Our Feeds



Thursday, May 7, 2026

Zameera

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இன்று இலங்கை வருகிறார் !


 ( இணையத்தள செய்திப் பிரிவு )


வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை (07) நாட்டை வந்தடையவுள்ளார். இதன்படி, வியட்நாம் ஜனாதிபதி இன்று இரவு நாட்டை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் சுமார் 200 பேர் கொண்ட தூதுக்குழுவினர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் நாளை வெள்ளிக்கிழமை (08) இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.


இதேவேளை, வியட்நாம் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு இன்றும் நாளையும் கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.   

Zameera

பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை


 வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் பற்றிய முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, வடமேல், தெற்கு, மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துகளைக் குறைத்துக்கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Zameera

சர்வதேச ரீதியில் இலங்கை பாரிய இராஜதந்திர நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் - டிலான் பெரேரா

இலங்கை அரசாங்கத்தின் தன்னிச்சையான தீர்மானங்கள் மற்றும் முறைகேடான டெண்டர் நடைமுறைகள் காரணமாக, சர்வதேச ரீதியில் இலங்கை பாரிய இராஜதந்திர நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், பாராளுமன்றத்தில் சபாநாயகரின் செயல்பாடுகள் தற்போது நடுநிலையாக இல்லை எனவும், குறிப்பாக மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் மற்றும் நிதி முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளைத் திசைதிருப்ப சபாநாயகர் முயற்சிப்பதாகவும் கடுமையாகச் சாடினார்.

நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் இழைக்கும் தவறுகளுக்கு அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இது தொடர்பான முறையான விசாரணைகள் நிறைவடையும் வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது பதவிகளிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் தற்போது நிலவும் கடவுச்சீட்டு தட்டுப்பாட்டிற்கு அரசாங்கத்தின் முறைகேடான டெண்டர் நடைமுறைகளே நேரடி காரணம் எனச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, ஈ-கடவுச்சீட்டு (e-passport) அச்சிடுவதற்காக விண்ணப்பித்திருந்த தகுதியான போலந்து நாட்டு நிறுவனம் உள்ளிட்ட ஆறு சர்வதேச நிறுவனங்களை எவ்வித நியாயமான காரணமுமின்றி நிராகரித்துவிட்டு, அரசாங்கத்திற்கு நெருக்கமான ஒருவருக்கு இந்த ஒப்பந்தத்தை வழங்க முயற்சிப்பதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினார். 

இந்த டெண்டர் நடைமுறையில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதி, போலந்து அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் உத்தியோகபூர்வமாகப் புகாரளிக்கத் தயாராகி வருவதாகவும் டிலான் பெரேரா இதன்போது வெளிப்படுத்தினார்.

போலந்து போன்ற ஒரு நட்பு நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இலங்கைக்கு எதிராகப் புகார் அளித்தால், அது நமது நாட்டின் சர்வதேச நற்பெயரைக் கடுமையாகப் பாதிப்பதுடன், இலங்கை உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் நிலையை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்தார். 

எனவே, அரசாங்கம் உடனடியாக இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும், நாட்டு மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதைத் தடுத்து சர்வதேச ரீதியில் நாட்டின் கௌரவத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

(ஞான பிரசாந்தன்)

Zameera

இன்று நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி விலை அதிகரிப்பு!


 இன்று (07) நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரென் ஆகிய உணவு வகைகளின் விலைகளை 25 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தி நடத்தப்படும் சிற்றுண்டிச்சாலைகளில் சாதாரண தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இது குறித்துத் தெரிவிக்கையில், 

சுமார் 25% - 30% வரையான சிற்றுண்டிச்சாலைகள் லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்துவதாகவும், தற்போதுள்ள நிலையில் அவர்களால் அந்த எரிவாயுவின் விலையைத் தாங்கிக்கொள்ள முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கமைய, லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தும் சிற்றுண்டிச்சாலைகளில் ஒரு சாதாரண தேநீரின் விலை 5 ரூபாவினாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிற்றுண்டி வகைகளின் விலைகள் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், முட்டை ரொட்டி மற்றும் பராட்டாக்களின் விலைகளில் மாற்றம் இல்லை என ஹர்ஷன ருக்ஷான் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

SHAHNI RAMEES

சாய்ந்தமருது நகர சபை சட்டரீதியானது! - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

 


சாய்ந்தமருது நகர சபை பிரடணம் சட்ட ரீதியானது!

Zameera

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின் லெபனான் மீது இஸ்ரேல் முதல்முறை தாக்குதல்


 போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதன் பின்னர், முதன்முறையாக இஸ்ரேல் லெபனானின் பெய்ரூட் நகரில் உள்ள ஹிஸ்புல்லாஹ் ஆயுததாரிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், கட்டிடம் ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் ரத்வான் படையணியின் தளபதி ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு தான் தனிப்பட்ட ரீதியில் அனுமதி வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.


ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்கள் கூட்டமொன்றில் இருந்தபோது, அந்நாட்டு நேரப்படி இரவு 8 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும், இத்தாக்குதல் குறித்து ஹிஸ்புல்லாஹ் அமைப்பு இதுவரை எந்தப் பதிலையும் வழங்கவில்லை.


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்ததன் பின்னர், பெய்ரூட் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும்.

Zameera

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!


 சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. 


இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், 

மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 

மு.ப 11.30 மணி முதல் பி.ப 12.30 மணி வரை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2471/68 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டது), (203ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் (2470/14 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டது) மற்றும் (351ஆம் அத்தியாயமான) குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் (2026.05.05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது) என்பவற்றை விவாதத்திற்கு எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. 

பி.ப 1.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் மற்றும் அத்தியாவசிய பொதுச் சுவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் என்பன தொடர்பான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதன் ​நேரடி ஔிப்பரப்பை கீழே காணலாம்,
Zameera

மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும்


 இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

Zameera

குருநாகல் மாநகர சபை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பிரேமச்சந்திர இராஜினாமா

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தேசிய மக்கள் சக்தியின் (NPP) உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை அவர் நேற்று (06) குருநாகல் மேயர் சட்டத்தரணி ஆனந்த சஹபந்துவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

மாநகர சபைக்குள் இடம்பெறும் முறையற்ற செயற்பாடுகளைத் தடுக்க முடியாமையே தனது பதவி விலகலுக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ள அவர், தனது கடிதத்தில் பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்:

நிர்வாக சீர்கேடுகள்: அங்கீகரிக்கப்படாத வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் தடையின்றி முன்னெடுக்கப்படல்.

எரிபொருள் பயன்பாட்டில் முறைகேடுகள் மற்றும் தேவையற்ற மேலதிக நேர (OT) கொடுப்பனவுகள் வழங்கப்படல்.

ஊழியர்கள் சேவைக்கு வருகை தந்ததாகப் பதிவிட்டுவிட்டு, பணி நேரத்தில் இடையில் வெளியேறுதல்.

நகரைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறியமை மற்றும் பொதுச் சேவைகளில் காணப்படும் மந்தகதி.

மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர்

குருநாகல் மாநகர சபையின் முதலாம் இலக்க கங்கோட தொகுதியில் போட்டியிட்ட பி.டபிள்யூ. பிரேமச்சந்திர, அங்கு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழல் மற்றும் வீண் விரயங்களுக்கு எதிராகத் தான் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில், அந்த நிர்வாகக் கட்டமைப்பில் தொடர்ந்து நீடிக்க விரும்பாமல் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Zameera

நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் குழு கைது


 விசா நிபந்தனைகளை மீறி இந்நாட்டில் தங்கியிருந்து நிதி மோசடிகளில் ஈடுபட்ட வெளிநாட்டு சந்தேக நபர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.



இவர்களில் 41 வெளிநாட்டு ஆண் சந்தேக நபர்களும் 33 பெண் சந்தேக நபர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



நேற்று (06) மாலை கொள்ளுப்பிட்டி, உத்தரானந்த மாவத்தை பகுதியிலுள்ள வீட்டுத் தொகுதி ஒன்றில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 39 வயதுக்குட்பட்ட வியட்நாம் நாட்டவர்கள் எனவும், இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



இதேவேளை, மேலும் 05 வெளிநாட்டு ஆண் சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் மாத்தறை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



செல்லுபடியாகும் விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்து நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக நேற்று (06) மாலை கந்தர, தலல்ல பகுதியிலுள்ள விடுதியொன்றில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



சுற்றுலா விசா மூலம் வியாபாரத்தில் ஈடுபட்டமை மற்றும் தீர்வையற்ற முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளை தம்வசம் வைத்திருந்தமை ஆகிய குற்றங்களையும் இந்த சந்தேக நபர்கள் புரிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Wednesday, May 6, 2026

Zameera

வருமானம் ஈட்டும் அரச நிறுவனங்களுக்கு உலக வங்கி ஆதரவு


 உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கெவர்க் சர்க்ஸியன் (Gevorg Sargsyan) தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், இன்று (06) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவைச் சந்தித்தனர். 


வருமானம் ஈட்டும் அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் மற்றும் அரச ஊழியர்களின் நேர்மையைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 

அரசின் வருமானம் ஈட்டும் நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக உலக வங்கியின் ஆதரவை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்காக ஜனாதிபதி செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள ' பொது நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் பணியகத்தின்' செயல்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

எதிர்காலத்தில் இந்த நிறுவனத்துடன் உலக வங்கி இணைந்து பணியாற்றுவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது. 

மேலும், அரச நிறுவனங்களின் அதிகாரிகளின் நேர்மையைப் பேணுவதற்காக நிறுவப்பட்டுள்ள 'உள்ளக விவகாரப் பிரிவு' சார்ந்த வேலைத்திட்டங்களில் உலக வங்கி பிரதிநிதிகள் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது மேலதிகமாகக் கலந்துரையாடப்பட்டது. 

உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கெவர்க் சர்க்ஸியன் (Gevorg Sargsyan), சிரேஷ்ட பொருளாதார நிபுணர்களான ரிச்சர்ட் வோக்கர் (Richard Walker), அந்தனி ஒபேசேகர (Anthony Obesekere) மற்றும் நிர்வாக விசேட நிபுணர் டில் ஹார்ட்மேன் (Till Hartman) ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
Zameera

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் மே 19 வரை ஏற்றுக்கொள்ளப்படும்


 (இணையத்தள செய்திப் பிரிவு)


2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்  இம்மாதம்  19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


விண்ணப்பதாரர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி கையேட்டைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், இதன் டிஜிட்டல்  வடிவத்தினை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதள முகவரியூடாகப் ஒன்லைனில் கொள்வனவு செய்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் கடந்த ஏப்ரல் 28-ஆம் திகதி முதல் ஆரம்பமாகின. கடந்த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காக மொத்தம் 1,76,527 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தகுதி பெற்றுள்ள மாணவர்கள் மே 19-ஆம் திகதிக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.


Zameera

மலைய மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை தற்போது மறந்துள்ளது - சஜித் பிரேமதாச


 (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


மலைய மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை தற்போது மறந்துள்ளது. அதனால் மலையக தோட்டத் தொழிலாளர்களின் காணிப் பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


அரசாங்கம் மலையக மக்களுக்கு வேண்டியளவுக்கு வாக்குறுதிகளை வழங்குகின்றது. இந்நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தில் தோட்டமொன்றில் காணி, இருப்பிடம் இல்லாத மலையக பிரஜையொருவர் சிறிய கூடாரமொன்றை அமைத்தார் என்பதற்காக அந்த தோட்டத்தின் பாதுகாவலர்கள் அவரை அங்கிருந்து விரட்டியடித்து, அந்த கூடாரத்தை அகற்றியுள்ளனர்.


லயன் அறைகளில் வாழ்க்கை நடத்தும் மலையக மக்கள் நாட்டுக்கு தேவையான அந்நிய செலாவணியை கொண்டுவருவதற்கு பெரும் அர்ப்பணிப்பை செய்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் வழங்கிய வாக்குறுதிகள், அவர்களுடனான சமூக உடன்படிக்கைகள் உங்களுக்கு மறந்துள்ளது. ஆனால் எமது அரசாங்கத்தில் மலையக மக்கள் உள்ளிட்ட வளங்கள் இன்றி இருக்கும் இளைஞர்களுக்கு தரிசு காணியில் அபிவிருத்தியுடன் சிறிய தேயிலை தோட்டங்களின் உரிமையாளர்களாக சமூகத்தில் வாழக்கூடிய வாய்ப்பை வழங்க எதிர்பார்க்கின்றோம்.



இதனால் வீடு இல்லாத மக்கள் எங்காவது தோட்டத்தில் கூடாரத்தை அமைப்பதை கரிசனையுடன் சிந்தித்து அவர்களின் காணி பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி, அந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை என்பதனை நினைவுபடுத்துகின்றோம். 


அதேவேளை, தற்போதைய அரசாங்கம் எவ்வேளையிலும் தமது பலவீனம், கவனயீனம் மற்றும் முடியாமை காரணமாக ஏதேனும் தவறு நடந்தால் அதன் பொறுப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் சிறிய நல்லது நடந்தால் அதற்கான பொறுப்பையும் கௌரவத்தையும் ஏற்றுக்கொள்ளும். இந்நிலையில் ஏதாவது தவறு நடந்தால் அதன் பொறுப்பை அதிகாரிகள் மீது சுமத்திவிடும்.


அத்துடன் எமது நாட்டின் அரச சேவையானது பெலவத்தை முறைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது. தமக்கு ஆதரவானவர்களை நியமித்துக்கொண்டு, அவர்களின் தகுதிகள் தொடர்பில் ஆராயாமல் நியமனங்களை வழங்குவதால் நிர்வாகத்துறையில் பெரும் வீழ்ச்சி ஏற்படுகின்றது. 2025 நவம்பர் 14ஆம் திகதியளவில் 2.5 மில்லியன் டொலர் தொடர்பில் 4 கொடுப்பனவுகள் செய்யப்பட்டுள்ளன. வருட இறுதி கணக்குகளை பேணுவதை முறையாக செய்திருந்தால் இதன் குறைபாடுகளை கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அரசியல் மயப்படுத்தப்பட்டவர்கள் இந்த அரச சேவைக்குள் புகுத்தப்பட்டுள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டுக்கு தேவையான வளங்களை இழக்கும் நிலைமை உருவாகியுள்ளது.


இந்த பொறிமுறை வீழ்ச்சியில் அரச துறையில் தமக்கு சார்பான, தமக்கு தேவையானவர்களை நியமிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். எந்த காரணத்திற்காகவும் அரசியல் சவால்களுக்கு அரச சேவையாளர்கள் அடிபணியக்கூடாது. எங்களுக்கு அரச சேவையாளர்களின் உயிர்கள் முக்கியமாகும். தூய்மையான அரச சேவையை பாதுகாக்க நாங்கள் முன்னிற்போம் என்பதனை கூறிக்கொள்கின்றோம் என்றார்.