Our Feeds



Wednesday, March 11, 2026

Zameera

எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 200 அமெரிக்க டொலர் வரை உயரக்கூடும்


 ஈரான் தமது தாக்குதல் கொள்கையில் புதிய வியூகத்தை வகுத்துள்ளதாக தெஹ்ரானின் காதம் அல்-அன்பியா இராணுவ தலைமையகத்தின் ஊடகப்பேச்சாளர் இப்ராஹிம் சோல்பகாரி தெரிவித்துள்ளார். 


அதற்கமைய பரஸ்பர தாக்குதல் கொள்கை முடிவுக்கு வந்துவிட்டது என்றும், இனிமேல் தாக்குதலுக்குத் தாக்குதல் என்ற புதிய கொள்கையைப் ஈரான் பின்பற்றப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒரு லீற்றர் எண்ணெயைக் கூட கொண்டு செல்ல ஈரான் அனுமதிக்காது. 

அவர்களை நோக்கிச் செல்லும் எந்தவொரு கப்பலும் அல்லது தாங்கியும் ஈரானின் இலக்காக அமையும். 

எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 200 அமெரிக்க டொலர் வரை உயர்வதற்குத் தயாராக இருங்கள். 

ஏனெனில் எண்ணெய் விலை பிராந்திய பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது. 

அந்தப் பாதுகாப்பை நீங்கள்தான் சீர்குலைத்துள்ளீர்கள் என அவர் எச்சரித்துள்ளார்.
SHAHNI RAMEES

பகல்நேர பராமரிப்பு நிலையத்தில் பலியான 18 மாதக் குழந்தை! #VIDEO

 

பகல்நேர பராமரிப்பு நிலையம் ஒன்றில்

SHAHNI RAMEES

கைதியின் பணத்தில் சொகுசு வாழ்க்கை - சிக்கிய பொலிஸ் அதிகாரி!

 

ஹெரோயின் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு

Zameera

புத்தளத்தில் மத்ரஸாவிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுவர்களைக் கடத்துவதற்கு மர்ம நபர்கள் எடுத்த முயற்சி


 புத்தளம், அல்-ஹஸனாத் வீதியில் சிறுவர்களைக் கடத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் ஒன்று செவ்வாய்க்கிழமை (10) பதிவாகியுள்ளது.


அல்-ஹஸனாத் பள்ளிவாசல் வீதி, எட்டாவது ஒழுங்கையில் அமைந்துள்ள குர்ஆன் மத்ரஸாவிலிருந்து காலை நேரப் பாட முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை, முகக்கவசம் அணிந்திருந்த நான்கு மர்ம நபர்கள் துரத்தியுள்ளனர். இதன்போது அச்சமடைந்த சிறுவர்கள் அங்கிருந்து ஓடி தப்பியுள்ளனர். வீதியோரத்தில் வெள்ளை நிற வாகனமொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், அதிலிருந்தவர்களே தங்களைத் துரத்தியதாகவும் சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதேபோன்றதொரு கடத்தல் முயற்சி கடந்த வாரமும் இதே வீதியில் இடம்பெற்றுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் உண்மையானது என்பதை அல்-ஹஸனாத் பள்ளிவாசலின் பேஷ் இமாம் உறுதிப்படுத்தியுள்ளார்.


இவ்விடயம் தொடர்பில் புத்தளம் மாநகர முதல்வர், புத்தளம் நகர பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினரின் கவனத்திற்கு பெற்றோர்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.


எம்.எச்.எம். சியாஜ்

Zameera

எரிபொருள் விலை திருத்தம் என்பது அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல - பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க


 எரிபொருள் விலை திருத்தம் என்பது அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என்றும், அது இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால் (CPC) சுயாதீனமாக எடுக்கப்பட்ட தீர்மானம் என்றும் சிரச தொலைக்காட்சியின் ‘சட்டன’ (Satana) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.


கடந்த காலங்களில் அமைச்சர்கள் அரச நிறுவனங்களின் தீர்மானங்களில் தன்னிச்சையாக தலையிட்டதாலேயே அந்த நிறுவனங்கள் செயலிழந்தன எனச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசாங்கம் அத்தகைய தலையீடுகளைச் செய்யாது என வலியுறுத்தினார்.


கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர் சபையினாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், உலகச் சந்தையில் நிலவும் விலை மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டு விலைகள் திருத்தப்படுவதாகவும் அவர் விளக்கினார்.


உலகச் சந்தையில் விலை திடீரென அதிகரித்தமையே இந்த விலை திருத்தத்திற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது. எவ்வாறாயினும், எதிர்காலத்தில் உலகச் சந்தையில் விலை குறைந்தால் அதன் நன்மையை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.


எரிபொருள் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்படும் விவசாயம், மீன்பிடி மற்றும் உற்பத்தி ஏற்றுமதித் தொழில்கள் போன்ற முன்னுரிமைத் துறைகளுக்கு மானியங்களை வழங்கும் திட்டம் அரசாங்கத்திடம் உள்ளதாக அவர் வெளிப்படுத்தினார்.


இந்த மானியங்களை வழங்குவதற்காக வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றாலும், ஏனைய தேவையற்ற செலவுகளைக் குறைப்பதன் மூலம் அதற்கான பணத்தைக் கண்டறிய உள்ளதாக அவர் கூறினார்.


நாட்டின் நிதி ஒழுக்கத்தைப் பேணுவதற்காக ஆரம்ப உபரியை (Primary Balance) நேர்மறை 2.3 மட்டத்தில் பேணுவதற்கு அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய செலவுகளை முகாமைத்துவம் செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் சதுரங்க அபேசிங்க மேலும் தெரிவித்தார்.

Zameera

ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பிரதமர் இருதரப்புப் பேச்சுவார்த்தை


 இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, பிலிப்பைன்ஸிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) சிரேஷ்ட அதிகாரிகளுடன் தொடர்ச்சியான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இலங்கை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், நடைமுறையிலுள்ள திட்டங்களை மீளாய்வு செய்தல் மற்றும் எதிர்காலக் கூட்டாண்மை வாய்ப்புகளைக் கண்டறிதல் ஆகியவற்றுக்கு இப்பேச்சுவார்த்தைகளின் போது முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, பிரதமர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் Masatsugu Asakawa சந்தித்தார். இச்சந்திப்பின்போது, இருதரப்புக்கும் இடையிலான உறவை மேலும் உறுதிப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. பிரதமரை வரவேற்ற தலைவர் Masatsugu Asakawa,அண்மைக்கால பொருளாதார நெருக்கடியின் பின்னர் இலங்கைப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளைப் பாராட்டினார்.

'டிட்வா' சூறாவளி அனர்த்தத்தின்போது ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய உதவிகளுக்கும், இலங்கையுடன் முன்னெடுத்து வரும் விரிவான அபிவிருத்தி ஒத்துழைப்புகளுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது நன்றிகளைத் தெரிவித்தார். அத்துடன், இலங்கையின் நீண்டகால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவு இன்றியமையாதது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (தெற்கு, மத்திய மற்றும் மேற்கு ஆசியாவுக்கான) பிரதித் தலைவர் Yingming Yangயை பிரதமர் சந்தித்தார். இதன்போது, இலங்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதுடன், சுகாதாரம், கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

துறைசார் குழு 3 இன் (Sectors Group 3) பணிப்பாளர் நாயகம் Christine Engstrom அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், மானுட மற்றும் சமூக அபிவிருத்தி, பொதுத்துறை முகாமைத்துவம் மற்றும் நிதித்துறை சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் எதிர்கால முதலீடுகளின்போது, உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மேலதிகமாக, மனிதவள மேம்பாடு மற்றும் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளின் தரத்தை உயர்த்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனப் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ASEAN நிறுவனங்கள், பிலிப்பைன்ஸ் கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பங்கேற்ற கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி குறித்த கொள்கை விளக்க உரையாடலில் பிரதமர் கலந்துகொண்டார். பிராந்திய கல்வி முறைகள், கொள்கை ரீதியான ஒத்துழைப்பு மற்றும் கல்வி மற்றும் திறன் அபிவிருத்திக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலின்போது, இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கிடையே கல்விசார் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை, குறிப்பாகக் கொள்கைப் பரிமாற்றம் மற்றும் நிறுவன ரீதியான ஒத்துழைப்பு ஆகிய துறைகள் குறித்துப் பிரதமர் வலியுறுத்தினார். அத்துடன், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி (TVET) துறையின் அபிவிருத்தி மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப திறன் அபிவிருத்திக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்த மணிலா விஜயமானது, நிலையான அபிவிருத்தியை முன்னெடுத்தல், கல்வி முறைகளை வலுப்படுத்துதல் மற்றும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இலங்கை, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிராந்திய பங்காளிகளுக்கு இடையிலான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.


Zameera

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க மாட்டோம் - பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்


 நாட்டில் தற்போது டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட எரிசக்தி மூலங்களைப் பெற்றுக்கொள்வதில் பேக்கரித் தொழில்சார்ந்தோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அரசாங்கம் முறையான வேலைத்திட்டம் ஒன்றினை வகுத்துத் தர வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ள அவர், இவ்வாறான இக்கட்டான சூழலிலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.


ரத்தொழுகமவில் புதன்கிழமை (11) காலை 10.00 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்:


இலங்கையிலுள்ள பேக்கரிகளில் 25 சதவீதமானவை எரிவாயு மூலமும், 25% முதல் 30% வரையானவை டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மூலமும் இயங்குகின்றன. ஏனையவை விறகு அல்லது மாற்று எரிசக்திகளைப் பயன்படுத்துகின்றன.


பேக்கரித் தேவைகளுக்காக எரிபொருளைக் கொள்கலன்களில் (Cans) கொண்டு செல்வதே வழக்கம். ஆனால், தற்போது கொள்கலன்களில் எரிபொருள் வழங்க அரசாங்கம் தடை விதித்துள்ளதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, பேக்கரிகளுக்குத் தேவையான எரிபொருளைக் கொள்கலன்களில் பெற்றுக்கொள்ள விசேட நடைமுறை ஒன்றை அரசு உருவாக்க வேண்டும்.


நாட்டின் பல பகுதிகளில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு, விலை உயர்வு மற்றும் மின்சாரத் தடை குறித்துப் பல பேக்கரி உரிமையாளர்கள் தமக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Zameera

உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம்


 ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றும், அது "வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை தீவிரப்படுத்தும்" என்றும் ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி அமைப்பான UNCTAD கவலை வெளியிட்டுள்ளது. 


செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில் UNCTAD பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: 


எரிசக்தி, உரம் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயரக்கூடும். இது குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்தும். 


UNCTAD இன் தரவுகளின்படி, உலகளாவிய கச்சா எண்ணெயில் 38 சதவீதமும், எல்பிஜி (LPG) எரிவாயுவில் 29 சதவீதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (LNG) 19 சதவீதமும் ஹோர்முஸ் நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்படுகின்றன. 


உலகளவில் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படும் உரங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே பயணிக்கின்றது. 


இந்த நீரிணை ஊடாக அனுப்பப்படும் தயாரிப்புகளில் 84 சதவீதமானவை ஆசிய நாடுகளையே சென்றடைகின்றன. எனவே, இதன் தாக்கம் ஆசியப் பிராந்தியத்திலேயே மிக அதிகமாக உணரப்படும் என UNCTAD சுட்டிக்காட்டியுள்ளது.

SHAHNI RAMEES

ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் - நீதவான் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

 

காலி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நடமாடும்
SHAHNI RAMEES

மின்சார சபை ஊழியர்களின் கோரிக்கைகளுக்குப் பச்சைக்கொடி!

 

மின்சார சபை தொழிற்சங்கங்கள் முன்வைத்த 64 கோரிக்கைகளில்
Zameera

சவூதியில் உள்ள இலங்கை உம்ரா யாத்ரீகர்களுக்கு விசேட அறிவிப்பு


 (நா.தனுஜா)

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்கு வருகைதந்துள்ள உம்ரா பயணிகள் அனைவரையும் https://forms.gle/YD26uHKC5NgQ5p7T7 என்ற இணைப்பின் ஊடாகத் தூதரகத்தில் பதிவுசெய்யுமாறு ஜித்தாவில் உள்ள இலங்கைத் துணைத்தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையில் மூண்ட போர் சூழ்நிலை தீவிரமடைந்து தற்போது மத்திய கிழக்குப் பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளும் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ள பின்னணியிலேயே இலங்கைத் துணைத்தூதகரம் மேற்குறிப்பிட்ட அறிவிப்பை விடுத்துள்ளது.

ஏதேனும் அவசர சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், அனைத்து உம்ரா யாத்ரீகர்களுக்கும் உரிய நேரத்தில் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்குவதற்காகவே இவ்விபரங்கள் கோரப்படுவதாக துணைத்தூதரகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை இதுகுறித்து கரிசனையை வெளிப்படுத்தியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விமானசேவை வழங்கல் நிறுவனங்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் தொடர்புகொண்டு, இலங்கையிலிருந்து சென்ற உம்ரா யாத்ரீகர்கள் மீண்டும் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதிசெய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அவர்களுக்கு அவசியமான உதவிகளை உரிய வேளையில் வழங்குவதுமே தற்போது முன்னுரிமைக்குரிய விடயமாக இருக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Zameera

ஈரான் கடற்படையினரின் சடலங்களை மீளப்பெற ஈரான் நடவடிக்கை


 இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் அமெரிக்காவினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான 'ஐரிஸ் டெனா'  கப்பலைச் சேர்ந்த கடற்படையினரின் சடலங்களை விரைவில் தாயகத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் 'பார்ஸ்'  செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உயிரிழந்த 104 கடற்படையினரில் 84 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த சடலங்கள் விரைவில் ஈரானுக்கு கொண்டு வரப்படும் என்றும் இராணுவ மக்கள் தொடர்பு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ஈரான் வெளிவிவகார அமைச்சின் முயற்சி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த சடலங்களை மீளப்பெறும் பணிகள் முன்னெடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உயிரிழந்த ஈரான் கடற்படையினரின் சடலங்களை ஈரானிடம் ஒப்படைக்க வேண்டாம் என வொஷிங்டன் (அமெரிக்கா), இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Zameera

அபுதாபிக்கான அனைத்து விமானங்களும் இந்த ஆண்டு இறுதி வரை ரத்து


அபுதாபிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் இந்த ஆண்டு இறுதி வரை ரத்து செய்துள்ளதாக பிரிட்டிஷ் எயார்வேஸ் தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் எயார்வேஸ் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பஹ்ரைன், அம்மான், தோஹா, டுபாய் மற்றும் டெல் அவிவ் ஆகிய இடங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் இந்த மாத இறுதி வரை ரத்து செய்வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.