
Friday, July 17, 2026
Thursday, July 16, 2026

ஈரான் போர் தொடர்ந்து நீடிக்க இஸ்ரேல் சதி; அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு!
வாஷிங்டன் டி.சி.
ஈரானுடனான போர் தொடர வேண்டும் என இஸ்ரேல் அரசில் சிலர் விரும்புகின்றனர் என்று அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளது.
ஜே.டி. வான்ஸ் பேட்டி
இந்த சூழலில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், சமூக ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ஈரானுடன் நடந்து வரும் அமைதி பேச்சுவார்த்தையை தடுக்கும் வகையிலும், போர் ஆனது காலவரையின்றி தொடர்ந்து நீடிக்கவும் இஸ்ரேல் அரசில் உள்ள சிலர் விரும்புகின்றனர்.
சில குறிப்பிட்ட சக்திகள் அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படவும் செய்கின்றன என பகிரங்க குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார். அமெரிக்கர்களின் எண்ணங்களை போருக்கு ஆதரவாக திசை திருப்பும் வகையில், திரித்தும், மாற்றவும் முயற்சித்து வருகின்றனர்.
ஆன்லைனில் தாக்கம்
சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அது எங்களுக்கு தெரிகிறது. அதற்கு இஸ்ரேல் ரகசியமாக நிதியுதவி அளித்து வருகிறது என்றும் பேசியுள்ளார். இந்த நிதியை பெற்றுக்கொண்டு நேர்மையற்ற வகையில், சிலர், ஆன்லைன் வழியே என்னையே தாக்கி பேசி வருகின்றனர்.
ஆனால், அமெரிக்க மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதனையே நான் செய்ய போகிறேன். அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையிலேயே நான் செயல்பட போகிறேன் என்று கூறியுள்ளார். அந்த வகையில், ரூ.433 கோடிக்கும் கூடுதலாக நிதி செலவிடப்பட்டு, ஆன்லைனில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் தகவல்கள் பரப்பப்படுகின்றன என கூறப்படுகிறது.

நாடு திரும்பினார் பிரதமர்!
கட்டார் நாட்டின் முன்னாள் அமீரின் மறைவுக்கு இலங்கை அரசாங்கத்தினதும் ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதற்காக அந்நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று (16) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக மீண்டும் நாட்டை வந்தடைந்தார்.
கட்டாரின் தோஹாவில் அமைந்துள்ள லுஸைல் (Lusail) அரண்மனைக்குச் சென்ற பிரதமர், அந்நாட்டின் தற்போதைய அமீரான ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியைச் சந்தித்து தனது ஆழ்ந்த அனுதாபத்தைப் பகிர்ந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து அல் வஜ்பா (Al Wajbah) அரண்மனைக்குச் சென்ற பிரதமர், கட்டார் அமீரின் தாயாரும் கட்டார் அறக்கட்டளையின் தலைவருமான ஷேய்க்கா மோசா பின்ட் நாசரிடமும் இலங்கை அரசாங்கத்தின் இரங்கலைத் தெரிவித்தார்.
இதுதவிர, மறைந்த முன்னாள் அமீரின் புதல்விகளான இளவரசி ஷேய்க்கா அல் மயாசா பின்ட் ஹமத் அல் தானி, இளவரசி ஷேய்க்கா ஹிந்த் பின்ட் ஹமத் அல் தானி மற்றும் அரச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களிடமும் அவர் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கட்டார் நாட்டின் சமூக மேம்பாடு மற்றும் குடும்ப விவகாரங்கள் அமைச்சர் புதைனா பின்ட் அலி அல் ஜபர் அல் நுஜைமியும் கலந்துகொண்டிருந்ததுடன், அவரிடமும் இலங்கை சார்பாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது இரங்கலைத் தெரிவித்தார்.









