
Wednesday, April 29, 2026

பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும்
பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவித்தல் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேல் மாகாணங்களுக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் இன்று (29) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும்.
குறித்த பகுதிகளில் சில இடங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் விளையாட்டு அமைச்சின் கீழ்
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் இன்று (29) முதல் தற்காலிகமாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31 மற்றும் 34 ஆம் பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிரிக்கெட் விளையாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கும், அதன் கட்டமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்கும் விசேட குழுவொன்று விரைவில் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களின் இராஜினாமாவை விளையாட்டுத்துறை அமைச்சர் இன்று (29) ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச வைத்தியசாலைகளில் பெட் இயந்திரங்கள் செயலிழப்பு
கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை என்பவற்றில் உள்ள பெட் இயந்திரங்கள் கடந்த ஒரு மாத காலமாக செயலிழந்து காணப்படுவதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
அரச வைத்தியசாலைகளில் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதியிலிருந்து பெட் ஸ்கேன் சேவை முற்றிலும் முடங்கியுள்ளமையானது ஒரு சாதாரண தொழில்நுட்பப் பிரச்சினை அல்ல. அது சுகாதாரக் கட்டமைப்பின் கட்டமைப்பு ரீதியான தோல்விக்குத் தெளிவான சான்றாகுமென சுகாதார தொழில் வல்லுநர்களின் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
இதுதொடர்பில் விளக்கமளித்து அவர் நேற்று (28) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் மஹரகம அபெக்ஷா வைத்தியசாலைகளில் மாத்திரம் இயங்கிவந்த இச்சேவை, FDG (Fluorodeoxyglucose) எனும் கதிரியக்கத் திரவம் இல்லாததால் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
இது ஒரு சாதாரண வழங்கல் பிரச்சினை (supply issue) அல்ல. இது தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் ஒழுங்குமுறையிலுள்ள காலதாமதமாகும். விநியோகஸ்தரின் பதிவை புதுப்பிக்காத காரணத்தால் நாட்டுக்கு FDG எனும் கதிரியக்க திரவத்தைக் கொண்டுவருவதை முழுமையாக நிறுத்தியமையானது, அதன் விளைவை நன்கறிந்தே செய்யப்பட்டதொரு நிர்வாகத் தோல்வியாகவே கருதப்பட வேண்டும்.
PET Scan என்பது ஓர் ஆடம்பரப் பரிசோதனை அல்ல. இது புற்றுநோய் தொடர்பான மருத்துவ முடிவுகளை எடுப்பதற்கான (oncology clinical decisionmaking) ஒரு மிக முக்கியமான பரிசோதனையாகும் (functional imaging gold standard). புற்றுநோய் செல்களின் வளர்ச்சி, அதன் நிலை மற்றும் சிகிச்சைக்குப் பின்னரான முன்னேற்றம் ஆகியவற்றை மதிப்பிடுவதற்கு இது அத்தியாவசியமானது. இத்தகையதொரு முக்கியமான பரிசோதனை சேவையை நிர்வாகத் தடையால் நிறுத்துவது, நோயாளிகளின் உயிரைப் பறிக்கும் ஒரு முடிவாகும்.
FDG திரவத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்குத் தேவையான தொழில்நுட்பம் (cyclotronbased radiopharmaceutical production) இலங்கைக்குப் புதிய ஒன்றல்ல. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் திரவத்தை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான தொழில்முறை முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. இதன்மூலம் ஒரு PET Scan பரிசோதனைக்கான செலவை பெருமளவு குறைத்து, நோயாளிகளுக்கு மலிவு விலையில் சேவையை வழங்க முடியுமென நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் இந்த முன்மொழிவுகளைப் புறக்கணித்ததன் விளைவாக, இன்று நாம் FDG இல்லாமல் PET Scan சேவையை நிறுத்திய ஒரு நாடாக மாறியுள்ளோம்.
இந்தியாவில் ஒரு PET Scan பரிசோதனையை (FDG உட்பட) சுமார் 10,000 ரூபாவுக்குப் பெற்றுக்கொள்வதற்கான வாயப்புள்ள நிலையில், இலங்கையில் தனியார் துறையில் இதற்காக 2 முதல் 3 இலட்சம் ரூபா வரை செலவிடவேண்டியுள்ளது. இது சந்தை தோல்வி (market failure) அல்ல, கொள்கை தோல்வி (policy failure) ஆகும். தொழில்நுட்பம் இல்லாததால் அல்ல, தீர்மானம் எடுப்பதில் உள்ள தோல்வியால் நோயாளிகள் அதிகச் செலவைச் சுமக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இன்றைய சூழ்நிலையில், நோயாளி களிடம் பணம் இருந்தாலும் ஒரு PET Scan செய்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையானது, சுகாதாரக் கட்டமைப்பு முறையாகத் தோல்வியடைந்துள்ளதைக் காட்டுகிறது. ஒழுங்குமுறைகள் சேவையை இலகுபடுத்த வேண்டுமே தவிர, அது சேவையைத் தடுக்கும் ஒரு தடையாக மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதனைச் சரிசெய்ய FDG திரவத்துக்காக அவசர ஒழுங்குமுறைப் பாதை (emergency regulatory pathway) ஒன்றை உருவாக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்திக்காக சைக்ளோட்ரான் (cyclotron) உட்கட்டமைப்பை நிறுவவேண்டும்.
புற்றுநோய் தொடர்பான இமேஜிங் சேவைகளைத் தேசிய முன்னுரிமையாக (national priority) அங்கீகரிக்க வேண்டும்.
இல்லையெனில், ‘இலவசக் காப்புறுதி’ அல்லது ‘இலவச சுகாதாரம்’ என்பது வெறும் பெயரளவு வார்த்தையாகவே எஞ்சியிருக்கும் என்று குறிப்பிட்டார்.
(சில்வெஸ்டர் டொரின்)

இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சற்றுமுன்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று (29) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, காணிப் பிரச்சினை ஒன்றின் போது பெண் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியிருந்தார்.
குறித்த காணியின் உரிமை தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அக்காணி தமக்குச் சொந்தமானது என அர்ச்சுனா தரப்பும், மற்றுமொரு பெண்ணும் உரிமை கோரி வந்துள்ளனர்.
இதற்கமைய, கடந்த 25ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் அக்காணியைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த இரு பெண்கள் காணியின் ஒரு பகுதி தமக்குச் சொந்தமானது எனக் கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாக்குவாதம் முற்றியதையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-யாழ். நிருபர் பிரதீபன்-

அமெரிக்க கடவுச்சீட்டுகளில் ட்ரம்ப்பின் உருவம்
அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்படவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட பதிப்பு கடவுச்சீட்டுகளில் இந்த மாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனநாயக நாடொன்றில் பதவியில் இருக்கும் ஒரு தலைவரின் உருவம் கடவுச்சீட்டில் அச்சிடப்படுவது மிகவும் அரிதான ஒரு சந்தர்ப்பமாகக் கருதப்படுவதுடன், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும் எனவும் அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஏஹிபஸ்ஸிகோ” அமைதி நடைபயணக் குழுவினர் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
அமெரிக்காவில் வசிக்கும் வியட்நாம் தேரர் வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட பிக்குகள், 'அலோகா' நாய் மற்றும் ஏனையோர் இன்று காலை 07:12 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகர் நோக்கிப் புறப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் மற்றுமொரு விமானம் மூலம் அமெரிக்கா செல்லவுள்ளனர்.
இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறையை வந்தடைந்த பிக்குகளுக்குத் தானம் வழங்கப்பட்ட பின்னர், விமான நிலையத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் குழுவினரிடம் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டனர். இதன்போது, அலோகா நாயின் உடல்நிலை குறித்து கால்நடை வைத்தியர்கள், விமான நிலைய பொலிஸார் மற்றும் விமானப்படை அதிகாரிகள் விசேட கவனம் செலுத்தியிருந்தனர்.
"ஏஹிபஸ்ஸிகோ" அமைதி நடைபயணத்தின் நிறைவு அரச விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் நேற்று (28) பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Tuesday, April 28, 2026

ரவி செனவிரத்ன, ஷானி அபேசேகர ஆகியோரின் மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள், பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (28) செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மனுதாரரான பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகியிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தங்களைச் சட்டவிரோதமாகக் கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இத்தகைய கைது நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றினைப் பிறப்பிக்குமாறு அவர்கள் உயர் நீதிமன்றத்தைக் கோரியிருந்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உயர் நீதிமன்றம், இந்த மனுக்கள் மீதான விசாரணைகளை நிறைவு செய்வதாக அறிவித்தது. அத்துடன், இது தொடர்பான இறுதித் தீர்ப்பை பிறிதொரு திகதியில் அறிவிப்பதற்காக நீதிமன்றம் ஒத்திவைத்தது.





