
Monday, July 27, 2026

82 ஆயிரத்திற்கு அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம்!
நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,011 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
அதேநேரம் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஆண்டின் இதுவரையில் 17,395 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 16,294 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதுதவிர ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5639 பேரும், கண்டியில் 5634 பேரும், களுத்துறையில் 5355 பேரும் இரத்தினபுரியில் 4553 பேரும், காலியில் 4534 பேரும் டெங்கு நோயினால் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.
2026 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தின் முதல் 26 நாட்களில் மாத்திரம் 26,636 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (27) 5 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இரண்டு வாரங்களாக ஈரான் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த தாக்குதல்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடைநிறுத்தியுள்ளார்.
இதனால் மத்திய கிழக்கில் மோதலைக் குறைக்கக்கூடிய ஒரு தூதரகத் தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையை அடுத்து மசகு எண்ணெய் விலையில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதன்படி பிரெண்ட் ரக பீப்பாய் கச்சா எண்ணெய் இன்று அதிகாலை 5.77 சதவீதம் வீழ்ச்சியடைந்து 92.02 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அதேநேரம், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 5.50 சதவீதம் வீழ்ச்சியடைந்து 84.40 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.
அத்துடன் மேர்பன் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 10.12 சதவீதம் வீழ்ச்சியடைந்து 97.05 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Sunday, July 26, 2026

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை மாற்றும் நடவடிக்கை ஆரம்பம் - அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார!
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த அமைச்சரவைப் பத்திரத்தைத் தயாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசாங்கத்தினால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகின.
இது தொடர்பாக 'அத தெரண' நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் வினவியபோது, அது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தயாரிக்குமாறு தமக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான யோசனையொன்று அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டால், அது குறித்துக் கலந்துரையாடத் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பொதுவாக எந்தவொரு வழக்கும் நீதிமன்றங்களில் கணிசமான காலம் தாமதிக்கப்படுகின்றது. இதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்கும்போது, நமது நீதிமன்றக் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட வேண்டும்.
சில நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். அதேவேளை, தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற பொதுவான கருத்தும் சமூகத்தில் நிலவுகிறது.
புதிய நீதிபதிகளைப் புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்குமாறு இந்தத் துறையிலிருந்தே ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. வழக்கமாக எண்ணிக்கையை அதிகரிக்கும்போதே வயது எல்லையையும் அதிகரிப்பார்கள், ஆனால் அத்தகையதொரு சந்தர்ப்பத்தில் அது செய்யப்படவும் இல்லை என்றார்.

மக்களே தீர்மானிக்க வேண்டும் - சர்வஜன வாக்கெடுப்பு கோரும் நாமல்!
உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக் காலத்தை நீடிப்பது தொடர்பான எந்தவொரு முன்மொழிவும் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றியபோது இதனை தெரிவித்த அவர், அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் சூழலில் நியாயமற்ற வரிச் சுமையை சுமத்தியதன் மூலம் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
உர பற்றாக்குறை, உணவுப் பொருட்களின் விலை உயர்வு, அதிக வரிகள் மற்றும் பயன்பாட்டுக் கட்டண உயர்வு காரணமாக விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், மாணவர்கள், வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், காவல்துறை அதிகாரிகளின் தொடர்ச்சியான உறுதியளிப்புகளுக்கு மத்தியிலும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தடயவியல் அறிக்கைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சட்ட மற்றும் நீதித்துறையினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவித்த அவர், இதனை அரசாங்கம் ஒரு தேசிய முன்னுரிமையாகக் கருதினால் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தோல்வியடைந்த அரசாங்களின் அதே பாதையில் அநுர அரசும் - சுமந்திரன்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் கடந்த காலத்தில் தோல்வி அடைந்த அரசாங்கங்களின் பாதையிலேயே செல்கின்றது. தற்போதைய அரசாங்கத்துக்கு இருக்கும் அதீத பெரும்பான்மையின் அடிப்படையில் எடுக்கப்படும் தீர்மானங்களால் பேரனர்த்தமே நிகழும் ஆபத்துள்ளது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கொழும்பு இலக்கிய விழாவில் 'கதைகளும் மாநிலங்களும்:புனைவும் புனைவல்லாததுமான தெற்காசிய அரசியல்' எனும் தலைப்பிலான அமர்வு சாவித்ரி ரொட்ரிக்கோவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது எழுப்பபட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆசியாவில் சில வரலாறுகள் நாடுகளை செழுமைப்படுத்துவதற்குப் பதிலாக சில இனக்குழுமங்கள் மீதான அச்சங்களை தோற்றுவித்துள்ளன. அந்த வரலாற்று படைப்புக்களை நான் இங்கு வெளிப்படுத்தவில்லை.
அதேநேரம், இந்த நாட்டுக்கு எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநயாக்க சமஷ்டியை அறிமுகப்படுத்தி இந்தாண்டுடன் நூறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1926ஆம் ஆண்டு மோர்னிங் லீடர் பத்திரிகையில் சமஷ்டியை மையப்படுத்தியும் இலங்கைக்கு அதனடிப்படையிலான ஆட்சிமுறையையும் வலியுறுத்தி ஆறு கட்டுரைகளை அவர் எழுதியிருந்தார்.
1927ஆம் ஆண்டு ஜுலை மாதம் யாழ்ப்பாணத்துக்குச் சென்று யாழ்ப்பாண மக்களை சமஷ்டிமுறை சிறந்தது என்பதை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக 'யாழ்ப்பாண உரை' என்ற நிகழ்வையும் முன்னெடுத்திருந்தார்.
அனைவராலும் சமஷ்டிக்கட்சி என்று அறியப்பட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளராக நான் இருக்கின்றேன். பல்வேறு இனக்குழுமங்கள் வாழும் இந்த நாட்டில் கூட்டுறவு ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்ட ஆட்சிமுறையொன்றை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் முயற்சிக்கின்றோம்.
துரதிஷ்டவசமாக இலங்கை வரலாற்றில் மூன்று அரசியலமைப்புக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் சமஷ்டி முறைமை உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. கடந்த வருடம் எமக்கு பலத்த எதிர்பார்ப்பொன்றிருந்தது.
அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருக்கின்றது, அவர்கள் கடந்த ஆண்டு தேர்தலின்போது முன்வைத்த விஞ்ஞாபனத்தில் 2016ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரையில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை பூர்த்தி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார்கள்.
குறித்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளில் அனைத்து இனக்குழுமங்களின் பிரதிநிதித்துவங்களினதும் பங்கேற்பும் இணக்கப்பாடும் காணப்பட்டிருந்தது.
அவ்வாறான நிலையில் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, ஆண்டொன்று நிறைவடைந்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பு சம்பந்தமான செயற்பாடுகளுக்குரிய எந்த சமிக்ஞைகளையும் நான் காணவில்லை. கடந்த காலத்தில் தோல்வியடைந்த அரசாங்கங்களின் அதேபதையில் தற்போதைய அரசாங்கமும் செல்வதைப் போன்றே தோன்றுகிறது.
ஆனால் இலங்கையின் எதிர்காலத்திற்கு புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மிகவும் முக்கியமானது. அவ்வாறான நிலையில் தமக்குள்ள அதீத பெரும்பான்மையின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் தீர்மானங்களை எடுக்குமாக இருந்தால் அது பேரனர்த்தமாகும் ஆபத்துள்ளது என்றார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!
வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுத்து அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாட்டின் ஊடாக நிலவும் தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது ஆண்டு முடிவதற்குள் பாரிய மாற்றம் ஏற்படும் - ரணில்!
எதிர்க்கட்சிகளின் ஒன்றுகூடல் ஒரு ஆரம்பம் மட்டுமே. அரசாங்கத்தின் இரண்டாவது வருடம் நிறைவடைவதற்குள் பாரிய மாற்றத்தைக்காண முடியும் என தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, நாட்டில் நிலுவையுள்ள 11 இலட்சம் வழக்குகளைத் தீர்ப்பதற்காக தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு பாராளுமன்றத்திற்கு யோசனையொன்றை சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் யோசனை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.
கொழும்பு - 7 இல் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், அனைத்துக் கட்சிகளும் தற்பொழுது மட்டத்திற்கு இறங்கி அரசியல் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளன. இந்த ஒன்றுகூடல் ஒரு ஆரம்பம் மட்டுமே. இரண்டாவது வருடம் நிறைவடைவதற்குள் பாரிய மாற்றத்தைக் காணமுடியும்.
தற்பொழுது இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றுகூடியுள்ளன. அதுமட்டுமின்றி, நாளை திங்கட்கிழமை பௌத்த பிக்குகளின் பெரிய மாநாடொன்றும், புதன்கிழமை சட்டத்தரணிகள் மாநாடொன்றும் அழைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து அனைவரும் ஒருமித்த கருத்துடன் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்த முடிவுக்கு வர வேண்டும். நாட்டில் உள்ள 11 இலட்சம் வழக்குகளைத் தீர்ப்பதற்காக தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு பாராளுமன்றத்திற்கு யோசனையொன்றை எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாகவே எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒரே இடத்திற்கு வந்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயம். ஜனாதிபதி அநுரவின் செயல்கள் காரணமாக அனைத்துச் சட்டத்தரணிகளிடமிருந்தும் ஒன்றிணையுமாறு பாரிய அழுத்தம் எமக்கு வந்துள்ளது.
அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சட்டத்தரணிகள் கூட தற்பொழுது ஒன்றிணைந்துள்ளனர். எவரும் எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சி ஒன்றுபட்டுள்ளது. மறுபுறம் அரசாங்கம் மகாநாயக்கத் தேரர்கள் மற்றும் பிக்குகளைப் பகைத்துக் கொண்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியின் பலம் மேலும் வலுவடைந்து செல்கிறதே தவிர வீழ்ச்சியடையவில்லை.




