‘‘அரசாங்கம் தேர்தலை நடத்தத் தயாராகவுள்ளதா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. நிறுவனங்களுக்கு பணம் செலவழித்து கருத்துக்கணிப்புகள் நடத்திக்கொண்டிருப்பதற்குப் பதிலாக மாகாண சபைத் தேர்தலை நடத்தியிருந்தால், ஜனாதிபதியை எத்தனை சதவீதம் மக்கள் ஆதரிக்கிறார்கள் அல்லது எதிர்க்கிறார்கள் என்பதைத் தெளிவாக அறிய முடியும். அதன் மூலம் மக்களின் உண்மையான விருப்பத்தையும் தெரிந்துகொள்ள முடியும்’’ என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று (29) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது,
‘‘அரசு இன்று மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது. எனவே எங்கள் கட்சி எந்த நேரத்திலும் எந்தத் தேர்தலுக்கும் தயாராக உள்ளது.
இந்த நாட்டின் மக்களின் விருப்பத்துக்கும் தொழில்முறை நிபுணர்களின் கருத்துகளுக்கும் குறிப்பாக சட்ட மா அதிபர், சட்டத்துறையில் உள்ளவர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம், ஆசிய சட்டத்தரணிகள் சங்கம், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மொத்தமாக நாட்டின் மக்களின் கருத்துகளுக்கும் எதிராக அரசாங்கம் தனது விருப்பப்படி அரசியலமைப்புத் திருத்தங்களை கொண்டு வந்து அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தால் அது தவறான எண்ணமாகும்.
வரலாற்றில் இவ்வாறான செயல்களை மேற்கொண்ட அரசுகள் எவ்வாறு முடிவுகளை சந்தித்தன என்பதை தற்போதைய அரசு கவனத்திற்கொள்ள வேண்டும். அரசு தனது கடமைகளைச் செய்யாதபோது, அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதபோது, அதிகாரத்தை பலவந்தமாகத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறது.
ஆனால், அது இன்று சாத்தியமில்லை. கடந்த காலத்தில் கதிர்காமம் எசல பெரஹராவின்போது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இன்றும் வாசனா யானை ராஜாவின் உடலில் அந்தக் குண்டுத் தாக்குதலின் காயங்கள் உள்ளன.
ஆனால், அன்றைய அரசு தேவையான பாதுகாப்பை வழங்கி கதிர்காமத் திருவிழாவை நடத்தி வைத்தது. அதைப்போலவே, தலதா மாளிகை மீதும் எல்.ரி.ரி.ஈயும் ஜே.வி.பியும் குண்டுத் தாக்குதல் நடத்தின. இருந்தபோதிலும் தலதா பெரஹரா நடைபெற்றது.
ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு காலத்துக்கு காலம் பல்வேறு சவால்கள் ஏற்படும். ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் அச்சுறுத்தலை அடிப்படையாகக் கொண்டு பெரஹரா நடைபெறுமா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியிருந்தால், அப்படியானால் அரசாங்கம் எதற்கு? எனவே அரசு பெரஹராவில் பங்கேற்கும் காவடி நடனக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், யானைகள், நிலமே (தலைமை அதிகாரி), வழிபாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.
இப்போது எந்தத் தேர்தலும் அறிவிக்கப்படவில்லை. அரசியலில் நாங்கள் மறைமுகமாக செயற்படுவதில்லை. எதிர்க்கட்சியுடன் பேச வேண்டியிருந்தால் வெளிப்படையாகவே பேசுகிறோம். மறைமுக அரசியலால் பாதிக்கப்பட்டவர்கள் நாங்களே. எங்கள் கட்சி உடைந்து பலவீனமானதற்கும் அந்த மறைமுக அரசியலே காரணம்.
எனவே, எங்களால் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் அது வெளிப்படையாகவே நடைபெறும். இரகசியமாக அல்ல. ஏனெனில் இறுதியில் அனைவரும் மக்களிடம் செல்ல வேண்டியவர்களே. மக்களின் தேவைகளையும் நாட்டின் நலனையும் அடிப்படையாகக் கொண்டு மட்டுமே நாங்கள் கூட்டணிகளை அமைப்போம். தனிநபர்களின் தேவைக்காக கூட்டணிகளை அமைக்க மாட்டோம்.
எங்களுக்கு யாருடனும் விசேடமாகப் பேச வேண்டிய அவசியமில்லை. எங்கள் கொள்கையை ஏற்றுக்கொள்பவர்கள், அதில் நம்பிக்கை வைப்பவர்கள், நாட்டுக்கு ஏற்ற அரசியல் திட்டம் எங்களிடம் உள்ளது என்று நம்புபவர்கள் எவராக இருந்தாலும் எங்களுடன் இணையலாம்.
கடந்த காலத்தில் பல காரணங்களால் எங்கள் கட்சியிலிருந்து சிலர் விலகினர். அதே நேரத்தில் புதிய குழுக்களும் எங்களுடன் இணைந்தனர். இவ்விரு தரப்பினரையும் ஒருங்கிணைத்து வலுவான அரசியல் சக்தியை உருவாக்குவது எனது பொறுப்பாகும்.
நாமல் ராஜபக்ஷவின் அரசியல் பயணம் வெற்றிகரமாக இருந்தாலும், மக்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அது தீர்வாக இல்லையெனில் அதற்கு அர்த்தமில்லை. வரவிருக்கும் காலத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பாதையை நல்லதாக்குவதே எனது முதல் பொறுப்பு. அதற்காக இந்த அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.