நிலக்கரி கொள்வனவில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை எனவும், எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்திலோ அல்லது கோப் (COPE) குழுவிலோ அவர்களால் இதுவரை நிரூபிக்க முடியவில்லையெனவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை வலியுறுத்தினார்.
நிலக்கரி மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் கூச்சலிட்டாலும், இது குறித்து நாடாளுமன்றத்தில் பல மணிநேரம் விவாதிக்கப்பட்டுள்ளதுடன், கோப் குழுவில் ஆறு மணித்தியாலங்களுக்கும் மேலாக இது பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், விடயப்பொறுப்பு அமைச்சருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது 22 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாற்றிய போதிலும், மோசடி நடந்துள்ளதை எவராலும் உறுதியாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மக்களிடையே நிலவும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கும், இது தொடர்பாக முறையான சட்டபூர்வ விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் ஜனாதிபதி அணுர குமார திசாநாயக்க அவர்களால் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது வெளிப்படுத்தினார்.
“தற்போது எதிர்க்கட்சியினரும் சரி, மக்களும் சரி, தங்களிடம் சாட்சியங்கள் இருந்தால் – அவை எழுத்துப்பூர்வமானதாகவோ, வாய்மொழியானதாகவோ அல்லது மின்னணு சாட்சியங்களாகவோ இருந்தாலும் சரி – இந்த ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து மோசடி நடந்ததா இல்லையா என்பதை நிரூபிக்க முடியும்” என்று அவர் சவால் விடுத்தார்.
இந்த விசாரணையானது தற்போதைய அரசாங்கத்தின் காலப்பகுதிக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதன்படி, 2009ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அனைத்து நிலக்கரி கொள்வனவு செயல்முறைகள் மற்றும் டெண்டர்கள் குறித்து முழுமையான விசாரணை முன்னெடுக்கப்படும்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இதுவரை கொண்டுவரப்பட்டுள்ள நிலக்கரி கப்பல்கள், ஒட்டுமொத்தமான 460க்கும் மேற்பட்ட கப்பல்களில் மிகச்சிறிய அளவே எனவும், 40க்கும் மேற்பட்ட கொள்வனவு சந்தர்ப்பங்களில் இந்த அரசாங்கத்திற்கு உரியது ஒன்று மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விசாரணை நடவடிக்கைகளைச் சரியாக முன்னெடுத்துச் செல்வதற்கும், அதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கும் விடயப்பொறுப்பு அமைச்சரும் செயலாளரும் தமது பதவிகளிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளதாகவும் சூரியஆராச்சி தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் அறிக்கை முடிவுகளின்படி எவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதே தமது அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.