
Saturday, May 2, 2026

நாட்டின் பல மாகாணங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள்
இடியுடன் கூடிய மழையின் போது மரங்களுக்கு அடியில் நிற்காமல், பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் தங்கியிருங்கள்.
நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர் நிலைகள் போன்ற திறந்தவெளிகளில் இருப்பதைத் தவிர்க்கவும்.
இடியுடன் கூடிய நேரங்களில் கம்பி இணைப்புகளைக் கொண்ட தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
சைக்கிள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
வீழ்ந்து கிடக்கக்கூடிய மரங்கள் மற்றும் மின்சாரக் கம்பிகள் குறித்து அவதானமாக இருக்கவும்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் தோல்வி : சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க அழைப்பு – சுரேன் ராகவன்
அரசாங்கத்தின் 18 மாத ஆட்சியில் நாட்டின் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் தோல்வியடைந்துள்ளது. அதனால் சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க அனைவரும் ஒன்றுதிறளுமாறு அழைப்பு விடுக்கிறோம் என கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திர கட்சியி்ன் மேதின கூட்டம் வெள்ளிக்கிழமை (1) பொரளை கெம்பல் மைதானத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கழிந்தும் மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற தவறி இருக்கிறது. மக்கள் இவர்கள் மீது நம்பிக்கை வைத்தே 159 உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு பெற்றுக்கொடுத்தார்கள். அதனால் அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிியை நிறைவேற்ற முடியாது என்றால் ஆட்சியை கைவிட்டு வீட்டுக்கு செல்லுமாறு அநுரகுமாரவுக்கும் ஹரினிக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று மக்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. ஆனால் வரிகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய எதுவும் இதுவரை நாட்டுக்கு வரவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண மாகாணசபை தேர்தலை இன்னும் ஏன் நடத்தாமல் இருக்கிறீர்கள். தேர்தலை நடத்தினால் அநுரகுமாரவுக்கும் ஹரினிக்கும் வீட்டுக்கு செல்லவேண்டிவரும். அதனலே தேர்தலை நடத்தாமல் இருக்கிறார்கள்.
மேலும் 18 மாத ஆட்சியில் நாட்டின் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் தோல்வியடைந்துள்ளது. அதனால் சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் அனைவரும் ஒன்றுதிறளுமாறு அழைப்பு விடுக்கிறோம் என்றார்.

2009 சம்பவங்கள் காலமாற்றத்தில் மறக்கடிக்க ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை; முன்னாள் ஜனாதிபதிகளின் சொத்துகளின் விபரங்கள் வெளிப்படுத்த வேண்டும் - ஜனாதிபதி
2009 ஆம் ஆண்டுகால படுகொலைகள் மற்றும் சர்ச்சைக்குரிய சம்பவங்களை காலமாற்றத்தில் மறக்கடிக்க ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை. 2029 ஆம் ஆண்டு ஆட்சி பற்றிபேசும் ராஜபக்ஷர்கள் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள தமது சகோதரரை நாட்டுக்கு வர சொல்ல வேண்டும். சிவப்பு பிடியாணை பிறப்பித்தாவது நாட்டுக்கு அழைத்து வருவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களின் சகோதரர்கள், பிள்ளைகள், உறவினர்கள் குறுகிய காலத்தில் திரட்டிய சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்.இல்லையேல் குறித்த சொத்துக்கள் நீதிமன்றத்தின் ஊடாக அரசுடமையாக்கப்படும் எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
மஹரக பகுதியில் வெள்ளிக்கிழமை (1) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
2022 ஆம் ஆண்டு வங்குரோத்து நிலையடைந்த நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம். அன்று நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்கள் இன்று பொருளாதார மீட்சி பற்றி கருத்து தெரிவிக்கிறார்கள். ஒருசில ஊடகங்கள் அவற்றை பெரிதுப்படுத்துகின்றன.
வங்குரோத்து நிலையடைந்த எதிர்க்கட்சியினர் இன்று ஒன்றுக்கூடி அரசாங்கத்துக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார்கள். ஜி.எல்.பீரிஸின் வீட்டின் ஒன்றிணைந்து பேசுகிறார்கள். அதன் பின்னர் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்கள். வேலையில்லாத காரணத்தால் ஏதாவது பேசட்டும், கலந்துரையாடட்டும்.இவர்களின் ஒன்றுக்கூடல்கள் ஒருபோதும் அரசாங்கத்துக்கு சவாலாக அமையாது.
அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் ஈடுபடலாம். ஆனால் அது மக்கள் போராட்டமாக அமையாது. ஜனாதிபதி செயலகம் முன்பாக வாருங்கள் போராட்டத்தில் ஈடுபடுங்கள். அந்த போராட்டங்கள் மக்களுக்கு இடையூறாக அமைய ஒருபோதும் இடமளிக்க முடியாது.
கடந்த கால ஊழல்கள் குறித்து விரைவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். நிலக்கரி கொள்வனவு குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை ஆராய்வற்கு விசேட ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.
2009 ஆம் ஆண்டுகால படுகொலைகள் மற்றும் சர்ச்சைக்குரிய சம்பவங்களை காலமாற்றத்தில் மறக்கடிக்க ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை. 2029 ஆம் ஆண்டு ஆட்சி பற்றிபேசும் ராஜபக்ஷர்கள் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள தமது சகோதரரை நாட்டுக்கு வர சொல்ல வேண்டும். சிவப்பு பிடியாணை பிறப்பித்தாவது நாட்டுக்கு அழைத்து வருவேன்.
முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களின் சகோதரர்கள், பிள்ளைகள், உறவினர்கள் குறுகிய காலத்தில் திரட்டிய சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்.இல்லையேல் குறித்த சொத்துக்கள் நீதிமன்றத்தின் ஊடாக அரசுடமையாக்கப்படும். சட்டத்தின் ஊடாகவே பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றார்.

அரசுக்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டு - சுமந்திரன்
தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறி இன்னமும் இரண்டு வருடங்கள் கூடப் பூர்த்தியடையாத நிலையில், அரசாங்கத்தின் உறுப்பினர்கள் பலருக்கு எதிராக ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன. இந்த உண்மைகளை எமது மக்கள் புரிந்துகொண்டமையினாலேயே திசைகாட்டி வீட்டின் பக்கம் திரும்பியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக எதிர்வருங்காலங்களில் தேசிய மக்கள் சக்தி வட, கிழக்கைத் தொடுவதற்கு இடமளிக்கவே மாட்டோம் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழரசுக்கட்சியினால் வெள்ளிக்கிழமை (1) பி.ப 3.30 மணிக்கு மாங்குளம் பஸ் நிலையத்துக்கு அருகாமையில் 'தன்னாட்சி அதிகாரத்துக்காகவும், வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் ஒன்றிணைவோம்' எனும் மகுடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேதினக் கூட்டத்தில் உரையாற்றியபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
ஆரம்பத்தில் ஒரு ஆயுதக்குழுவாக இருந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜனதா விமுக்தி பெரமுன), பின்னர் பொதுமக்களின் உரிமைகளை முன்னிறுத்திக் குரலெழுப்பும் ஒரு தொழிற்சங்கமாகத் தம்மைக் காண்பித்துவந்த நிலையில், கடந்த ஜனாதிபதித்தேர்தல் மற்றும் பாராளுமன்றத்தேர்தலில் அக்கட்சி பொதுமக்களின் வலுவான ஆதரவைப்பெற்று வெற்றியீட்டியது. அதற்கு முன்னைய காலப்பகுதியில் நாட்டை ஆட்சிசெய்த அரசாங்கங்கள் ஊழல் மோசடிகளிலும், ஏனைய மீறல்களிலும் ஈடுபட்டன அல்லது அவற்றுக்குத் துணையாக இருந்தன என்பதை மக்கள் புரிந்துகொண்டமையே அந்த மாற்றத்துக்கான பிரதான காரணமாக இருந்தது.
அதன்படி எவ்வித ஆட்சி நிர்வாகப் பின்புலமும் அற்ற தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறி இன்னமும் இரண்டு வருடங்கள் கூடப் பூர்த்தியடையாத நிலையில், அரசாங்கத்தின் உறுப்பினர்கள் பலருக்கு எதிராக ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன.
முன்னாள் சபாநாயகரின் 'கலாநிதி' பட்ட சர்ச்சை, அதனைத்தொடர்ந்து பதவியிலிருந்த சபாநாயகருக்கு ஆதரவாக முன்னிலையாக முடியாது என சட்டமா அதிபர் மறுத்தமை, நிலக்கரி ஊழல், அவுஸ்திரேலிய கடன் வழங்கல் தரப்புக்கு திறைசேரியின் ஊடாகச் செலுத்திய நிதி மாயம், அமெரிக்க தபால் சேவைப் பிரிவுக்கு செலுத்திய நிதி மாயம் என்பன உள்ளடங்கலாக அடுத்தடுத்துப் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த இரு தேர்தல்களில் எமது மக்களில் குறித்த எண்ணிக்கையானோர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஆதரவளித்திருந்த போதிலும், அடுத்த ஆறு மாதகாலத்துக்குள் அவர்கள் அரசாங்கம் குறித்த உண்மையைப் புரிந்துகொண்டதன் காரணமாகவே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையான உள்ளுராட்சி சபைகள் எமது வசமாகின.
இவ்வாறானதொரு பின்னணியில், தற்போது 'இது சரிப்பட்டு வராது' என்பதே நாம் அரசாங்கத்துக்குக் கூறுகின்ற செய்தியாகும். ஆட்சிபீடமேறி மிகக்குறுகிய காலப்பகுதியிலேயே பெருந்தொகைப் பெறுமதியில் நிகழும் இத்தகைய ஊழல்கள் எதிர்வருங்காலங்களில் மேலும் தீவிரமடையும். இது உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும். இந்த உண்மைகளை மக்கள் புரிந்து கொண்டமையினாலேயே ஏற்கனவே திசைகாட்டி வீட்டின் பக்கம் திரும்பியிருக்கிறது. எதிர்வருங்காலங்களில் தேசிய மக்கள் சக்தி வட, கிழக்கைத் தொடுவதற்கு இடமளிக்கமாட்டோம் என்பதே இந்த மேதினத்தில் நாம் அரசாங்கத்துக்குக் கூறும் செய்தியாகும் என்றார்.

ஈரானின் முன்மொழிவு குறித்து டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி
சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்கு ஈரான் சில முன்னேற்றங்களைக் காட்டியுள்ள போதிலும், அவர்கள் ஒருபோதும் அந்த இலக்கை அடைவார்களா என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் அரசாங்கம் பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவிற்கு புதிய முன்மொழிவுத் திட்டமொன்றை அனுப்பியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், அந்த முன்மொழிவுகள் குறித்த விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நேரடிப் பேச்சுவார்த்தை குறித்துக் கருத்துத் தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தான் மீதும் அதன் தலைவர்கள் மீதும் தான் மிகுந்த மதிப்புக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவிற்கு ஈரான் புதிய முன்மொழிவு
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய முன்மொழிவு ஒன்றை பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் ஊடாக அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
தெஹ்ரானுக்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தென்பட்ட பின்னணியிலேயே இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி உடன்பாடு எட்டப்பட்ட போதிலும், மிகவும் நிலையான அமைதி உடன்படிக்கையை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மரத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி
காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த 64 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த நபர் கறிவேப்பிலை பறிப்பதற்கு சென்று மரத்தில் ஏறியபோது தவறி கீழே விழுந்து மயக்கமுற்றுள்ளார். இதன்போது வீதியால் சென்றவர்கள் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பின்னர் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொ
-யாழ். நிருபர் கஜிந்தன்-

எரிபொருள் விலையை மேலும் சிறிய அளவுகளில் அதிகரிக்க வேண்டியிருக்கும் - ஜனாதிபதி
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட மே தினப் பேரணையில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “வலுசக்தி துறையில் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் விலை பாரிய அளவில் அதிகரித்து வருகின்றது. இன்றும் ஒரு லீற்றர் டீசல் 382 ரூபாவாக உள்ளது.
அரசாங்கம் விற்பனை செய்யும் ஒவ்வொரு லீற்றர் எரிபொருளுக்கும் எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் 100 ரூபா மானியம் வழங்குகின்றது.
இன்றும் நீங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பெறும் ஒரு லீற்றர் டீசலின் விலை 482 ரூபாவாகும்.
ஆனால் நீங்கள் அதனை 382 ரூபாவிற்கே பெறுகிறீர்கள். அரசாங்கம் இதற்காக 100 ரூபாயை வழங்குகிறது. இது மக்களைக் கவனிக்கும் ஒரு அரசாங்கம்.
எரிபொருள் விலை இன்னும் அதிகரித்து வருகின்றது. இந்நாட்டு மக்களுக்குத் தேவையான எரிபொருள் மானியத்தை வழங்குவதற்காக நாங்கள் 6,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளோம். உழைக்கும் மக்களின் அரசாங்கங்கள் அவ்வாறுதான் இருக்கும்.
எனினும், விலை மேலும் அதிகரிக்கின்றது. எரிபொருள் விலையை மேலும் சிறிய அளவுகளில் அதிகரிக்க வேண்டியிருக்கும்.
நாம் அதிகபட்சமாக மானியங்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வலுசக்தி துறையில் நெருக்கடி நிலவுகிறது. நிலக்கரி விலை அதிகரித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் ஓரளவுக்குக் குறைந்துள்ளது. அதன் காரணமாக சில விலை அதிகரிப்புகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
எவ்வாறாயினும், மின்சார நுகர்வோரில் 96 சதவீதமானோருக்கு எந்தவித விலை அதிகரிப்பும் இன்றி மானியம் வழங்கத் தீர்மானித்துள்ளோம்.
தற்காக 1,500 கோடி ரூபாயைச் செலவிடத் தீர்மானித்துள்ளோம்.” என்றார்.

ஆட்சி மாற்றத்திற்கான ஆரம்பம்: மே தினக் கூட்டம் - விஜேதாச ராஜபக்ஷ
நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான அடித்தளமே இந்த மேதின கூட்டம். எதிர்கால அரசியல் மாற்றத்துக்கான ஆரம்பமாகும். அதனால் சவால்களை எதிர்கொண்டு சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்நை ஏற்படுத்தும்வரை நாங்கள் ஓயப்போவதில்லை என சிறிலங்கா சுதந்திர கட்சின் சிரேஷ்ட உபதலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திர கட்சியி்ன் மேதின கூட்டம் வெள்ளிக்கிழமை (1) பொரளை கெம்பல் மைதானத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
140ஆவது சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படும் நிலையில் இலங்கையில் 70ஆவது மேதின நிகழ்வை கொண்டாடிவருகிறோம். மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினம் என்பதால், அந்த தினத்தை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியது எமது கட்சியின் தலைவர் எஸ்.டபிள்யூஆர்.டி பண்டாரநாயக்கவாகும். சிறிலங்கா சுதந்திர கட்சி தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காக அமைக்கப்பட்ட கட்சியாகும். அதனால் இந்த கட்சியை யாராலும் விழுத்த முடியாது. விழும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் எழுவோம்
1978ல் ஜேஆர். நிறைவேற்று ஜனாதிபதி ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தியதும் விகிதாரசா தேர்தல் முறையை கொண்டுவந்ததும் சிறிலங்கா சுதந்திர கட்சியை வீழ்த்துவதற்காகும். இறுதியாக சிறிமா அம்மையாரின் குடியுரிமையை இல்லாமல் செய்து சுதந்திர கட்சியை அழிக்க முயற்சித்தார்கள். ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கட்சியின் பலமான ஆதரவாளர்களின் உறுதியே இதற்கு காரணமாகும்.
1994இல் சந்திரிகா குமாரதுங்க தலைமையில் ஏகாதிபத்திய அரசாங்கத்தை வீழ்த்தி, ஜனாதிபதி பதவியை பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் 32 வருடங்களாக அன்றுமுதல் இன்றுவரை எந்த அரசியல் கட்சிக்கும் தனித்து ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஒன்றை சரியாக வெற்றிகொள்ள முடியவில்லை.
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பொய் பிரசாரங்களால் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். இந்த அரசாங்கத்தின் வாக்குறுதிகள் மீது மக்கள் பாரியளவில் நம்பினார்கள். தற்போது ஏமாற்றமடைந்துள்ள மக்கள் எந்த பக்கம் செல்வதென அறியாமல் இருக்கும் நிலையில், இவ்வாறான நேரத்திலே சிறிலங்கா சுதந்திர கட்சி மக்களுக்கு தேவைப்படுகிறது. அதேநேரம் கெம்பல் மைதானத்தில் கூடியிருக்கும் இது சாதாரண மேதின கூட்டம் என நினைக்க வேண்டாம்.இது எதிர்கால அரசியல் மாற்றத்துக்கான ஆரம்பமாகும்.
இந்த கூட்டம் பொது மக்களுக்கான வரலாற்று கூட்டமாகும். இந்த கூட்டத்துடன் சுதந்திர கட்சியின் கிளைக் காரியாலயங்கள் மாவட்ட காரியாலயங்கள் அமைக்கப்படும், இவ்வாறு சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்கும்வரை நாங்கள் ஓயப்போவதில்லை. இதனை நாங்கள் உறுதியாக தெரிவித்திருக்கிறோம். ஏனெனில் எங்களுக்கு அரசாங்கம் அமைத்த அனுவமும் இருக்கிறது. அரசாங்கங்களை வீழ்த்திய அனுபவமும் இருக்கிறது.
அன்று தொழிலாளர்கள் 8 மணிநேர வேலை கோரியே போராட்டம் மேற்கொண்டனர். ஆனால் இன்று எமது மக்கள் வாழ்வதற்கான உரிமையை கோரியே போராட்டம் மேற்கொள்கிறார்கள். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 18 மாதங்களில் ஒருவட்சத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன.சாதாரண வியாபாரிக்கு வியாபாரம் செய்ய முடியவில்லை. சுயதொழில் செய்பவர்களுக்கு அவர்களின் தொழிலை செய்ய முடியாமல் இருக்கிறது. விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய உரம் இல்லை. இதற்கு பொறுப்புக்கூற நாட்டில் ஆட்சியாளர்கள் யாரும் இல்லை.
நாட்டு மக்களிடம் அறவிடப்படும் வரிகள் திறைசேரியில் சேர்க்கப்பட்டுவரும் நிலையில் தற்போது திறைசேரியில் இருந்த 2.5 மில்லியன் டொலர் காணாமல்போயுள்ளது. வரலாற்றில் ஒருபோதும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றதில்லை. கடந்த கால அரசாங்கங்களில் பல்வேறு திருடர்கள் இருந்தார்கள். ஆனால் யாரும் திறைசேரியில் இருந்த பணத்தை கொள்ளையடிக்கவில்லை. ஊழல் மோசடி தொடர்பில் கதைக்கின்றனர். ஆனால் ஊழல் மாேசடிக்கு எதிரான கட்சி சிறிலங்கா சுதந்திர கட்சியாகும். அதனால் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொண்டு, நாட்டை முன்னேற்றும் பாரிய சவால் ஒன்று எங்களுக்கு இருக்கிறது. அதனால் இந்த சவால்களை வெற்றிகொள்ளும் சக்தி எங்களுக்கு இருக்கிறது.
எனவே இந்த அரசாங்கம் மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வில்லை. அதேநேரம் கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து, கல்வித்துறையை வீழ்ச்சியடையச் செய்திருக்கிறது. அதனால் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் நாங்கள் ஒன்றுபட்டு இந்த மாற்றத்தை ஏற்படுத்த அணிதிறளவேண்டும் என்றார்.
Friday, May 1, 2026

அடுத்த ஜனாதிபதி திலித் ஜயவீர - திலும் அமுனுகம தெரிவிப்பு
நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக திலித் ஜயவீரவே நிச்சயமாக தெரிவு செய்யப்படுவார் என்று தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
சர்வஜன அதிகார கட்சியின் மே தினப் பேரணியில் வெள்ளிக்கிழமை (01) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் மஹிந்த ராஜபக்ஷவின் சீடர் என்பது அனைவருக்கும் தெரியும். மஹிந்த ராஜபக்ஷவிடம் காணப்பட்ட அதே தேசியவாதக் கொள்கைகள் இன்று திலித் ஜயவீரவிடம் மட்டுமே இருக்கின்றது. இந்த தேசியவாதத்தை மதிக்கின்ற ஒரு தலைவரை வெற்றிபெறச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
தற்போது எந்தவொரு அரசியல் கட்சியிலும் இத்தகைய தேசியவாதத் தலைமை இல்லை. அந்த தலைமைத்துவத்தை சர்வஜன அதிகார கட்சி மாத்திரமே கொண்டிருக்கிறது. மேலும் அடுத்ததாக அரச அதிகாரத்தை கைப்பற்றும் கட்சி சர்வஜன அதிகார அமைப்பாகும். அதன் மூலம் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக திலித் ஜயவீர பதவியேற்பார் என்பதை இந்த மே தினத்தில் உறுதியாக கூறுகின்றேன். அத்துடன் வெற்றிப் பெற முடியாது என்றால் தான் இத்தகைய பணிகளில் கைகோர்க்க போவதில்லை என்றார்.

களுத்துறை உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
களுத்துறை பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பொலிஸார் உள்ளிட்ட உரிய நிறுவனங்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு ஏற்பட்ட இந்தத் தீ விபத்தினால், வரி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் தரவுத் தொகுப்பிற்கு எந்தவித சேதமும் அல்லது பாதிப்பும் ஏற்படவில்லை என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் ருக் தேவி பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
தீ விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை விரைவாகச் சீர்செய்து, தொலைதூரத் தொடர்பாடல் ஊடாகத் தரவுத் தொகுப்பு இணைப்புகளை வழங்கவும், அலுவலக நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவரவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
அலுவலகம் வழமைக்குத் திரும்பும் வரை, களுத்துறை பிரதேச அலுவலகத்தில் அவசர சேவைகளைப் பெற எதிர்பார்க்கும் பொதுமக்கள், தமக்கு அருகிலுள்ள பிற பிரதேச அலுவலகங்கள் அல்லது தலைமை அலுவலகத்தின் ஊடாகத் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிக விலைக்கு அரிசி விற்பனை : வர்த்தகருக்கு அபராதம்
சந்தையில் கீரி சம்பா (Keeri Samba) அரிசியின் விலை ஒரு கிலோ 260 ரூபாய் என அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அம்பாறை பகுதியில் உள்ள ஒரு வர்த்தகர், சட்டத்தை மீறி 2 கிலோ அரிசியை 800 ரூபாய்க்கு (ஒரு கிலோ 400 ரூபாய்) விற்பனை செய்துள்ளார்.
அதிரடி காட்டிய அதிகாரிகள்:
நுகர்வோர் விவகார அதிகார சபையின் அம்பாறை மாவட்ட அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அவர்கள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் இந்த மோசடி கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக உடனடியாக அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு:
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட வர்த்தகர் தனது தவறை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து:
அபராதம்: வர்த்தகருக்கு 1,00,000 (ஒரு இலட்சம்) ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
எச்சரிக்கை: நுகர்வோரைச் சுரண்டும் நோக்கில் அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்தால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தத் தீர்ப்பின் மூலம் நீதிமன்று எச்சரித்துள்ளது.