
Thursday, April 30, 2026

எதிர்க்கட்சியின் சதிகளை தோற்கடிக்க நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் - சரோஜா சாவித்திரி போல்ராஜ்
எதிர்க்கட்சி தலைமையிலான தரப்பினர் அரசாங்கத்தைக் கவிழ்க்க மேற்கொள்ளும் சதி முயற்சிகளைத் தோற்கடிப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
உலகின் யுத்த நெருக்கடிக்கு மத்தியிலும் எரிபொருள் உட்பட தேசிய பொருளாதாரத்திற்கு சிறு அழுத்தம் கூட ஏற்படாத வகையில் அனைத்தையும் முகாமைத்துவம் செய்து அதன் பிரதிபலனை அரசாங்கம் மக்களுக்கு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மே தினக் கூட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்று நேற்றைய தினம் பெலவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இங்கு விளக்கமளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உழைக்கும் தொழிலாளர்களின் நலனில் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இம்முறை மே தினத்தில் பெண்களுக்கு பாரிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் மே தினக் கூட்டங்களில் தமிழ்,சிங்களம், முஸ்லிம், மலே என அனைத்து இன,மத பெண்களையும் இணைந்து கொள்ளுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
தற்போதைய அரசாங்கம் நாட்டைப் பொறுப்பேற்று ஒன்றரை வருட காலத்தில் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதுடன் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை கல்வி செயற்பாடுகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் இளைஞர் யுவதிகளிலிருந்து அனைத்து துறைகளிலும் பணிபுரியும் சகோதர சகோதரிகளின் பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மக்களின் அரசாங்கத்தை பாதுகாக்க மக்களின் தலையீட்டை உறுதிப்படுத்தி முன்னோக்கிச் செல்லும் வாய்ப்பை இம்முறை மே தினம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சரண குணவர்தனவிற்கு எதிரான ஊழல் வழக்குத் தீர்ப்பு ஒத்திவைப்பு
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளின் தீர்ப்பை மே மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்குகளின் தீர்ப்பு இன்றைய தினம் (30) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் அவர்களினால் அறிவிக்கப்படவிருந்தது.
எவ்வாறாயினும், இந்த வழக்குகளின் தீர்ப்பு மே மாதம் 26 ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
2006 ஆம் ஆண்டு தேசிய லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றியபோது, அந்தச் சபைக்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதில் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இந்த நான்கு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை
![]() |
நாட்டின் 11 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையானது இன்று (30) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு, குருநாகல் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேபோல் சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் 50 மி.மீ க்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தென் மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். அத்துடன் மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலை காணப்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள நிவேதனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சி
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 117,893 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இந்தியாவிலிருந்து 35,862 சுற்றுலாப் பயணிகளும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 9,585 சுற்றுலாப் பயணிகளும் அவுஸ்திரேலியாவிலிருந்து 9,142 பேரும் சீனாவிலிருந்து 8,543 பேரும் ரஷ்யாவிலிருந்து 6,172 பேரும் இலங்கைக்க வருகை தந்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பைச் சந்தித்த ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்கள்
நாசா நிறுவனத்தைச் சேர்ந்த ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர், கிறிஸ்டினா கோக் மற்றும் கனடிய விண்வெளி முகமையின் ஜெரமி ஹேன்சன் ஆகிய விண்வெளி வீரர்கள் நீல நிற சீருடை அணிந்து ஜனாதிபதியைச் சந்திக்க வந்திருந்தனர்.
விண்வெளி வீரர்களின் திறமையைப் பாராட்டிய ஜனாதிபதி ட்ரம்ப், "அவர்கள் இதை எப்படிச் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் இதைச் செய்ய விரும்பமாட்டேன், ஆனால் நமது நாட்டைப் பெருமைப்படுத்த இத்தகைய மனிதர்கள் தேவை" என்று கூறினார்.
இங்கு தனது முன்னுரிமைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் தொடர்பான இரகசியத் தகவல்களை வெளியிடத் தான் எதிர்பார்ப்பதாகவும், தனது ஆட்சிக் காலத்தில் மற்றுமொருவர் சந்திரனில் நடப்பதற்குச் சிறந்த வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
2027 ஆம் ஆண்டில் ஆர்ட்டெமிஸ் III (Artemis III) திட்டத்தைத் தொடங்குவதற்கும், 2028 ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு மனிதனைச் சந்திரனுக்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் உறுதிப்படுத்தினார். அத்துடன் நாசா தலைமையகத்தை வொஷிங்டன் டி.சி.யிலேயே வைத்திருப்பதற்கும் ஜனாதிபதி இதன்போது உடன்பட்டார்.






