Friday, September 4, 2026

22ஆவது திருத்தத்தை தோற்கடிப்போம் – சஜித் பிரேமதாச
(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சர்வாதிகார ஆட்சியில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தைத் தோற்கடித்து, நாட்டின் நீதித்துறை மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் முன்னிற்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பு - புறக்கோட்டை புகையிரத நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை (3) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சர்வாதிகார ஆட்சியில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை தோற்கடிப்பதற்காகவே இன்றைய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கின்றோம். நீதித்துறை மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பை பாதுகாப்பதற்காக இன்று நாம் வீதிக்கு இறங்கியுள்ளோம். சர்வாதிகார அநுர அரசாங்கம் இந்நாட்டில் ஜனநாயகத்தை சீரழிப்பதற்காகவே செயற்படுகிறது.
மக்களின் ஜனநாயக உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, சட்டத்தை நிலைநாட்டும் நடைமுறை என்பன சீரழிக்கப்படுகின்றன. நாட்டிலுள்ள ஒரேயொரு மாற்று சக்தியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த துஷ்ட 22ஆவது திருத்தத்தை தோற்கடிப்பதற்கு முழு முயற்சியெடுக்கும். அதற்காக ஜனநாயக ரீதியில் எடுக்கக் கூடிய அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.
இன்று நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரித்து, வறுமை நிலை அதிகரித்து தொழில் இன்மையும் அதிகரித்துள்ளது. தொழழிற்சாலைகள் பல மூடப்படுகின்றன. ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டு அவர்கள் வெளிநாடுகளில் முதலீடுகளை மேற்கொள்கின்றனர். மக்களின் இவ்வாறான பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் எந்தவொரு தீர்வும் இல்லை.
அரசாங்கத்தின் ஒரேயொரு இலக்கு தனிகட்சி ஆட்சி முறைமை இந்நாட்டில் நிலைநாட்டுவது மாத்திரமேயாகும். ஆனால் அரசாங்கத்தின் அந்த முயற்சியையும் நாம் வெற்றியடைவிப் போவதில்லை. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதால் அவர்கள் வெற்றி பெறலாம். ஆனால் மக்கள் அரசாங்கத்தை தோற்கடிப்பர் என்றார்.

சட்டவாக்க சபையை பொம்மையாக பயன்படுத்த வேண்டாம் - சந்திம வீரக்கொடி
(எம்.மனோசித்ரா)
நிறைவேற்றதிகாரத்தின் அரசியல் தேவைகளுக்காகச் சட்டவாக்க சபையைப் பொம்மையைப் போலப் பயன்படுத்துவதையும், நீதித்துறையின் சுயாதீனத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி வலியுறுத்தினார்.Politics
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வியாழக்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நிறைவேற்றதிகாரத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே சட்டவாக்க சபை செயற்படுத்தப்படுவதைச் சர்வதேச சமூகம் தெளிவாக உணர்ந்துள்ளது. அரசாங்கம் தனது அரசியல் இலக்குகளுக்காக நாட்டில் தேவையற்ற சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்த முற்படுகின்றனர்.
வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காகவே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதாக அரசாங்கம் கூறினாலும், நடைமுறையில் பல முக்கிய நியமனங்கள் இழுபறியில் உள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வெற்றிடங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
பத்தேகம நீதவான் நீதிமன்ற நீதிபதி ஓய்வுபெற மூன்று மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டும் புதிய நீதிபதியை நியமிக்க இயலவில்லை. மேலும், பொலிஸ் சேவையில் தெரிவுசெய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர்களுக்கு இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் நியமனங்கள் வழங்கப்படவில்லை.
65 வயது வரை பதவிப்பிரமாணம் செய்த நீதிபதிகளின் சேவைக் காலத்தை 67 ஆக உயர்த்த முற்படுவதன் மூலம், நீதிபதிகள் மீண்டும் புதிய பதவிப்பிரமாணம் செய்ய வேண்டிய அல்லது புதிய நியமனக் கடிதங்களைப் பெற வேண்டிய சூழல் உருவாகும். இதன் மூலம் அரசாங்கம் தமக்கு விருப்பமான முறையில் சிரேஷ்டத்துவப் பட்டியலை மாற்றி அமைக்கும் வாய்ப்பைப் பெற முற்படுகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
நாட்டின் வரலாற்றில் நீதித்துறையின் சுயாதீனத்தில் தலையிட்ட அல்லது தமக்குச் சாதகமாக நீதிபதிகளை நியமித்த ஆட்சியாளர்கள் அனைவரும் இறுதியில் பெரும் பின்னடைவையே சந்தித்துள்ளனர். பல தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நீதிபதிகளை அவதூறுகளுக்கு உள்ளாக்குவதைத் தவிர்த்து, நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாத்து வெளிப்படைத்தன்மையுடன் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

9 இந்திய மீனவர்கள் விடுதலை
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து குறித்த 9 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்கள் நேற்று (3) மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மேலதிக நீதிவான், 1 ஆம் மற்றும் 2 ஆம் குற்றச்சாட்டுக்களுக்கு 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனையும், 3 ஆவது குற்றச்சாட்டுக்கு தலா ஒருவருக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
அதேநேரம் ஏற்கனவே இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட மீனவர் ஒருவர் இரண்டாவது முறையாகவும் கைதாகியிருந்த நிலையில் அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தப்பட்ட நிலையில், அதற்கு மேலதிகமாக 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் குறித்த 9 மீனவர்களையும் நிபந்தனையின் அடிப்படையில் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

எரிபொருள் விலையை லிட்டருக்கு 50 முதல் 70 ரூபா வரை குறைக்க முடியும்
(செ.கவிஷனா)
மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைச் முறையாகப் பராமரிப்பதன் மூலம் எரிபொருள் விலையை லிட்டருக்கு 50 முதல் 70 ரூபா வரை குறைக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தும், அரசாங்கம் அதனைச் செய்யத் தவறியுள்ளது. கோதுமை மா உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் முறையான தீர்வுகளை காணாமல் எரிபொருள் விலை சூத்திரத்தின் ஊடாக அவ்வப்போது விலைகளைக் குறைப்பதும், குறிப்பிட்ட துறையினருக்கு மானியங்களை வழங்குவதும் போதுமான நடவடிக்கைகள் அல்ல என்று ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வியாழக்கிழமை (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,City & Local Guides
மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைச் சரியாகப் பராமரிப்பதன் மூலம் பெற்றோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 50 முதல் 70 ரூபா வரை குறைக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தும், அரசாங்கம் அதனைச் செய்யத் தவறியுள்ளது. பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கோதுமை மா மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இரட்டைச் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
மறுபுறம், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்ந்தும் சொகுசு வாகனங்களும் வரம்பற்ற இலவச எரிபொருள் வசதிகளும் வழங்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் திறைசேரி ஊடாக 50 ரூபா வரி அறவிடப்படுவதைக் கண்டித்து, ஆட்சிக்கு வந்தால் அதனை நீக்குவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்தார். எனினும், திறைசேரியின் கடன்கள் முழுமையாகச் செலுத்தப்படவில்லை என்பதாலும், நிதியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதாலும் அந்த வரியை நீக்க முடியாது எனத் தற்போது அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
அதற்குப் பதிலாக, எரிபொருள் விலை சூத்திரத்தின் ஊடாக அவ்வப்போது விலைகளைக் குறைப்பது மற்றும் விவசாயிகள், மீனவர்கள் போன்ற குறிப்பிட்ட துறையினருக்கு மானியங்களை வழங்குவது போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இதனிடையே, ஜனாதிபதியும் அமைச்சர்களும் அரசியல் கூட்டங்களுக்காகப் பயணங்களை மேற்கொண்டு வரும் சூழலில், உரிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படாததால் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அரச ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைப் பொருட்படுத்தாமல், அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்ற பெயரில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதுடன் அவர்களின் சம்பளத்தையும் உயர்த்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகச் சந்தேகங்கள் எழுகிறது என்றார்

நாமல் ராஜபக்ஷவுக்கு இலஞ்ச,ஊழல் ஆணைக்குழு அழைப்பு
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார்.
இன்று (04) முற்பகல் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்றையதினம் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

22 ஆவது திருத்தச் சட்டமூலம்: வாய்மொழி ரீதியாகப் பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்படாமைக்கு எதிராக மனுதாரர்கள் மன்றில் தமது வாதங்களை முன்வைப்பு
(எம்.எப்.எம். பஸீர், செ.சுபதர்ஷனி)
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின்போது, வாய்மொழி ரீதியாகப் பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்படாமைக்கு எதிராக மனுதாரர்கள் வியாழக்கிழமை (3) மன்றில் தமது வாதங்களை முன்வைத்துள்ளனர்.
மனுக்கள் மீதான விசாரணைகளுக்கமைய, எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைப்பதிலிருந்து மனுதாரர்கள் விலகியுள்ளதோடு, இது தொடர்பில் நகர்த்தல் பத்திரம் ஒன்றின் ஊடாக உயர் நீதிமன்றத்துக்கும் அறிவித்துள்ளனர்.
குறித்த நகர்த்தல் பத்திரத்தில் பிரதிவாதியாகச் சட்டமா அதிபரும், சட்டமா அதிபர் திணைக்களமும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன.
மனுதாரர்கள் மேற்படி மனுக்கள் மீதான விசாரணைகளுக்கு முழுமையான நீதியரசர்கள் அமர்வு நியமிக்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்தனர். அந்த அமர்வில் உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதியரசர்களும் இடம்பெற வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக இருந்தது. பிரதம நீதியரசர் மற்றும் ஏனைய நீதியரசர்களுக்கிடையிலான நலன்முரண்பாடுகளை தவிர்க்க இது உதவும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தனர். வழக்கு விசாரணைக்காகக் குறிப்பிட்ட நீதியரசர்கள் மாத்திரமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டையும் தவிர்ப்பதற்கு உதவும் என மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏனைய மனுதாரர்களின் சட்டத்தரணிகள் ஆதரித்திருந்தனர். எனினும், அதனை நீதியரசர்கள் அமர்வு எவ்வித காரணங்களையும் தெரிவிக்காது நிராகரித்திருந்தது. இந்நிலையில் கடந்த முதலாம் திகதியன்று இரவு 10.30 மணி வரை மனு மீதான பரிசீலனைகள் இடம்பெற்றன. மீண்டும் செப்டம்பர் 2 ஆம் திகதி காலை 10 மணிக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. வழக்கு விசாரணையின் போது முதன்முதலில் மனுதாரர்கள் தரப்பிலேயே விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அரசாங்கத்தின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், மனுதாரர்களின் சமர்ப்பணங்களின் பின்னர்தான் விடயங்களை முன்வைப்பதாக அறிவித்திருந்தமையே இதற்குக் காரணமாகும்.
அதன்பின்னரே, சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் இடையீட்டு மனுதாரர்களுக்கு விடயங்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதன்போது மனுதாரர்கள், இடையீட்டு மனுதாரர்கள் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோர் விடயங்களை முன்வைக்க வேண்டியிருந்ததால், நேரத்தை உரிய முறையில் முகாமைத்துவம் செய்ய வேண்டும் என நீதியரசர்கள் அமர்வு அறிவுறுத்தியிருந்தது.திருத்தச் சட்டமூலத்தை நியாயப்படுத்தி சொலிசிட்டர் ஜெனரல், இறுதியிலேயே தனது வாதங்களை முன்வைத்திருந்தார். மனுதாரர்களுக்கு குறித்த சட்டமூலத்திற்குரிய கொள்கை சார்ந்த எந்தவொரு ஆவணமும் வழங்கப்படாத பின்னணியிலேயே அவர் இந்தச் சமர்ப்பணங்களை மேற்கொண்டார். செப்டம்பர் இரண்டாம் திகதி மாலை 5.30 மணியளவில் சொலிசிட்டர் ஜெனரலின் சமர்ப்பணங்கள் நிறைவடைந்தன. அதன்பின்னர், மனுதாரர்களின் சட்டத்தரணிகள் வாய்மொழி மூலமாகப் பதிலளிப்பதற்கான உரிமையை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். எனினும், நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.
அதற்கமைய, சொலிசிட்டர் ஜெனரல் முன்வைத்த விடயங்களுக்கு வாய்மொழி மூலம் பதிலளிப்பதற்கு மனுதாரர்களுக்கு எவ்வித சந்தர்ப்பமும் வழங்கப்படவில்லை. மேலும், நீதிபதிகளால் சொலிசிட்டர் ஜெனரலிடம் கேட்கப்பட்ட வினாக்கள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கும் மனுதாரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. வாய்மொழி மூலம் பதிலளிப்பதற்கான உரிமை வழங்கப்பட்டிருந்தால் மாத்திரமே, அரச தரப்பு வாதங்களுக்குச் பதிலளித்திருக்க முடியும் என மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள நகர்த்தல் பத்திரத்தின் ஊடாக வலியுறுத்தியுள்ளனர். இந்த அடிப்படை உரிமை மறுக்கப்பட்டமையால், வழக்குடன் தொடர்புடைய எழுத்துமூல சமர்ப்பனங்களை மன்றில் முன்வைப்பதிலிருந்து தாம் முழுமையாக விலகியிருப்பதாகக மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு
ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று (04) பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் 07 வரை இலங்கைக்கு அண்மித்த அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
இதற்கமைவாக, இன்று (04) நண்பகல் 12.09 மணிக்கு நிட்டம்புவ, அல்கம, மல்வானை, அரநாயக்க, மீகஹாகிவுல உள்ளிட்ட பிரதேசங்களுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, September 3, 2026

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி பதவிப் பிரமாணம்
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார்.
தற்போது வெற்றிடமாக உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவிக்காக குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை நிராகரித்தால் கடும் நடவடிக்கை!
டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மீறி, சாரதிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது கடுமையான கடமை மீறலாகும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.
இன்று (03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், பாதுக்கை மற்றும் கம்பஹா ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த சில அதிகாரிகள் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதன்படி, R.T.M. 93 சட்டத்தின் மூலம் 2026.05.05 ஆம் திகதியிட்ட மேலதிக செய்தி மூலம் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, நாட்டின் முன்னணி 14 காப்புறுதி நிறுவனங்களால் வழங்கப்படும் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரினால் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளுக்கு முழுமையான சட்ட அங்கீகாரம் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு சாரதியிடம் டிஜிட்டல் காப்புறுதி அட்டை இல்லாத சந்தர்ப்பத்தில் கூட, பின்வரும் இலவச சேவைகள் மூலம் காப்புறுதி பாதுகாப்பு செல்லுபடியாகும் நிலையில் உள்ளதா என்பதை பொலிஸ் அதிகாரிகள் உறுதிசெய்து கொள்ள முடியும்
*1338# ஐ அழைப்பதன் மூலம் காப்பீட்டு இலக்கம் அல்லது வாகன இலக்கத்தை உள்ளீடு செய்து உடனடியாக தகவல்களைப் பெறுதல்.
1338 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புதல்.
1338 உடனடி அழைப்பு மையத்தை (Call Center) தொடர்புகொள்ளுதல்.
இதன் காரணமாக, நாடு முழுவதிலும் உள்ள 607 பொலிஸ் நிலையங்களின் பொறுதிகாரிகளின் ஊடாக கீழ்நிலை அதிகாரிகளுக்கு மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாதேனுமொரு பொலிஸ் அதிகாரி டிஜிட்டல் காப்புறுதி அட்டையை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அது குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் அல்லது போக்குவரத்து தலைமையகத்தின் 070 47 55 600 என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
அவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர மேலும் தெரிவித்தார்.

