
Friday, April 3, 2026

இணையவழி நிதி மோசடி – கைதானவர்கள் விளக்கமறியலில்
இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 147 வெளிநாட்டவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இன்று சிலாபம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்களை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
சிலாபம், இரணவில பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்து இணையவழி மூலம் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 147 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் 133 சீனப் பிரஜைகளும், 13 வியட்நாம் பிரஜைகளும், ஒரு மலேசியப் பிரஜையும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிவில் உட்கட்டமைப்பு மீதான தாக்குதல்களுக்கு ஈரான் கடும் கண்டனம்
ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா முன்னெடுக்கும் தாக்குதல்களை ஈரான் கடுமையாகக் கண்டித்துள்ளது.
தனது 'X' கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, இத்தகைய தாக்குதல்கள் மூலம் ஈரானைப் பணிய வைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் பாலங்களை அழிப்பதுடன், மின் உற்பத்தி நிலையங்களையும் நிர்மூலமாக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி தனது 'ட்ரூத்' (Truth Social) சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்டிருந்த கருத்திற்குப் பதிலடியாகவே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
"பாலங்கள் போன்ற பொதுக் கட்டமைப்புகளை இலக்காகக் கொள்வது எதிரியின் தோல்வியையும் தார்மீகச் சரிவையுமே காட்டுகிறது.
சேதமடைந்த எந்தவொரு உட்கட்டமைப்பையும் ஈரான் மீண்டும் கட்டியெழுப்பும்" என ஈரான் வெளியுறவு அமைச்சர் தனது பதிவில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

24 மணி நேர நீர் வெட்டு 18 மணி நேரமாகக் குறைப்பு
வாடிக்கையாளர்களின் வேண்டுகோள்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
எனினும் முன்னதாகத் திட்டமிடப்பட்ட திகதிகள் மற்றும் பகுதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரச வைத்திய அதிகாரிகள் நாளையும் வேலைநிறுத்தம்
நாடு முழுவதிலுமுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நாளை (04) காலை 08:00 மணி முதல் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து நாளை கூடவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் அந்தச் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக குறிப்பிட்டவர்கள், அந்த சட்டத்தை காட்டிலும் பாரதூரமான சட்ட வரைவையே சமர்ப்பித்துள்ளனர் - விஜயதாச ராஜபக்ஷ
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக முன்வைத்த சட்டமூலத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் தான் நீதிமன்றம் சென்றார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக குறிப்பிட்டவர்கள், அந்த சட்டத்தை காட்டிலும் பாரதூரமான சட்டவரைவையே சமர்ப்பித்துள்ளது என முன்னாள் நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொரளை என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் வியாழக்கிழமை (2) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பயங்கரவாத தடைசட்டத்தை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாடு 2015 ஆம் ஆண்டு உறுதியாக காணப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் இடம்பெறும் வரை நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி எவரையும் கைது செய்யவில்லை.
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக பிறிதொரு சட்டமூலத்தை தயாரிப்பதற்கு நாங்கள் வெளிப்படையான நடவடிக்கைகளையே மேற்கொண்டோம். அரசியல் கட்சி பிரதிநிதிகள், ஊடக பிரதிநிதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், சிவில் தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டோம்.
மக்கள் விடுதலை முன்னணியினர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் சென்று அந்த நடவடிக்கைகளையும் நெருக்கடிக்குள்ளாக்கினார்கள். இவ்வாறான பின்னணியில் தான் 2024 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்வதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவை தயாரித்துள்ளது.இந்த சட்டவரைவு நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் பாரதூரமானது.
இந்த அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யாது. மாறாக அந்த சட்டத்தை கொண்டு கைதுகளை மாத்திரமே முன்னெடுக்கிறது. இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு என்றார்.

கொழும்பில் நீர் விநியோகத் தடை
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு இன்று (03) நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கலடுவாவ மற்றும் லபுகம நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் விநியோகிக்கப்படும் பாதுக்க, ஹோமாகம, பெலன்வத்தை மற்றும் பன்னிபிட்டிய உள்ளிட்ட சில பகுதிகளுக்கே இவ்வாறு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
இதற்கமைய நீர் விநியோகம் நிறுத்தப்படும் விபரங்கள் பின்வருமாறு,
பாதுக்கவில் நேற்று (02) இரவு 8 மணி முதல் இன்று (03) இரவு 8 மணி வரை நீர்வெட்டு அமுலில் உள்ளது.
ஹோமாகமவில் இன்று (03) இரவு 8 மணி முதல் நாளை (04) இரவு 8 மணி வரை 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பெலன்வத்தையில் நாளை (04) இரவு 8 மணி முதல் நாளை மறுநாள் (05) இரவு 8 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.
மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறான நீர்வெட்டை அமுல்படுத்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.
இருப்பினும், ஏனைய நாட்களில் எவ்வித தடங்கலும் இன்றி நீர் விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக பாதுக்க பகுதிக்கு ஏப்ரல் 7 ஆம் திகதியும், ஹோமாகமவிற்கு ஏப்ரல் 8 ஆம் திகதியும், பெலன்வத்தைக்கு ஏப்ரல் 9 ஆம் திகதியும் மீண்டும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்தச் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

அரிசி இறக்குமதி : விவசாயிகளுக்கு அநீதி இழைப்பு – மத்தும பண்டார
அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்யத் தீர்மானித்திருப்பது இந்த நாட்டு விவசாயிகளுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
அரிசியை இறக்குமதி செய்யப்போவதில்லை எனக் கூறிய அரசாங்கம், 2025 ஆம் ஆண்டில் 67,000 தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது ஒரு தனி இறக்குமதியாளருக்கு மாத்திரம் 1040 தொன் கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறைக்குத் தேவையான அரிசியை மாத்திரம் இறக்குமதி செய்வதே முறையானது.
சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு சில நாட்களே உள்ள நிலையில், வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தயாராகி வருகின்றது.
தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து நாட்டுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது போல, அரிசி இறக்குமதி மூலமும் நஷ்டத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயல்கிறது.
1994 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21 வீதமாக இருந்த விவசாயிகளின் வருமானம், இன்று 7 வீதம் வரை குறைந்துள்ளது.
விவசாயிகள் இன்று ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சிறு போகத்திற்குத் தேவையான யூரியா உரத்தில் ஒரு இலட்சம் தொன் தட்டுப்பாடு நிலவுகிறது.
மத்திய கிழக்கு போர் சூழலுக்கு முன்னதாக இந்த உரத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தவறியதால் விவசாயிகள் இன்று நிர்க்கதியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
Thursday, April 2, 2026

பிறப்புச் சான்றிதழ் இல்லையென்ற காரணத்திற்காக எந்தவொரு பிள்ளையையும் பாடசாலையில் சேர்க்கமால் இருக்க முடியாது
சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மாத்தறை பிரதேச செலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாதது அவர்களின் பெற்றோரின் தவறு என்பதால், அதிகாரிகள் அந்த விஷயத்தில் ஒதுங்கியிருக்க முடியாது.
பதிவுத் திணைக்களத்தின் மூலம் பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் நடைமுறை முடியும் வரை, அத்தகைய அனைத்துப் பிள்ளைகளும் பாடசாலைகளில் சேர்க்கப்பட வேண்டும்.
பிறப்புச் சான்றிதழ் இல்லையென்ற காரணத்திற்காக எந்தவொரு பிள்ளையையும் பாடசாலையில் சேர்க்க மறுக்க முடியாது என அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதலாம் தரத்திற்குச் சேர வேண்டிய அனைத்துப் பிள்ளைகளுக்கும் , பிறப்புச் சான்றிதழ் அல்லது பிற ஆவணங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வகுப்பறைகளில் இருக்க வேண்டும்.
கல்வி கற்பதற்கும் வகுப்பறையில் இருப்பதற்கும் ஒரு பிள்ளைக்கு இருக்கும் உரிமைக்கு பிறப்புச் சான்றிதழ் ஒரு தடையாக இருக்கக்கூடாது.
ஏற்கனவே மூன்று மாதங்கள் தாமதமாகியுள்ள நிலையில், அந்தந்த வலயங்களில் உள்ள முதலாம் தரத்திற்கு தகுதியான அனைத்துப்பிள்ளைகளும் பாடசாலைக்குச் செல்வதை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.



