
Sunday, August 16, 2026

நெடுந்தீவை நோக்கி சென்ற படகு மாயம்
குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு சென்ற படகு ஒன்றில் 10 பேர் காணமல் போயுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.
குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு பயணித்த படகு ஒன்றே உரிய நேரத்தில் நெடுந்தீவை வந்தடையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்குள்ளான படகில் 10 பேர் பயணித்துள்ள நிலையில் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
அந்த பகுதியில் கடல் மிகவும் கொந்தளிப்பதாக காணப்படுவதாகவும், தேடுதல் பணிகளுக்கு சிரமமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் குறித்த படகை மீட்கும் பணிகளை கடற்படை ஆரம்பித்துள்ளதாக கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.

தாங்க முடியல! | CID-இல் புகார் அளிக்க வந்த கெமுனு விஜேரத்ன!
நான் ஒரு புகாரை அளிக்க வந்தேன். குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் என்னை இந்த மெட்ரோ பஸ் விவகாரத்துடன் இணைத்துத் தொடர்ந்து தாக்கி, அவதூறு பரப்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக இது நின்றுவிடும் என்று பொறுமையுடன் காத்திருந்தேன்.
ஆனால் இது நிற்கவில்லை; தொடர்ந்து அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. நேற்றைய தினமும் கூட சில சமூக ஊடகங்களில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியிருந்தார்கள்.
நான் அவற்றைப் பார்ப்பதில்லை. ஆனால் எனது பேருந்து உரிமையாளர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் இதைக் கேட்டு, "தலைவரே, இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கக் கூடாதா?" என்று கேட்கிறார்கள்.
வழக்கமாக நான் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை. ஏதாவது ஒன்றை தாங்கிக்கொள்ளும் சக்தி இருந்தால், அதை சகித்துக்கொள்வதுதான் நல்ல பண்பு.
கடந்த நாட்களில் நான் அதை சகித்துக் கொண்டுதான் இருந்தேன், பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், வெளியில் இருந்து வந்த அழுத்தங்கள் காரணமாகவும், உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்றுமே நான் இந்தப் புகாரைப் பதிவு செய்ய வேண்டியதாயிற்று.
போக்குவரத்து என்பது ஒரு மிகப்பெரிய பாடம். அதை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பாடமாகப் பள்ளிகளிலேயே இதைக் கற்பிக்க வேண்டும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, வெளிப்புற தோற்றத்தை மட்டும் பார்த்துக்கொண்டு பலர் இதை விமர்சிக்கிறார்கள். இது மிகவும் வருத்தத்திற்குரியது.
இந்த இளைஞர்களைப் பார்க்கும்போது, இவர்கள் மழைக்காவது பள்ளிக்குச் சென்றிருப்பார்களா என்ற கேள்வி எழுகிறது. இளைஞர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் என்னிடம் கேட்கலாம்.
இலங்கையில் போக்குவரத்து தொடர்பான முதல் புத்தகத்தை 2004-இல் நான் தான் எழுதினேன். பின்னர் 2013-இல் இரண்டாவது புத்தகத்தை எழுதினேன். போக்குவரத்து என்பது மிகவும் ஆழமான ஒரு துறை.
என்னைக் கேலியாக 'பஸ் கெமுனு' என்று அழைக்கிறார்கள். எனக்கு 'கெமுனு விஜேரத்ன' என்று ஒரு பெயர் இருக்கிறது. ஒரு மனிதனுக்குக் கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச மரியாதையைக் கொடுக்க வேண்டும்.
இதுபோன்ற தரமற்ற கருத்துக்கள் எனது மனதை தொடர்ந்து வேதனைப்படுத்துகின்றன. இதனால்தான் நான் இன்று CID-இல் புகார் அளிக்க வந்தேன்.
மெட்ரோ பஸ் திட்டம் என்பது புதிதாக வந்த ஒன்றல்ல. 2023 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, இதற்கான ஒரு திட்ட அறிக்கையை போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பித்திருந்தேன்.
சீன எக்ஸிம் வங்கியின் (Exim Bank) கடனுதவியுடன் இத்திட்டத்தைச் செயல்படுத்த நினைத்தோம். மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் இதைச் செய்ய முயலவில்லை. ஆனால் அன்றைய அமைச்சர் பந்துல குணவர்தன அதற்கு ஆதரவளிக்கவில்லை.
அனைத்து அரசாங்கங்களாலும் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். கடந்த கால அமைச்சர்கள் பெரிய பஸ் உரிமையாளர்களுடன் உடன்பாடுகளைச் செய்துகொண்டு இத்துறையை வீழ்ச்சியடையச் செய்தனர்.
நான் இந்த மெட்ரோ பஸ் கருத்தாக்கத்திற்கு (Concept) எதிரி அல்ல. ஆனால் CTB (SLTBP) என்பது நாளொன்றுக்கு 2 கோடி ரூபாய் நஷ்டமடையும் ஒரு நிறுவனம்.
நான் 40 வருடங்களாக அரசாங்கத்திற்கு வரி செலுத்தி வருகிறேன். எனவே, மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுவதைக் கண்டித்துக் கேட்க எனக்கு உரிமை உண்டு.
10 ஆண்டுகளுக்கு முன்பே லேலண்ட் நிறுவனத்திடமிருந்து 60 'லோ ஃபளோர்' (Low-floor) பஸ்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அவை தோல்வியடைந்ததால், நெடுஞ்சாலைகளில் (Expressway) இயக்கப்பட்டன.
பணாகொட லேலண்ட் நிறுவனத்திற்குச் சென்று பாருங்கள், இன்னமும் 20 பஸ்கள் அப்படியே நிற்கின்றன. இவற்றிற்கு சூப்பர் டீசல் தேவை. ஒரு லிட்டருக்கு 1.5 முதல் 2 கி.மீ மட்டுமே ஓடும்.
இவ்வளவு நஷ்டத்தில் பஸ்களை இயக்குவது சாத்தியமில்லை. மக்களிடமும் இப்போது அதிக பணம் இல்லை, பஸ் கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் நடந்து செல்லத் தொடங்கிவிடுவார்கள்.
தொழில்முறை அடிப்படையில் சிலர் திட்டமிட்டே என்னை வீழ்த்த இத்தகைய சமூக ஊடகத் தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஆனால் நான் எதற்கும் அஞ்சப்போவதில்லை. நாட்டிற்காகவே குரல் கொடுக்கிறேன்.
பொதுமக்களின் வரிப்பணத்தை வீணாக்காதீர்கள் என்பதே எனது ஒரே கோரிக்கை.
தினமும் 2 கோடி நஷ்டமடையும் ஒரு நிறுவனம் இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்தினால், எதிர்காலத்தில் நஷ்டம் 4 கோடியாக உயரும்.

2029ஆம் ஆண்டிலும் அனுர குமார திசாநாயக்கவே ஜனாதிபதி...
தற்போதைய அரசாங்கம் ஆறு மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று கணித்த எதிர்க்கட்சிக் குழுக்கள், இப்போது 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் பற்றி பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அன்று திசைகாட்டி (மாலிமாவ) அரசாங்கத்திற்கு அனுபவம் இல்லை எனக் கூறிப் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்த போதிலும், இன்று அந்த அனைத்து வாதங்களும் முறியடிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
“ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசாங்கத்தைக் கவிழ்க்கக் காத்திருந்தவர்கள், இப்போது 2029 ஜனாதிபதித் தேர்தலைப் பற்றிக் கனவு காண்கிறார்கள். ஒரு புதரை மிதித்தால் கூட இப்போது 2029 ஜனாதிபதி வேட்பாளர்கள் உருவாகிறார்கள். அவர்கள் இப்போது பதவிப்பிரமாணம் செய்வது மட்டுமே பாக்கி என்பது போல் நடந்துகொள்கிறார்கள்,” என்று அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், 2024 தேர்தலில் சந்தேகத்துடனோ அல்லது பயத்துடனோ திசைகாட்டிக்கு வாக்களித்தவர்களும், வாக்களிக்காதவர்களும் கூட இப்போது அரசாங்கத்தைச் சுற்றி திரண்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்தோட்டப் பகுதி மக்களின் சம்பளப் பிரச்சினைகள் மற்றும் வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் காரணமாக, அப்பகுதிகளிலும் அரசாங்கத்திற்குப் பெரும் ஆதரவு கிடைத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் அனைத்து மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்கும் மக்கள் ஆதரவு அரசாங்கமாக திசைகாட்டி முன்னோக்கிச் செல்வதாகவும், அதற்கேற்ப 2029 ஆம் ஆண்டிலும் அனுர குமார திசாநாயக்க நிச்சயமாக ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் சுசந்த குமார நவரத்ன மேலும் வலியுறுத்தினார்.

பண்டாரகமையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை : சந்தேகநபர் கைது
பண்டாரகமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெலேகடே வீதிப் பகுதியில் வாலனை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை (15) நண்பகல் வேளையில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 562 லீற்றர் (750 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம், 4,094 லீற்றர் (26 பீப்பாய்கள்) கோடா மற்றும் மதுபானம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் 4 செப்புச் சுருள்கள், 2 நீர் மோட்டார்கள், 7 எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட பெருமளவிலான உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுப் பண்டாரகமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இச் சம்பவத்தில் பாதுகாப்பான முறையில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பில் பண்டாரகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்வரும் செப்டெம்பரில் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவரது விஜயம் அமையவுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம், பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்தாவை சந்தித்திருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாம் சிங்களின் விஜயம் சம்பந்தமான முன்னாயர்த்த நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காலி முகத்திடல் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், சடலத்தை அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் இளஞ்சிவப்பு நிற நீண்ட கை சட்டையையும், அரைக்கால் சட்டையையும் அணிந்திருந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





