Our Feeds



Thursday, June 11, 2026

Zameera

ரணில் தலைமையில் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு!


 ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (11) பிற்பகல் நடைபெற்றது.


 


கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பலரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


 


கட்சி அமைப்பை மீண்டும் வலுப்படுத்துவதற்கும், அதனை மறுசீரமைப்பதற்கும் செயல்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து பல முக்கிய ஆலோசனைகளும் கருத்துகளும் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளன.


 


மேலும், ஏனைய அரசியல் கட்சிகள், சக்திகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் எதிர்காலத்தில் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது குறித்தும் செயற்குழு உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


 


கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனித்தனியாகச் செயல்படுவதை விடுத்து, பல்வேறு சக்திகளை ஒன்றிணைத்து எதிர்கால அரசியல் சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.


 


இதற்கிடையில், கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு முரணாகச் செயல்பட்ட உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்த விபரங்களைக் கட்சியின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி தலதா அத்துகோரள செயற்குழுவிடம் சமர்ப்பித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Zameera

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேயை தினமும் பார்வையிட அனுமதி கோரி சி.ஐ.டி பணிப்பாளருக்கு கடிதம்


 குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்காக வழங்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்யக் கோரி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேலும் பரிசீலிப்பதை ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



இந்த மனு இன்று (11) மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.



இதன்போது, மனுதாரரான சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கருத்தியல் இலங்கைக்குள் எவ்வாறு செயற்பட்டது என்பது குறித்து நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்.



39 இலங்கையர்கள் சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி, இது குறித்து முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்ததை நினைவு கூர்ந்தார்.



மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அதற்குப் பின்னால் வெளிநாட்டு தீவிரவாதக் குழுவொன்றின் கருத்தியல் இருப்பது வெளிச்சத்திற்கு வந்தபோதிலும், அப்போதைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராகப் பணியாற்றிய ஷானி அபேசேகர அது குறித்து முறையான விசாரணைகளை நடத்தவில்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணி குற்றம் சாட்டினார்.



குறித்த சம்பவத்தில் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பொன்றின் கருத்தியல் ரீதியான தலையீடு இருப்பது வெளிப்பட்டுள்ள நிலையிலும், சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற்று அது குறித்து மேலதிக விசாரணைகளை நடத்த வாய்ப்பு இருந்தபோதிலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் அது தொடர்பில் அலட்சியமாகச் செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.



2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், சஹ்ரான் ஹஷிம் உள்ளிட்ட தீவிரவாதக் குழுவினரின் செயல்பாடுகள் குறித்த 97 அறிக்கைகள் பொலிஸ் மா அதிபருக்கு (IGP) அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் நிலாந்த ஜயவர்தனவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சத்தியக்கடதாசியில் குறிப்பிடப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, இவ்வாறான தீவிரவாதச் செயல்பாடுகளுக்கு ஆதரவளித்த 129 பேரின் பட்டியலும் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாகக் கூறினார்.



இருப்பினும், இவ்வாறான எச்சரிக்கை அறிக்கைகள் தொடர்பாக அப்போதைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரும் அதன் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமாகப்  பணியாற்றிய ரவி செனவிரத்ன ஆகியோர் முறையான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி குற்றம் சாட்டியுள்ளார்.



தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சஹ்ரான் ஹஷிம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள், சுற்றுலா விடுதிகள் மற்றும் இந்திய தூதரகம் ஆகியவற்றை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத்தாக்குதல், கத்திக்குத்து தாக்குதல் மற்றும் லொறி மூலம் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் 2019 ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கை அதிகாரிகளுக்கு அறிவித்திருந்ததாகவும், அந்தத் தாக்குதலில் பங்கேற்கவிருந்த சஹ்ரான் ஹஷிம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களின் பெயர்கள் கூட அந்தத் தகவலில் வெளிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.



எனினும், பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அந்த விடயங்கள் குறித்து முறையான கவனம் செலுத்தி விசாரணைகளை நடத்தவில்லை என்று குற்றம் சாட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, இந்தத் தாக்குதல்களுடன் சுரேஷ் சலே தொடர்புபட்டிருப்பதாக எந்தவொரு விசாரணையிலோ அல்லது விசாரணை ஆணைக்குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளிலோ வெளிப்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.



இந்தத் தாக்குதல் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகீ டி அல்விஸ் அவர்களின் குழு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் அதன் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்திருந்ததாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.



இதனைத் தொடர்ந்து, மனு தொடர்பான மேலதிக சமர்ப்பிப்புகளை ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.

Zameera

🚨Breaking : ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்துவோம் – ட்ரம்ப்


 ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா இன்று இரவு மிகக் கடுமையான தாக்குதலை நடத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.



அவரது ட்ரூத் வலைத்தளத்தில் பதிவொன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.



அப்பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:



"ஈரானின் கடற்படை, விமானப்படை, ராடார் கட்டமைப்பு, விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு மற்றும் பிற அனைத்து பாதுகாப்பு வடிவங்களும், அவற்றின் பெரும்பாலான தாக்குதல் திறன்களும் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டன. இவ்வாறானதொரு பின்னணியில், அமெரிக்கா இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தும்.


 


அதுமட்டுமன்றி, வெகுதொலைவில் இல்லாத எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில், நாம் ஈரானின் கார்க் தீவு மற்றும் பிற எண்ணெய் உள்கட்டமைப்பு மையங்களைக் கைப்பற்றுவோம். அத்துடன், வெனிசுலாவுடன் நாம் கையாள்வதைப் போலவே ஈரானின் ஒட்டுமொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளின் முழுமையான கட்டுப்பாட்டையும் எங்கள் வசம் எடுத்துக்கொள்வோம். இந்த நடைமுறை வெனிசுலா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும்a மிகச் சிறந்த முறையில் பலனளித்து வருகின்றது." 

Zameera

தேசிய மக்கள் சக்தி அரசு இல்லாதிருந்தால், மக்கள் பசியால் இறக்க நேரிட்டிருக்கும் - ஜகத் மனுவர்ண


 “தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியில் இல்லாவிட்டால், இந்நாட்டு மக்கள் பசியால் இறக்க நேரிட்டிருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.



இன்று உலகின் பல நாடுகளில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த உலகளாவிய நெருக்கடிகள் தமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வெளிப்புறக் காரணிகளால் ஏற்படுகின்றன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு சுட்டிக்காட்டினார்.



குறிப்பாக, உலகில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக பல நாடுகளில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாகவும், இலங்கையும் அந்த நிலைமையின் தாக்கங்களுக்கும் பாதிப்புகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் ஜகத் மனுவர்ண மேலும் குறிப்பிட்டுள்ளார்.”

SHAHNI RAMEES

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்து: உரிமையாளருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து நீதிமன்றம் பிணை அனுமதி!

 

ஹொரணை , படகொட பகுதியில் அமைந்துள்ள
SHAHNI RAMEES

மன்னாரில் PTAவுக்கு எதிராகவும், கைது செய்யப்பட்ட பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரியும் பாரிய போராட்டம் முன்னெடுப்பு

 

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராகவும் கைது
SHAHNI RAMEES

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் ; நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம் !

 

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு
Zameera

நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை


 மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை கட்டமைப்பின் நீதிபதிகளது ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக அதிகாரப்பூர்வமாக அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். 


இன்று (11) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 


அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், நீதிபதிகளுக்கு மேலதிகமாக ஏனைய சில தொழில்வல்லுநர்களும் தங்களது ஓய்வுபெறும் வயதை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறினார். 


அரசாங்கம் என்ற ரீதியில் அந்தக் கோரிக்கைகள் குறித்து சாதகமாகப் பரிசீலித்து வருவதாகவும், எனினும் அவற்றில் சில கோரிக்கைகள் நியாயமானவையாக இருந்தபோதிலும், சில கோரிக்கைகள் அரசியல் பின்னணியைக் கொண்டவை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 


எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


 

Zameera

சஷி வீரவங்சவின் மேன்முறையீட்டு மனு கொழும்பு மேல் நீதிமன்றால் நிராகரிப்பு!


 முறையற்ற கடவுச்சீட்டை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதத்திற்கு எதிராக சஷி வீரவங்ச தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (11) நிராகரித்துள்ளது. 


இந்தத் தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, மேன்முறையீடு செய்த பெண் பிரதிவாதிக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வதாகக் குறிப்பிட்டார். 


குறித்த குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்ட சஷி வீரவங்சவுக்கு, கடந்த 2022 ஆம் ஆண்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. 


அந்தத் தண்டனைகளிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி, அவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

Zameera

குவைத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 இலங்கையர்கள் கைது


 குவைத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். 


குவைத் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


கைது செய்யப்பட்டவர்களில் மூன்று இலங்கையர்களுக்கு மேலதிகமாக, இரண்டு குவைத் நாட்டவர்கள், ஓர் இந்தியர் மற்றும் மேலும் இரு வெளிநாட்டவர்கள் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


சந்தேக நபர்களிடமிருந்து ஹஷிஷ் (Hashish), ஹெரோயின், போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், போதைப்பொருட்களை அளவிடும் கருவிகள் மற்றும் பொதி செய்யும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட உபகரணங்களும் மேலதிக விசாரணைகளுக்காக குவைத் நாட்டின் குற்றவியல் பாதுகாப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Zameera

சட்டத்தின் முன் அனைவரும் சமம் - சுனில் ஹந்துன்னெத்தி


 (செ.கவிஷனா)


கடந்த காலங்களைப் போலன்றி, தற்போதைய நிர்வாகத்தில் சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட்டு வருவதுடன், செல்வாக்கு அல்லது அரசியல் அதிகாரம் கொண்ட எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் பொறுப்புக்கூற வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.


கொழும்பில் செவ்வாய்க்கிழமை (9) நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,


கடந்த காலங்களில் போலன்றி தற்போதைய நிர்வாகத்தில் சட்டம் அனைவருக்கும் சமமாக நிலைநாட்டப்பட்டு வருவதுடன் சிறைச்சாலைகளில் யாருக்கும் விசேட சலுகைகள் வழங்கப்பட மாட்டாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான சுரேஷ் சலே மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து போன்ற செல்வாக்கு உடையவர்களை கைது செய்ய முடியாது என பேசப்பட்ட போதிலும் சட்டம் தன் கடமையை செய்யும் போது எவரும் தப்ப முடியாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஆட்சிக் காலங்கள் போன்று அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டதுடன், போலியான உடல்நலக்குறைபாடுகள் காரணங்காட்டி சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாறும் சலுகை கலாச்சாரத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகள் முற்றிலும் சட்டபூர்வமானவை என்பதால், இதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் எதிர்க்கட்சியினர் நீதிமன்றத்திற்குச் சென்றுதான் தீர்க்க வேண்டும். அதை விடுத்து வீதிகளில் இறங்கி அரசியல் ஆதாயத்திற்காகப் போராட்டம் நடத்துவது, அவர்களது கடந்த காலத் தவறுகளையே அவர்களுக்கு நினைவூட்டும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் நபர்கள் வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக ஆளும்தரப்பிற்கு தாவும் மோசமான அரசியல் கலாச்சாரம் நிலவிய போதிலும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அத்தகைய அரசியல் நாடகங்களுக்கு இடமில்லை. சட்டம் மற்றும் நீதிமன்ற விவகாரங்களில் அரசாங்கம் எவ்வித தலையீடுகளையும் செய்யாது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிரான நீதிமன்ற வழக்கு மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படும். அத்துடன் தங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உணர்ந்துகொண்ட அரசியல்வாதிகள் சத்திமிடுவதும் அரசாங்கத்தின் மீது ‘அரசியல் பழவாங்கல்’ என்ற பழியைச் சுமத்துவதும் தங்களை சமூகத்தின் முன்னிலையில் பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஆகும்.


குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் தங்களது அரசியல் பலத்தை பயன்படுத்தி வழக்குகளிலிருந்து தப்பிக்க முயலும் என்ற காலம் முடிவுக்கு வந்துவிட்டது.


அதேபோல், தற்போதைய எதிர்க்கட்சியினருக்கு ஆட்சியை பிடிப்பதற்கான எந்தவொரு முறையான திட்டமோ, மக்களின் ஆதரவோ இல்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழற்றது என்ற மக்களின் நம்பிக்கையை சிதைப்பதே எதிர்க்கட்சியினரின் முக்கிய நோக்கமாக உள்ளது. தங்களை போல் தற்போதைய அரசாங்கமும் ஊழல் நிறைந்தது என காட்டி மக்கள் தவறான முடிவை எடுத்துவிட்டார்கள் என்று நிரூபிப்பதற்கு போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. கடந்த காலங்களில் பாராளுமனறத்தில் பெரும் சர்சையை ஏற்படுத்திய 323 கொள்கலன்கள் தொடர்பான விவகாரம் மற்றும் நிலக்கரி கொள்வனவு ஊழல் குறித்து விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டதன் பின்னர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எதிர்க்கட்சியினர் ஆதாரங்களையும் வாக்குமூலங்களையும் வழங்காது அமைதியாகிவிட்டனர். அரசாங்கம் முன்னெடுத்து வரும் விசாரணைத் தகவல்களை திருடி தாங்கள் அவற்றை கண்டுபிடித்தது போன்று எதிர்கட்சியினர் நாடகமாடி வருவதுடன் கடந்த கால சொசுகு வாழ்க்கை மற்றும் அதிகாரம் பறிபோனதால் ஏற்பட்டுள்ள விரக்தியை இவ்வாறு வெளிப்படுத்துகின்றனர். நாமல் ராஜபக்சவின் போராட்டம் மற்றும் பெளத்த மதகுருமார்களின் மாநாடுகளுக்கு மக்களின் ஆதரவு சரியாக கிடைக்கவில்லை என்பதுடன் தேசிய மக்கள் சக்தியின் மே தினப்பேரணிக்கான மக்கள் ஆதரவு, எதிர்க்கட்சியினருக்கு எந்தவொரு மக்கள் அடித்தளமும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

மேலும், நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு 2048 ஆம் ஆண்டு வரைக்கும் பொறுத்திருக்க வேண்டும் என கடந்த கால ஆட்சியாளர்கள் கைவிரித்த நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது பதவியேற்று 18 மாத காலத்திற்குள் எந்தவொரு புதிய கடன்களையும் பெறாமல், இதுவரை 8 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான வெளிநாட்டுக்கடன்களை செலுத்தியுள்ளது என்பது சாதனையாகும் என்றார்.

Zameera

கொக்கிளாயில் மீனவர் குடும்பங்களை நிரந்தரமாக குடியேற்ற அனுமதிக்க முடியாது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்


 (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நீர்கொழும்பு உள்ளிட்ட ஏனைய வௌியிடங்களில் இருந்து காலத்திற்கு காலம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக வந்து செல்லும் 244 மீனவர் குடும்பங்களை கொக்கிளாய் பிரதேசத்தில் நிரந்தரமாக குடியேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் செய்யாத விடயத்தை இந்த அரசாங்கம் செய்வதை தாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,


கொக்கிளாய் முகத்துவாரத்தில் 244 மீனவர் குடும்பங்கள், காலம் காலமாக நீர்கொழும்பில் இருந்து வந்து தற்காலிக கூடாரம் அமைத்து தமது தொழில்களை செய்வது வழக்கமாகும். அந்த குடும்பங்கள் ஒரு சில மாதங்களுக்கு வந்து தங்கிருந்து மீண்டும் தமது சொந்த ஊருக்கு திரும்புவர். இதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ, கோதாபய ராஜபக்‌ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக் காலங்களிலும் இந்த குடும்பங்கள் முல்லைத்தீவில் தங்களுக்கு நிரந்தர வசிப்பிடங்களை அமைப்பதற்கு முயற்சித்த போதும், அவர்களுக்கு நிரந்திரமான இருப்பிடங்கள் இல்லாத காரணத்தினால் அது முடியாமல் போனது. இதனால் அவர்கள் அந்தந்த காலப்பகுதியில் அங்கு வந்து தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.


ஆனால் இந்த அரசாங்கம் டித்வா புயலுக்கு பின்னர் அவர்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடம் அவசியம் என்ற போர்வையில் முதற்தடவையாக அந்த மாவட்டம் சாராத வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு நிரந்தரமாக வீடுகளை அமைப்பதற்கு மிகவும் தவறான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. அவர்களுக்கு கொக்கிளாய் வைத்தியசாலைக்கு பின்னால் கொக்கிளாய் மேற்கு கிராம சேவகர் பிரிவில் வீடுகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.

எங்களை பொறுத்தவரையில் இது தவறான விடயாகும். தமிழ் பிரதேசங்களில் இன விகிதாசாரத்தை மாற்ற முயற்சித்தமையினாலேயே இனப்பிரச்சினை வெடித்தது. இது இந்த அரசாங்கத்திற்கும் நன்கு தெரியும். இவ்வாறான நிலைமையில் 244 குடும்பங்களை நிரந்தமாக குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இனவாத ரீதியாக இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் செயற்பட்டதென குற்றச்சாட்டுகள் முன்வைக்கும் நேரத்தில் இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் செய்யாத விடயங்களை இந்த அரசாங்கம் செய்வது பொறுத்தமானது அல்ல. இதனால் இந்த விடயத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம்.


இதேவேளை கொக்குத்தொடுவாய் மத்தியில் குஞ்சுக்கால்வழி என்ற பிரதேசத்தில் தமிழர்கள் உறுதிகாணிகளை வைத்துள்ள பிரதேசத்தில் தெற்கை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு மகாவலி அபிவிருத்தி சபையின் ஊடாக 4 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முறையற்ற வகையிலேயே நடந்துள்ளது. அந்த வர்த்தகர் மேலதிகமாக 15 ஏக்கர்காணியை பிடித்து பிரதேசத்தை ஆக்கிரமித்து உப்பளமொன்றை நடந்த முயற்சிக்கின்றார். அது தனியார் காணியே உறுதிக்காரருக்கே வழங்க வேண்டும். அந்த மண்ணுடன் தொடர்பில்லாதவருக்கு அபிவிருத்தி என்ற பெயரில் இவ்வாறு காணியை ஒதுக்குவதை அனுமதிக்க முடியாது. அங்கு மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட காணிகள் உள்ளன. இதனால் இந்த விடயத்தை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

Zameera

பெரும்போகத்திற்கு உரங்களை வழங்குவது குறித்து உர நிறுவனங்களுடன் கலந்துரையாடல்


 சிறுபோகத்திற்கான உர விநியோக நிலைமையை மீளாய்வு செய்தல், பெரும்போகத்திற்கான உர இறக்குமதி மற்றும் விநியோக தயார் நிலை குறித்து உர நிறுவனங்களுடனான கலந்துரையாடல், கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்றது.

உர இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பாக உர நிறுவனங்களின் தயார் நிலை குறித்து இதன்போது கேட்டறிந்த ஜனாதிபதியின் செயலாளர், அதற்காக அரசாங்கத்திடமிருந்து கிடைக்க வேண்டிய ஒத்துழைப்புகள் குறித்தும் ஆராய்ந்தார். பெரும் போகத்திற்கு எவ்வித தட்டுப்பாடும் இன்றி உரிய முறையில் உரங்களை வழங்குவதற்காக, உர இறக்குமதி மற்றும் விநியோக செயல்முறைகளை கால அட்டவணையின்படி மேற்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து இங்கு விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் பெரும் போகம் ஆரம்பமாகும் போது, விவசாயிகளுக்கு உரிய முறையில் உரங்களை விநியோகித்தல் மற்றும் உர இறக்குமதியின் போது உலக சந்தையில் உர விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு, உர இறக்குமதி செய்வதற்கான திட்டமொன்றைத் தயாரிப்பதற்கும், ஜூலை மாத ஆரம்பத்தில் அதன் முன்னேற்றத்தை ஆராய்வதற்கும் இங்கு அனைத்துத் தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் ஜானகி அமரதுங்க உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், அரச உர நிறுவனத்தின் தலைவர் பி. சி. டபிள்யூ. சேதுகே, CIC விவசாய உற்பத்தி தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் சுஜீவ விஜயவீர, நியூ லங்கா கொமர்ஷல் உர நிறுவனத்தின் பணிப்பாளர் ஈ.கே. சிசிர குமார, ஹேலீஸ் உர நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சமுத்ர ராஜபக்ஷ, எலைட் உர நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஞ்சித் அபேசிங்க மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதானிகள் பலரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.