
Wednesday, March 18, 2026

QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது
QR குறியீடு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு, இன்றைய தினத்திலிருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருமாறு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
எந்தவொரு அவசரத் தேவையாக இருந்தாலும், இன்றைய தினத்திலிருந்து QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என அந்தச் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
"QR குறியீடு தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், 1919 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அவற்றை நிவர்த்தி செய்து கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வாருங்கள். கடந்த சில தினங்களில் QR குறியீடு இன்றி எரிபொருள் வழங்க சில சலுகைகளை வழங்கியிருந்தோம். ஆனால், இனிமேல் QR குறியீட்டிற்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும். அவசரத் தேவை ஏற்பட்டாலும் எங்களால் எதுவும் செய்ய முடியாது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் வேறொருவரின் வாகனத்தில் செல்லுமாறே கேட்டுக்கொள்கிறோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

QR குறியீட்டை பெற்றுக்கொள்ள விசேட WhatsApp இலக்கம் அறிமுகம்
பதிவு செய்வதில் சிக்கல்களை எதிர்நோக்கும் நபர்கள், 076 000 19 19 என்ற WhatsApp இலக்கத்திற்கு வாகன இலக்கத்தை அனுப்பி வைப்பதன் மூலம் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் வருமான வரி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் புகைப்படங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
வாகனத்தின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் என்பதுடன், வழங்கப்படக்கூடிய அனைத்துத் தகவல்களும் தனிப்பட்ட தரவுகளும் 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு அமையப் பாதுகாக்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

முறையான அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குவதற்குத் தடை
இது தொடர்பாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில், உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் சட்டவிரோதமான முறையில் ட்ரோன்களை இயக்கிய நபர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமையை விமானப்படை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, இலங்கையில் ட்ரோன்களை இயக்குபவர்கள், தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்கி, முறையான அனுமதியைப் பெற்ற பின்னரே ட்ரோன்களைப் இயக்க வேண்டும் என்று இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும், ட்ரோன் இயக்குபவர்கள் தேவையற்ற சட்டச் சிக்கல்கள் மற்றும் சிரமங்களுக்கு உள்ளாவதைத் தவிர்ப்பதையுமே இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் நோக்கம் என இலங்கை விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன
அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக "அத தெரண" செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று (17) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மார்ச் மாதத்தில் இதுவரையில் 38,000 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், அடுத்த இரண்டு நாட்களுக்குள் மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு கையிருப்பு நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதன் மூலம் நாட்டுக்குள் எரிவாயு விநியோகத்தை ஸ்திரப்படுத்தவும், தற்போதுள்ள தேவைகளை பூர்த்தி செய்யவும் முடியும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
"எமக்கு மார்ச் மாதத்திற்கு 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவே தேவையாயிருந்தது. எனினும், ஒரு தனியார் நிறுவனம் எரிவாயு விநியோகத்தை முடக்கியுள்ளதால், மார்ச் மாதத்திற்காக நாம் 38,000 மெட்ரிக் தொன் ஓடர் செய்தோம். அதற்கான எரிவாயுவை எமது லிட்ரோ நிறுவனம் இறக்குமதி செய்கிறது. அந்த 38,000 மெட்ரிக் தொன்னும் தற்போது கிடைத்துள்ளது.
அவற்றில் சில சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. சில உள்நாட்டு களஞ்சியசாலைகளில் உள்ளன. ஏனையவை மாலைதீவில் உள்ள மிதக்கும் களஞ்சியங்களில் சேமிக்கப்பட்டுள்ளன. நாம் மேலும் ஒரு எரிவாயு கப்பலை ஓடர் செய்துள்ளோம். அதன்படி நாளை அல்லது மறுநாள் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு கப்பல் கிடைக்கவுள்ளது. எனவே, எரிவாயு சந்தையில் நெருக்கடி ஏற்படாது.
அடுத்ததாக ஏப்ரல் 21-23 காலப்பகுதியில் எரிவாயு வழங்கப்பட வேண்டும். அந்த நேரத்தில் அடுத்த கப்பலை அவர்கள் எமக்கு வழங்குவார்கள் என நாம் நம்புகிறோம். எரிவாயு சந்தையில் நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு," என அவர் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையில் இப்தார் நிகழ்ச்சி!
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, கொழும்பு மாநகர சபையினால் (CMC) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சி, கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் மிகச் சிறப்பாக (2026/03/17) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கொழும்பு மாநகர முதல்வர் (Mayor), பிரதி முதல்வர் (Deputy Mayor) மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கலந்துகொண்டனர்.
மத நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் வலியுறுத்தும் வகையில் இந்த இப்தார் சந்திப்பு அமைந்திருந்தது.
கொழும்பு மாநகர சபையின் முஸ்லிம் உறுப்பினர்களின் ஒன்றியம் (CMC Muslim. Member Forum) இந்த நிகழ்ச்சியினை மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் ஏற்பாடு செய்திருந்தது. இதில் பல்வேறு மதத் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தகவல் - கலீலிர் ரஹ்மான்

லஞ்ச ஊழல் ஆணைக்குழு அனைவரையும் ஒரேமாதிரி செயற்படுத்த வேண்டும் - முஜிபுர் ரஹ்மான்
லஞ்ச ஊழல் ஆணைக்குழு அனைவரையும் ஒரேமாதிரி செயற்படுத்த வேண்டும். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு ஒருமாதிரியும் ஏனையவர்களுக்கு வேறு மாதிரியும் செயற்பட முடியாது. அத்துடன் நாட்டில் மின் துண்டிப்பு மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் நிலக்கரி மோசடியே இதற்கு காரணமாகும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம் பெற்ற ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்குமான ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளை தீர்மானித்தல் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
அனைவரும் சட்டத்துக்கு கீழ் என ஜனாதிபதி தெரிவிக்கிறார். ஆனால் எரிசக்தி அமைச்சருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்யப்பட்டிருக்கும் முறைப்பாடு தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறாமல் அவருக்கு எதிராக மேல்நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தால், சம்பந்தப்பட்டவரை கைது செய்து, வாக்குமூலம் பெற்றுக்கொண்டே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். எரிசக்தி அமைச்சருக்கு அவ்வாறு எந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. அப்படியானால் எரிசக்தி அமைச்சர் சட்டத்துக்கு மேலால் இருக்கிறாரா?
அதனால் லஞ்ச ஊழல் ஆணைக்குழு அனைவரயும் ஒரேமாதிரி செயற்படுத்த வேண்டும். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு ஒருமாதிரியும் ஏனையவர்களுக்கு வேறு மாத்திரியும் செயற்பட முடியாது. அதேபோன்று கொள்கலன் மோசடி குற்றச்சாட்டு, மன்னார் காற்றாலை மோசடி, அசிரி இறக்குமதி விலை மனு கோரலில் ஏற்பட்ட மோசடி போன்ற முறைப்பாடுகள் தொடர்பில் இதுவரை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை. நிலக்கரி மோசடி தொடர்பில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் எந்த விசாரணையும் ஆரம்பிக்கப்படவில்லை. இந்த நிலக்கரி மோசடியால் இதுவரை 8497 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மின் உற்பத்தி குறைவடைந்துள்ளது. இந்த குறைபாட்டை மறைப்பதற்கு நாள் ஒன்றுக்கு 35இலட்சம் லீட்டர் டீசல் தேவைப்படுகிறது. வருடத்துக்கு 140 இலட்சம் லீட்டர் தேவைப்படுகிறது. எரிபொருளுக்கு வரிசையில் இருக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக கொண்டுவரும் டீசலையே அரசாங்கம் மின்சார சபைக்கு வழங்குகிறது. அரசாங்கம் செய்த தவறினாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஏப்ரல், ஜுன், ஜூலை மாதங்களில் மின்சார துண்டிப்பு மேற்காெள்ள வேண்டிவரும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் நிலக்கரி மோசடியே இதற்கு காரணமாகும் அதனால் அரசாங்கமே இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
அத்துடன்ஙங தரம்குறைந்த நிலக்கரி கொண்டுவந்தமைக்காக மின்சக்தி அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரம் சமர்ப்பக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை அரசாங்கம் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவரை அந்த அமைச்சில் வைத்திருக்கிறது. வெளிப்படைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி தொடர்பில் கதைக்கும் அரசாங்கம், அவர்களில் ஒருவருக்கு எவ்வாறான குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும்போது அனைவரும் அவரை பாதுகாக்கவே முயற்சிக்கின்றனர் என்றார்.

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கைகள் இல்லாமல் போகின்றது – திலித் ஜயவீர
அரசாங்கம் கடந்த காலங்களில் கூறிய விடயங்கள் இப்போது பொய்யென நிரூபனமாகி வருவதால், அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கைகள் இல்லாமல் போகின்றது என சர்வஜன பலய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம் பெற்ற ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்குமான ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளை தீர்மானித்தல் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையில் எமது நாட்டுக்கு என்ன நடக்கின்றது. ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் நாங்கள் கலந்துரையாட வேண்டும். இந்த பிரச்சினையில் மக்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளன. அரசாங்கத்தின் கடந்தகால செயற்பாடுகள், முன்னர் கூறியவை பொய்யாக மாறியுள்ள நிலையில் மக்கள் இந்த அரசாங்கம் இப்போது கூறுவதை நம்புவதில்லை. எரிபொருள் இருப்பதாக கூறினாலும் அரசாங்கம் கூறுவது பொய்யென மக்களே கூறுகின்றனர். அரசாங்கத்தின் செயற்பாடு மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பாது.
அரசாங்கம் நாட்டு மக்களின் பொருளாதார பாதுகாப்புக்காக உறுதியை வழங்க வேண்டும். இதனை உலக யுத்தம் என்று கூறி தப்பிக்க முடியாது. எதனையும் முகாமைத்துவம் செய்வதே அரசாங்கமாகும். தனியார் துறையை புதன்கிழமைகளில் மூடுமாறு கூறப்படுகின்றது. அப்போது நாள் சம்பளத்திற்கு வேலை செய்பவர்களின் நிலைமை என்னவாகும்.
இந்த அரசாங்கதிற்கென முறையான வெளியுறவுக் கொள்கை இல்லாமையே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனாலேயே வேறு நாடுகள் எடுக்கும் தீர்மானங்களை எங்களால் எடுக்க முடியாது உள்ளது. இந்த நேரத்தில் அரசாங்கம் முறையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.

போர் நீடித்தால் 45 மில்லியன் மக்கள் கடும் பசிக்குள்ளாகும் அபாயம்
ஜெனீவாவில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அந்த அமைப்பின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் கார்ல் ஸ்காவ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
குறித்த மோதல்கள் காரணமாக உலகளாவிய ரீதியில
விநியோகச் சங்கிலி பாதிக்கப்படுவதால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு,
மும்முனைப் போர் காரணமாக மசகு எண்ணெய் விலையில் ஏற்படும் சடுதியான மாற்றம்
ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய கடல் வழிப்பாதைகளில் நிலவும் பதற்றம் காரணமாக போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்தல்,
போன்ற துறைகளில் ஏற்படும் விலையேற்றமே இந்தப் பாரிய உணவுத் தட்டுப்பாட்டுக்குக் காரணமாக அமையும்.
தற்போது உலகளவில் 319 மில்லியன் மக்கள் கடும் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவே இதுவரை பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
இந்த நிலையில், இந்தத் தற்போதைய போர்ச் சூழலால் மேலும் 45 மில்லியன் மக்கள் இந்தப் பட்டியலில் இணைந்தால், உலகளாவிய உணவுப் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்ட அமைப்பின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் கார்ல் ஸ்காவ் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் கடன் சுமை 90,000 கோடியாகும்
எரிபொருள் சிக்கனம் தொடர்பாக ஒவ்வொரு அமைச்சும் நடைமுறைச் சாத்தியமான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அது தரவுகளின் அடிப்படையிலான குறைந்தபட்ச எரிசக்தி நுகர்வை உறுதிப்படுத்தும் நிலையான செயல்முறையாக இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது தொடர்பான விரைவான அறிக்கையை அமைச்சு மட்டத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினார்.
அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவினருடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
நேற்று (16) அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி வழங்கிய ஆலோசனையின்படி, அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்திற்கான அரச மற்றும் தனியார் விநியோகச் சங்கிலிகளைத் தடையின்றிப் பேணி, மக்களுக்குத் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் பொருட்களை வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டது.
எரிபொருள் விலை அதிகரிப்புடன் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பதைக் கருத்திற்கொண்டு, விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் மக்களுக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் விலைக் கட்டுப்பாட்டிற்கான மாற்று வழிமுறைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
பல்வேறு துறைகளுக்கான திட்டங்கள்:
* வர்த்தகத் துறை: சத்தோச உள்ளிட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மொத்த இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் எரிபொருள் தேவைகள் குறித்த தகவல்களைத் திரட்டி, சேவைகளைத் தடையின்றி முன்னெடுக்க கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
“எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் கடன் சுமை 90,000 கோடியாகும். அந்த கடனை மகா திறைசேரி பொறுப்பேற்றுள்ளது. அந்தத் தொகைக்கான வட்டி எவ்வளவு என்று சிந்தித்துப் பாருங்கள். அந்தக் கடனை அடைப்பதற்காகவே நாங்கள் வரி விதிக்கின்றோம்.” – ஜனாதிபதி
* சுற்றுலாத் துறை: சுற்றுலாத் துறையின் எரிபொருள் தேவையை ஆராய்ந்து, முன்னர் பயன்படுத்தப்பட்ட QR முறையைப் பேணுவது குறித்தும், ஹோட்டல்களுக்குத் தேவையான எரிவாயு மற்றும் எரிபொருள் வசதிகளை வழங்குவதற்கான வழிமுறையொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டது.
* மீன்பிடி மற்றும் விவசாயம்: பல நாள் மீன்பிடி படகுகள் மற்றும் துறைமுக நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், அதன் ஒதுக்கீட்டு அளவுகளில் உள்ள சிக்கல்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. விவசாய நடவடிக்கைகளுக்கு விவசாய ஆராய்ச்சி அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் எரிபொருள் வழங்கப்படுவதுடன், அந்தச் செயல்முறையை இலகுபடுத்துவதற்கு விவசாய அமைப்புகளை எவ்வாறு ஈடுபடுத்தலாம் என்பது குறித்தும் ஆராயப்பட்டது.
* கைத்தொழில் துறை: கைத்தொழிலாளர்கள் குறித்த தகவல்களைத் திரட்டிப் பதிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்க கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
* சுகாதாரச் சேவை: சுகாதாரச் சேவையை அத்தியாவசியச் சேவையாகப் பேணும் அதேவேளை, அதிகபட்ச எரிபொருள் சிக்கனத்தை உறுதிப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. பிரதேச ரீதியான எரிபொருள் இருப்புகளைப் பேணுதல், மருந்து மற்றும் உணவுப் போக்குவரத்துக்கான எரிபொருள் தேவைகள் குறித்து கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் தேசியப் பொருளாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டுமானத் துறையை முகாமைத்துவம் செய்தல் மற்றும் பொதுப் போக்குவரத்துத் தேவைகளைத் திட்டமிட்டபடி முன்னெடுத்தல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்படும் தகவல் கட்டமைப்பைப் பேணி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான முழுமையான தலையீட்டை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு மேலதிகமாக அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்களான வசந்த சமரசிங்க, பிமல் ரத்நாயக்க, கே.டி. லால் காந்த, குமார ஜயகொடி, சுனில் ஹந்துனெத்தி, அநுர கருணாதிலக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

போர் சூழல் தீவிரமடைந்தால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் சூழல் தீவிரமடைந்து எரிபொருள் மற்றும் நிலக்கரி விநியோகம் முற்றாகத் தடைப்பட்டால், நாட்டில் தடையில்லா மின்சாரத்தை வழங்குவது சவாலாக அமையும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும், தற்போதைய நிலையில் மின் துண்டிப்பு குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், ஏப்ரல் மாத நடுப்பகுதியில் 25 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (17) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஏப்ரல் மாத இடைப்பகுதியில் 25 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுக்கு மேலதிகமாகவே 3 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரி அவசர கொள்வனவு செய்யப்படவுள்ளது.
நாட்டில் உணவு தட்டுப்பாடு இல்லை. எவ்வாறிருப்பினும் உள்நாட்டு உற்பத்தியில் மாத்திரம் எமது உணவு தேவை பூர்த்தி செய்யப்படவில்லை. இந்தியா, பாக்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. கப்பல் போக்குவரத்தின் அடிப்படையில் அவை தீர்மானிக்கப்படும்.
திருகோணமலை எண்ணெய் குதங்களை புதுப்பிப்பதற்காக கடந்த ஏப்ரலில் இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையில் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் எமது எரிபொருள் களஞ்சிய திறனும் அதிகரிக்கப்படும்.
தற்போது மின் துண்டிப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை. எனினும் போர் சூழல் விரிவடையும் தன்மையின் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படும். அமெரிக்க - ஈரான் போர் மேலும் தீவிரமடைந்து, எரிபொருள், நிலக்கரி விநியோகம் முற்றாக தடைபட்டால் 24 மணித்தியால தடையற்ற மின் விநியோகம் குறித்து எவராலும் எதிர்வுகூற முடியாது என்றார்.

விடுமுறை தினத்தை திங்கட்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையாக மாற்றுமாறு கோரிக்கை
எரிபொருள் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் அறிவித்துள்ள ஒவ்வொரு புதன் கிழமையும் அரசவிடுமறையானது தூரப் பிரதேசங்களிலிருந்து அலுவலகங்களுக்குச் செல்வோருக்கு மனக் கஸ்டத்தை ஏற்படுத்தியுள்ளது எனவே, இது குறித்து அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டுமென திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
அதிகமான அரச உத்தியோகத்தர்கள் தூரப் பிரதேசங்களில் இருந்து பணிக்குச் செல்கின்றனர். இவர்கள் தமது அலுவலகப் பகுதியில் தங்கி இருக்கின்றனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதன் கிழமை விடுமுறை சொந்த பிரதேசங்களில் பணிபுரிவோருக்கு நன்மையளிப்பது போல இவர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது
இந்த ஒரு நாள் விடுமுறையைப் பயன்படுத்தி இவர்களால் தமது வீடுகளுக்கு வந்து செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. நாட்டின் நெருக்கடி நிலை குறித்து கவனத்தில் கொண்ட அரசாங்கம் இவ்வாறான உத்தியோகத்தர்களின் நலன் குறித்து கவனத்தில் கொள்ளாது அவர்களைக் கைவிட்டுள்ளது கவலையை ஏற்படுத்துகின்றது.
எனவே, அரசாங்கம் இந்த விடுமுறை தினத்தை திங்கட்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையாக மாற்ற வேண்டும். அல்லது தூரப் பிரதேசத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் நன்மை பெரும் வகையில் ஏதாவது திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சகல அரச உத்தியோகத்தர்களும் அரசாங்கத்தினால் சமமாகப் பார்க்கப்பட வேண்டும். சிலர் நன்மையடையும் அதேவேளை இன்னும் சிலர் கஸ்டப்படும் நிலை குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றேல் இவ்வாறான அரச உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவே கருத வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
