Our Feeds



Tuesday, August 25, 2026

ShortNews

கெஹல்பத்தர பத்மேவிடமிருந்து வெளியாகிய புதிய தகவல்கள்!


போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் கெஹல்பத்தர பத்மேவிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைபேசிகளில் இருந்து ஒன்பது அரசியல்வாதிகள் மற்றும் ஏழு நடிகைகள், மொடல்கள் தொடர்பான தகவல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சந்தேகநபரின் கைபேசிகளை ஆய்வு செய்தபோது, ஒன்பது அரசியல்வாதிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல் பதிவுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், ஏழு நடிகைகள் மற்றும் மொடல்கள் தொடர்பான தகவல்களும் கிடைத்துள்ளதாகவும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.

கிடைக்க பெற்ற தகவல்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். எனினும், குறித்த தகவல்களில் பெயர்கள் இடம்பெற்றுள்ளமை அல்லது அவர்களுடன் தொடர்புடைய பதிவுகள் காணப்படுவது மாத்திரம் அவர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அர்த்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரிடமிருந்து எட்டு கைபேசிகள் மீட்கப்பட்டதாகவும், அவற்றில் இருந்த தரவுகள் அழிக்கப்பட்டிருந்த போதிலும் அவற்றை புலனாய்வாளர்கள் மீட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.

மீட்கப்பட்ட தரவுகளில் 8,841 தொலைபேசி அழைப்புகளின் விவரங்கள், 326000க்கும் அதிகமான புகைப்படங்கள், 1,101 ஒலிப்பதிவுகள் மற்றும் 5,039 காணொளிகள் அடங்குவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் 20 பேர் தொடர்பான தகவல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்தத் தகவல்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், 13 சிறை அதிகாரிகளுக்குச் சொந்தமான தொலைபேசி இலக்கங்களும் குறித்த கைபேசிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்குச் சொந்தமான 19 கடவுச்சீட்டுகளின் புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 17 வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

புலனாய்வாளர்களின் தகவல்களின்படி, கெஹல்பத்தார பத்மே 2021 மே மாதம் இலங்கையிலிருந்து சட்டப்பூர்வமாக வெளியேறிய பின்னர் சுமார் 15 சந்தர்ப்பங்களில் 13 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, ரஷ்யா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளும் அவற்றில் அடங்குகின்றன.

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே, சர்வதேச நடவடிக்கையைத் தொடர்ந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் விசாரணைகளுக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவரை எதிர்வரும் செப்டம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ShortNews

நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்க மக்கள் தீர்ப்பு அவசியம் - சாலிய பீரிஸ்!


நீதித்துறையின் சுதந்திரத்தை சீர்குலைக்கும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தமும் மக்களின் இறையாண்மையைப் பாதிக்கும் என்பதால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை போதுமானதல்ல. பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (25) ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஒரு கருத்தை முன்வைத்தார் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதால் நீதித்துறையின் சுதந்திரம் எவ்வாறு பாதிக்கப்படும் என்று, அதாவது ஒரு நீதிபதி நடுநிலையுடனும், சுயாதீனமாகவும் செயல்பட வேண்டுமெனின் அவரது பதவிக் காலமும், ஓய்வுப்பெறும் வயதும் முன்பே தீர்மானிக்கப்பட்டதாகவும், அரசியல் தலையீடுகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்க வேண்டும். ஓய்வுபெறும் தருவாயில் உள்ள நீதிபதிகளை இலக்கு வைத்து அல்லது அரசாங்கத்திற்கு சாதகமாக பதவிக் காலத்தை நீடிக்கும் நடைமுறை உருவானால் அது நீதிமன்றத்தின் மீதான பொதுமக்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும் செயற்படாகும். ஒருவேளை ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டாலும் அது தற்போது பணியில் இருக்கும் நீதிபதிகளுக்கு பொருத்தமற்ற வகையிலும், இனி புதிதாக நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு மட்டுமே பொருந்தும் வகையிலும் அமுல்படுத்தப்பட வேண்டும்.

மேலும், அந்த திருத்தத்தைக் கொண்டுவருவதில் அரசாங்கம் காட்டும் அவசரம் குறித்து பல கேள்விகள் எழுகின்றன. நடப்பு ஆண்டில் பல மூத்த நீதிபதிகள் ஓய்வுபெற்றபோது எடுக்கப்படாத இந்த நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் தலைமை நீதிபதி ஓய்வுபெற உள்ள நிலையில் அவசரமாக முன்வைக்கப்படுவது பொதுமக்களிடையே பல சந்தேகங்கள் எழுப்பியுள்ளது. இத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால் முதன்மையாக தற்போதைய தலைமை நிதிபதியின் பதவிக் காலமே நீடிக்கப்படும் என்பதால் இதன் பின்னணியில் உள்ள நகர்வுகள் தெளிவாக விளங்குகின்றன.

அத்துடன், அரசாங்கத்தரப்பினர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது இத்திருத்தங்களை எதிர்ப்பவர்கள் தனிப்பட்ட காரணங்களினால் குறிப்பிட்ட சலுகைகளைப் பாதுகாப்பதே அவர்களின் நோக்கம் என்று குற்றம் சாட்டினார்கள். குறித்த விவாதத்தை சலுகைகளுக்கான போராட்டமாக அல்லது ஒரு தரப்பினரின் போராட்டமாகவோ கருதக்கூடாது. நாட்டின் ஆட்சியையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாதுகாப்பது மட்டுமே தங்களின் ஒரே நோக்கம். நீதிமன்றங்களின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை எக்காலத்திலும் பாதுகாக்கப்பட்டதாக வேண்டும்.

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியில் இருக்கும் போது நீதித்துறையின் சுதந்திரம் குறித்து பேசுவதும் அதிகாரத்துக்கு வந்தவுடன் அதனை மறந்து செயல்படுவதும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் சட்டத்தரணிகள் அவ்வாறு இல்லை. நாம் எந்த ஆட்சிக்காலத்திலும் ஒரே நிலையான கொள்கையில் உறுதியாக காணப்படுவோம்.

கடந்த 2022 ஆம் ஆண்டு அரகல போராட்ட காலங்களில் போராட்டக்காரர்களின் உரிமைக்காகவும், கைது செய்யப்பட்டவர்களுக்காவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்னின்றமை நினைவில் இருக்கும். அன்று அவர்களுடன் இணைந்து செயல்பட்ட இன்றை அரசியல் தலைவர்கள் அதிகாரத்துக்கு வந்த சட்டத்தரணிகள் சங்கம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து முத்திரை குத்துவது பெரும் முரண்பாடாக உள்ளது. அரசியலமைப்பு சட்டமானது தனிநபர்களின் நலன்களுக்காக திருத்தப்படக் கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதுடன் தற்போதைய ஜனாதிபதி கொள்கை ரீதியாக அதனை அறிவார்.

அரசியலமைப்பு திருத்ததுக்கு மக்கள் தீர்ப்பு தேவையில்லை என்றும், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையே போதுமானது என்று அரச தரப்பினர் வாதாடுகிறது. ஆனால் இலங்கை அரசியலமைப்பின்படி நீதித்துறை அதிகாரம் என்பது நாட்டின் இறையாண்மையுள்ள மக்களின் முதன்மை அதிகாரத்தின் ஒரு பகுதியாகும். எனவே நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் எந்தவொரு திருத்தமும் மக்களின் அதிகாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் எனின் அதற்கு பாராளுமன்ற பெருபான்மை மட்டும் தீர்வாக அமையாது, கட்டாயம் மக்கள் தீர்ப்பும் பெற வேண்டும்.

அதேவேளை, தாங்கள் எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடாததால் நீதித்துறை சுதந்திரம் என்பது தங்களுக்குத் தேவையில்லை என சாதாரண பொதுமக்கள் நினைக்கக்கூடும். ஆனால், தங்களின் அன்றாட உரிமைகள் பாதிக்கப்படும்போது தான் நீதித்துறை சுதந்திரத்தின் உண்மையான அவசியம் அவர்களுக்கு உணர்வாகும். உதாரணமாக, அரசு நடத்தும் பொதுத்தேர்வுகளில் ஏதேனும் அநீதியோ அல்லது முறைகேடுகளோ நடந்தால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் நீதிமன்றத்தை நாடும்போது, அவர்களுக்குச் சாதகமான மற்றும் நடுநிலையான தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை சுதந்திரமான நீதித்துறையால் மட்டுமே சாத்தியமாகும்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை சுதந்திரத்திற்கான சிறப்பு பிரதிநிதி உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் இத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளன. எதிர்க்கட்சிகளோ அல்லது சட்டத்தரணிகள் சங்கமோ தவறான தகவல்களைக் கூறியதால் மட்டுமே ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகள் அறிக்கைகள் வெளிவிடாது. சர்வதேச அமைப்புகளை எதிர்க்கட்சி தவறாக வழிநடத்துகிறது என்ற அரசின் குற்றச்சாட்டு தவறானது. பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்காமல் அவசர அவசரமாகவும் இரகசியமாகவும் இந்த சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர அரசு முயல்வது ஏன் என மக்கள் சிந்திக்க வேண்டும். நீதிமன்றத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இதுதான் தீர்வு என்று நம்பி இத்திருத்தத்தை நிறைவேற்றினால், அதன் பின்னணியில் உள்ள பேராபத்தை நாடு அனுபவிக்க நேரிடும். யாரோ சிலர் அரசாங்கத்திற்குத் தவறான ஆலோசனைகளை வழங்கி தவறாக வழிநடத்துகிறார்கள் என்றார்.

ShortNews

நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் - நாமல் அழைப்பு!


அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லும் தீர்மானத்தை உயர்நீதிமன்றம் அறிவிக்காது என்று நீதியமைச்சரால் எவ்வாறு குறிப்பிட முடியும். நீதித்துறையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அரசாங்கம் முயற்சிக்கிறது. நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில்  திங்கட்கிழமை (24) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாங்கள் கிராமத்துக்கு கிராமம் சென்று மக்களுடன் கலந்துரையாடுகிறோம். மக்கள் தங்களின் பிரச்சினைகளை எம்முடன் குறிப்பிடுகிறார்கள். அவற்றை நாங்கள் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துகிறோம்.

எதிர்க்கட்சிகள்  கிராமத்துக்கு கிராமமாக சென்று அரசியல் கூட்டங்களை நடத்துகின்ற நிலையில் எதிர்வரும் மாதம் 05 ஆம் திகதி முதல் மாவட்ட மட்டத்தில் ஜனாதிபதி  பொது கூட்டங்களை நடத்துவதாக குறிப்பிடப்படுகிறது.இதுவும் சிறந்ததே ஜனாதிபதி மக்கள் மத்தியில் செல்ல வேண்டும் அப்போது தான் பல பிரச்சினைகள் பற்றி தெரியவரும்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு மக்கள் வாக்கெடுப்புக்கு செல்லும் தீர்மானத்தை உயர்நீதிமன்றம் அறிவிக்காது என்று நீதியமைச்சர் குறிப்பிடுகிறார்.

நீதிமன்றம்  தீர்ப்பளிப்பதற்கு முன்னர் நீதியமைச்சர் எவ்வாறு உறுதியாக மக்கள் வாக்கெடுப்புக்குச் செல்லும் தீர்மானத்தை நீதிமன்றம் அறிவிக்காது என்று குறிப்பிட முடியும். இந்த 22 ஆம் திருத்தம் ஊடாக அரசாங்கம் நீதித்துறையை கைப்பற்ற முயற்சிக்கிறது.

நாட்டு மக்களுக்காகவே எதிர்க்கட்சிகள் அனைத்தும் இன்று ஒன்றிணைந்துள்ளன. நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என்றார்.

ShortNews

மக்களிடையே அரசின் செல்வாக்கு குறைந்துள்ளது - விமல்!


அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் பின்னணியிலுள்ள அரசியல் நோக்கம் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இராணுவ வீரர்களின் நினைவேந்தலின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலையான போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,''தற்போதைய ஆட்சிப்பீடம் தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அரசியலமைப்புச் சட்டங்களைச் சாதகமாகப் பயன்படுத்துவதாகவும், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக, விவசாயிகளின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் தேர்தல் நடத்தப்படாமை போன்ற விடயங்கள் மக்களிடையே அரசாங்கத்தின் செல்வாக்கை சரித்துள்ளது.

வெறும் சட்ட அமுலாக்க அதிகாரங்களைக் கொண்டு மாத்திரம் ஒரு நாட்டை நீண்டகாலம் ஆள முடியாது. மக்களின் அபிலாஷைகளை மதிக்காத எந்தவொரு ஆட்சியும் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, வயதானவர்கள் நாட்டை அழிக்கிறார்கள் என்றும் முதியவர்களுக்கு வீட்டில் கூட இடம் தரக்கூடாது என்றும் கூறியது. ஆனால் இன்று, வயது கூடும்போதுதான் முதிர்ச்சியும் செயல்திறனும் அதிகரிக்கும் என்று திடீரெனக் கூறத் தொடங்கியுள்ளது.

நீதிமன்றங்களில் சாதாரண மக்கள் அலைக்கழிக்கப்படுவதைத் தடுப்பதற்காக அல்லாமல், ஒரு குறிப்பிட்ட தனிநபரை (உயர் நீதிமன்ற நீதிபதியை) பதவியில் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்துடனேயே ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு பொதுஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தும் எண்ணமோ அல்லது அதற்கான திறமையோ இல்லை. அவர்களுக்கு அத்தகைய தைரியம் இருந்தால், முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும்.''என தெரிவித்தார்.

ShortNews

சீருடை விவகாரத்தை இன மோதலாக்க வேண்டாம் – சம உரிமை இயக்கம்!


கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சையை இனவாத மோதலாக மாற்ற வேண்டாம் என சம உரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் ஹிஜாபுடன் சீருடைக்கு கீழ் நீளக் கால்சட்டை அணிந்து பணிக்கு வந்தமை தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து குறித்த ஒன்பது ஊழியர்களையும் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்துள்ளமை பிரச்சினைக்கு தீர்வாகாது எனவும், இதனால் இனவாத பதற்றம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் சம உரிமை இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


சீருடை தொடர்பான இறுதி தீர்மானங்கள் தேசிய மட்டத்தில் உரிய நடைமுறைகளின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள இயக்கம், அனைத்து சமூகங்களினதும் மத மற்றும் கலாச்சார உரிமைகளை கருத்திற்கொண்டு இவ்விவகாரத்திற்கு நியாயமான தீர்வை வழங்குமாறும் கோரியுள்ளது.

ShortNews

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பு!


மாகாண சபைத் தேர்தலைச் சாத்தியமான வகையில் விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி அண்மையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது என வெளியிட்ட கூற்றுத் தொடர்பாக, இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வருடத்தில் பாராளுமன்றத்தினால் சட்டங்கள் இயற்றப்பட்டு எல்லை நிர்ணயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், தேர்தலை நடத்துவதற்காக ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அங்கு குறிப்பிட்டார்.

தேர்தலை நடத்துவதற்கான சட்டமொன்று இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது எனவும், அதற்கமைய விரைவாகச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அமைச்சர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இந்த ஆண்டில் பாராளுமன்றம் சட்டமியற்றி, எல்லை நிர்ணயப் பணிகளைச் செய்து தந்தால், ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்.

மாகாண சபைத் தேர்தலை நடத்தப்போவதில்லை என்ற எண்ணம் இல்லை. பாராளுமன்றில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் அந்த நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும். தேர்தலை நடத்துவதற்கான சட்டம் இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது. சட்டத்தை நாம் விரைவாக பாராளுமன்றில் நிறைவேற்ற வேண்டும்​ என்றார்.

SHAHNI RAMEES

கொளத்தூர் வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வழக்கு: அடுத்த வாரம் விசாரணை

 


‘‘கொளத்தூர் தொகுதியில் (தமிழக வெற்றிக்கழக

ShortNews

கெஹல்பத்தர பத்மேவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!


தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த, கெஹல்பத்ர பத்மேவை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ShortNews

இரத்மலானையில் விமானம் விபத்து!


இரத்மலானை விமான நிலையத்திற்கு அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த செஸ்னா 152 ரக இலகு விமானம் விபத்துக்குள்ளானது.

பயிற்சி விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இந்த விபத்துச் சம்பவத்தையடுத்து இரத்மலானை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ShortNews

சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு!




அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 90 நாட்கள் தடுப்புக் காவல் காலம் முடிவடைந்துள்ளது.

இந் நிலையிலேயே மேலும் 90 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக 90 நாட்கள் தடுப்புக் காவற் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த காலத்தில் சுரேஷ் சலே உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

ShortNews

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சரத் பொன்சேகா ஆதரவு!


“உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை நீடிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் வரவேற்கத்தக்கவையாகும். எனது அனுபவத்துக்கமைய அந்தத் தீர்மானத்தை நான் அனுமதிக்கிறேன். தனிப்பட்ட நபர்களின் பயத்துக்காக எதுவும் செய்ய முடியாது. அது தனிநபர்களின் பிரச்சினை. பொதுவாக பார்த்தால் இது மிகவும் சிறந்த தீர்மானமாகும்.

காலத்துக்கு தேவையான தீர்மானமென்றே கருதுகிறேன்” என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘‘நாட்டில் நீண்ட காலமாக மிகவும் ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரம் இருந்தது. பணம் இருக்கும் நபர்கள் தொடர்ந்தும் திருடி, மக்களின் பணத்தை சூறையாடுமளவுக்கு அந்த ஊழல் தலைதூக்கியிருந்தது. உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது எமது நாட்டில் நூற்றுக்கு 70 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் வறுமையாளர்கள்.

பெரும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறார்கள். மேற்குறிப்பிட்டது போன்று மக்களின் பணத்தை சூறையாடி, அதனூடாக வாக்கு வங்கிகளையும் உழைத்த கலாசாரமே நிலவி வருகிறது.

அந்த ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தினால் நாட்டையும் மக்களையும் நேசித்த நேர்மையான புத்திசாலித்தனமான அரசியல்வாதிகள் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்படவில்லை. நாட்டை சூறையாடும் ஏமாற்றுக்காரர்கள் மாத்திரம் பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்டதன் பிரதிபலனாக நாடு சீரழிவை சந்தித்தது.

ஊழல் நிறைந்த அரசியல் காலாசாரத்தினால் அரசியலும் திரிவடைந்தது. அந்த திரிவடைந்த அரசியல் கடந்த தேர்தலுடன் ஓரளவு நேர்மறையாக மாறியுள்ளது. இது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

இருந்தபோதும், அரசியல் புதிய கலாசாரத்துக்குள் காலெடுத்து வைத்திருந்தாலும் பல காலமாக பின்பற்றிவந்த அரசியல் நடத்தைகள் இன்னும் மக்கள் மத்தியில் இருக்கின்றன. எனவே, இன்னும் மக்கள் அரசியல் அலையை நோக்கிப் பயணிக்கும் நிலைமையை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

இது நாட்டுக்கு ஏற்புடையதாக இருக்குமென்று நான் நம்பவில்லை. எனவே, வாக்களிக்கும்போது வாக்களிக்கும் நபரை நன்கு ஆராய்ந்து வாக்களித்து பழக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் கட்சிகளுக்கு அடிமையாகும் பண்பு தொடரும்.

பொருளாதார நெருக்கடியுடன் ஊழல் அரசியலிலிருந்து மக்கள் விடுபட்டுள்ளார்கள். எனவே, இதற்குச் சிறந்த அடித்தளமொன்றை இட்டு கட்டியெழுப்பவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தற்போதைய அரசாங்கத்தின் சிறு தவறினால் மக்கள் பழைய நிலைமைக்கு திரும்பினால் மீண்டும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு 70 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிவரும்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை மக்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எதிர்க்கட்சியின் வெற்றிடம் இருக்கிறது. இந்த நாட்டுக்கு நேர்மையான, வினைத்திறன், உண்மையான, புத்திசாலித்தனமான அரசியல்வாதிகளுடனான எதிர்க்கட்சி அவசியமென்று கருதுகிறேன். மக்களும் அதனைப்புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.

தற்போதைய நாட்களில் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயதெல்லையை அதிகரிப்பதற்கான முயற்சிகள் குறித்து தீர்க்கமாக பேசப்பட்டுவருகிறது. 40 ஆண்டுகள் அரச சேவையில் இருந்துள்ளேன். எனது அனுபவத்துக்கமைய அந்தத் தீர்மானத்தை நான் அனுமதிக்கிறேன்.

உதாரணமாக, இராணுவ வீரர்கள் 22 ஆண்டுகள் சேவையாற்றி ஓய்வு பெற்றுச்சென்றார்கள். 40 45 வயதாகும்போது, ஓய்வுபெறும்போது அவர்களால் வேறு வேலைவாய்ப்பையும் தேடிக்கொள்ள முடியாது. அவர்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள்.

பொதுவாகப் பார்த்தால், இது சகல அரச ஊழியர்களையும் பாதிக்கிறது. உலக நாடுகளில் ஓய்வுபெறும் வயதெல்லை என்பது பாரிய சிக்கலை உருவாக்கியுள்ளது. ஆகவே, நீதியரசர்கள், நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை இரண்டு வருடங்களால் அதிகரிப்பதால் நாட்டுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது.

அரச அதிகாரிகளுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் ஓய்வு வயதெல்லையை இரண்டு வருடங்களாக அதிகரிக்கவேண்டும் என்றே நான் வலியுறுத்துகிறேன். இதில் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை.

குறித்த நீதியரசர் ஒருவர் தொடர்ந்து இருந்தால் தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கி, தன்னை சிறையிலடைத்து விடுவாரா என்று யாருக்காவது பயம் இருக்குமாக இருந்தால் அதற்கு எதுவும் செய்ய முடியாது. அது தனி நபரின் பிரச்சினை. பொதுவாக பார்த்தால் இது மிகவும் சிறந்த தீர்மானம். காலத்துக்கு தேவையான தீர்மானமென்றும் கருதுகிறேன்’’ என்றார்.

ShortNews

சுகீஸ்வர பண்டார தொடர்ந்து விளக்கமறியலில்......


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேகச் செயலாளர், சுகீஸ்வர பண்டாரவை செப்டம்பர் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்ககுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர் இன்று(25) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Zameera

கெஹெல்பத்தர பத்மே நீதிமன்றில் ஆஜர்


 தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.