Our Feeds



Wednesday, September 2, 2026

Zameera

கொக்கட்டிச்சோலையில் நீர்த்தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு


 மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர்த்தொட்டியில் வீழ்ந்த நிலையில் பழுகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.


கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான நந்தகோபன் கிசோத் என்ற குழந்தையே வாளி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது


செவ்வாய்க்கிழமை (01) ஆம் திகதி காலை 10.30 மணியளவில், வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளியின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.


இதன்போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் தலைகீழாக வாளிக்குள் விழுந்ததில் நீரில் மூழ்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.


உடனடியாக உறவினர்கள் சிறுவனை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர். மகேந்திரன், பழுகாமம் வைத்தியசாலைக்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டதுடன், உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்தார்.


உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சிறுவனின் சடலம் செவ்வாய்க்கிழமை (01) மாலை 6.00 மணியளவில் பழுகாமம் வைத்தியசாலையிலிருந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இச்சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Zameera

கிழக்கு மாகாணத்திற்கான நெதர்லாந்து தூதுவரின் முதல் உத்தியோகபூர்வ விஜயம்


 நெதர்லாந்து தூதுவர் வைபே டி போயர் (Wiebe de Boer) கிழக்கு மாகாணத்திற்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை திங்கட்கிழமை (31) மேற்கொண்டுள்ளார்.


கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்த தூதுவர், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடி புரிந்துகொண்டார்.


இதனைத் தொடர்ந்து, தூதுவர் திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ. ஜி. எம்.ஹேமந்த குமாரவையும் சந்தித்தார்.



பின்னர், டச்சு காலனித்துவ பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை கோட்டை பிரெட்ரிக் (Fort Frederick) பகுதிக்கும் அவர் விஜயம் மேற்கொண்டார்.

Zameera

தலவத்துகொட பயண முகவர் நிலையத்தில் ரூ.6 கோடி கொள்ளை


 தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள ஒரு பயண முகவர் நிலையத்திற்கு வந்த 4 பேர், அங்கிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களைக் கொள்ளை அடித்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


கொள்ளையர்கள் அங்கிருந்த சுமார் 6 கோடி பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள இந்த முகவர் நிலையத்திற்கு கொள்ளையர்கள் நேற்று (01) பிற்பகல் மோட்டார் வாகனத்தில் வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.


Zameera

திருகோணமலை நகரத்திற்கான அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகளை அடையாளம் காணும் விசேட கலந்துரையாடல்

நகர அபிவிருத்தி அமைச்சின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக, நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 16 நகரங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தில் திருகோணமலை மற்றும் கந்தளாய் நகரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.


இதன்படி, 2027ஆம் ஆண்டு முதல் அடுத்த 10 வருட காலப்பகுதியில் குறித்த நகரங்களின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் வகையில் அடையாளம் காணப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கமைய, திருகோணமலை நகரத்திற்கான அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகளை அடையாளம் காணும் விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை (31) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


குறித்த கலந்துரையாடலானது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம் ஹேமந்த குமார அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.


இக்கலந்துரையாடலில் திருகோணமலை மாநகர சபை, பிரதேச சபைகள் உள்ளிட்ட நகர அபிவிருத்தியுடன் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் அதிகாரசபையின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


இதன்போது, அபிவிருத்திக்கான முன்னுரிமைத் திட்டங்கள், மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பிரதிநிதிகளால் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

 

Zameera

கடந்தகால மனித உரிமை வழக்குகளில் முன்னேற்றம் இல்லை – மனித உரிமைகள் கண்காணிப்பகம்


 இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளைத் தொடர்வதில் அரசாங்கம் தாமதித்து வருவதாகவும் இது எதிர்கால முன்னேற்றம் தொடர்பில் கவலைகளை ஏற்படுத்துவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) தெரிவித்துள்ளது.




கட்டாயமாக காணாமலாக்கப்பட்டவர்கள், சித்திரவதை செய்யப்பட்டவர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பான பல வழக்குகள் இன்னும் முன்னேற்றமின்றி உள்ளன. அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் மனித உரிமைப் பாதுகாவலர்களும் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.




பல தசாப்தங்களாக நிலவி வரும் தண்டனையின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து, உண்மையான பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான தனது நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும். அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரும் நீதியை நிலைநாட்டுவதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை அரசாங்கம் செயற்பாடுகள் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.




கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளைத் தொடர்வதில் இலங்கை அரசாங்கம் போதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை. இது எதிர்கால முன்னேற்றம் தொடர்பில் கவலைகளை ஏற்படுத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.




ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முக்கியமான மனித உரிமை வழக்குகளைத் தீர்ப்பதிலும் சர்வதேச பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதிலும் அதிக உறுதியைக் காட்ட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளும் வலியுறுத்த வேண்டும். “Not Genuine with Justice”: Sri Lanka’s Lack of Will to Prosecute Past Abuses என்ற தலைப்பிலான 49 பக்க அறிக்கையில், 2024ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் திசாநாயக்க அரசாங்கம் சில முன்னேற்றங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஏழு முக்கிய வழக்குகளில் மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு நீதிச் செயற்பாடுகள் குறித்து கண்ணோட்டம் வழங்கப்பட்டுள்ளது.




மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆய்வில், உதவிப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்பட்ட சம்பவங்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கட்டாயமாக காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகள் இன்னும் முன்னேற்றமின்றி இருப்பது தெரியவந்துள்ளது. அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் மனித உரிமைப் பாதுகாவலர்களும் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.




“பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்குவதை தாமதப்படுத்தியும் மறுத்தும் வந்த கடந்தகால அரசாங்கங்களின் நடைமுறையிலிருந்து திசாநாயக்க நிர்வாகம் விலக வேண்டும். கடந்த கால குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான நம்பகமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவும் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வலியுறுத்த வேண்டும்” என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பணிப்பாளர் லூசி மெக்கெர்னன் தெரிவித்தார்.




மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஏனைய மனித உரிமைப் பாதுகாவலர்கள் என 32 பேரை நேர்காணல் செய்ததுடன், நீதிமன்ற ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களையும் விரிவாக ஆய்வு செய்துள்ளது.




இலங்கையின் தெற்கில் 1987 –1989 காலப்பகுதியில் இடம்பெற்ற மார்க்சிஸ்ட் கிளர்ச்சியின்போதும், அரசாங்கத்துக்கும் பிரிவினைவாத விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான 2009ஆம் ஆண்டு முடிவடைந்த உள்நாட்டுப் போரின்போதும், அரச பாதுகாப்புப் படையினராலும் அரசல்லாத ஆயுதக் குழுக்களாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சித்திரவதை செய்யப்பட்டனர், கட்டாயமாக காணாமலாக்கப்பட்டனர், கடத்தப்பட்டனர் மற்றும் கொல்லப்பட்டனர்.




கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு நீதி பெற்றுக்கொடுப்பதில் இலங்கை பல தோல்வியடைந்த முயற்சிகளைக் கொண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.




1990களில் இருந்து அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த 10க்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்களை நியமித்துள்ளன. எனினும், அவற்றில் எதுவும் வழக்குத் தொடர்வதற்கு வழிவகுக்கவில்லை. மேலும், காணாமல்போன ஆயிரக்கணக்கானோருக்கு என்ன நடந்தது என்பதையும் வெளிக்கொணரவில்லை. பல்வேறு அரசாங்கங்கள் வழக்குகளில் மிகக் குறைந்த முன்னேற்றத்தையே ஏற்படுத்தியுள்ளன அல்லது முன்னெடுக்கப்பட்ட சில குற்றவியல் விசாரணைகளைத் தடுக்க நேரடியாக தலையிட்டுள்ளன.




“புதைகுழிகளைத் தோண்டி எடுப்பது மட்டும் நீதியை வழங்காது. மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறச் செய்யப்படுவார்களா?” என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.




யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள செம்மணி பகுதியில் அமைந்துள்ள பாரிய புதைகுழியிலிருந்து இதுவரை 582 பேரின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. எனினும், அவர்களில் யார் என்பதைக் கண்டறிவதிலும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பதிலும் வெளிப்படையான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.




முன்னதாக தடம் புரண்டிருந்த சில முக்கிய விசாரணைகளில் திசாநாயக்க அரசாங்கம் ஓரளவு முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2009ஆம் ஆண்டு செய்தித்தாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட சம்பவம், 2010ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கட்டாயமாக காணாமலாக்கப்பட்ட சம்பவம் மற்றும் 2008 – 2009 காலப்பகுதியில் கடத்தப்பட்டு, பணம் கோருவதற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இளைஞர்கள் கடற்படை புலனாய்வுப் பிரிவினரால் கட்டாயமாக காணாமலாக்கப்பட்ட சம்பவம் ஆகியவை இதில் அடங்கும்.




269 பேரைக் கொன்ற 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் உயர்மட்ட அரசாங்க சதி இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையும் ஜனாதிபதி திசாநாயக்க பதவியேற்ற பின்னரே முன்னெடுக்கப்பட முடிந்தது.




2026 பெப்ரவரியில், தாக்குதல்களை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமியக் குழுவுடன் இணைந்து செயற்பட்டதாகக் கூறப்படும் முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரி சுரேஷ் சலேவை பொலிஸார் கைது செய்தனர். ஜூன் மாதத்தில், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான தொடர்ச்சியான விசாரணைகளின் பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மேலும் இரு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்தது.




இருப்பினும், இந்த வரையறுக்கப்பட்ட முன்னேற்றங்களுக்கு மத்தியிலும் பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு நிலவும் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதில் திசாநாயக்க அரசாங்கம் தேவையான அவசரத்துடன் செயற்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.




2006ஆம் ஆண்டு ஐந்து தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த “Action Contre la Faim” என்ற மனிதாபிமான உதவி அமைப்பின் பெரும்பாலும் தமிழர்களான 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட, மூத்த அதிகாரிகள் தொடர்புபட்டதாகக் கூறப்படும் ஏனைய முக்கிய வழக்குகளிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தக் கொலைகள் இடம்பெற்று 20 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை; வழக்குத் தொடரப்படுவதும் நடைபெறவில்லை.




கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் நிறுவப்பட்ட l Sri Lanka Accountability Project திட்டத்தை திசாநாயக்க அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமாக வழக்குத் தொடரும் என உறுதியளிக்கப்பட்ட Directorate of Public Prosecution அமைப்பையும் அது இதுவரை நிறுவவில்லை.




மாறாக, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் (Office on Missing Persons) மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் (Office for Reparations) போன்ற முந்தைய அரசாங்கங்களின் முயற்சிகளுக்கு அது ஆதரவளித்துள்ளது. இவை நீதியை தாமதப்படுத்தும் நோக்கத்திலான நடவடிக்கைகள் எனக் கருதுவதால், பாதிக்கப்பட்டவர்களின் பல குடும்பங்கள் அவற்றை நிராகரித்துள்ளன.




2009ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து, தொடர்ச்சியாக இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதில் ஐ.நா. முக்கிய பங்காற்றி வருகிறது.




2011ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் செயலாளரின் நிபுணர் குழு அறிக்கையும் 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கையில் மேற்கொண்ட விசாரணையும் உள்நாட்டுப் போரின்போது இரு தரப்பினராலும் இடம்பெற்றதாகக் கூறப்படும் விரிவான போர்க்குற்றங்கள் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தின. மேலும், பொறுப்புக்கூறலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான தீர்மானங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றியுள்ளது.




திசாநாயக்க அரசாங்கம் நீதியை நிலைநாட்டுவதில் மேற்கொண்டு வரும் முன்னேற்றங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகமும் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். அத்துடன், பல தசாப்தங்களாக நிலவி வரும் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.




“கடந்த கால மோதல்களில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுக்கு உண்மையான பொறுப்புக்கூறலைப் பெற்றுக்கொடுப் பதற்கான தனது முயற்சிகளை திசாநாயக்க அரசாங்கம் உடனடியாகத் தீவிரப் படுத்த வேண்டும்.




இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கான தனது வெளிப்படுத் தப்பட்ட உறுதிப்பாட்டை செயற்பாடுகள் மூலம் நிரூபிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளும் திசாநாயக்க அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்” என லூசி மெக்கெர்னன் தெரிவித்தார்.

Zameera

மட்டக்களப்பில் 9,000 குடும்பங்களுக்கு பவுசர் மூலம் குடிநீர்


 மட்டக்களப்பு மாவட்டத்தில் எல் நினோ தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 9,000 குடும்பங்களுக்கு தற்போது பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது. அதேவேளை அத்தியாவசிய தேவையான நீரை வழங்குவதற்கு தனியார் துறையின் பங்களிப்பை பெற்றுக் கொள்ளுமாறு வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க  அதிகாரிக்கு பணிப்புரை வழங்கினார்.



மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபுவின் அழைப்பின் பேரில், வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தலைமையில் விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்றது.


இதன் போது மாவட்டத்தில் நிலவும் குடிநீர் நெருக்கடி தொடர்பான நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், எல் நினோ தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள நீர்ப்பற்றாக்குறை காரணமாக மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான குறுகிய கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகளைத் துரிதப்படுத்து வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 9,000 குடும்பங்களுக்கு தற்போது பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது இருந்தபோதும் மக்களின் அத்தியாவசிய தேவையான நீரை வழங்குவதற்கு தனியார் துறையின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு இதன் போது அதிகாரிக்கு  அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.


அதேவேளை மாவட்டத்தில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள், நீர்வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நீர்ப்பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கான திட்டங்கள் தொடர்பிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.


மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை உறுதிப்படுத்தும் வகையில், தற்போதைய நெருக்கடிக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதுடன், எதிர்காலத்திற்கான நிலையான நீர் வழங்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டது



இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் , பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யூ.கே.எம். அப்துல்லாஹ், பொறியியலாளர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர், துறைசார் நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tuesday, September 1, 2026

ShortNews

சிறைக்கு பதில் வீட்டுக்காவல்!


சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக வீட்டுக்காவலில் வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட மறுசீரமைப்புகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இதற்காகப் பல சட்ட மறுசீரமைப்புகள் குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு, தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

"நீதித்துறை அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல மறுசீரமைப்புகளுக்கு மத்தியில் இந்தச் சட்ட மறுசீரமைப்பும் இடம்பெறுகிறது. சிறைச்சாலைகளின் நெருக்கடியைக் குறைத்தல், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை விரைவுபடுத்துதல், பிணை பெற முடியாதவர்களுக்குப் பிணை வழங்குவதற்குத் தேவையான சட்ட மறுசீரமைப்புகளைச் செய்தல், சிறைச்சாலைகளுக்கு வெளியே இவ்வாறானவர்களை வீடுகளில் தடுத்து வைத்து தண்டனைக் காலத்தைக் கழிப்பதற்கான வாய்ப்பை வழங்குதல் போன்ற பல மறுசீரமைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டு சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. இந்தச் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாகவே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது." என்றார்.


ShortNews

போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு மன்னிப்பே கிடையாது!


போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கத் தயாராக இல்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் அவசர மோதல் நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாகச் செயற்படுதல் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலன்புரி நடவடிக்கைகளை முறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பொறிமுறை குறித்த கலந்துரையாடலில் இன்று (01) காலை மஹர சிறைச்சாலை வளாகத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் கடந்த காலத்தில் பாரிய பிரச்சினையாக இருந்தபோதிலும், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குத் தேவையான ஆட்சேர்ப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதன் அதிகாரிகள் இரவு 10.00 மணி வரை கடமையாற்றி அறிக்கைகளை விரைவாக வெளியிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 9,081 அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தற்போது நிலுவையிலுள்ள அனைத்து அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளையும் வெளியிடுவதே இலக்கு என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், வேறு எந்த அரசாங்கத்தின் கீழும் கைப்பற்றப்படாத அளவிலான போதைப்பொருட்களை தற்போதைய அரசாங்கம் கைப்பற்றி வருவதாகத் தெரிவித்தார்.

சிறைச்சாலையிலுள்ள அனைவரும் குற்றவாளிகள் அல்லர் என்றும், சிலர் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் செய்த தவறு காரணமாகச் சிறையிலிருப்பதால் அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

அத்துடன், கடந்த காலத்தில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட சம்பவங்களின் போது பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

மீண்டும் அத்தகைய நிலைமை ஏற்பட்டால் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு வலுவான பொறிமுறை தேவை என்பதால், இதுவரை 15 சிறைச்சாலைகளில் இவ்வாறான ஒருங்கிணைந்த பொறிமுறை நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சிறைச்சாலையொன்றில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் அதனைக் கண்டறிந்து தீர்வுகளை வழங்குதல், அவசர நிலைமையின் போது பிரதேச மட்டத்தில் ஒருங்கிணைப்பைப்பேணி உடனடியாகச் செயற்படுதல் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலன்புரி நடவடிக்கைகளை முறைப்படுத்துதல் ஆகியன இந்த பொறிமுறையின் முக்கிய நோக்கங்களாகும்.

இதற்கிடையில், அண்மையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தின் போது கைதிகளால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட பிரதான ஜெயிலர் அலுவலகம், புனர்வாழ்வுப் பிரிவு, பின்னல் பிரிவு மற்றும் நெசவுப் பிரிவு உள்ளிட்ட இடங்களையும் அமைச்சர் பார்வையிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்த சந்தர்ப்பத்தில், கடந்த மாதத்தில் மஹர சிறைச்சாலைக்குச் சொந்தமான 500 அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகிச் சென்ற பின்னர் மீண்டும் போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபடாமல் சமூகத்தில் நல்ல மனிதர்களாகச் செயற்படுமாறு அமைச்சர் கைதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

எவ்வாறாயினும், போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கத் தயாராக இல்லை என வலியுறுத்திய அமைச்சர், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் நாட்டின் எதிர்காலப் பயணத்திற்குப் பங்களிக்கக்கூடிய மனிதவளமாகச் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ShortNews

துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் புதிய தகவல்!


கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் தொகையை, டுபாயிலிருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான 'பரேவி சுதா' என்பவரே இலங்கைக்கு அனுப்பியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், அங்கொட பிரியந்த மற்றும் ரூபன் ஆகியோரும் இதனுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தற்போது சந்தேகிக்கப்பதுடன், அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் அடங்கிய கொள்கலன் மொராக்கோவிற்கு மீள்ஏற்றுமதி செய்யத் தயார் நிலையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தபோதிலும், இந்த போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவருவதற்கே திட்டமிடப்பட்டிருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஐஸ் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய கொள்கலன் ஒன்று கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில் இருப்பதாக வெளிநாட்டிலுள்ள தனிப்பட்ட உளவாளி ஒருவரிடமிருந்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மால் கொடித்துவக்குவிற்கு தகவல் கிடைத்திருந்தது.

அதன்படி செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள், சந்தேகத்திற்குரிய கொள்கலனை பரிசோதிப்பதற்காக கடந்த 28ஆம் திகதி நீதிமன்ற உத்தரவொன்றைப் பெற்றுக் கொண்டதுடன், அதற்கமைய நேற்று (31) அந்த கொள்கலன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதற்கு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் சுங்க அதிகாரிகளின் உதவியும் கிடைத்தது. 

கொள்கலனுக்குள் இருந்த பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சுமார் 472 கிலோகிராம் எடையுடைய ஐஸ் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது. 

மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், இந்த போதைப்பொருள் தொகை உள்நாட்டு வர்த்தகர் ஒருவரின் பெயரில் அனுப்பப்பட்டுள்ளமை தெரியவந்தது. 

அதன்படி, தெமட்டகொடையைச் சேர்ந்த 44 வயதான ஆறுமுகன் சஷிதரன் என்ற வர்த்தகர் கைது செய்யப்பட்டிருந்தார். 

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இதனுடன் தொடர்புடைய இரண்டு பாகிஸ்தானியர்கள் பற்றிய விபரங்கள் தெரியவந்ததுடன், அவர்கள் ஜம்பட்டா வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் தங்கியிருந்தபோது அவர்களைக் கைது செய்ய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். 

தெமட்டகொடை வர்த்தகரின் நிறுவனத்தின் ஊடாகவே குறித்த போதைப்பொருள் தொகையை இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததாகக் கைது செய்யப்பட்ட இரு பாகிஸ்தானியர்களும் தெரிவித்துள்ளனர்.

Zameera

மஹரகம வைத்தியசாலையில் புற்றுநோய் மருந்து தட்டுப்பாடு : அவசரக் கொள்வனவுக்கு அரசாங்கம் நடவடிக்கை


 (எம்.மனோசித்ரா)


மஹரகம வைத்தியசாலையில் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் 'ஃபில்கிராஸ்டிம்' (Filgrastim) மருந்துக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தி உள்ளூர் சந்தையில் அவசரக் கொள்வனவுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,Travel Guides & Travelogues


மஹரகம வைத்தியசாலையின் பிரதானிகள் மற்றும் நிபுணத்துவ வைத்தியர்களுடன் இது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களிடம் உள்ள மருந்து இருப்புகளை அரசாங்க நிதியைக் கொண்டு நேரடியாக விலைக்கு வாங்கி வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


மஹரகம வைத்தியசாலையில் சில நாட்கள் இம்மருந்துக்குத் தட்டுப்பாடு நிலவியபோதிலும், ஏனைய வைத்தியசாலைகளில் மருத்துவ விநியோகப் பிரிவின் வசமிருந்த இருப்புகளைக் கொண்டு நிலைமை சீரமைக்கப்பட்டன. தற்போது அவசரக் கொள்முதல் மூலம் மருந்துகள் தொடர்ந்து பெறப்பட்டு வருவதால் நிலைமை இயல்புநிலைக்குத் திரும்பி வருகின்றன.



சுமார் 300,000 மருந்தளவுகள் அடங்கிய பெருமளவு கொள்முதல் முற்பதிவில் முதற்கட்டமாகச் சில தொகுதிகள் நாட்டை வந்தடைந்துள்ளன. 


விநியோக நிறுவனம் மேலும் 15,000 மருந்தளவுகளைக் கொண்டுவரவுள்ளோம். அதற்கமைய, ஒப்பந்தத்தின் மீதமுள்ள முற்பதிவுகளை சீன நிறுவனத்திடமிருந்து விரைவாக இறக்குமதி செய்வதற்காகக் கடன் கடிதம் திறக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இதேவேளை, ஏற்கனவே கொண்டுவரப்பட்ட சில மருந்துத் தொகுதிகளின் வெளிப்பெட்டியில் தகவல்கள் இருந்தபோதிலும், சிரிஞ்சுகளில் தேவையான சில விபரங்கள் விடுபட்டிருந்தன. அரச கொள்முதல் விதிகளுக்கு அமைவாகவும் நீதிமன்ற உத்தரவு இன்றியும் இவ்வாறான குறைபாடுகள் கொண்ட தொகுதிகளைப் பொறுப்பேற்க முடியாது. 


எனவே, சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு உள்ளூர் சந்தைக் கொள்முதல் மற்றும் வெளிநாட்டு இறக்குமதிகளை விரைவுபடுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு மருந்து தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். 

Zameera

வறட்சியால் 8,000 ஏக்கர் பயிர்கள் சேதம்


 வறட்சியான வானிலையால் இதுவரை சுமார் 8,000 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 


இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 


அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இந்த பயிர்ச் சேதங்களுக்கான அவசர வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 3,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகக் கூறினார். 


அதற்கமைய, விரைவான வேலைத்திட்டத்தின் கீழ் பயிர்ச் சேதமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 


நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களுக்கு இந்த இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் கூறினார். 


மேலும், பயிர்ச் சேதங்களினால் இதுவரை அதிகளவிலான பாதிப்பு அனுராதபுரம் மாவட்டத்திற்கே ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அம்மாவட்டத்தில் 1,923 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 


"நிலவும் வறட்சியான வானிலையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முதற்கட்டமாக இழப்பீடு வழங்குவதற்காக 3,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு விரைவான வேலைத்திட்டமாகும். இதன்படி நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ஒரு இலட்சம் ரூபா வீதம், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை இழப்பீடு வழங்கப்படும். அதேபோன்று, பாதிக்கப்பட்ட நிலப்பரப்புகளை நாங்கள் தற்போது அடையாளம் கண்டுள்ளோம். அதன்படி அனுராதபுரம் மாவட்டத்தில் 1,923 ஏக்கர், மொனராகலையில் 1,421 ஏக்கர், பொலன்னறுவையில் 1,259 ஏக்கர், அம்பாறையில் 1,055 ஏக்கர், ஹம்பாந்தோட்டையில் 783 ஏக்கர் என இந்த மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 7,000 விவசாயிகளின் சுமார் 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தப் பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குப் பயிர்ச் சேதம் ஏற்பட்டிருந்தால், அவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள விவசாய சேவைத் திணைக்களத்தின் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி உத்தியோகத்தர் அல்லது விவசாய மற்றும் கமநல காப்பீட்டுச் சபையின் அபிவிருத்தி அல்லது கள உத்தியோகத்தர்களைச் சந்தித்துச் சேதம் குறித்துத் தெரிவிக்க முடியும்." என்றார்.


ShortNews

நாட்டில் உணவுத் தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் லால்காந்த!


நாட்டில் தற்போது எந்தவொரு உணவுத் தட்டுப்பாடும் இல்லை என விவசாய, காணி, நீர்ப்பாசன மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விழிப்புணர்வூட்டுவது தொடர்பாக மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் எனக் குறிப்பிட்ட அமைச்சர், டின் மீன் மற்றும் பாசிப்பயறு இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதுடன், நுகர்வோருக்கு நிவாரண விலையில் அரிசியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கம் பதவியேற்ற பின்னர் மீண்டும் நெல் கொள்வனவு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏக்கருக்கு 60 புசல்கள் வரை நெல் விளைவிக்கும் விவசாயிகளுக்கு தற்போதுள்ள நெல் விலை போதுமானதாக இல்லை என்பதை ஏற்றுக்கொண்ட அமைச்சர், பயிரிடப்படும் நிலப்பரப்பை அதிகரிப்பதை விட, தற்போதுள்ள நிலத்திலிருந்து பெறப்படும் விளைச்சலை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனத் தெரிவித்தார்.

விசேட விவசாயத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், முறையான நீர்ப்பாசன முகாமைத்துவம், உரிய நேரத்தில் பசளை இடுதல், களைக் கட்டுப்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட நெல் வகைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நெல் விளைச்சலை கணிசமாக அதிகரிக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மக்காச்சோளம் இறக்குமதியும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டில் சோள உற்பத்தியை அதிகரிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்கான அரசாங்க நடவடிக்கைகளில் விவசாயிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் லால்காந்த கேட்டுக்கொண்டார்.

ShortNews

மூன்று வார கால அவகாசம் - 22வது திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு!


முன்மொழியப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமா என்பதை தீர்மானிப்பதற்கு உயர் நீதிமன்றத்திற்கு இன்று (01) முதல் மூன்று வார கால அவகாசம் உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று (01) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் ஜயதிஸ்ஸ, முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் உயர் நீதிமன்றம் பரிசீலித்த பின்னர், தனது தீர்மானத்தை பாராளுமன்றத்திற்கு அறிவிக்கும் என தெரிவித்தார்.

இந்தத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற முடியுமா அல்லது அதற்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டுமா என்பதை உயர் நீதிமன்றமே தீர்மானிக்கும்.

அரசாங்கமோ எதிர்க்கட்சியோ கோரிக்கை விடுத்தாலும், உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்றி முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியாது என அமைச்சர் வலியுறுத்தினார்.