Our Feeds



Saturday, August 22, 2026

Zameera

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 93,635 ஆக உயர்வு


 இவ்வாண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 93,635 ஆக அதிகரித்துள்ளது.


 


அத்துடன், இதுவரை 71 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக புதிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.


 


சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, நாடு முழுவதிலும் உள்ள 76 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் தொடர்ந்து அதிஅபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளன.


 


நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளிகளில் பாதியளவிற்கும் அதிகமானோர், அதாவது 52.94% மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். தென் மாகாணத்தில் 13,719 நோயாளிகளும், மத்திய மாகாணத்தில் 8,476 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.


 


மாவட்ட ரீதியில் அதிகபட்சமாக கம்பஹா மாவட்டத்தில் 19,945 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இதர மாவட்டங்களாக கொழும்பில் 18,588 பேரும், கண்டியில் 6,786 பேரும், மாத்தறையில் 6,082 பேரும், களுத்துறையில் 6,059 பேரும், காலியில் 5,133 பேரும், இரத்தினபுரியில் 4,981 பேரும் பதிவாகியுள்ளனர்.


 


மாதாந்த அடிப்படையில், ஜூலை மாதத்திலேயே அதிகபட்சமாக 29,964 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். ஜூன் மாதத்தில் 21,533 நோயாளிகளும், ஓகஸ்ட் மாதத்தின் முதல் 21 நாட்களில் 8,297 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.

SHAHNI RAMEES

கோட்டாவிடம் ஏமாந்த அதே மக்களே, ஊழலை ஒழிப்போம் என்ற தற்போதைய வாக்குறுதியிலும் ஏமாந்துள்ளனர்.

 


"காலத்திற்கு காலம் வெவ்வேறு பாடல்களை இசைப்பது போல,

Zameera

சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி


 சிறையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 


அவரது காலில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்ததை அடுத்து, நேற்று (21) அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 


இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Zameera

இலங்கைக் கடற்பரப்பில் மீன் உற்பத்தி வீழ்ச்சி


 இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் மீன் உற்பத்தி கிரமமாகக் குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வாழ் உயிரின வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (நாரா) தெரிவித்துள்ளது. 


இது இலங்கைக்கு மாத்திரமன்றி உலகின் பல நாடுகளின் சமுத்திரக் கட்டமைப்புகளுக்கும் தாக்கம் செலுத்தியுள்ள பொதுவான அபாயம் என்று அதன் தலைவர் கலாநிதி சனத் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். 


இந்த நிலைமை திடீரென உருவானது அல்ல எனவும், 2014 ஆம் ஆண்டு முதல் இலங்கையை அண்டிய கடற்பரப்பில் மீன் உற்பத்தியில் வீழ்ச்சி பதிவாகி வருவதாகவும் அவர் கூறுகிறார். 


மீன் உற்பத்தி குறைவடைந்தமைக்குக் குறிப்பிட்ட எந்தவொரு காரணமும் தாக்கம் செலுத்தவில்லை எனவும், உயிரியல் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களே பிரதான காரணமாகியுள்ளன எனத் தெரிவித்தார். 


எவ்வாறாயினும், இதற்காக எல் நினோ (El Niño) நிலைமையின் தாக்கம் உள்ளதா என்பது இதுவரை குறிப்பாக அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், அதனால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படவில்லை. 


இந்த நெருக்கடி நீண்டகாலமாக வளர்ச்சியடைந்தால் மீனவ மக்களின் ஜீவனோபாயத்தைப் பாதுகாப்பதற்காக அவர்களை வேறு தொழிலவாய்ப்புகள் நோக்கி மாற்றியமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 


இதற்குத் தீர்வாக மீன் வளர்ப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் திருப்தியடைய முடியாது எனத் தலைவர் மேலும் குறிப்பிட்டார். 


இதேவேளை, நிலவும் நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள தேசிய மீனவக் கூட்டுறவு இயக்கத்தின் அழைப்பாளர் ஹர்மன் குமார, மீன்பிடி நடவடிக்கைகளின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் அழிவுகரமான உபகரணங்களின் பயன்பாட்டுக்கு எதிராக விதிக்கப்பட்ட சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமை இந்த மீன்வளம் நசிந்துபோவதற்குப் பிரதான காரணமாக மாறியுள்ளது எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.

Zameera

சுரேஷ் சலேயை விளக்கமறியலில் வைக்குமாறு கோரி அவரது மனைவி ஜனாதிபதிக்குக் கடிதம்!


 அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் கடுமையான இதய நோய் நிலைமையை கருத்தில் கொண்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்பு காவலில் வைக்காமல் விளக்கமறியலில் வைக்குமாறு கோரி அவரது மனைவியான மனோரி சலே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். 


அவர் ஓகஸ்ட் 20 ஆம் திகதி அனுப்பியுள்ள இக் கடிதத்தின் ஊடாக, தேசிய வைத்தியசாலையின் மருத்துவச் சூழலிலிருந்து விலக்கி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்புக்குத் தனது கணவரை மீண்டும் அழைத்துச் செல்ல எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும், அவரது உயிருக்கு உடனடியான மற்றும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். 


அவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவதற்கும் சிறைவாசம் அனுபவிப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்ததை அடுத்து, தனது கணவர் மருத்துவச் சிகிச்சைக்காக 2026 ஜூன் 7 ஆம் திகதி இலங்கை தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும், அன்றிலிருந்து அவர் இதயவியல் பிரிவில் இணைக்கப்பட்ட வைத்திய நிபுணர்களின் பராமரிப்பு மற்றும் சிகிச்சையின் கீழ் இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதயச் செயற்பாட்டின் தொடர்ச்சியான பலவீனமடைதல் மற்றும் கடுமையான பலவீனம் காரணமாக, தனது கணவருக்கு இதயச் சிகிச்சை ஒன்றுக்கு முகம் கொடுக்க நேரிட்டதுடன், அங்கு அவரது இதயத்தில் தானியங்கு இதயத் துடிப்பு சீராக்கி இயந்திரம் (Pacemaker) பொருத்தப்பட்டுள்ளதாகவும் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கிறார். 


குறித்த பின்னணியில் தனது கணவர் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் வாழ்வதாகவும், அவருக்கு நெருக்கமான, தொடர்ச்சியான மற்றும் விசேட மருத்துவக் கண்காணிப்பு மற்றும் கவனம் அவசியமானது எனவும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 


சுரேஷ் சலேயின் மனைவி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இவ்வாறானதொரு நிலையில் தடுப்புக் காவல் உத்தரவை மேலும் நீட்டிப்பதும், இலங்கை தேசிய வைத்தியசாலையின் மருத்துவச் சூழலிலிருந்து அவரை வெளியேற்றி மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பொறுப்புக்குக் கொண்டு செல்ல எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும் அவரது உயிருக்கு உடனடியான மற்றும் தீவிரமான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


எனவே, தற்போதைய தடுப்புக் காவல் உத்தரவு காலாவதியானதும் அதனை மீண்டும் நீடிக்க வேண்டாம் என அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 


எந்தவொரு சட்டபூர்வமான விசாரணைகளுக்கும் தடைபோடவோ, அதனைத் தாமதப்படுத்தவோ அல்லது அதில் தலையிடவோ தனது கணவருக்கோ அல்லது குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கோ எந்தவிதமான எண்ணமும் இல்லை எனவும், சட்டத்திற்கு அமைய மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்கும் பூரண ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் மனோரி சலே தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SHAHNI RAMEES

பாயில் கண்டெடுக்கப்பட்ட வி#து மாதிரி பல்லேகம தேரரின் DNA-வுடன் பொருந்துகிறது: நீதிமன்றத்தில் தெரிவிப்பு



பாயில் கண்டெடுக்கப்பட்ட விந்து மாதிரி பல்லேகம

Zameera

களனிப் பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தர் நியமிப்பு




 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். 


இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமானாயக்கவினால் அவரிடம் கையளிக்கப்பட்டது. 


பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ, மக்கள் வங்கியின் தலைவராக பணியாற்றியுள்ளதுடன், இதுவரை களனிப் பல்கலைக்கழகத்தில் நிதியியல் பிரிவின் பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். 


இந்த நியமனமானது எதிர்வரும் ஆகஸ்ட் 24 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

Zameera

கடல் கொந்தளிப்பு: அம்பர் எச்சரிக்கை


 (மனோகரன் பிரியங்கா)


நாட்டின் பல கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை காணப்படக்கூடும் என்பதால், கடற்படை மற்றும் மீன்பிடி சமூகத்தினர் விழிப்புடன் இருக்குமாறு  இயற்கை இடர் முன்னெச்சரிக்கை மையம் அம்பர்  நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


சனிக்கிழமை (22) காலை 10:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு, ஞாயிற்றுக்கிழமை (23) காலை 10:30 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையிலான கடல் பகுதிகளிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளிலும் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் அலைகளின் உயரம் 2.0 முதல் 2.5 மீட்டர் வரை உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.உள்ளூர் நகர வழிகாட்டிகளை ஆராய்தல்


எனவே, இந்த எல்லைக்குட்பட்ட கடல் பகுதிகளில் பயணிக்கும் கடற்படையினரும் மீன்பிடிச் சமூகத்தினரும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Zameera

முஸ்லிம் பெண்களின் சீருடை விவகாரத்தில் சுகாதார அமைச்சர் குழப்பமடைந்தார் – ரவூப் ஹக்கீம்


 (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கேற்றல்


சுகாதார உதவியாளர்களாக நியமனம் பெற்றுள்ள முஸ்லிம் பெண்களின் சீருடை தொடர்பான விடயத்தில் ஆரம்பத்தில் தீர்வுகளை முன்வைப்பதை போன்று கருத்துக்களை தெரிவித்த சுகாதார அமைச்சர், பின்னர் சற்று குழப்பமடைந்து எதிர்க்கட்சியின் மீது குற்றம் சுமத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்தார் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.  


பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குறைநிரப்பு மதிப்பீடு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


சுகாதார துறையில் தாதி உதவியாளர்களின் சீருடை தொடர்பான பிரச்சினை தொடர்பில் எம்.பிக்கள் பலர் கேட்ட போது அதற்கு அமைச்சர் செவிசாய்த்தார். அவர் இதற்கான முறைமையொன்றை பயன்படுத்த முயற்சிப்பதாக கூறினாலும், வியாழக்கிழமை (20) அவர் பேசும் போது சற்று குழப்பத்தில் இருந்ததை போன்று தெரிந்தது. மின்னல் தாக்கும் போது இரும்புத் துண்டை வெளியில் வீசுவது போன்று எப்போதும் எதிர்க்கட்சி மீது குற்றஞ்சாட்டுவதற்கு அவர் முயற்சித்தார். 


இங்கு வைத்தியர் நிஹால் அபேசிங்க இருக்கிறார். சுகாதார அமைச்சின் துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் இந்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடலை அவருக்கு ஆரம்பிக்க முடியும்.


குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு தமது மத கலாசாரங்களுக்கமைய சுகாதார அமைச்சின் சீருடையில் சுகாதார துறையில் உள்ள தேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றங்கள் செய்வது தொடர்பில் கலந்துரையாட அவருக்கு முடியும். அதனால் வைத்தியர் நிஹால் அபேசிங்க அந்த பணியை செய்வார் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.  

Zameera

கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு


 கிளிநொச்சி, முரசுமோட்டைப் பிரதேசத்தில் 3 வயது குழந்தை ஒன்று நேற்று (21) இரவு உழவு இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. 


உயிரிழந்த குழந்தை அவரது சகோதரரும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் இழுவை பகுதியில் (Trailer) ஏறி விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். 


இதன்போது உறவினர் ஒருவர் அந்த உழவு இயந்திரத்தை இயக்கி, பிள்ளைகள் இழுவை பகுதிக்குள் இருக்கும்போதே முன்றலில் திருப்புவதற்கு முற்பட்டுள்ளார். 


இதன்போது உழவு இயந்திரத்தில் இருந்து கீழே விழுந்த குழந்தை, பின் சக்கரத்திற்குள் சிக்கியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


விபத்தினால் படுகாயமடைந்த குழந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது. 


உழவு இயந்திரத்தை இயக்கிய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சிப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Zameera

என்னால் வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் ஜேவிபியின் பெலவத்தை காரியாலயத்துக்கு அனுப்பப்படும் : நாமல் ராஜபக்ஷ


 (க.சிவலிங்கமூர்த்தி)


என்னால் வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் பொலிஸ் மா அதிபர் ஊடாக பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு, அடுத்ததாக நான் எப்போது வர வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.


தங்காலையில் விடுதி தொடர்பாக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் வெள்ளிக்கிழமை (21) ஆஜராகி பல மணி நேர விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


இந்நாட்டிலுள்ள ஹோட்டல்களில் பாதியும் பல கட்டிடங்களும் என்னுடையது எனக் கூறுவதைக் கேட்கும்போது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே ஏற்படுகிறது. நபர் ஒருவர் தங்காலையில் வாங்கிய விடுதியை எவ்வாறு பெற்றார் என்று விளக்க முடியாமல் போகும்போது, அதனை நாமல் ராஜபக்ஷவுடையது எனக் கூறித் தப்பிக்க பார்க்கிறார். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும்கூட அப்போதைய ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் துபாய் மெரியட், வெலிகம ஹோட்டல் உள்ளிட்ட பல சொத்துக்கள் என்னுடையவை எனப் பிரச்சாரம் செய்தார். அன்று ஊழல் ஒழிப்புக்குழுவில் இருந்தவர்களே இன்று ஆட்சியில் இருக்கிறார்கள். அன்று அவர்கள் தாங்களாகவே புனைந்து கூறிய பொய்களுக்கு இன்று சட்டப்பூர்வமான தன்மையைக் கொடுக்க முயல்கிறார்கள். எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வந்து ஒத்துழைப்பு வழங்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.



அவ்வாறு கூறப்படும் ஹோட்டல் மற்றும் கொழும்பு 07 இல் உள்ள வீடு ஆகியவை என்னுடையவை என்றால், பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதிப் பிரச்சினை இருப்பதால் அந்த இடத்தை அவர்களுக்கு வழங்க முடியும். அரசாங்கம் தனது அரசியல் தேவைகளுக்காகவும் பழிவாங்கும் நோக்கத்துக்காகவும் மக்கள் பணத்தை வீணடித்து இவ்வாறான நிறுவனங்களைப் பயன்படுத்தி வருகிறது. விசாரணைக்கு வருமாறு அழைக்கும் போதெல்லாம் நாம் வருகிறோம்; ஏனெனில் நாம் எந்தத் தவறும் செய்யவில்லை. அரசாங்கம் பொய் சாட்சிகளை உருவாக்கி நீதித்துறைக்கு அழுத்தங்களைக் கொடுக்க முயற்சித்தால், அதற்கு நாம் பயப்படப்போவதில்லை. நாட்டில் சுயாதீனமான நீதித்துறை இயங்க வேண்டும் என்பதிலும், மதிப்பிற்குரிய நீதிபதிகள் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.


பெலவத்தை அலுவலகத்திலிருந்து அறிவித்தல் வரும்போது மீண்டும் விசாரணைக்கு வருவேன். அரசாங்கம் மிகவும் பதற்றமடைந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. இந்த பதற்றத்தை வைத்துக்கொண்டு அரசாங்கம் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். என்னை அடிக்கடி இங்கு அழைப்பதால் எதுவும் ஆகப்போவதில்லை, நான் எதற்கும் அஞ்சப்போவதும் இல்லை.


என்னுடைய சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்து விசாரணைகள் நடக்கும்போது, ஆளுங்கட்சியினர் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை எண்ணி மகிழ்கிறேன். அதேநேரம், சிலர் தங்களது சட்டவிரோதச் சொத்துக்களையும், அநியாயமாகச் சம்பாதித்த பணத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக மற்றவர்களின் பெயர்களைப் பயன்படுத்திப் பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது குறித்து கவலையடைகிறேன். இவ்வாறான செயல்களால் இந்நாட்டு மக்களுக்கு எந்தவொரு நியாயமும் கிடைக்கப் போவதில்லை என்றார்.

Zameera

இலங்கையில் 4 இலட்சம் வேலைவாய்ப்புகள் வெற்றிடம் - அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி


 (செ.கவிஷனா)இலங்கை பொருளாதாரம்


இலங்கையின் தொழிற் துறையில் சுமார் 400,000 வேலைவாய்ப்புகள் காலியாக உள்ள போதிலும், நாட்டின் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தொடர்வதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.


கொழும்பில் வியாழக்கிழமை (20) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,


நாட்டின் பொருளாதாரம் ஒரு முரண்பாடான சூழலை எதிர்கொண்டுள்ளது. அதாவது, தொழிற்துறைகளில் கடுமையான திறன் பற்றாக்குறை நிலவுவதோடு, ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இருப்பினும், தகுதியான தொழிலாளர்களைக் கண்டறிவதில் தொழிற்துறைத் தலைவர்கள் பெரும் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 3.7 சதவீதமாகப் பதிவாகியுள்ளதுடன், தொழிலாளர் சக்தி பங்கேற்பு விகிதம் 49.2 சதவீதமாகக் காணப்படுகிறது. இது கடந்த ஆண்டின் காலாண்டுடன் ஒப்பிடும்போது தொழிலாளர் சக்தி பங்கேற்பில் மெதுவான வளர்ச்சியைக் காட்டுகிறது.



தொழிற்சாலைகளும் சேவை வழங்கல் நிறுவனங்களும் தமக்குத் தேவையான ஊழியர்களைக் கண்டறிவதில் சிரமங்களை எதிர்கொள்வதற்கு, வேலைச் சந்தையில் உள்ள வேலை தேவையுடையோரின் திறன்களுக்கும், தொழிற்துறையின் உண்மையான தேவைகளுக்கும் இடையே நிலவும் பாரிய இடைவெளியே முக்கிய காரணமாகும். அதாவது, தற்போது வேலையில்லாமல் இருக்கும் நபர்களிடம் குறிப்பிட்ட அந்த வேலைகளுக்குத் தேவையான தொழிற்தகைமைகளும் தொழில்நுட்ப நிபுணத்துவமும் இல்லை என்பதே யதார்த்தமாகும். இந்தச் சவாலை எதிர்கொள்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களை எளிதில் வரவழைப்பதில் அரசாங்கம் தயக்கம் காட்டுகிறது. இலங்கையின் தேவைகள் முதலில் நாட்டிற்குள்ளேயே பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஏனெனில், வெளிநாடு செல்பவர்கள் அதே விகிதத்தில் மீண்டும் நாடு திரும்புவதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.


இந்தத் திறன் இடைவெளியை முற்றிலுமாகக் குறைக்கும் பொருட்டு, தொழிற்பயிற்சித் துறை மற்றும் பல்கலைக்கழகங்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. பயிற்சி வழங்குநர்கள் எப்போதுமான வழக்கமான பாடநெறிகளை வழங்குவதை விடுத்து, தொழிற்துறையின் குறிப்பிட்ட மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்ப பயிற்சித் திட்டங்களையும் பாடத்திட்டங்களையும் மறுசீரமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான முறையான பயிற்சிகள் மூலம் உள்நாட்டு உற்பத்தியும் உற்பத்தித்திறனும் வலுப்பெறுவதுடன், தொழிற்துறை வளர்ச்சிக்கு வலுவான ஆதரவு கிடைக்கும் என்பதே அரசின் பிரதான நோக்கமாகும் என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மேலும் தெரிவித்தார்.

Zameera

தனியார் துறை ஊழியர்களுக்கும் இணையவழி ரயில் பருவச்சீட்டு


 தனியார் துறை ஊழியர்களுக்காகவும் இணைய வழி ஊடாகத் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொடுக்கும் வசதியை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 


நேற்று (21) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 


இதற்கமைய, ஒக்டோபர் மாதம் அளவில் எந்தவிதச் சிக்கல்களுமின்றி தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த இணைய வழி ரயில் பருவச்சீட்டு வசதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 


அரசாங்கத் துறை ஊழியர்களுக்காக இணையம் ஊடாகத் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. 


இதேவேளை, நாடு முழுவதும் உள்ள சாரதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில் புதிய சட்ட விதிகளும் ஒழுங்குவிதிகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 


அத்துடன், எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களின் சாரதிகளும் பயணிகளும் பாதுகாப்புக் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 


பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் சாரதிகளுக்குப் பத்து நாட்களுக்கான விசேட பயிற்சி வழங்குவதற்கும், சாரதிகளை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியாக நடமாடும்போதைப்பொருள் பரிசோதனைகளை மேற்கொள்ளவதற்கும், தரம் வாய்ந்த மற்றும் பாதுகாப்பான வாகனங்களை மாத்திரம் சேவையில் ஈடுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார். 


இதனிடையே, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு SLS தரத்திலான பாதுகாப்புத் தலைக்கவசங்களின் (Helmets) பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் மோட்டார் சைக்கிளுக்கென்றே தனியான ஒழுங்கு ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.