Our Feeds



Tuesday, February 3, 2026

Zameera

சிறுமி துஷ்பிரயோகம் - குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை


நீதிமன்றில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 27 வயதுடைய நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் சகேதரியின் கணவர் என்பதுடன் அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். 

அத்துடன் குற்றவாளிக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் குறித்த அபராதத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 6 மாத கால சாதாரண சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நட்டஈட்டை செலுத்தாத விடத்து 3 குற்றச்சாட்டிற்கும் மேலும் தலா 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் ஒன்றன் பின் ஒன்றாக கழிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

-அம்பாறை நிருபர் ஷிஹான்-


 

Zameera

தமிழரசுக் கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன்


 இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பான தமிழரசுக்கட்சி தலைமையின் கடிதம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Zameera

6 ஆம் தரத்திற்கான எந்தவொரு மொடியூலும் நீக்கப்படவில்லை


 புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் (Modules) நீக்கப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 


இன்று (03) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இது தொடர்பாகத் தெரிவித்தார். 

இந்தச் சீர்திருத்தங்களை அடுத்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

"6 ஆம் தரத்தின் முதலாம் தவணைக்கான பாடத்தொகுதிகளே அச்சிடப்பட்டுள்ளன. அவற்றுள் எதனையும் நாம் நிராகரிக்கவோ அல்லது நீக்கவோ இல்லை. 6 ஆம் தரத்திற்கான திட்டத்தை 2027 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த முன்மொழிந்துள்ளோம். 2027 இல் அதனை நடைமுறைப்படுத்தும்போது அவற்றைப் பயன்படுத்துவதற்கே நாம் திட்டமிட்டுள்ளோம். அதனை தற்போது நீக்கவோ அல்லது நஷ்டம் ஏற்படும் வகையிலான எந்தவொரு தீர்மானத்தையோ நாம் எடுக்கவில்லை." 

"6 ஆம் தரத்திற்கான பாடப்புத்தகங்களை நாம் ஏற்கனவே அச்சிட்டுள்ளோம், தற்போது களஞ்சியசாலைகளில் உள்ளவற்றை விநியோகிக்க ஆரம்பித்துள்ளோம். பெப்ரவரி மாத நடுப்பகுதிக்குள் அனைத்துப் பாடப்புத்தகங்களையும் விநியோகிக்கத் தயாராக உள்ளோம். ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை ஆரம்பித்துள்ளனர். பழைய பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளதால் ஆசிரியர்களால் அவற்றைக் கற்பிக்க முடியும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
Zameera

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவில் அரசாங்கத்தின் தலையீடு


 பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவில் அரசாங்கம் தலையீடு செய்துள்ளது என பாராளுமன்றில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

2024 இல் 37 ஆம் இலக்க பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் மூலம் நாட்டில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சயாதீன அரசியலமைப்பு நிறுவனமாக 'தேசிய பெண்கள் ஆணைக்குழு' நிறுவப்பட்டது. எவ்வாறாயினும், அந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்ட நான்கு மாதங்கள் போன்ற குறுகிய காலத்திற்குள் அதன் முதலாவது தலைவர் கலாநிதி ரமணி ஐயசுந்தர தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவரது விலகலுக்கு முக்கிய காரணமாக ஆணைக்குழுவிற்கு சுயாதீனமாக செயல்படுவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள், சுதந்திரமான அலுவலக வசதிகள் மற்றும் முறையான பணியாளர்கள் இல்லாமை போன்றன அமைந்து காணப்படுவதாக ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டன. 

அவ்வாறே, தொடர்புடைய அமைச்சினால் ஆணைக்குழுவின் சுயாதீனத்திற்குப் பாதகம் விளைவிக்கும் விதத்தில் நிர்வாக தலையீடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், ஆணைக்குழுவை அமைச்சின் கீழ் கொண்டுவர முயற்சிக்கப்படுவதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை (CEDAW), நிலைபேறு இலக்குகளில் ஐந்தாவது இலக்கு போலவே, சட்டத்தின் பிரிவு 4, 5 மற்றும் 6 இன் கீழ் நமது நாட்டில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் தேசிய நிதியங்களை நிறுவுதல் உள்ளிட்ட பல பொறுப்புகளை முன்னெடுக்க வேண்டியுள்ள தருணத்தில், பாரிஸ் கொள்கைகளுக்கு எதிராகவும் சென்று பெண்கள் ஆணைக்குழு தற்சமயம் துரதிஷ்ட நிலையை எட்டியுள்ளது. 

எனவே, பின்வரும் கேள்விகளை நான் முன்வைப்பதோடு, அதற்கான சரியான பதில்களையும் விளக்கங்களையும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கிறேன். 

1. பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழுவின் பொறுப்புகள் யாவை? அந்த ஆணைக்குழுவின் முதலாவது தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரி குறுகிய காலத்திற்குள் அந்தப் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்வைத்த குறிப்பிட்ட காரணங்கள் என்ன? 

2. பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழுவிற்கு இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் எவ்வளவு? 

3. பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழு செயல்படுவதற்குத் தேவையான சுதந்திரமான அலுவலக வசதிகள் மற்றும் பணியாளர்கள் வழங்கப்பட்டுள்ளனரா? இல்லையெனில், இந்த ஆணைக்குழுவை அமைச்சுடன் இணைத்து அதன் பணியாளர்களைப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அவ்வாறு செய்வதன் மூலம் ஆணைக்குழுவின் அரசியலமைப்புச்சார் சுயாதீனத்தில் அரசாங்கம் அழுத்தம் ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கின்றதா? 

அவ்வாறே, முன்னாள் அமைச்சின் செயலாளர் ஒருவர் இதன் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அவ்வாறே குறைநிரப்பு பிரேரணையொன்றை கொண்டு வந்து இந்த ஆணைக்குழுவிற்குத் தேவையான அலுவலக பணியாளர்கள் மற்றும் நிதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்க்கட்சி தனது பூரண ஆதரவைப் பெற்றுத் தரும். 

4. ஆணைக்குழுவின் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றாலும், அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு அமைச்சு வளாகத்திலிருந்து பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டது எந்த அடிப்படையில்? 

5. இந்த சுயாதீன ஆணைக்குழுவை அமைச்சின் ஒரு பிரிவாக மாற்ற அரசாங்கம் முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் உண்மையா? இல்லையெனில், அதன் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் அவசர நடவடிக்கைகள் யாவை? 

தென்னாப்பிரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா போன்ற நாடுகள் பெண்களுக்கு சட்ட ரீதியீலான பக்க பலத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கும் வேளையில், நமது நாட்டில் பெண்களின் உரிமைகளை மீறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

6. இந்நாட்டு பெண்களின் உரிமைகளுக்காக முன்நிற்கும் பிரதான சுயாதீன நிறுவனம் இவ்வாறு செயலற்றுப்போவதைத் தடுப்பதற்கு அரசாங்கத்தினால் உத்தேசிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் யாது? 

அவ்வாறே, நமது நாட்டில் தொழிலாளர் படையணியில் பெண்களின் பங்களிப்பு 31-33% ஆக காணப்படுகின்றன. இதனை அதிகரிப்பதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% வளர்ச்சியை எட்ட முடியும். தேசிய பெண்கள் ஆணைக்குழுவிற்கு ஏன் இவ்வாறு மாற்றாந்தாய் மனப்பான்மை காட்டப்படுகிறது என்பதில் பிரச்சினை எழுகிறது. இது தொடர்பாக பெண்கள் அமைப்புகள் கூட ஜனாதிபதியிடம் முறைப்பாட்டைக் கையளித்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
SHAHNI RAMEES

மின்சார மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டஈடு அறவீடு!

 

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால்
Zameera

நாமல் ராஜபக்ச சி.ஐ.டியில் முன்னிலை


 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். 


அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலுக்கு அமைய அவர் அங்கு முன்னிலையானார். 

இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால் பிறிதொரு திகதியை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Zameera

ஹொரணை- கொழும்பு தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது


 ஹொரணையில் இருந்து 120 பேருந்து வீதியின் கஹதுடுவ நுழைவாயில் ஊடாக உள்நுழைந்து புறக்கோட்டை வரை பயணிக்கும் பேருந்து ஒன்றிற்கு புதிய போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று (02) காலை ஆரம்பிக்கப்பட்ட ஹொரணை - கொழும்பு வீதி சொகுசு மற்றும் சாதாரண தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (03) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

Zameera

ஷிரந்தி ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை


 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்னர் பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை இன்றைய தினம் (03) பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.



அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக கடந்த 27ஆம் திகதி பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அன்றைய தினம் தம்மால் சமூகமளிக்க முடியாது எனவும், அதற்காக இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறும் ஷிரந்தி ராஜபக்ஷ சட்டத்தரணி ஊடாக பொலிஸாருக்கு அறிவித்திருந்தார்.

Zameera

இலங்கை மின்சார சபை கலைப்பது குறித்த உத்தியோபூர்வ அறிவிப்பு இம்மாதம் வெளியிடப்படும்

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

அதற்கமைய, இந்த மாத இறுதிக்குள் இலங்கை மின்சார சபையை கலைப்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் பணி 5 கட்டங்களாக முன்னெடுக்கப்படுவதுடன், அவற்றில் 4 கட்டங்கள் ஏற்கனவே வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அடிப்படை ஒதுக்கீட்டுத் திட்டம், வருடாந்த மின் கொள்முதல் திட்டம், நீண்ட கால மின் உற்பத்தித் திட்டம் மற்றும் நீண்ட கால மின் விநியோக மேம்பாட்டுத் திட்டம் ஆகிய கட்டங்கள் இவ்வாறு நிறைவடைந்துள்ளதாக மின்சார சபை மாற்றத்திற்கான செயலணியின் தலைவர் புபுது நிரோஷன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இதன் இறுதிக்கட்டமான தேசிய மின்சாரக் கொள்கை மற்றும் தேசிய மின்சாரக் கட்டணக் கொள்கையைத் தயாரிக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதனை பெப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்திற்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, பெப்ரவரி மாத இறுதிக்குள் இலங்கை மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்த மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ், விருப்ப ஓய்வு (VRS) பெற விண்ணப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளும் இதற்கமைய மேற்கொள்ளப்படவுள்ளன.

மின்சார சபையின் 2,173 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்திருந்ததுடன், அவர்களில் 20 பேர் தமது விண்ணப்பங்களை மீளப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, 2,153 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Zameera

உயர்தர உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் செயன்முறைப் பரீட்சை குறித்த அறிவிப்பு


 2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் (Biosystems Technology) பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


குறித்த பரீட்சைகளை பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை 74 பரீட்சை நிலையங்களில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

அனுமதிப்பத்திரங்கள் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக இன்று (02) முதல் அவற்றை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

Monday, February 2, 2026

Zameera

பேலியகொடை மெனிங் சந்தை டிஜிட்டல் மயமாகிறது


 பேலியகொடை மெனிங் பொதுச் சந்தையின் அன்றாட நிதி கொடுக்கல் வாங்கல்களை மிகவும் முறைப்படுத்தும் நோக்கில், புதிய இணையவழி (Online) கொடுப்பனவு முறைமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 


நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய முறைமை, இன்று (02) முற்பகல் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர ஆகியோரின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 

fmis.uda.lk என்ற இணையத்தள நுழைவாயிலின் ஊடாகச் செயற்படும் இந்த நவீன முறைமையின் மூலம், சந்தையிலுள்ள வர்த்தக சமூகத்தினர் தமது வரிப்பணம் மற்றும் ஏனைய அன்றாட கொடுப்பனவுகளை மிகவும் இலகுவாகத் தமது கைபேசிகள் ஊடாக மேற்கொள்ள இனிமேல் சந்தர்ப்பம் கிடைக்கும். 

நாட்டின் மொத்த விற்பனைத் துறையில் முன்னிலையிலுள்ள மெனிங் சந்தை இவ்வாறு டிஜிட்டல் மயமாக்கப்படுவது, அரசாங்கத்தின் தேசிய டிஜிட்டல் மாற்ற மூலோபாயத்தின் ஒரு முக்கிய வெற்றியாகும் என பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். 

பணமில்லா (Cashless) கொடுப்பனவு முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் வர்த்தகர்கள் தமது வியாபார நடவடிக்கைகளில் காலத்தை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

இதன் மூலம் வரிசைகளில் காத்திருக்கும் சிரமத்திலிருந்து விடுபட முடிவதுடன், கொடுப்பனவுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் நிதி பாதுகாப்பு என்பன உச்சகட்டமாக உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

இந்த முறைமையை எதிர்காலத்தில் நாடு முழுவதிலுமுள்ள ஏனைய பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
Zameera

49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு


 78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


அரசியலமைப்பின் 34வது உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு, அவர்கள் பூர்த்தி செய்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு வாரம் என்ற அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அத்துடன், 75,000 ரூபாவுக்கும் குறைந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறியமைக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எஞ்சிய தண்டனை காலமும் ரத்து செய்யப்படவுள்ளது.
Zameera

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் அதிகரிப்பு


 சமூக வலைதளங்கள் மற்றும் ஏனைய வழிகள் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போர், ஆள் கடத்தல் மற்றும் பல்வேறு மோசடிகளில் சிக்குவது அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 


இதன் காரணமாக, ஆள் கடத்தலுக்கு எதிரான சட்டம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டம் மற்றும் விசாரணைகள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு வழங்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க அந்தப் பணியகம் தீர்மானித்துள்ளது. 

இதன் முதற்கட்ட வேலைத்திட்டம் அண்மையில் அனுராதபுரம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதேச மக்களுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் உள்ளூர் அளவில் சட்டத்தை அமுல்படுத்தும் குழுவினரான பொலிஸ் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு வழங்குவதன் மூலம், மக்களுக்கு மிகவும் துல்லியமான மற்றும் வினைத்திறனான சேவையை வழங்க முடியும் என பணியகம் எதிர்பார்க்கிறது. 

தற்போது அதிகளவிலான இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அவர்கள் மோசடியாளர்களிடம் சிக்குவதைத் தடுப்பதும், மோசடியாளர்களுக்கு எதிராக எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துவதுமே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.