அதிக சூடான தேநீர், கோப்பி அருந்துவதால் உணவுக்குழாய் புற்றுநோய் ஆபத்து மூன்று மடங்குக்கு மேல் அதிகரிக்கலாம்
(மனோகரன் பிரியங்கா)
ஒரு மில்லியன் மக்களை உள்ளடக்கி பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் ஆய்வொன்றின் மூலம், அதிக சூடான தேநீர், கோப்பி மற்றும் ஏனைய பானங்களைக் குடிப்பதால் உணவுக்குழாய் புற்றுநோய் (Esophageal Cancer) ஏற்படும் ஆபத்து மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கக்கூடும் என தெரியவந்துள்ளது.
‘இன்டர்நேஷனல் ஜர்னல் ஒஃப் கென்சர்’ (International Journal of Cancer) இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வின் மூலமே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிதமான சூட்டில் பானங்களை அருந்துபவர்களுடன் ஒப்பிடுகையில், "அதிக சூட்டில்" (Hot) பானங்களை விரும்பிக் குடிப்பவர்களுக்கு 'எசோபேகியல்ஸ்குவாமஸ் செல் கார்சினோமா' (Esophageal Squamous Cell Carcinoma) வகை புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இரண்டு மடங்கு அதிகமாகும்.
பானங்களை "மிக அதிக சூட்டில்" குடிப்பவர்களுக்கு இந்த ஆபத்து மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கிறது.
உணவுக்குழாய் (Esophagus) என்பது வாயிலிருந்து வயிற்றுக்கு உணவையும் பானங்களையும் கொண்டு செல்லும் தசைநார் குழாயாகும்.
வெப்பநிலையைக் கருத்திற் கொண்ட பின்னரும் கூட, ஒரு நாளைக்கு 6 அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் சூடான பானங்களைக் குடிப்பவர்களுக்கு, 6 தடவைகளுக்கும் குறைவாகக் குடிப்பவர்களை விட இந்நோய் ஏற்படும் ஆபத்து 71% அதிகமாக உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகவரகம் 65°C க்கும் அதிகமான வெப்பநிலையில் குடிக்கப்படும் பானங்களை "மிக அதிக சூடான பானங்கள்" என வரையறுத்துள்ளதுடன், இவற்றை அருந்துவது மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்கக்கூடிய சாத்தியக்கூறு கொண்டது (Pஎனவும் வகைப்படுத்தியுள்ளது.
அதேவேளை, பொதுமக்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஒட்டுமொத்த சாத்தியக்கூறு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளதாகவும், இந்த ஆய்வு முடிவுகள் சூடான பானங்களுக்கும் புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்பை மட்டுமே சுட்டிக்காட்டுகின்றனவே தவிர, சூடான பானங்களே நேரடியாகப் புற்றுநோயை உண்டாக்குகின்றன என்பதை முழுமையாக நிரூபிக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


