
Saturday, July 25, 2026

NPP ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது - சஜித் பிரேதாச!
திசைகாட்டி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு மக்களை ஏமாற்றியது. தற்போது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கு தினந்தோறும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாச
நாட்டு மக்களுக்காக எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நான் சேவையாற்றுவதற்கு பல்வேறு தரப்பினரும் என்னை விமர்சித்து வருகின்றனர். எனக்கும் எமது கட்சிக்கும் கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி என்னுடைய அல்லது எமது கட்சியின் பிம்பத்தை வளர்த்துக் கொள்ளவும், சமூக வலைத்தளங்கள் மூலமாக பொய்களை நிலைநிறுத்தவும் எனக்கு சந்தர்ப்பம் இருந்தபோதிலும், அத்தகைய வீண் வேலைகளைச் செய்யாமல் கிடைக்கும் நிதி உதவிகளை கொண்டு நான் உண்மையாகவே மக்களுக்கு சேவையாற்றி வருகின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாச தெரிவித்தார்.
டித்வா (Ditwa) புயல் தாக்கத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை பெற்றுத் தருவோம் என இவர்கள் கூறிய போதிலும், இன்று அவற்றில் எதனையும் செய்யாமல், துயரத்திற்குள்ளான மக்களுடன் இணைந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவிடுவதையே அரசாங்க தரப்பினர் செய்து வருகின்றனர். இன்றும் டித்வா தாக்கத்தால் பாதிக்கப்பட்டு நிர்கதியடைந்த மக்கள் மேலும் நிர்கதியடைந்துபோயுள்ளனர். விவசாய மற்றும் சொத்துச் சேதங்கள், உயிரிழப்புகள், மாற்று காணிகள் மற்றும் வீடுகள் என்பவற்றுக்கு எத்தகைய பதில்களும் இல்லை. 2019 ஆம் ஆண்டைப் போலவே 2024 ஆம் ஆண்டும் தேர்தல் காலத்தில் ஏமாற்றப்பட்ட மக்கள், தற்போது நாளாந்தம் இந்த திசைகாட்டி அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாச தெரிவித்தார்.
ஹொரவ்பொத்தானை, வகொல்லாகொட போதிரூக்காராம மகா விகாரையில் தர்ம போதனை மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் இன்று (25) கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாச இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவரால் ரூபா 2,15,000/- பெறுமதியான 100 சீமெந்து பொதிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் நெல் கிலோ ஒன்றுக்கு 150 ரூபா உத்தரவாத விலையை பெற்றுத் தந்து, விவசாயிகளை ராஜாவாக்குவோம், விவசாயிகள் கடவுள் என்று கூறியவர்களே, இன்று விவசாயிகளைப் பார்த்து கசிப்புக்காரன் என்று அவமதித்து அவர்கள் மீது பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர். சமகாலத்தில் பாராளுமன்றத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளை பற்றிப் பேசுவதற்குக் கூட எனக்கு தடை விதித்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் இராஜினாமா!
இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பரீட்சைகளில் நடைபெற்ற முறைகேடுகள், குறிப்பாக நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இந்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கோரி டெல்லியில் மாணவர்கள் பல வாரங்களாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக தர்மேந்திர பிரதான் சற்றுமுன்னர் அறிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மாளிகைகளில் 3000க்கும் மேற்பட்ட வெளிநபர்கள் தங்கியுள்ளதாக அறிக்கை!
2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் ஜனாதிபதி தங்கியிருக்காவிட்டாலும், அவற்றில் பெரும்பாலானவற்றில் பல்வேறு நபர்கள் 3,089 பேர் தங்கியுள்ளதாகத் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த காலத்தில் நடத்தப்பட்ட கூட்டங்களின் எண்ணிக்கை மூன்று மட்டுமே என அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழு ஜனாதிபதி மாளிகைகளின் மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட ஏனைய வசதிகளுக்காக அந்த ஆண்டில் 32,982,675 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
கதிர்காமம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்ட ஆகிய மாளிகைகளில் 2025 ஆம் ஆண்டில் எந்தவொரு கூட்டமும் நடத்தப்படவில்லை என்பதுடன், எவரும் தங்கியிருக்கவும் இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், 2025 ஆம் ஆண்டில் தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட ஏனைய செலவுகளுக்காக 2,447,754 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட ஏழு மாளிகைகள் கொழும்பு கோட்டை, கண்டி, அநுராதபுரம், கதிர்காமம், மஹியங்கனை, நுவரெலியா மற்றும் பெந்தோட்ட ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன.

மாத்தறையில் பேருந்து விபத்து - 18 பேர் படுகாயம்
மாத்தறை – திஸ்ஸ பிரதான வீதியின் வீரவில பகுதியில் தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் 18 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 7 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திஸ்ஸமஹாராமவிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து, வீரவில பிரதேச செயலகத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளுடன் மோதியதையடுத்து, கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் மோதியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் தெபரவெவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் படுகாயமடைந்த நால்வர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அசித எம்.பிக்கு சட்டத்தரணிகள் சங்கம் சவால்!
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு எதிராக நேற்று (24) வெளியிட்ட கூற்று பொய்யானது மற்றும் அடிப்படையற்றது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அச்சங்கம், பாராளுமன்ற வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி மக்களைத் தவறாக வழிநடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இதுவென வலியுறுத்தியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை, அடிப்படையற்றவை மற்றும் தீய நோக்கத்தில் முன்வைக்கப்படவை எனச் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கிறது.
தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் தாக்குதல்கள் வெற்றியளிக்காது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் சட்டச் சமூகம் ஒற்றுமையாக இருப்பதுடன், அதன் சுயாதீனத்திற்கும் நற்பெயருக்கும் விடுக்கப்படும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வரப்பிரசாதங்களுக்குப் பின்னால் மறைந்துகொண்டு வெளியிட்ட இந்த பொய்க் கூற்றை, இயலுமானால் பாராளுமன்றத்திற்கு வெளியே மீண்டும் கூறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷனவிற்குச் சவாலும் விடுத்துள்ளது.






