இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளைத் தொடர்வதில் அரசாங்கம் தாமதித்து வருவதாகவும் இது எதிர்கால முன்னேற்றம் தொடர்பில் கவலைகளை ஏற்படுத்துவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) தெரிவித்துள்ளது.
கட்டாயமாக காணாமலாக்கப்பட்டவர்கள், சித்திரவதை செய்யப்பட்டவர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பான பல வழக்குகள் இன்னும் முன்னேற்றமின்றி உள்ளன. அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் மனித உரிமைப் பாதுகாவலர்களும் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பல தசாப்தங்களாக நிலவி வரும் தண்டனையின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து, உண்மையான பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான தனது நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும். அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரும் நீதியை நிலைநாட்டுவதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை அரசாங்கம் செயற்பாடுகள் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளைத் தொடர்வதில் இலங்கை அரசாங்கம் போதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை. இது எதிர்கால முன்னேற்றம் தொடர்பில் கவலைகளை ஏற்படுத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முக்கியமான மனித உரிமை வழக்குகளைத் தீர்ப்பதிலும் சர்வதேச பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதிலும் அதிக உறுதியைக் காட்ட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளும் வலியுறுத்த வேண்டும். “Not Genuine with Justice”: Sri Lanka’s Lack of Will to Prosecute Past Abuses என்ற தலைப்பிலான 49 பக்க அறிக்கையில், 2024ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் திசாநாயக்க அரசாங்கம் சில முன்னேற்றங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஏழு முக்கிய வழக்குகளில் மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு நீதிச் செயற்பாடுகள் குறித்து கண்ணோட்டம் வழங்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆய்வில், உதவிப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்பட்ட சம்பவங்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கட்டாயமாக காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகள் இன்னும் முன்னேற்றமின்றி இருப்பது தெரியவந்துள்ளது. அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் மனித உரிமைப் பாதுகாவலர்களும் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
“பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்குவதை தாமதப்படுத்தியும் மறுத்தும் வந்த கடந்தகால அரசாங்கங்களின் நடைமுறையிலிருந்து திசாநாயக்க நிர்வாகம் விலக வேண்டும். கடந்த கால குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான நம்பகமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவும் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வலியுறுத்த வேண்டும்” என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பணிப்பாளர் லூசி மெக்கெர்னன் தெரிவித்தார்.
மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஏனைய மனித உரிமைப் பாதுகாவலர்கள் என 32 பேரை நேர்காணல் செய்ததுடன், நீதிமன்ற ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களையும் விரிவாக ஆய்வு செய்துள்ளது.
இலங்கையின் தெற்கில் 1987 –1989 காலப்பகுதியில் இடம்பெற்ற மார்க்சிஸ்ட் கிளர்ச்சியின்போதும், அரசாங்கத்துக்கும் பிரிவினைவாத விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான 2009ஆம் ஆண்டு முடிவடைந்த உள்நாட்டுப் போரின்போதும், அரச பாதுகாப்புப் படையினராலும் அரசல்லாத ஆயுதக் குழுக்களாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சித்திரவதை செய்யப்பட்டனர், கட்டாயமாக காணாமலாக்கப்பட்டனர், கடத்தப்பட்டனர் மற்றும் கொல்லப்பட்டனர்.
கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு நீதி பெற்றுக்கொடுப்பதில் இலங்கை பல தோல்வியடைந்த முயற்சிகளைக் கொண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.
1990களில் இருந்து அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த 10க்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்களை நியமித்துள்ளன. எனினும், அவற்றில் எதுவும் வழக்குத் தொடர்வதற்கு வழிவகுக்கவில்லை. மேலும், காணாமல்போன ஆயிரக்கணக்கானோருக்கு என்ன நடந்தது என்பதையும் வெளிக்கொணரவில்லை. பல்வேறு அரசாங்கங்கள் வழக்குகளில் மிகக் குறைந்த முன்னேற்றத்தையே ஏற்படுத்தியுள்ளன அல்லது முன்னெடுக்கப்பட்ட சில குற்றவியல் விசாரணைகளைத் தடுக்க நேரடியாக தலையிட்டுள்ளன.
“புதைகுழிகளைத் தோண்டி எடுப்பது மட்டும் நீதியை வழங்காது. மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறச் செய்யப்படுவார்களா?” என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள செம்மணி பகுதியில் அமைந்துள்ள பாரிய புதைகுழியிலிருந்து இதுவரை 582 பேரின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. எனினும், அவர்களில் யார் என்பதைக் கண்டறிவதிலும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பதிலும் வெளிப்படையான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
முன்னதாக தடம் புரண்டிருந்த சில முக்கிய விசாரணைகளில் திசாநாயக்க அரசாங்கம் ஓரளவு முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2009ஆம் ஆண்டு செய்தித்தாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட சம்பவம், 2010ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கட்டாயமாக காணாமலாக்கப்பட்ட சம்பவம் மற்றும் 2008 – 2009 காலப்பகுதியில் கடத்தப்பட்டு, பணம் கோருவதற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இளைஞர்கள் கடற்படை புலனாய்வுப் பிரிவினரால் கட்டாயமாக காணாமலாக்கப்பட்ட சம்பவம் ஆகியவை இதில் அடங்கும்.
269 பேரைக் கொன்ற 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் உயர்மட்ட அரசாங்க சதி இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையும் ஜனாதிபதி திசாநாயக்க பதவியேற்ற பின்னரே முன்னெடுக்கப்பட முடிந்தது.
2026 பெப்ரவரியில், தாக்குதல்களை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமியக் குழுவுடன் இணைந்து செயற்பட்டதாகக் கூறப்படும் முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரி சுரேஷ் சலேவை பொலிஸார் கைது செய்தனர். ஜூன் மாதத்தில், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான தொடர்ச்சியான விசாரணைகளின் பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மேலும் இரு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்தது.
இருப்பினும், இந்த வரையறுக்கப்பட்ட முன்னேற்றங்களுக்கு மத்தியிலும் பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு நிலவும் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதில் திசாநாயக்க அரசாங்கம் தேவையான அவசரத்துடன் செயற்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
2006ஆம் ஆண்டு ஐந்து தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த “Action Contre la Faim” என்ற மனிதாபிமான உதவி அமைப்பின் பெரும்பாலும் தமிழர்களான 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட, மூத்த அதிகாரிகள் தொடர்புபட்டதாகக் கூறப்படும் ஏனைய முக்கிய வழக்குகளிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தக் கொலைகள் இடம்பெற்று 20 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை; வழக்குத் தொடரப்படுவதும் நடைபெறவில்லை.
கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் நிறுவப்பட்ட l Sri Lanka Accountability Project திட்டத்தை திசாநாயக்க அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமாக வழக்குத் தொடரும் என உறுதியளிக்கப்பட்ட Directorate of Public Prosecution அமைப்பையும் அது இதுவரை நிறுவவில்லை.
மாறாக, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் (Office on Missing Persons) மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் (Office for Reparations) போன்ற முந்தைய அரசாங்கங்களின் முயற்சிகளுக்கு அது ஆதரவளித்துள்ளது. இவை நீதியை தாமதப்படுத்தும் நோக்கத்திலான நடவடிக்கைகள் எனக் கருதுவதால், பாதிக்கப்பட்டவர்களின் பல குடும்பங்கள் அவற்றை நிராகரித்துள்ளன.
2009ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து, தொடர்ச்சியாக இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதில் ஐ.நா. முக்கிய பங்காற்றி வருகிறது.
2011ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் செயலாளரின் நிபுணர் குழு அறிக்கையும் 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கையில் மேற்கொண்ட விசாரணையும் உள்நாட்டுப் போரின்போது இரு தரப்பினராலும் இடம்பெற்றதாகக் கூறப்படும் விரிவான போர்க்குற்றங்கள் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தின. மேலும், பொறுப்புக்கூறலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான தீர்மானங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றியுள்ளது.
திசாநாயக்க அரசாங்கம் நீதியை நிலைநாட்டுவதில் மேற்கொண்டு வரும் முன்னேற்றங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகமும் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். அத்துடன், பல தசாப்தங்களாக நிலவி வரும் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
“கடந்த கால மோதல்களில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுக்கு உண்மையான பொறுப்புக்கூறலைப் பெற்றுக்கொடுப் பதற்கான தனது முயற்சிகளை திசாநாயக்க அரசாங்கம் உடனடியாகத் தீவிரப் படுத்த வேண்டும்.
இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கான தனது வெளிப்படுத் தப்பட்ட உறுதிப்பாட்டை செயற்பாடுகள் மூலம் நிரூபிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளும் திசாநாயக்க அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்” என லூசி மெக்கெர்னன் தெரிவித்தார்.