
Tuesday, March 31, 2026

ரஷ்யா, சீனாவிற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பகிரங்க எச்சரிக்கை
ஈரானுக்கு ஆதரவளிக்க சீனா மற்றும் ரஷ்யா எடுக்கும் முயற்சிகளை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், தேவைப்படும் போதெல்லாம் அந்தத் தலையீடுகளுக்கு எதிராகச் செயற்படும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஹெக்செத், மத்திய கிழக்கு மோதலில் அடுத்த சில நாட்கள் மிகவும் தீர்மானமிக்கதாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, ஈரான் ஆயுதப் படைகளிலிருந்து வீரர்கள் பெருமளவில் வெளியேறும் போக்குக் காணப்படுவதாக அவர் இதன்போது வெளிப்படுத்தினார்.
ரஷ்யாவும் சீனாவும் ஈரானுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பது பற்றி அமெரிக்கா சரியாக அறிந்துள்ளதாகவும், அவை அனைத்தையும் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், தேவையான இடங்களில் அவர்களை நேரடியாக எதிர்கொள்வோம் என்றும் அவர் கூறினார்.
புலனாய்வுத் தகவல்களை மேற்கோள் காட்டிப் பேசிய ஹெக்செத், அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரான் இராணுவத்தின் மன உறுதி சிதைந்துள்ளதாகக் கூறினார். இதன் காரணமாக வீரர்கள் இராணுவத்தை விட்டு வெளியேறுவதும், சிரேஷ்ட தலைவர்கள் மத்தியில் கடும் விரக்தி ஏற்பட்டுள்ளதும் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"எங்களிடம் தெரிவுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் ஈரானுக்கான தெரிவுகள் மட்டுப்படுத்தப்பட்டவை. கடந்த ஒரு மாதத்திற்குள்ளேயே போருக்கான நிபந்தனைகளை நாங்கள் தீர்மானித்துவிட்டோம். வரும் நாட்கள் மிகவும் முக்கியமானவை," என அவர் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை தாம் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு விஜயம் செய்ததாகவும், அங்கு ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை நேரடியாக அவதானித்ததாகவும் ஹெக்செத் மேலும் தெரிவித்தார்.

மார்ச் மாதத்தில் 1.75 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை
மார்ச் மாதத்தின் கடந்த 29 நாட்களில் 175,661 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்டுள்ள புதிய தரவுகளின்படி, இக்காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 45,650 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர், இது மொத்த எண்ணிக்கையில் 26% ஆகும்.
அத்துடன், இக்காலப்பகுதியில் ரஷ்யாவிலிருந்து 15,579 பேரும், ஜெர்மனியிலிருந்து 12,603 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 17,030 பேரும், சீனாவிலிருந்து 13,449 பேரும் மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து 10,219 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் மார்ச் 29 ஆம் திகதி வரையிலான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 732,316 ஆகப் பதிவாகியுள்ளது.
அவர்களில் இந்தியாவிலிருந்து 145,390 பேரும், ரஷ்யாவிலிருந்து 65,812 பேரும் மற்றும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 77,358 பேரும் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

நாளை தினத்தில் அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்க தீர்மானம்!
நாளை (01) அதாவது ஏப்ரல் 01ஆம் திகதி ஒற்றை மற்றும் இரட்டை ஆகிய இரண்டு இலக்கங்களையும் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இன்றும் (31) நாளையும் (01) ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளாக அமைவதால், நாளை தினத்தில் இரட்டை இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவித்தார்.

நிலவும் வெப்பமான வானிலை தொடரும்
நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துகளை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவறுத்தியுள்ளது.







