“ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களின் பிரதிநிதி. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு மக்கள் எதிர்ப்பு வெளியிடுகிறார்களென்றால், இல்லை இதனை எவ்வாறாவது நிறைவேற்றுவேன், இடைநிறுத்த மாட்டேன் என்று ஜனாதிபதி கூற முடியுமா? ஜனாதிபதியும் மக்களின் நம்பிக்கை அடிப்படையிலேயே செயலாற்றுகிறார். மக்கள் தரப்பிலிருந்து இவ்வளவு எதிர்ப்பு வரும்போது, எவ்வாறாவது நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி கூறுகிறாரென்றால் அது பொறுப்பற்ற அறிவிப்பாகும்” என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையொன்று கொழும்பிலுள்ள சட்டத்தரணிகள் சங்க பிரதான அலுவலகத்தில் நேற்று (31) இடம்பெற்றது. அந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘சட்டத்தரணிகளாகிய எங்களுக்கும் எல்லை இருக்கிறது. இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கிறார்கள் என்பதை அவரே கூறியிருக்கிறார். எனவே, எங்களால் முடிந்த வகையில் எங்களின் எதிர்ப்பை முன்வைப்போம்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதா இல்லையா என்பதை உயர் நீதிமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டும். ஆரம்பத்தில் இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை உயர்நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றால் உயர்நீதிமன்ற தரப்பினரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகுவார்கள் என்று ஜனாதிபதியிடம் கூறியிருந்தோம்.
எனவே, இந்த அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது அவசியமென்று உயர்நீதிமன்றத்தில் நாங்கள் மனுத்தாக்கல் செய்திருக்கிறோம். வழக்கு விசாரணைகளை உயர்நீதிமன்றம் இந்த வாரத்தில் ஆரம்பிக்குமென எதிர்பார்க்கிறோம். அந்தச் சந்தர்ப்பத்திலேயே என்னவாகும் என்பதை அவதானிக்க முடியும்.
எல்லா சந்தர்ப்பங்களிலும் வேறு வேறு விடயங்களை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. தற்போதும் அதனையே இந்த அரசாங்கம் செய்ய முயற்சிக்கிறது. கொள்கை அடிப்படையில், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.
இது தற்போதுள்ள பிரச்சினை மாத்திரமல்ல. அரசியலமைப்பை திருத்தும்போது, மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை நீண்டநாள் தொடர் பிரச்சினையாக மாறும் என்பதில் ஐயமில்லை. மக்களையும் பாதிக்கும்.
நீதிமன்ற சுயாதீனத்தன்மை என்பது உன்னதமான கருத்தாடல். அந்த கருத்தாடலுக்கு ஆபத்து அல்லது பிரச்சினை ஏற்படுமாக இருந்தால் கட்டாயம் நாங்கள் அதற்கு எதிர்ப்பை வெளியிடுவோம். நாங்கள் அறிந்த வகையில், கொள்கை அடிப்படையில் அந்த அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆளுந்தரப்பினரிலும் அநேகமானவர்கள் அவர்களின் எதிர்ப்பை வெளியிடுகிறார்கள் என்று கருதுகிறேன்.
நாட்டை ஆதரிக்கும் ஜனநாயகம், சட்டவாட்சி, நீதிமன்ற சுயாதீனத்தை மதிக்கும் எந்தவொரு நபரும் இதுபோன்ற திருத்தத்துக்கு இணக்கம் தெரிவிக்க மாட்டார்கள். சில பிரச்சினைகளுக்கு சரியான பதிலெதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இந்தத் திருத்தம் தொடர்பில் எங்களுக்கு இருக்கும் கொள்கை அடிப்படையிலான பிரச்சினைகளை முன்வைத்தே இருக்கிறோம். அவரும் அவரது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், அவருடனான பேச்சுவார்த்தையில் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.
தற்போதும் கூட நாங்கள் ஒன்றுகூற ஜனாதிபதி அதற்கு மாறான வேறொரு நிலைப்பாட்டையே வெளிப்படுத்துவார். இன்னும் இந்தக் கலந்துரையாடல் நடுநிலைக்கு வரவும் இல்லை.
அரசாங்கத் தரப்பைத் தவிர்ந்த ஏனைய சகலத் தரப்பினரும் இதற்கு அவர்களின் எதிர்ப்பையே வெளிப்படுத்துகிறார்கள். சர்வதேச மட்டத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமே வேறு யார் எதிர்ப்பு வெளியிட வேண்டும் என்பது புரியவில்லை.
அரசாங்கத் தரப்பினர் மாத்திரமே இதற்கு ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள். இவ்வாறான எதிர்ப்புகள் இருக்கும்போது அப்படியொரு அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதற்கான கட்டாயத்தேவை என்னவிருக்கிறது என்பது புரியவில்லை.
ஜனாதிபதி நாட்டு மக்களின் பிரதிநிதி. மக்கள் எதிர்ப்பு வெளியிடுகிறார்கள் என்றால், இல்லை இதனை எவ்வாறாவது நிறைவேற்றுவேன். இடைநிறுத்த மாட்டேன் என்று ஜனாதிபதி கூற முடியுமா? ஜனாதிபதியும் மக்களின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே செயலாற்றுகிறார்.
மக்கள் தரப்பிலிருந்து இவ்வளவு எதிர்ப்பு வரும்போது, எவ்வாறாவது நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி கூறுகிறார் என்றால் அது பொறுப்பற்ற அறிவிப்பாகும்’’ என்றார்.