Our Feeds



Tuesday, June 16, 2026

Zameera

இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு


 இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) இன்று முற்பகல் (16) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.



தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) 2026–2030 என்பது, நாட்டின் ஏற்றுமதித் துறையை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சியை அடைதல் ஆகிய நோக்கங்களுடன், 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கத்தின் கொள்கை வழிகாட்டுதலுக்கு இணங்க வகுக்கப்பட்ட ஒரு முக்கிய தேசியத் திட்டமாகும்.



கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டுதல் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (EDB) தலைமையின் கீழ், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) கொள்கை அடிப்படையிலான கடன் (PBL) திட்டம் வழங்கிய தொழில்நுட்ப உதவியுடனும் இந்த மூலோபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், முக்கிய அரசாங்க நிறுவனங்கள், தனியார் துறை பங்குதாரர்கள் மற்றும் அபிவிருத்தி பங்காளிகளுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட விரிவான கலந்தாய்வு செயல்முறையின் விளைவாகும்.



இலங்கையின் ஏற்றுமதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் மேம்படுத்துவதற்குமான உத்தியோகபூர்வ மூலோபாயக் கட்டமைப்பாக இத்திட்டத்தை (2026-2030) அங்கீகரிப்பதற்காக, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு, 2026 மே 4 ஆம் திகதி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. இத்திட்டமானது அரசாங்க நிறுவனங்கள், தனியார் துறை வல்லுநர்கள் மற்றும் சர்வதேச அபிவிருத்திப் பங்காளர்களின் பொதுவான இணக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது.



'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இலங்கையின் ஏற்றுமதிப் போட்டித்திறனை மேம்படுத்தவும், 2030-ஆம் ஆண்டிற்குள் 36 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாய் இலக்கை அடையவும் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.



இலங்கையை பிராந்திய மற்றும் உலகளாவிய சந்தைகளுக்குச் சேவை வழங்கும் போட்டித்தன்மைமிக்க விநியோகச் சங்கிலி (Logistics) மற்றும் அறிவு சார்ந்த ஏற்றுமதி மையமாக மாற்றுவதே இதன் முதன்மையான தொலைநோக்காகும். இந்த மூலோபாயத் திட்டம், 'கிடைமட்டத் துறைகள்' (Horizontals) மற்றும் 'முன்னுரிமைத் துறைகள்' (Verticals) ஆகிய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இரண்டு முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டதுடன், இதன் மூலம் இலங்கையின் ஏற்றுமதிப் போட்டித்தன்மையை வலுப்படுத்துவதற்கும், பன்முகப்படுத்துவதற்கும் மற்றும் நிலையான வளர்ச்சிக்கும் தேவையான அடித்தளம் அமைக்கப்படுகிறது.



அனைத்து முன்னுரிமைத் துறைகளின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் ஆதரவளிப்பதற்குத் தேவையான அடித்தளத்தை வழங்கும் கிடைமட்டத் துறைகளுக்குள் (Horizontals),வர்த்தகச் சங்கிலி (Logistics) மற்றும் ஒருங்கிணைந்த மைய செயல்பாடுகள், வர்த்தக வசதிகளை வழங்குதல், வர்த்தக நிதி மற்றும் வணிக மற்றும் முதலீட்டுச் சூழல்களின் சீர்திருத்தங்கள், வர்த்தக ஊக்குவிப்பு மற்றும் சந்தை உறவுகள், தர முகாமைத்துவம், தரநிலைகள், சூழல், சமூகம் மற்றும் ஆளுமை (ESG) திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கங்கள் ஆகியவை அடங்குகின்றன.



ஏற்றுமதி பன்முகப்படுத்தல் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தியை அதிகரித்தல், உலகளாவிய சந்தையில் இலங்கையை மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக நிலைநிறுத்துதல் ஆகியவற்றிற்காக மோட்டார் வாகன உதிரிபாகங்கள், கனிம அடிப்படையிலான தொழிற்துறைகள், இறப்பர் சார்ந்த கைத்தொழில்கள், கடல்சார் கைத்தொழில்கள் (படகு மற்றும் கப்பல் தயாரித்தல் உட்பட), மசாலாப் பொருட்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட பொருட்கள், டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் சேவைகள், மின் மற்றும் மின்னணு உதிரிப்பாகங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பானங்கள் ஆகிய எட்டு (08) முன்னுரிமை ஏற்றுமதித் துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.



இந்த தேசியத் திட்டத்தைத் தயாரிப்பதில் அரச நிறுவனங்கள், தனியார் துறை, சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் உட்பட 300-க்கும் மேற்பட்ட தரப்பினரின் பங்களிப்பு பெறப்பட்டுள்ளது. 2025 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் 2026 ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்ட செயலமர்வுகள் மூலம் இதற்கான பரந்த பொதுவான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.



வலுவான நிர்வாக மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பின் ஆதரவுடன் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், உள்நாட்டு உற்பத்திகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும், நாட்டின் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டமானது, இலங்கை பொருளாதாரத்தின் புதிய முன்னோடியாக எதிர்காலத்தில் செயல்படும். 

 

Zameera

14 நாட்களில் 54,465 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை


 ஜூன் மாதத்தின் முதல் 14 நாட்களுக்குள் 54,465 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்டுள்ள புதிய தரவுகளின்படி, இக்காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து மட்டும் 21,839 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மொத்த வருகையாளர்கள் எண்ணிக்கையில் 42% ஆகும்.

மேலும், இந்தக் காலகட்டத்தில் சீனாவிலிருந்து 3,503 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,160 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 3,105 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

மேலும், 2026 ஜனவரி 01 முதல் ஜூன் 14 வரையிலான காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் மொத்த வருகை 1,076,487 எனப் பதிவாகியுள்ளது.

இவர்களில், இந்தியாவிலிருந்து 272,099 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 76,686 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 102,253 பேரும் வந்துள்ளனர் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.

SHAHNI RAMEES

இராஜாங்கனை சத்தாரதன தேரரைத் தாக்கி கொள்ளை; சந்தேகநபர் கைது!

 


அநுராதபுரம் ராஜாங்கனை பகுதியில் வசிக்கும்

SHAHNI RAMEES

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு வெள்ளிக்கிழமை விஜயம்!

 



செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட

SHAHNI RAMEES

சலே செய்ய வேண்டிய சிறந்த காரியம் இதுதான்!

 


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலால்

Zameera

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


 சீனாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள கிங்ஹாய் மாகாணத்தின் ஹைசி மாவட்டத்தில் 6.3 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

சீன நிலநடுக்க நெட்வொர்க் மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கம் தரைமட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று மாலை 5:06 மணியளவில் (பெய்ஜிங் நேரம்) ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் அல்லது சொத்து சேதம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Zameera

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டறிந்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சமூக நீதிக் கட்சி, சமூக அமைப்புகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்த அமைதி ஆர்ப்பாட்டம் இன்று (16) நண்பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் அர்க்கம் முனீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

 

Zameera

யோஷிதவின் மனு : ஜூலை 3ஆம் திகதி தீர்ப்பு


 பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், 'சதித்திட்டம்' என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி யோஷித ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நிறைவடைந்துள்ளதுடன், அதன் உத்தரவை ஜூலை மாதம் 03 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 


இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரான யோஷித ராஜபக்ஷ சார்பில் சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன், சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார சமர்ப்பணங்களை முன்வைத்தார். 


இதனையடுத்து, விசாரணைகளை நிறைவு செய்த அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Zameera

PTA கீழ் தன்னைக் கைது செய்ய கூடாது! - கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு!


 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைதுசெய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், பொலிஸ் மா அதிபர் (IGP), குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) மாதவ குணவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர் .

Zameera

மேன்முறையீட்டு நீதிமன்றில் யோஷித ராஜபக்ஷ ஆஜர்!


 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இன்றைய தினம் 16ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.


பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி யோஷித ராஜபக்ஷவினால் மறுஆய்வு மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 


இந்த மனு இன்றைய தினம் (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையிலேயே அவர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.


அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


முன்னதாக இந்த மனு பரிசீலிக்கப்பட்ட போது யோஷித ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் நீதிமன்றத்தில் சில விடயங்களை முன்வைத்திருந்தார்.


இந்த வழக்கில் எனது கட்சிக்காரருடன் டெய்சி ஃபொரஸ்ட் என்ற பெண்ணும் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்தார். எனினும், பின்னர் டெய்சி ஃபொரஸ்ட் என்ற பெண் சட்டமா அதிபரால் விடுவிக்கப்பட்டார். அவ்வாறானதொரு பின்னணியில், எனது கட்சிக்காரருக்கு எதிராக மாத்திரம் சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது சட்டத்திற்கு முரணானது.



எனினும், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் வாதாடுகையில், ஒரு பிரதிவாதிக்கு எதிராக இருந்தாலும் சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என வலியுறுத்தினார்.


அதற்கமைய, இந்த சட்டப் பிரச்சினைத் தொடர்பாக இன்றைய தினம் முழுமையான விசாரணை நடத்தப்படும் என மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

Zameera

ஜூன் 20 முதல் ஆசனப்பட்டி கட்டாயம்


 எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஆசனப்பட்டி சட்டம் அமுல்படுத்தப்படும் என தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. 


நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் என அதன் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார். 


வாகனங்களின் முன்பக்கத்தில் மாத்திரமன்றி, பின்பக்க ஆசனங்களில் பயணிக்கும் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவதைக் கட்டாயமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. 


இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சலுகைக்காலம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்தச் சலுகைக்காலம் எதிர்வரும் 19ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. 


இதற்கமைய, ஜூன் மாதம் 20ஆம் திகதி முதல் இந்தச் சட்டம் கட்டாயமாக அமுல்படுத்தப்படும் என தேசிய வீதி பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Zameera

அமெரிக்க B-52 போர் விமானம் விபத்து: 8 பேர் பலி




 லொஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கில் அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் அமெரிக்க இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 


அமெரிக்க நேரப்படி காலை 11:20 மணி அளவில் எட்வர்ட்ஸ் விமான தளத்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அமெரிக்க விமானப் படையின் B-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் (Stratofortress) ரக விமானம் விபத்துக்குள்ளானது மேலும் தெரிவிக்கப்படுகின்றது. 


அவசரக்கால மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 


இந்த அசம்பாவிதத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


B-52 என்பது 1950 கள் முதல் அமெரிக்க விமானப்படையில் சேவையில் உள்ள நீண்ட தூர உத்திசார் குண்டுவீச்சு விமானமாகும். 8,800 மைல்கள் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த விமானம், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. 


வியட்நாம், வளைகுடாப் பகுதி, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் மிகச் சமீபத்தில் ஈரான் ஆகிய இடங்களில் நடந்த மோதல்கள் உட்பட பல இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா இந்த ரக குண்டுவீச்சு விமானத்தைப் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Zameera

சுரேஷ் சலே விவகாரம்: சிஐடி அதிகாரிகளிடம் தொடரும் விசாரணை


 தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 


இது தொடர்பாக இன்றைய தினமும் (16) குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்படும் என அந்த ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். 


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலே பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அவருடைய உறவினர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அண்மையில் முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. 


அந்தப் முறைப்பாட்டின் அடிப்படையில், சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடம் குறித்து விசேட பரிசோதனை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சாதாரண சிறைக்கூடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்தச் சிறைக்கூடத்திற்குள் முறையான காற்றோட்டம் இல்லாதது உள்ளிட்ட பல பொதுவான அடிப்படைக் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 


இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. 


சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடத்திற்கு அருகில் இருந்த ஏனைய கைதிகளிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. 


இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் மேலும் வாக்குமூலங்களைப் பெறவுள்ளதுடன், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவிற்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கிறது.