
Saturday, May 30, 2026

இந்து சமுத்திரப்பிராந்தியத்தை அமைதி வலயமாகப் பேணுவது அவசியம்
(நா.தனுஜா)
இந்து சமுத்திரப்பிராந்தியத்தை அமைதி வலயமாகவும், ஒத்துழைப்பு மற்றும் சுபீட்சத்தைக்கொண்ட பிராந்தியமாகவும் பேணவேண்டும் என பாதுகாப்புச்செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா அழைப்புவிடுத்துள்ளார்.
ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான உயர்மட்ட அதிகாரிகளின் 14 ஆவது சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பாதுகாப்புச்செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு கருத்துரைத்த அவர், இந்து சமுத்திரப்பிராந்தியத்தை அமைதி, ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட சுபீட்சம் ஆகியவற்றைக்கொண்ட ஒரு பிராந்தியமாகப் பேணுவது மிக அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
அதேபோன்று தற்போதைய சிக்கலான புவிசார் அரசியல் சூழ்நிலையில், தீவிரமடைந்துவரும் உலகளாவிய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கு சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கை அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.Politics

இந்திய கடற்படையின் ‘ஏராவத்’ கப்பல் கொழும்பு வருகை
இந்திய கடற்படையின் ஷர்துல் வகை லாண்டிங் ஷிப் டேங்க் (LST) கப்பலான ‘ஏராவத்’ (INS Airavat) 2026 ஜூன் 1 முதல் 4 ஆம் திகதி வரை கொழும்புக்கு வருகை தர உள்ளது. இந்தக் கப்பல் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு செயல்பாட்டு திருப்புமுனை நடவடிக்கைகளை (Operational Turn Around - OTR) மேற்கொள்ளும்.
இந்திய அரசின் நன்கொடையின் கீழ், இந்திய கடலோர காவல் படையிலிருந்து இலங்கை கடலோர காவல் கப்பலான ‘சுரக்ஷா’விற்கான முக்கிய உதிரிப் பாகங்களையும் இந்தக் கப்பல் கொண்டு வருகிறது.
மேலும் கண்டறிக
Newspapers
South Asians & Diaspora
Geographic Reference
கப்பல் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் கட்டளை அதிகாரியான கமாண்டர் ஐ.பி. பட்டீல், மேற்கு கடற்படைப் பகுதி தளபதியை சந்திக்கவுள்ளார். மேலும், கப்பற்படையினர் இலங்கை கடற்படையினருடன் தொழில்முறை மற்றும் விளையாட்டு தொடர்பான நிகழ்வுகளில் ஈடுபடவுள்ளனர். அதோடு, ‘சுத்தமான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்துக்கு ஆதரவாக, கொழும்பில் கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியிலும் இந்திய மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து பங்கேற்கின்றனர்.
2025 டிசம்பரில் ஏற்பட்ட ‘டிட்வா’ (Ditwah) புயலின்போது, இதே வகை கப்பலான INS Gharial, 650 டன் நிவாரண உணவுப் பொருட்களுடன் இலங்கைக்கு வந்தது நினைவுகூரத்தக்கது. பின்னர், 2026 பிப்ரவரியில், புயலால் சேதமடைந்த பாலங்களை மறுசீரமைக்க 10 பேலி பாலங்களையும் அந்தக் கப்பல் கொண்டு வந்தது.
இந்திய கடற்படை கப்பல்களின் இலங்கை வருகைகள், இரு நட்பு நாடுகளின் கடற்படைகளுக்கிடையிலான வலுவான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை. இது இந்தியாவின் ‘Neighbourhood First’ கொள்கைக்கும், இந்திய பிரதமரின் ‘பிராந்தியங்களின் பாதுகாப்பும் வளர்ச்சியும் சார்ந்த பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்’ (MAHASAGAR) என்ற பார்வைக்கும் ஏற்ப அமைகிறது.

வெசாக் தினத்தை முன்னிட்டு 61 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு
வெசாக் பூராணை தினத்தை முன்னிட்டு இன்று (30), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 61 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களில் 33 கைதிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ. சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, குறித்த சிறைக்கைதிகளுக்கு இவ்வாறு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்காக அர்ப்பணித்த இராணுவ வீரர்களையும் தலைவர்களையும் சமூகம் மறந்து செயற்படுவது துரதிர்ஷ்டவசமானது – பெல்லன்வில தம்மாரத்தன தேரர்
(க.சிவலிங்கமூர்த்தி)
நாட்டின் இறைமை மற்றும் பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவ வீரர்களையும், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுக்கொடுத்த தலைவர்களையும், தற்போதைய சமூகம் மறந்து செயற்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமான விடயமாகும் என பெல்லன்வில தம்மாரத்தன நாயக்க தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பாதுகாப்புக்காக இராணுவ வீரர்களும், அதற்கான உறுதியான தலைமைத்துவத்தை வழங்கிய தலைவர்களும் தங்களது பிரதான கடமைகளை செவ்வனே நிறைவேற்றினர். ஆனால், அந்த வெற்றியைத் தொடர்ந்து பயணிக்க வேண்டிய பாதையில் நாம் ஒருவிதத்தில் வழிதவறிவிட்டோம் என்றே நான் கருதுகின்றேன். தேசிய ரீதியாக எமக்குத் தேவையான ஒற்றுமையைப் பேணிப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். குறிப்பாக, அரசியல் ரீதியாகப் பார்த்தால், நாம் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக்கொண்டே இருந்தோமே தவிர, அதனை நிறுத்தவில்லை.
இந்த அரசியல் சமநிலையின்மையால், யுத்தத்தில் தோல்வியடைந்த பயங்கரவாத சக்திகள், வேறு வழிகளில் எமது நாட்டில், குறிப்பாக வடக்கில் தமக்கான ஒரு பலத்தை நிலைநிறுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது. அதேபோல், உலகமயமாக்கல் சூழலில், இலங்கை என்ற தேசத்தைப் பிரித்துத் தனித் தனி நாடுகளாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்படும் பெரும் எண்ணிக்கையானவர்கள் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் உள்ளனர்.
அதுமட்டுமன்றி, எமது நாட்டைத் துண்டாட வேண்டும் எனக் கருதும் பெரும் பிரிவினர் இந்தியாவிலும், குறிப்பாகத் தென்னிந்தியாவிலும் உள்ளனர். நான் இனவாதத்தையோ அல்லது பிரிவினையையோ தூண்டுவதற்காக இதனைக் கூறவில்லை; இதுவே தற்போதைய கள யதார்த்தமாகும். சமீபத்தில் கூட, இலங்கை துண்டாடப்பட வேண்டும் எனக் கருதும் தலைவரொருவர் அங்கு அதிகாரத்துக்கு வந்துள்ளார்.
இந்த நிலையை உணர்ந்து, இப்பிரச்சினையை முழுமையாகத் தீர்ப்பதற்கு எமது நாட்டின் தலைவர்களும் அரசியல்வாதிகளும் போதுமான அக்கறையுடன் செயற்படவில்லை. யுத்தத்தில் தோல்வியடைந்த அந்தப் பயங்கரவாதக் கும்பல், தங்களது போராட்டத்தைக் கைவிடவில்லை. இலங்கையில் தமது திட்டங்களை முன்னெடுக்க முடியாதவர்கள், லண்டன், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து கொண்டு, இன்றும் நாட்டைப் பிரிக்கும் தங்களது சதித்திட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். எனவே, யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக நாம் கூறினாலும், எமக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை. வடக்கையும் கிழக்கையும் பிரித்துத் தனிநாடாக்கி, அதனை மேற்கத்தேய சக்திகளின் கீழ் கொண்டுவருவதே அந்தப் பன்னாட்டு சக்திகளின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்தது.
இலங்கையில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து, நாட்டை முழுமையாக விடுவித்த காரணத்தினாலேயே, அந்தப் பன்னாட்டு சக்திகள், எமது இராணுவ வீரர்களையும், அவர்களுக்குத் தலைமை தாங்கிய இராணுவ மற்றும் அரசியல் தலைவர்களையும் தமது பரம எதிரிகளாகவே கருதி செயற்படுகின்றன. இந்தச் சக்திகளின் அழுத்தங்கள் காரணமாக, இலங்கை ஒருபோதும் வலுவான நாடாக மாறிவிடக் கூடாது என்பதில் அவர்கள் மிகுந்த கவனத்துடன் செயற்படுகின்றனர். நாட்டின் விவகாரங்களில் மிகவும் நுணுக்கமாகத் தலையிட்டு, நாட்டைப் பலவீனப்படுத்துவதே அவர்களின் நோக்கமாக உள்ளது.
இந்த இக்கட்டான நிலையில் இருந்து நாடு எவ்வாறு மீண்டு வரும் என்பதை நான் கூற முனையவில்லை. இருப்பினும், மிகவும் கஷ்டப்பட்டுப் பெற்ற இந்த வெற்றியைப் பாதுகாத்துக்கொள்வதும், குறைந்தபட்சம் எமக்குள்ளாவது ஒற்றுமையைப் பேணுவதும், அனைத்துக்கும் மேலாக இந்த வெற்றியைப் பெற்றுக்கொடுத்த இராணுவ வீரர்கள் மீது கௌரவத்தையும் நன்றியுணர்வையும் செலுத்தி செயற்படுவதுமே எமது தற்போதைய கட்டாயத் தேவையாகும். இல்லையெனில், நாம் எதிர்காலத்தில் இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவோம்.
தம்மிடம் உள்ள அதிகாரத்தை எவ்வாறு தக்கவைத்துக் கொள்வது என்பதில் மாத்திரமே இன்று அரசியல்வாதிகள் கவனம் செலுத்துகின்றனர். இதற்காக நாட்டின் இறைமையையும், சுதந்திரத்தையும் கூடப் பந்தயத்தில் வைக்கத் துணியும் துர்பாக்கியசாலிகள் எம்மிடையே உள்ளனர்.
இந்த அவல நிலைக்கும் அவர்களே பொறுப்புக்கூற வேண்டும். நாம் மிகவும் விரைவாக எதனையும் மறந்துவிடும் ஒரு சமூகமாக மாறிவிட்டோம். இராணுவ வீரர்களுக்குப் பெரும் கௌரவத்தை அளித்து, அவர்களை தெய்வங்களுக்கு ஒப்பானவர்களாகக் கருதிய மக்கள், இன்று அவர்களை முற்றிலும் மறந்துவிட்டனர். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நாம் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது என்றார்.

நீதித்துறையில் 2,647 வெற்றிடங்கள்
(நமது நிருபர்)

ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட தான் இன்னும் தயாராக இல்லை
ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட தான் இன்னும் தயாராக இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள நீண்ட அறிக்கை ஒன்றில், இது குறித்து "இறுதி முடிவை எடுப்பதற்காக" வெள்ளை மாளிகையில் தான் விசேட கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது தொடர்பாக தற்காலிக உடன்பாடு எட்டப்பட்ட போதிலும், ஜனாதிபதி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இறுதி ஒப்பந்தத்திற்கான மேலதிக நிபந்தனைகளையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களையோ அல்லது குண்டுகளையோ வைத்திருக்கமாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும் என்பதும், கடல்சார் போக்குவரத்திற்கு எவ்வித வரிகளோ அல்லது கட்டுப்பாடுகளோ இன்றி ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகத் திறக்க வேண்டும் என்பதும் அந்த நிபந்தனைகளில் உள்ளடங்குகின்றன.

இலங்கைக்கான வத்திக்கான் பேராயர் - பிரதமர் சந்திப்பு
இலங்கைக்கான வத்திக்கான் தூதர் பேராயர் (H.E. Monsignor Andrzej Jozwowicz நேற்று (29) அலரி மாளிகையில் பிரதமரைச் சந்தித்தார்.
இலங்கைக்கான வத்திக்கான் பேராயரை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கான வத்திக்கான் தூதராக நியமிக்கப்பட்டதற்காகத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, கடந்த ஐந்து தசாப்தங்களாக இலங்கை மக்களுடன் பேணப்பட்டுவரும் நீண்டகால நட்புறவும் ஆன்மீக ஒற்றுமையும் தொடர்பில் தனது பாராட்டை வெளிப்படுத்தினார்.
இருதரப்பினரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகள் மற்றும் ஈடுபாடுகள் ஊடாக இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கான தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
Friday, May 29, 2026

நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே நாங்கள் அரசியல் செய்கிறோம் - திலித் ஜெயவீர
(க.சிவலிங்கமூர்த்தி)
பாரம்பரிய அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நாட்டை கட்டியெழுப்பும் புதிய வேலைத்திட்டத்துடன் பயணிக்க வேண்டும். நாங்கள் எதிர்க்கட்சித் தலைவராவதற்காக அரசியல் செய்யவில்லை. இந்த நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே நாங்கள் அரசியல் செய்கிறோம் என சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
கண்டி, சுது{ஹம்பொல ரஜமகா விகாரையில் நேற்று முன்தினம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாது மந்திரத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:
உலகில் எந்தவொரு நாட்டை விடவும், எமது உன்னதமான புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் பெற்றமை மற்றும் பரிநிர்வாணம் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளையும் மிகவும் பக்திபூர்வமாகவும், கௌரவத்துடனும் கொண்டாடும் ஒரே நாடு இலங்கையாகும். இத்தகைய உன்னதமான கலாசார மற்றும் மதப் பின்னணியைக் கொண்ட எமது நாட்டில், வரலாற்றுச் சிறப்புமிக்க சுது{ஹம்பொல ரஜமகா விகாரையை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் சமூக மற்றும் மதப் பணிகள் பாரிய முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே எனது பிரார்த்தனையாகும்.
நாட்டின் எதிர்காலத்துக்காக ஒரு நிச்சயமான வேலைத்திட்டத்துடன் எதிர்க்கட்சியில் சிதறிக்கிடக்கும் அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைக்க சர்வஜன அதிகாரம் கட்சி முன்னின்று செயற்படும் என்பதை அரசாங்கத்திற்கு நினைவூட்ட விரும்புகிறேன்
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாடுகள் மற்றும் அரசியல் ரீதியான மௌனம் குறித்து விமர்சிப்பதை விடுத்து, எமது சவாலுக்கு உட்பட்டுள்ள நாகரிகத்தையும் கலாசாரத்தையும் பாதுகாத்து, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் வேலைத்திட்டம் தொடர்பில் சிந்திப்பதே காலத்தின் தேவையாகும். பாரம்பரிய அரசியல் சிந்தனைகளில் இருந்து விடுபட்டு, இன்றைய உலகளாவிய மற்றும் பிராந்திய அரசியல் மாற்றங்களை உணர்ந்து செயற்படும் ஒரு புதிய அரசியல் கலாசாரமே நாட்டிற்கு அவசியமாகின்றது. சஜித் பிரேமதாச, பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்ற தலைவர்கள் வௌ;வேறு திசைகளில் பயணிப்பது, அவர்கள் இன்னும் பாரம்பரிய அரசியல் முறையிலேயே சிக்கியிருப்பதையே காட்டுகிறது. இந்த புதிய உலக மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன்களைப் பெற்று நாட்டை முன்னேற்ற முடியும் எனக் கூறுவது முழுமையான வேடிக்கையாகும். ஒரு வங்கியில் உங்களது சொத்துக்களை அடகு வைத்து கடன் பெற்று, அந்தப் பணத்தில் வியாபாரத்தை கட்டியெழுப்ப முடியாது. அதேபோல, சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களால் மாத்திரம் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பது ஜனாதிபதிக்கும் நன்கு தெரிந்த விடயமாகும்.
தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்த காலப்பகுதியில் அரசாங்கம் முன்னெடுத்த போராட்டங்கள், வன்முறைகள் மற்றும் தீவைப்புகளை விட, தற்போது அவை தவிர்க்கப்பட்டிருப்பதை நாம் நல்லிணக்கத்துடன் பாராட்ட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தாம் கோரப் போவதில்லை;, நாங்கள் எதிர்க்கட்சித் தலைவராவதற்காக அரசியல் செய்யவில்லை. இந்த நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே நாங்கள் அரசியல் செய்கிறோம்.
சர்வஜன அதிகாரம் கட்சி பதவிக்காகவோ அல்லது அந்தஸ்துக்காகவோ அரசியலில் ஈடுபடவில்லை. மாறாக, நபர் சார்ந்து அல்லாமல், நாட்டைக் கட்டியெழுப்பும் ஒரு குறிப்பிட்ட வேலைத்திட்டத்துடனும், தெளிவான அரசியல் தத்துவத்துடனும் எமது பயணம் அமையும். பழைய அரசியல் வரப்பிரசாதங்கள், அதாவது எதிர்க்கட்சித் தலைவர் பதவி, சபாநாயகர் பதவி அல்லது அமைச்சர் பதவிகள் மீது ஆர்வம் காட்டாமல், நாட்டைக் காப்பாற்றுவதற்காக மாத்திரம் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு சகல அரசியல் தரப்புக்களுக்கும் நல்லிணக்கத்துடன் அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.

பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு!
அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பலரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபை தேர்தலின் போது, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்துக்கு சொந்தமான 7.8 மில்லியன் ரூபாய் நிதியை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக முறைகேடாகப் பயன்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.Beaches & Islands
இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் அதன் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில், பொதுச் சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டத்தின் கீழ் இந்த நபர்கள் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று மனுவொன்றின் ஊடாக நீதிமன்றத்துக்கு அறிவித்ததை அடுத்தே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


