
Saturday, August 1, 2026

உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை!
2026-ஆம் ஆண்டிற்கான க.பொ.த (உயர்தர) ப் பரீட்சையை முன்னிட்டு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04-ஆம் திகதி நள்ளிரவு 12:00 மணி முதல் பரீட்சை நிறைவடையும் வரை தனியார் வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடாத்துவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 05-ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹர சிறை பதற்றம் ஒருவர் பலி!
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக மஹர சிறைச்சாலைக்குள் அமைதியின்மை ஏற்பட்டது.
இந்த பதற்றநிலை காரணமாக 7 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மேலதிக சிறைச்சாலை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கைதிகள், சிறைச்சாலையின் பிரதான சிறை அதிகாரியின் அலுவலகம் மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவுக்கு தீ வைத்துள்ளதாகவும், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று பிற்பகல் சிறைக் கைதிகளைப் பார்ப்பதற்காக உறவினர்கள் மஹர சிறைச்சாலைக்கு வந்திருந்த போதிலும், அவர்களுக்கு சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
அதன்படி, உறவினர்கள் தற்போது மஹர சிறைச்சாலைக்கு முன்னால் தங்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும், அங்கு தங்கியிருக்கும் உறவினர்கள் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், சிறைச்சாலைக்குள் இருந்து பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களம் இதுவரை அதிகாரப்பூர்வமான எவ்வித அறிவிப்பையும் வௌியிடவிவ்லை.

மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை
மஹர சிறைச்சாலைக்குள் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
இந்த சம்பவத்தை அடுத்து குறித்த சிறைச்சாலை வளாகத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பல பொலிஸ் குழுக்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விரைவில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை வௌியிட எதிர்பார்த்துள்ளோம்.
எங்களது அத தெரண செய்தி இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

அம்பாறையில் மின்னல் தாக்கி வீடு முற்றிலும் எரிந்து சேதம்
அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் நேற்று (31) மாலை பெய்த பலத்த மழையின் போது மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.
குடும்பத்தின் தந்தை கொழும்புக்குச் சென்றுள்ள நிலையில், தாய் அருகிலுள்ள தையல் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தின் போது வீட்டில் எவரும் இருக்கவில்லை எனப் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
மழை பெய்யத் தொடங்கிய வேளையில், வீட்டிலிருந்த இரண்டு பிள்ளைகளும் அருகிலுள்ள வீட்டிற்குச் சென்றிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மின்னல் தாக்கத்தால் வீட்டின் உள்ளே பரவிய தீயைப் பிரதேசவாசிகள் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும், வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களும் உபகரணங்களும் தீயில் எரிந்து சாம்பலாகின.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இகினியகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிராக வழக்குத் தொடுத்தால் இருவருக்கும் மரண தண்டனை நிச்சயம்
கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகர மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தால் இருவருக்கும் நிச்சயம் மரண தண்டனை கிடைக்கும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் சனிக்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் போதுமான வகையில் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், அந்த தாக்குதலையும், உயிரிழப்புக்களையும் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்று தீர்ப்பளித்து மூவரடங்கிய சிறப்பு மேல் நீதிமன்றம் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.அத்துடன் இருவருக்கும் தண்டப்பணமும் விதித்துள்ளது.
மூவரடங்கிய சிறப்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இவ்விருவரும் உயர்நீதிமன்றத்தில் நேரடியான மேன்முறையீடு செய்யலாம்.அதற்கான சட்ட இயலுமை காணப்படுகிறது.
பயங்கரவாதி சஹ்ரான் குண்டுத்தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளான் என்று புலனாய்வுத் தகவல் கிடைத்தவுடன் அப்போதைய பொலிஸ்மா அதிபரும்,பாதுகாப்புச் செயலாளரும் ஆச்சரியமடைய வேண்டிய அவசியமில்லை. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய ரவி செனவிரத்ன மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய சானி அபேசேகர ஆகிய இருவருமே ஆச்சரியமடைய வேண்டும்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு முன்னர் வவுனத்தீவு பொலிஸார் படுகொலை,மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு, மட்டக்களப்பு பாலமுனை பகுதியில் குண்டுத்தாக்குதல் ஒத்திகை மற்றும் வனாத்தவில்லு பகுதியில் வெடிப்பொருட்கள் மீட்பு போன்ற சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் இருந்தது.
வனாத்தவில்லு வெடிப்பொருள் மீட்பு மற்றும் மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்; சந்தேக நபர்கள் 'சஹ்ரான் பாரதூரமான பயங்கரவாத தாக்குதலை நடத்துவதற்கு தயாராகவுள்ளான்' என்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு வாக்குமூலமளித்துள்ளார்கள்.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் போதுமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்தும் தாக்குதல்களை தடுப்பதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தலைவர்களாக பதவி வகித்த சானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவி;ல்லை. ஆகவே பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகிய இருவரையும் காட்டியும் இவ்விருவரும் பொறுப்பில் இருந்து மிக மோசமாக விலகியுள்ளார்கள். ஆகவே இவ்விருவருக்கும் மரண தண்டனை விதிக்கும் இயலுமை நீதிமன்றத்துக்கு உண்டு.
சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகளுக்கு அமைய முன்னெடுத்த விசாரணைகளை மீள ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் பதவியில் இருந்து சானி அபேசேகரவையும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ரவி செனவிரத்னவையும் உடன் நீக்க வேண்டும். அப்போது தான் சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என்றார்.
(இராஜதுரை ஹஷான்)

10 கோடிக்கு மேற்பட்ட போதைப்பொருள் பறிமுதல்
தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிப் சரக்குத் தொகுதியொன்றில் இருந்து, ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைக் கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய பொதியாக அனுப்பப்பட்ட நிலையிலேயே இந்தப் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பரிசுப் பொருட்கள் அடங்கிய தொகுதி, சோதனையிடப்பட்டு விடுவிக்கப்படும் வரை களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்ததுடன், அந்தச் சோதனைகள் நேற்று (31) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது, உலோகக் கொள்கலன்களுக்குள் (Metal containers) மறைத்து வைக்கப்பட்டிருந்த பொலித்தீன் பைகளிலிருந்து மரிஜூவானா, ஹஷீஷ் உள்ளிட்ட 10.608 கிலோ கிராம் எடையுள்ள போதைப்பொருட்களைச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாவிற்கும் (106,080,000) அதிகமெனத் தெரிவிக்கப்படுகிறது.a

கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள்
கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மிதந்து கொண்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்விபத்து வட அட்சரேகை 06 54' மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 079 32' அருகிலுள்ள கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.
தற்போதுள்ள கடல் நீரோட்டத்தின் தன்மைக்கு ஏற்ப, இந்த காலியான கொள்கலன்கள் பேருவலையிலிருந்து நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கடலோரப் பகுதிகளை நோக்கி, கரைக்கு மிதந்து வருவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறிப்பிட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மற்றும் பயணிக்கும் அனைத்துப் நெடுநாள் மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகளும் இது குறித்து மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒருவேளை மிதந்து வரும் இந்த கொள்கலன்கள் தென்பட்டால், உடனடியாக அது குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வானொலி செய்தி மையத்திற்கோ அல்லது அருகிலுள்ள மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்கோ அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

ரயில்வே பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை
![]() |
ரயில்வே திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடுமையான சமிக்ஞை குறைபாடுகள் நிலவும் பின்னணியில், தலைமன்னார் பாதையில் ரயில் சேவைகளை அதிகாரிகள் பாதுகாப்பற்ற முறையில் ஆரம்பித்துள்ளதாக அதன் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் முதல் இந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்ட போதிலும், இதுவரையில் குறித்த பாதை அமைப்பின் சமிக்ஞை சரியாகச் செயற்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போது மதவாச்சி முதல் தலைமன்னார் துறைமுகம் வரையிலான ஒற்றை ரயில் பாதையில் ரயில் சேவைகள் 'பைலட் முறையில்' (Pilot method) இயக்கப்பட்டு வருவதாகவும், வழக்கமாக இத்தகைய பைலட் முறை சிக்னல் கோளாறு போன்ற விசேட அவசர காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் போதிலும், அதிகாரிகள் தற்போது இதனை நிரந்தர இயக்க முறையாகத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
தலைமன்னார் பாதையைத் தவிர, மஹவ - அநுராதபுரம் பிரிவிலும் சமிக்ஞை தொடர்பான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்றும், அங்கும் தற்காலிக சமிக்ஞை முறைகளின் கீழ் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சுமேத சோமரத்ன குறிப்பிடுகிறார்.
கோடிக்கணக்கான மக்கள் பணத்தைச் செலவிட்டு புனரமைக்கப்பட்ட இந்த ரயில் பாதைகள், தற்போது பாழடைந்து போகும் நிலையை எட்டியுள்ளதாக தலைவர் மேலும் வலியுறுத்தினார்.
ரயில் நிலையங்களில் நிலவும் சமிக்ஞை கோளாறுகள் மற்றும் கடமை சார்ந்த பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் முறையான தீர்வுகளை வழங்காவிட்டால், தாம் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம் என்றும், இது குறித்து ஏற்கனவே அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன,
"தலைமன்னார் ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து கடந்த வாரம் முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரையில் குறித்த பாதையின் சமிக்ஞைகள் முறைப்படி இயங்கவில்லை. மதவாச்சி மற்றும் தலைமன்னார் துறைமுகம் வரை ஒற்றைப் பாதையில் பைலட் முறையிலேயே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ரயில்வேயின் பைலட் முறையானது ஏதேனும் சமிக்ஞை கோளாறுகள் போன்ற விசேட சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், இதனை ஒரு நிரந்தர இயக்க முறையாகத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறார்கள். மஹவ - அநுராதபுரம் பிரிவிலும் சமிக்ஞை தொடர்பான பிரச்சினை இதுவரை தீர்க்கப்படவில்லை. தற்காலிக சமிக்ஞை முறைகளை வழங்கி பணிகளைச் செய்கிறார்கள்.
அதே நிலைமைதான் மன்னார் பாதைக்கும் மீண்டும் ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் செலவழித்து உருவாக்கப்பட்ட ரயில் பாதை தற்போது பாழடைந்து போகும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. சமிக்ஞை அமைப்புகள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள சமிக்ஞை பேனல்கள் செயலற்ற நிலையில் உள்ளன.
சமிக்ஞை முறைகள் மற்றும் ரயில் நிலையங்களில் கடமை தொடர்பான சமிக்ஞை விஷயங்கள் உள்ளன. அவற்றுக்குச் சரியான தீர்வுகள் கிடைக்காவிட்டால் நாங்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்வோம் என்பதை எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளோம்" எனக் குறிப்பிட்டார்.

யாழ் முதல் பேருவளை வரை சிறிய படகுகளுக்கு கடல் செல்ல தடை
யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய படகுகள் கடலுக்குச் செல்வதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்ய மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏற்படக்கூடிய சீரற்ற வானிலை தொடர்பில் கணிக்கப்பட்ட நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மேற்கே இன்று (31) இரவு முதல் நிலவும் மழைக்கால நிலைமை மற்றும் காற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக, நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.
இந்த அபாயகரமான நிலையைக் கருத்திற்கொண்டு, மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தவால் அனைத்து மீனவர் சமூகத்திற்கும் அவசர பாதுகாப்பு அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு மற்றும் களுத்துறை (பேருவளை வரை) ஆகிய கடல் பகுதிகளில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் தொழிலில் ஈடுபடும் சிறிய மற்றும் ஒரு நாள் மீன்பிடிப் படகுகள் மறுஅறிவித்தல் வரை தொழிலுக்காகக் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை மிக உயர்வாக அதிகரிக்கக்கூடும் என்றும், அத்துடன் கடல் அலைகள் கொந்தளிப்பாக மாறுவது சிறிய படகுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.
தற்போது கடலுக்குச் சென்றுள்ள சிறிய மற்றும் ஒரு நாள் மீன்பிடிப் படகுகள் ஏதேனும் இருப்பின், அவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பாதுகாப்பான கரைக்குத் திரும்புமாறு பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இரவு வேளையில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், எக்காரணம் கொண்டும் தேவையற்ற ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டாம் எனத் தாம் மீனவர் சமூகத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிலவும் வானிலை தொடர்பில் மீன்பிடி மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் மேலதிக அறிவித்தல்கள் குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறும், தமது உயிர் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பு குறித்துப் பொறுப்புடன் செயற்படுமாறும் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்தார்.
இதேவேளை, காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகின்றார்கள்.
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 7ஆம் திகதி விசாரணைக்கு
இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டி பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கைக் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி விசாணைக்கு எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.Geographic Reference
இவ்வழக்கு வெள்ளிக்கிழமை (31) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதியான ஞானசார தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அசோக வீரசூரிய நீதிமன்றில் விடயங்களை முன்வைக்கையில், இவ்வழக்கின் சாட்சியமாக பெயரிடப்பட்டுள்ள இறுவெட்டு ஒன்றை முறைப்பாட்டாளர்கள் இதுவரை தமக்கு வழங்வில்லை.
அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருடன் கலந்துரையாடி இதனை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும்,அதற்கமைய சட்டமா அதிபருடன் கலந்துரையாடலை மேற்கொண்டு அதன் முன்னேற்றத்தை அறிவிப்பதற்குத் திகதியொன்றை வழங்குமாறும் சட்டத்தரணி நீதிமன்றைக் கேட்டுக்கொண்டார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி, இவ்வழக்குடன் தொடர்புடைய இருவெட்டை அடுத்த வழக்குத் திகதிக்கு முன்னதாக பிரதிவாதிகள் தரப்பிற்கு நிச்சயமாக வழங்கி வைக்குமாறு அரசுச் சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காக வழக்கினை செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த இரு உத்தியோகத்தர்கள் கைது
அஸ்வெசும ஊழல், மோசடி தொடர்பாக நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த இரண்டு உத்தியோகத்தர்கள் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை ஹட்டன் விசேட குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் வெள்ளிக்கிழமை (31) மாலை 04.45மணியளவில் இடம் பெற்றது அஸ்வெசும ஊழல் தொடர்பாக நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணிபுரிந்து வரும் அரச ஊழியர்களுக்கு எதிராக தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும், அதனடிப்படையில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் அண்மையில் தெரிவித்தார்.
நோர்வூட் பிரதேச செயலகத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய இரு அரச ஊழியர்கள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் இடம் மாற்றம் வழங்கப்பட்ட நிலையில் விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் குறித்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக நோர்வூட் பிரதேச செயலாளரினால் ஹட்டன் விசேட குற்ற விசாரணை பிரிவுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இரண்டு உத்தியோகத்தர்களும் 2025ம் ஆண்டு முதல் இதுவரை காலப்பகுதியில் 29இலட்சத்து 89ஆயிரத்து 500ரூபாய் மோசடி செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாகக் கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நோர்வூட் பிரதேச செயலகத்தின் இரு அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், மாவட்ட செயலாளரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் இரு அதிகாரிகளும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கும், மற்றொருவர் தலவாக்கலை பிரதேச செயலகத்துக்கும் இடமாற்றப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட இருவரும் பெண்கள் எனவும் 33 மற்றும் 30வயதுகளை கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது இதேவேளை அஸ்வெசு ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ள இரண்டு சந்தேக நபர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கபாபடுகிறது இரண்டு சந்தேக நபர்களும் 01.08.2026.சனிக்கிழமை ஹட்டன் நீதிவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தபட உள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் குற்ற விசாரணை பிரிவு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
