Our Feeds



Tuesday, July 28, 2026

ShortNews

சரித் அபேசிங்க மீண்டும் சிறையில்!


பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால், சந்தேகநபரான சரித் அபேசிங்க மீண்டும் சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'ஹரக் கட்டா' என்பவரின் மனைவியிடம் இருந்து 12 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ரகித்த ராஜபக்ஷ, சரித் அபேசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (28) முற்பகல் பிணை வழங்கியது.

ரகித்த ராஜபக்ஷ உள்ளிட்ட இரு சந்தேகநபர்கள் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்தமையினால் அவர்களை சிறைக்காவலில் இருந்து விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

எனினும், சந்தேகநபரான சரித் அபேசிங்க பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதால், அவர் மீண்டும் இவ்வாறு சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ShortNews

சவூதி அரேபியாவில் தண்டனை பெற்றுள்ள அனூஜன் தொடர்பில் எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை - அமைச்சர் நளிந்த!


சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பிரஜையான அனூஜன் என்பவர், நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ளார் இது தொடர்பில் இன்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் எமது ஊடகவியலாளரின் கேள்விக்கு அமைச்சர் பதில்:


ஊடகவியளாலரின் கேள்வி:

“சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பிரஜையான அனூஜன் என்பவர், நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மூன்று மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக இன்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.


இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு வந்துள்ளதா? குறிப்பாக, அவருக்கு தேவையான தூதரக மற்றும் சட்டரீதியான உதவிகளை வழங்குவதற்கோ அல்லது அவரை மீட்பதற்கான சாத்தியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கோ வெளிவிவகார அமைச்சு ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதா?

அதேவேளை, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காகச் செல்லும் தொழிலாளர்களுக்கு, அவர்கள் செல்லும் நாடுகளின் சட்டங்கள், சமூகக் கட்டுப்பாடுகள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பில் முறையான விழிப்புணர்வை வழங்கும் வேலைத்திட்டங்களை அரசாங்கம் மேலும் வலுப்படுத்தும் திட்டம் உள்ளதா?”

அமைச்சரின் பதில்: 

"நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்தச் சம்பவம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சிலிருந்து எனக்கு இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, வெளிவிவகார அமைச்சுடன் தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்களைப் பெற்றுக்கொள்கிறேன். அதன் பின்னர், அடுத்த வாரம் இதுகுறித்து உங்களுக்குப் பதிலளிக்கிறேன்."

ShortNews

சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை - அமைச்சரவை பேச்சாளர்!


நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசியலமைப்பில் அவ்வாறு எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

"1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை உருவாக்கும் போது, அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான சட்ட வல்லுநர்கள் சர்வஜன வாக்கெடுப்பிற்குச் செல்ல வேண்டிய சரத்துக்களை அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். அரசியலமைப்பின் 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 30/2 மற்றும் 62/2 ஆகிய சரத்துக்களே மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் தேவைப்படும் சரத்துக்களாகும். இவை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள். இவை சட்ட வல்லுநர்களாலும் அரசியலமைப்பு வல்லுநர்களாலும் உருவாக்கப்பட்டவை. எனவே, மேல் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கோ அல்லது அந்த நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கோ சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என இந்தச் சரத்துக்களில் எங்கும் குறிப்பிடப்படவில்லை."

ShortNews

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது உயர்வு தொடர்பில் நீதி அமைச்சர் விளக்கம்!


நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அமைச்சரவை தீர்மானம் குறித்து இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவும் கலந்துகொண்டார்.

அங்கு ஊடகவியலாளர்கள் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த எடுக்கப்பட்ட முடிவு குறித்து கேள்வி எழுப்பியதுடன், அதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார
அங்கு தெரிவித்த கருத்து, 


தற்போது 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இந்த வழக்குகளை விரைவுபடுத்துவதற்கும், அனுபவம் வாய்ந்த நீதிபதிகளின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கும் எதிர்பார்ப்பதாகக் கூறினார். அதன்படி, அனைத்து நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்

"நாங்கள் கொடுத்த ஒரு வாக்குறுதி என்னவென்றால், நீதிமன்றங்களில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மாதக்கணக்கில், வருட கணக்கில் நீதிமன்றங்களில் வழக்குகள் செல்லும்போது மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். எனவே, நீதிமன்றங்களும் ஏனைய அமைப்புகளைப் போல திறம்படச் செயல்பட வேண்டும். அந்தச் செயல்திறனை அதிகரிப்பதற்கு நீதிபதிகளின் வயதை உயர்த்துவது ஒரு பக்கம் மட்டுமே, நாம் இன்னும் பல கோணங்களில் தலையிடுகிறோம்.

முக்கியமாக, அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில்  உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து அதை விரைவுபடுத்த வேண்டும். அதுவும் வழக்குகள் தேங்கி நிற்கும் ஒரு இடமாகும். அதேபோல சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும். மேலும், நீதி அமைச்சு மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் தற்சமயம் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். நிலுவையிலுள்ள 11 இலட்சம் வழக்குகளைக் கொண்ட அமைப்பை விரைவுபடுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஆனால் அதைச் செய்ய வேண்டுமானால், முக்கிய விஷயம் என்னவென்றால் — வழக்கமாக ஒரு வளர்ந்த நாட்டில் 10 இலட்சம் (1 மில்லியன்) மக்களுக்கு 40 முதல் 60 அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் இருப்பார்கள். ஆனால் இலங்கையில் 10 இலட்சம் மக்களுக்கு சுமார் 20 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். உண்மையில் இந்த நெருக்கடி வர முக்கிய காரணம் என்னவென்றால், கடந்த 10-15 வருடங்களாக ஒரு முறையான கணிப்புடன் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்காததால்தான் வழக்குகள் நிலுவையில் உள்ளன."

ShortNews

சுரேஷ் சலேயின் ரிட் மனு மீண்டும் ஒத்திவைப்பு!


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக்கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவை மேலதிக பரிசீலனைக்காக ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இம்மனு இன்று (28) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது, மேலதிக சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக இம்மனுவை ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அழைக்குமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

அன்றைய தினம் மனு தொடர்பான மேலதிக சமர்ப்பணங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

ShortNews

ஜப்பானில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு அச்சுறுத்தல் இல்லை!


தெற்கு ஜப்பானின் குமாமோட்டோ பகுதியில் இன்று (28) பதிவான 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்தவிதமான ஆபத்துமில்லை என்று புவியியல் சர்வே மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் டைம்ஸ் (Japan Times) செய்தி நிறுவனத்தின்படி, செவ்வாய்க்கிழமையன்று கியூஷு பிராந்தியத்தில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தில் 7.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ஜப்பானிய நில அதிர்வு தீவிர அளவுகோலில் நிலையான 'ஷிண்டோ 7' (shindo 7) என்ற அளவில் பதிவாகியுள்ளது.  இதனைத் தொடர்ந்து, அரியாக்கே மற்றும் யட்சுஷிரோ கடல் பகுதிகளின் கரையோரப் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்ததுடன்.

பொதுமக்கள் கடற்கரைக்கு அருகில் செல்வதை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளது.  நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் முதலாவது சுனாமி அலை வந்தடைந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

மேலும் பல அலைகள் விரைவில் வரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.யட்சுஷிரோ (Yatsushiro), உடோ (Uto) நகரங்கள் மற்றும் மஷிகி (Mashiki), மிசடோ (Misato) நகரங்கள் மற்றும் குமாமோட்டோ நகரின் மினமி வார்டு (Minami Ward) ஆகிய பகுதிகளில் ஷிண்டோ அளவில் 6 என்ற பலத்த அதிர்வு உணரப்பட்டது.

மேலும், குமாமோட்டோவின் பிற நகரங்கள் மற்றும் அயல் மாகாணங்களான நாகசாகி, ககோஷிமா, புகுவோகா, சாகா மற்றும் மியாசாகி ஆகிய இடங்களிலும் ஜப்பானிய அளவுகோலின்படி 5 அல்லது அதற்கு மேற்பட்ட பலத்த அதிர்வுகள் உணரப்பட்டன.

இந்த நிலநடுக்கத்தின் மையம், குமாமோட்டோ நகருக்குத் தெற்கே உள்ள உகி (Uki) நகரில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது.

ShortNews

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 83,000ஐ நெருங்கியது!


நாட்டில் இந்த ஆண்டின் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 83,000 ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நேற்று (27) வரையில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 82,838 ஆகப் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் 27,464 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தற்போது அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகி வருகின்றனர். இது சதவீத அடிப்படையில் 21.25% ஆகும்.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 16,457 டெங்கு நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 5,685 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இன்றைய தின நிலவரப்படி 61 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், இது சதவீத அடிப்படையில் 0.07% ஆகும்.

ShortNews

சீனாவில் அடுத்தடுத்து பூமியதிர்ச்சி!


சீனாவின் வடமேற்கு மாகாணமான கிங்ஹாயில் அமைந்துள்ள ஷிங்ஹாய் மாவட்டத்தில் இன்று இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை 18 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த பூமியதிர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.

முதல் பூமியதிர்ச்சி  செவ்வாய்க்கிழமை காலை 11:16 மணியளவில் ரிச்டர் அளவில் 5.7 ஆகப் பதிவாகியுள்ளது.

முதல் பூமியதிர்ச்சி ஏற்பட்டுச் சரியாக 18 நிமிடங்களுக்குப் பின்னர், அதே பகுதியில் ரிச்டர் அளவில் 5.8 என்ற வலுவான இரண்டாவது பூமியதிர்ச்சி பதிவாகியுள்ளது.

இந்த இரண்டு பூமியதிர்ச்சிகளும் பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளன. இவை கிங்ஹாய் மாகாணத்தின் தலைநகரான சினின்கிலிருந்து சுமார் 244 கி.மீ தொலைவில் மையங்கொண்டிருந்தன.

பூமியதிர்ச்சியால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. மீட்புக் குழுவினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.

ShortNews

வேகமாக வற்றி வரும் விக்டோரியா நீர்தேக்கம்!


மத்திய மலைநாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, பல நீர் தேக்கங்கள்  வற்றிப்போகும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளது.

நீர் மின்சார உற்பத்தி மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக பெருமளவில் நீரை வழங்கும் மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் தற்போது பாரிய அளவில் வற்றி வருகிறது.

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் தினமும் பெருமளவில் வற்றி வருவதோடு, பழைய தெல்தெனிய நகரத்தின் நஷ்டாவசேசங்கள் மீண்டும் வெளிப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் நாட்களில் நாட்டைப் பாதிக்கும் என கணிக்கப்பட்டுள்ள எல் நினோ நிலையும் இவ்வாறு நீர் ஆதாரங்கள் வற்றிப்போவதற்கு காரணமாக அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது.

ShortNews

விமலின் சகோதரர் சரத் வீரவன்சவுக்கு பிணை!


முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்சவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

அரசாங்க வாகனங்களை தவறாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் கடந்த 15ஆம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

ShortNews

SJB MP சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!


பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பதுளை மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ShortNews

ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு பிணை!



முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதியின் முன்னாள் அமைப்பாளராக செயற்பட்ட சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களுள் ஒருவரான அருண ஹென்னதிகே ஆகிய மூவரையும் பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

கடந்த வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர்களின் சட்டத்தரணிகளால் இந்த பிணைக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, இன்றைய தினம் பிணை உத்தரவை அறிவித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம, சந்தேகநபர்கள் ஒவ்வொருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதித்து உத்தரவிட்டார். 

சரீரப் பிணையாளர்கள் பிணையின் பெறுமதியை உறுதிப்படுத்தும் வகையிலான வருமானம் அல்லது சொத்துக்கள் உள்ளமையை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதவானின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சந்தேகநபர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதுடன், அவர்களின் கடவுச்சீட்டுக்களை (Passport) நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் இதன்போது உத்தரவிடப்பட்டது. 

இதனையடுத்து, விசாரணைகளின் முன்னேற்றத்தை டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் இலஞ்ச ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார். 

ரகித ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க ஆகிய இருவரும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர். 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'ஹரக் கட்டா' என்பவரிடமிருந்து இலஞ்சம் பெற்றமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர். 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந்தக்க விக்கிரமரத்ன என்பவரை பொலிஸார் கொலை செய்வதைத் தடுப்பதற்காகவும், அவரது தடுப்புக்காவல் உத்தரவை நீக்கி காலி பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையைத் தவிர வேறொரு சிறைச்சாலைக்கு அவரை மாற்றுவதற்காகவும், விசாரணை நடவடிக்கைகளில் இருந்து அவரை விடுவிப்பதற்காகவும் இந்த இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த செயற்பாடுகளுக்காக 2023 ஆம் ஆண்டில் டுபாயில் வைத்து, ஹரக் கட்டாவின் மனைவியான மதுஷிகா மதுவந்தியிடம் 50 கோடி ரூபாவை இலஞ்சமாகக் கோரி, பின்னர் தொகையைக் 20 கோடி ரூபாயாக குறைத்து அதில் 12 கோடி ரூபாவை முன்பணமாகக் கோரிப் பெற்றுக் கொண்டதாக ரகித ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இதற்கமைய, இவர்கள் இருவரும் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளராகச் செயற்பட்ட வருஷ ஹென்னதிகே அருண ஸ்ரீ சதுரங்க என்பவரும் இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ShortNews

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அவதானம் செலுத்தும் அரசாங்கம்!


ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய, அதற்குரிய சட்டமூலத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம் நேற்று (27) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் பல புதிய திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.