வாய்ப்பு கிட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zameera

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைக் குறைப்பின் பலன் எதிர்காலத்தில்


 சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைவடைவதற்கேற்ப, அதன் நன்மைகளை எதிர்காலத்தில் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்தார். 


இன்று (26) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 


இதுவரை அரசாங்கம் எரிபொருளுக்காக 57 பில்லியன் ரூபா மானியத்தை வழங்கியுள்ளதாகவும், அந்த மானியம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 


அதற்கமைய, மீண்டும் அந்த மானியத்தை வழங்க முடியுமா இல்லையா என்பது குறித்து கொள்கை ரீதியான தீர்மானம் எடுத்து அறிவிக்கப்படவுள்ளதாகவும், பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படப் போவதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலைகள் சடுதியாக அதிகரித்தமையினால், அதற்கு அமைய நாட்டில் எரிபொருள் விலைகளை அரசாங்கம் சற்று அதிகரிக்க நேரிட்டதாக அமைச்சர் தெரிவித்தார். 


அந்த உயர்ந்த எரிபொருள் விலைகள் தற்போது குறைந்து வருவதாகவும், அந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்யும்போது அதன் நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 


தற்போது நாட்டில் உள்ள மற்றும் அடுத்த இரண்டு மாதங்களில் கிடைக்கப்பெறவுள்ள எரிபொருள் கடந்த மாதத்தில் முன்பதிவு செய்யப்பட்டவை என்பதால், எதிர்காலத்தில் முன்பதிவு செய்யப்படும் எரிபொருளுக்காக அதன் செலவை ஈடுசெய்து, அந்த நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 


"போர்ச் சூழலுக்கு முன்னிருந்த நிலைமை இன்னும் ஏற்படவில்லை. உதாரணமாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை நாங்கள் இறுதியாக 64-65 டொலர்களுக்கு இடைப்பட்ட விலையிலேயே பெற்றுக்கொண்டோம். அது 125 டொலர்கள் வரை அதிகரித்தது. அக்காலகட்டத்தில் விலை இருமடங்காகிய போதும், நாமும் விலையை இருமடங்காக அதிகரித்து இலாபம் உழைக்கும் இடத்திற்கு செல்லவில்லை. அன்று நாம் நிலவிய விலைகளிலேயே எரிபொருளை வழங்கவே முயற்சித்தோம். 


விலை அதிகரிப்பை கூட நாம் மிகுந்த புரிதலுடன் மிகச் சிறிய அளவிலேயே மேற்கொண்டோம். ஆனால், தற்போது அந்த உயர்ந்த விலை 125 டொலர்களிலிருந்து குறைந்து, 70 டொலர்கள் என்ற மட்டத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த விலைகளுக்கமைய செலவுகளை ஈடுசெய்யும் வகையில் எரிபொருள் கிடைக்கும்போதுதான், அதன் நன்மையை எம்மால் மக்களுக்கு வழங்க முடியும். 


இப்போது பெறப்படும் எரிபொருள், குறிப்பாக அடுத்த இரண்டு மாதங்களில் கிடைக்கப்பெறவுள்ளவை, கடந்த மாதத்தில் முன்பதிவு செய்யப்பட்டவையாகும். தற்போது எம்மால் இந்தச் சுமையை தாங்கிக்கொள்ள முடியாததால், 100 பில்லியன் ரூபா தொகுப்பிற்குள் 57 பில்லியன் ரூபாவை ஒதுக்கி இதற்கான மானியத்தை வழங்கினோம். 


இந்த ஜூன் மாதத்துடன் அந்த மானியம் முடிவடைகிறது. தற்போதைய நிலைமையை ஆய்வு செய்து, விலை மாற்றங்களைச் செய்துவிட்டு, மீண்டும் மானியம் வழங்க முடியுமா இல்லையா என்பது குறித்து கொள்கை ரீதியான தீர்மானம் எடுத்து அறிவிப்போம். 


எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்களுக்கு தேவையற்ற அழுத்தத்தை கொடுக்க நாங்கள் தயாரில்லை. அந்த நன்மைகளை எதிர்காலத்தில் பெற்றுக்கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்." என்றார்.

Zameera

சூரிய மின்கட்டமைப்புகளை தற்காலிகமாக நிறுத்துமாறு கோரிக்கை


 மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையை பேணுவதற்காக, நாளை (27) முதல் 29ஆம் திகதி வரை கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட் மேற்பட்ட சூரிய மின்சக்தி கட்டமைப்புகளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (26) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அமைப்புகளை நிறுத்தி வைப்பதன் மூலம் கடந்த வெசாக் தினத்தில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையைத் தவிர்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை மின்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Zameera

சரித் அபேசிங்கவின் கட்சி பதவிகள் நீக்கம்


 இலஞ்ச குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் பதவியும், அவர் வகித்த அனைத்து பதவிகளும் நீக்கப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

கட்சி ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zameera

ஞானசார தேரரின் வழக்கு ஜூலை 31க்கு ஒத்திவைப்பு


 இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, ஜூலை 31-ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இந்த வழக்கை விசாரிக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி.ராகல இன்று (26) கடமை நிமித்தம் விடுமுறையில் இருந்ததனால், வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 


அங்கு நீதிபதி, இந்த வழக்கை முன் - விசாரணை மாநாட்டிற்காக ஜூலை 31-ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டார். 


வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியான ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். 


இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை மீறும் வகையில் செயற்பட்டதாகக் குற்றம் சாட்டியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Zameera

ஹஜ் யாத்திரை தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது


 2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை தொடர்பான ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்கள அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தெரிவித்துள்ளார். 


பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 


கடந்த காலத்தை விடவும் இம்முறை முடிந்தளவில் சிரமங்களை தவிர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்ததாக அமைச்சர் கூறினார். 


அதேநேரம், ஹஜ் யாத்திரையின் போது பல்வேறு நாடுகளில் இருந்தும் 1.7 மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகர்கள் இம்முறை யாத்திரையை மேற்கொண்டுள்ளனர். 


பெருந்திரளான மக்கள் செல்வதால், அங்கு அதனை முகாமைத்துவம் செய்வதில் சில சிரமங்கள் இருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். 


எனினும் அதனை இயலுமான வரையில் குறைப்பதற்கே அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. 


இந்நிலையில் இம்முறை இடம்பெற்ற ஹஜ் யாத்திரை தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்று தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறினார். 


அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் கவனம் செலுத்தி இனிவரும் காலத்தில் தேவையான நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார். 


இந்த விடயத்தை மேலதிக குழுவொன்றை நியமித்து ஆராய்வது குறித்த தீர்மானத்தை எடுப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள அறிக்கையினை ஆராய்ந்த பின்னரே எடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Zameera

பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்துச் செய்யப்படும் - அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!


 (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு ஒன்றரை வருடகாலமாக தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். மனித உரிமைகளை பாதுகாப்பதுடன், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும்  வகையில்  சட்டம் ஒன்றை  நிறைவேற்ற வேண்டும். அதற்குரிய நடவடிக்கைளை  முன்னெடுத்துள்ளோம். பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்துச் செய்யப்படும் என   நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை (25) நடைபெற்ற  போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு  விவாதத்தில்  உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,


போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். பாரபட்சமின்றிய வகையில் கைதுகள் இடம்பெறுகின்றன.  அதேபோல் பாதாளக் குழுக்களுடன் தொடர்புக் கொண்டுள்ளவர்களும் கைது செய்யப்படுகிறார்கள்.  பாதாளக் குழு உறுப்பினரான ஹரக்கட்டாவுடன்  தொடர்புக் கொண்டு இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் முன்னாள் நீதியமைச்சரின் மகனும், ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளரான சரித் அபேசிங்கவும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.


எதிர்க்கட்சித் தலைவர் போதைப்பொருளுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிடுகிறார். சிங்கப்பூர் நாட்டின் மரண தண்டனை சட்டத்தை இங்கு அமுல்படுத்த வேண்டும் என்று  குறிப்பிடுகிறார். போதைப்பொருள் குற்றவாளியிடமிருந்து இலஞ்சம் பெற்ற  சரித் அபேசிங்கவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை எதிர்க்கட்சி குறிப்பிட வேண்டும்.



பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வியெழுப்புகிறார். 1979 ஆம் ஆண்டு தற்காலிக  ஏற்பாடாகவே பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச   எத்தனை அரசாங்கங்களில் பதவி வகித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு ஏதேனும் யோசனைகளாவது முன்வைத்துள்ளாரா, பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு ஒன்றரை வருடகாலமாக தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்.


மனித உரிமைகளை பாதுகாப்பதுடன், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும்  வகையில்  சட்டம் ஒன்றை  நிறைவேற்ற வேண்டும். அதற்குரிய நடவடிக்கைளை  முன்னெடுத்துள்ளோம். பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்துச் செய்யப்படும்.


நீதியரசர்கள்  நியமனம் குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். கடந்த காலத்தில் நீதி அமைச்சரும் ஜனாதிபதியும் இணைந்தே, தமக்குத் தேவையானவர்களை நியமித்துக் கொண்டனர். தற்போது நாம் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரையிலான நியமனங்களை வழங்கும் சுதந்திரத்தை பிரதம நீதியரசருக்கு வழங்கியுள்ளோம். கீழ் நீதிமன்றங்களில் பல வெற்றிடங்கள் காணப்படுகின்றன. கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்திற்கு தகுதியின் அடிப்படையில் நியமிப்பதே தற்போது நடைபெறுகிறது. ஒரு முழுமையான கட்டமைப்பாகக் கருதி இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும்.


முன்னர் உயர் நீதிமன்றம் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களே வழக்குகளை விசாரித்தது. தற்போது ஐந்து நாட்களும் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. கொள்கலன்  சம்பவம் குறித்துப் பேசினார்கள். அவர்களே ஒரு பொயைக் கூறிவிட்டு, இப்போது அவர்களே அதில் சிக்கியுள்ளனர் என்பதுதான் உண்மை. இதைவிடப் பொறுப்புக்கூறும், இதைவிடப் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படும் ஒரு அரசாங்கம் இருந்ததில்லை. நாம் சட்டத்தின் மற்றும் நீதியின் கோட்பாடுகளுக்கு இணங்கவே செயற்படுகிறோம்.


2025 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனைகளில், சுமார்  23,692 கிலோ கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஹெரோயின் கைப்பற்றப்படுவது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இந்நாட்டில் நடக்கும் அனைத்து சட்டவிரோத செயல்களுக்கும் பின்னால் ஒரு கடத்தல் வலையமைப்பு  உள்ளது. கோட் - சூட் அணியும் சட்டத்தரணிகளும் இவர்களில் அடங்குவர் என்பது இன்று நிரூபணமாகியுள்ளது.


கடந்த 24 மாதங்களில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் தங்கியிருந்து செயற்படும் இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 95 பேருக்கு எதிராக 'சிவப்பு எச்சரிக்கை'  விடுக்கப்பட்டுள்ளது. தனது குழுவைக் கட்டுப்படுத்த எதிர்க்கட்சித் தலைவரால் முடியுமா? சரித் அபேசிங்கவிற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை என்னவென்று நாம் பார்ப்போம் என்றார்.

Zameera

கெஹெல்பத்தர பத்மே'வின் துப்பாக்கிதாரி 'மாட்டியா' கைது


 கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான 'கெஹெல்பத்தர பத்மே' என்பவரின் துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் "மாட்டியா" எனப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 


அவர் மலேசியாவில் தங்கியிருந்த போது அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதன் பின்னர், நேற்றிரவு (25) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 


குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 


42 வயதான குறித்த சந்தேகநபர் கொட்டுகொட, யாகொடமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், இவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தலும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. 


கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து, 'பஸ்பொட்டா' எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரையும் அவருடன் இருந்த மற்றொருவரையும் சுட்டுக் கொலை செய்தமை மற்றும் அங்கு நின்றிருந்த மேலும் பலரைச் சுட்டுக் காயப்படுத்தியமை ஆகியவை இவர் மீதான பிரதான குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளது.

Zameera

மாத்தறையில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து

மாத்தறை - தலல்ல வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து 


 


மாத்தறை - தலல்ல வீதியின் வஜிர வம்ச மாவத்தை பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 


இந்த விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


காலியிலிருந்து அம்பாறை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றும், தங்காலையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றும் இவ்வாறு நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன. 


விபத்தில் காயமடைந்தவர்கள் மாத்தறை மற்றும் பதிகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

 

Zameera

வெனிசுலா நிலநடுக்கத்தில் 188 பேர் பலி

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களினால் குறைந்தது 188 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 


இந்த அனர்த்தங்களினால் 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 


கராகஸ் (Caracas) மற்றும் லா குவைரா (La Guaira) மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது 


அங்குள்ள இடிபாடுகளுக்குள் மீட்புப் பணியாளர்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். 


அத்துடன் காயமடைந்தவர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் வௌியிடப்பட்டுள்ளது. 


வெனிசுலாவில் நேற்று (25) 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளிலான ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. 


இதில் இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கமானது, 1900 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வெனிசுலாவைத் தாக்கிய மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கமாகப் பதிவாகியுள்ளது. 


இதன் காரணமாக அங்கு 250க்கும் அதிகமான கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Thursday, June 25, 2026

Zameera

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் நீர்ப்பெருக்கு அதிகரிப்பு


எல்லப் பகுதியில் கடும் மழை தற்போது பெய்யாவிடினும் ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு கணிசமாக அதிகரித்துள்ளது.

தாழ்நிலப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். குறிப்பாக, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் திடீர் நீரோட்ட உயர்வு போன்ற அபாயங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

நீர்வீழ்ச்சி , ஆறுகளின் அருகே செல்லாமல் தவிர்க்கவும், அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

— நடராஜா மலர்வேந்தன்

Zameera

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு - மீள் திருத்த விண்ணப்பம் கோரல்


 அண்மையில் வௌியான 2025 (2026) கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பெறு​பேறுகள் தொடர்பான மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்கள் இன்று (25) முதல் கோரப்பட்டுள்ளன. 


பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


குறித்த மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜூலை 8 ஆம் திகதி வரையில் பரீட்சார்த்திகள் இணையவழியூடாக மாத்திரம் விண்ணப்பிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். 


பாடசாலை மற்றும் தனிப்பட்ட ஆகிய இரண்டு பரீட்சார்த்திகளுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


விண்ணப்பிக்கும் முறைமை உள்ளிட்ட மேலதிக தகவல்களை கீழே உள்ள இணைப்பில் மூன்று மொழிகளின் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.