Our Feeds



Wednesday, July 8, 2026

Zameera

நிஷான் கனகராஜாவுக்கு பிரித்தானியாவில் கிடைத்த நைட் பட்டம்




 இலங்கையில் பிறந்தவரும் பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான நிஷான் கனகராஜாவுக்கு பிரித்தானிய மன்னரால் நைட் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 


வின்ட்சர் மாளிகையில் நேற்று (7) நடைபெற்ற முதலீட்டு விழாவில் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் 'நைட்'பட்டத்தை வழங்கி கௌரவித்தார். 


உயர் கல்வித் துறைக்கு, குறிப்பாக கல்வியை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக, 2026 ஆம் ஆண்டுக்கான மன்னரின் புத்தாண்டு கௌரவப் பட்டியலில் பேராசிரியர் கனகராஜாவின் பெயர் இடம்பெற்றிருந்தது. 


இந்த நிகழ்வின் போது, பாரம்பரிய வழக்கப்படி முழங்காலிட்டிருந்த பேராசிரியர் கனகராஜின் தோள்களில் வாளினால் தொட்டு, பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் அவருக்கு உத்தியோகபூர்வமாக இந்த கௌரவத்தை வழங்கினார். 


1966 ஆம் ஆண்டு சுண்டிக்குளியில் பிறந்தார். 


தந்தை கனகராஜா யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் ஆசிரியராகவும், தாயார் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் ஆசிரியையாகவும் செயற்பட்டிருந்தனர். 


சென். ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான கனகராஜா 1985 ஆம் ஆண்டு கணிதத்துறையில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி நான்கு பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று கேம்பிறிஜ் பல்கலைக்கழத்திற்குத் தெரிவானார். 


அங்கு 1989 மற்றும் 1993 ஆம் ஆண்டுகள் முறையே இளங்கலை மற்றும் கலாநிதி பட்டங்களை நிறைவு செய்தார். 


யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் திகதி தொடக்கம் பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


Admin

AI தொழிநுற்பம் மூலம் ஆபாச தளங்கள் உருவாக்கி பாரிய மோசடி - இலங்கையில் அதிர்ச்சி தகவல்.



பேஸ்புக் தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண்களின் போலி கணக்குகளை உருவாக்கி, அதன் மூலம் பயனர்களை ஏமாற்றி ஆபாச உரையாடல் தளங்கள், சூதாட்டம் மற்றும் கிரிப்டோகரன்சி போன்ற சந்தேகத்திற்கிடமான தளங்களுக்கு அழைத்துச் செல்லும் ஒரு பாரிய மோசடி வலைப்பின்னல் கண்டறியப்பட்டுள்ளது.


ஆராய்ச்சியாளர் கலாநிதி சஞ்சன ஹத்துருவ மேற்கொண்ட "பேஸ்புக்கில் பெண்களின் AI கணக்குகள்: அடையாள ஏமாற்று, பாலியல் ரீதியான ஈர்ப்பு மற்றும் தளத்தின் பொறுப்புக்கூறல்" என்ற ஆய்வு அறிக்கையிலேயே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.


ஆய்வில் கண்டறியப்பட்ட முக்கிய தகவல்கள்:


முழுமையான போலிகள்: ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 10 பேஸ்புக் கணக்குகளும் உண்மையான நபர்களுக்குச் சொந்தமானவை அல்ல. இவை அனைத்தும் AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் புனையப்பட்ட அடையாளங்களைக் கொண்டவை.


ஒருங்கிணைந்த மோசடி: பெப்ரவரி 2025 முதல் ஜூன் 2026 வரையிலான காலப்பகுதியில், 1,706 இடுகைகள் ஆய்வு செய்யப்பட்டன. இவை சுமார் 9 லட்சம் ஈடுபாடுகளை (Likes, Comments, Shares) பெற்றுள்ளன. இந்த கணக்குகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன; ஒரே மாதிரியான வாசகங்கள் மற்றும் புகைப்படங்கள் பல கணக்குகளில் குறுகிய கால இடைவெளியில் பகிரப்பட்டுள்ளன.


பயனர்களைக் கவரும் யுக்தி: தனிமை, விவாகரத்து, விதவை அல்லது நிதி நெருக்கடியில் இருக்கும் பெண்கள் போன்ற பிம்பங்களை உருவாக்கி, பயனர்களுடன் சிங்கள மொழியில் உரையாடி, அவர்களை வாட்ஸ்அப் போன்ற தனிப்பட்ட செய்திப் பரிமாற்ற தளங்களுக்கு அழைத்துச் செல்வதே இவர்களின் முதன்மை யுக்தியாகும்.


நிதி மோசடி மற்றும் ஆபத்துகள்: பயோ (Bio) மற்றும் கமெண்ட் பகுதியில் உள்ள இணைப்புகள் மூலம் பயனர்கள் ஆபாச உரையாடல் தளங்கள், சூதாட்டங்கள் மற்றும் மோசடியான கிரிப்டோகரன்சி செயலிகளுக்குத் திசைதிருப்பப்படுகின்றனர். பயனர்கள் தனிப்பட்ட தளங்களுக்குச் செல்லும்போது, இந்த நபர்கள் தங்களது அடையாளங்களை மாற்றிக்கொள்வதால் அவர்களைக் கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது.


அரசியல் நோக்கம் இல்லை:

இந்த வலைப்பின்னல் அரசியல் செல்வாக்கைப் பெறுவதற்காகச் செயல்படவில்லை என்றும், இது முதன்மையாகத் திட்டமிடப்பட்ட ஒரு வணிக ரீதியான போலியான செயற்பாடு (Coordinated commercial inauthentic behaviour) என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், எதிர்காலத்தில் இவ்வாறான போலி அடையாளங்கள் நிதி மோசடிகளுக்கும், மக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்கவும் பயன்படுத்தப்படலாம் என கலாநிதி சஞ்சன எச்சரித்துள்ளார்.


பேஸ்புக்கின் பொறுப்புக்கூறல்:

ஒரு கணக்கு உண்மையானதா அல்லது AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதைப் பயனர்கள் கண்டறியும் வசதிகள் பேஸ்புக்கில் போதிய அளவில் இல்லை என இந்த அறிக்கை விமர்சித்துள்ளது. AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை வெளிப்படையாக அறிவித்தல், சுயவிவரப் பக்கங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை மற்றும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளை பேஸ்புக் நிறுவனம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


இணையப் பயனர்கள் தங்களுக்கு வரும் அறிமுகமில்லாத நட்பு கோரிக்கைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கையாளும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



Zameera

கண்டி எசல பெரஹெர ஆகஸ்ட் 13ல் ஆரம்பம்


 வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெர நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார். 


பெரஹெர நடைபெறும் திகதிகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்காக, இன்று (08) பிற்பகல் தலதா மாளிகை வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 


அதற்கமைய, ஒகஸ்ட் 13 முதல் 17 வரையில் நாத, விஷ்ணு, பத்தினி மற்றும் கதிர்காமம் ஆகிய நான்கு மகா தேவாலயங்களில் உட்புற பெரஹெர நிகழ்வுகள் நடைபெறும் என குறிப்பிட்டார். 


ஒகஸ்ட் 18 முதல் 22 வரையில் முதலாவது 'கும்பல்' பெரஹெர நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 


ஒகஸ்ட் 23 ஆம் திகதி முதலாவது 'ரந்தோலி' பெரஹெர ஆரம்பமாகவுள்ளது. 


ஆகஸ்ட் 27 ஆம் திகதி இறுதி மகா 'ரந்தோலி' பெரஹெர நடைபெறும். 


ஆகஸ்ட் 28 ஆம் திகதி நீர் வெட்டுதல் மற்றும் பகல் பெரஹெர இடம்பெறும். 


அதனைத் தொடர்ந்து, அதே நாள் பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து, பெரஹெர நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததை உறுதிப்படுத்தும் 'பெரஹெர விஞ்ஞாபனம்' தியவடன நிலமேயினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. 


இந்த நிகழ்வில் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் நாரம்பனாவே ஸ்ரீ ஆனந்த தேரர், மல்வத்து பீடத்தின் பிரதி செயலாளர் மஹவெல ரத்தனபால தேரர், நான்கு மகா தேவாலயங்களின் பஸ்நாயக்க நிலமேக்கள், மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் மாசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Zameera

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பணிகளை விரைவுபடுத்த ஜனாதிபதி பணிப்பு


 யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் வேலைத்திட்டத்தை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். 


குறைந்த வருமானம் உடையவர்களின் பகுதியளவில் கட்டப்பட்ட வீடுகளுக்கு வீட்டுவசதி உதவி வழங்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். 


அரசாங்கத்தின் வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டமான “தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை” என்பதன் முன்னேற்றம் மற்றும் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 


அதேநேரம் மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பதற்காக, 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 


வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான நிதித் தேவைகள் குறித்து இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 


தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவு உள்ளிட்ட அமைச்சின் விடயப்பரப்பிற்குட்பட்ட அனைத்து திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களினால் 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் மற்றும் நிதித் தேவைகள் குறித்து இதன் போது தனித்தனியாக கலந்துரையாடப்பட்டது. 


வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் ஒரே விடயப்பரப்புடன் தொடர்புடைய பல நிறுவனங்கள் காணப்படுவதன் காரணமாக, திட்டங்களைச் செயல்படுத்துவதில் செயற்திறனின்மை ஏற்பட்டுள்ளதாகவும், அதேபோன்று பல வருடங்களுக்கு முன்னர் வெவ்வேறு நோக்கங்கள் மற்றும் தேவைகளுக்காக நிறுவப்பட்ட நிறுவனங்களை மேலும் பராமரித்துச் செல்வதன் மூலம் அரசாங்கத்திற்கு மேலதிக நிதிச் சுமையை சுமக்க வேண்டியேற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Zameera

இலங்கையில் டெங்கு மரணங்கள் 42 ஆக உயர்வு – 63,000க்கும் அதிகமானோர் பாதிப்பு


 இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.


இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,835 ஆகும் என அந்த பிரிவின் பதில் பணிப்பாளர், வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

Zameera

கேப்பாப்பிலவு மக்களை சந்திக்க பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு கோரிக்கை


 தமது பூர்வீக காணிவிடுவிப்பிற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர நேரில் சந்தித்துக் கலந்துரையாட வேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 16.07.2026ஆம் திகதியன்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ள சூழலிலேயே பாராளுமன்ற உறுப்பினரால் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் இன்று (08) உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள கேப்பாப்புலவு மக்கள் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கமாறு வலியுறுத்தி இன்றோடு 15ஆவது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 5ஆம் திகதி காணி விடுவிப்பை வலியுறுத்தி அந்த மக்களால் பாரிய ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்து.

குறிப்பாக கேப்பாப்பிலவில் 55 குடும்பங்களுக்குரிய 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகளும் 04 குடும்பங்களுக்குரிய 100 ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளுமாக மொத்தம் 59 குடும்பங்களுடைய 159.5 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கின்றனர்.

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள குறித்த பகுதிக்குள் பாடசாலை, பொதுநோக்கு மண்டபம், கோயில், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன. தென்னை, மா, பலா, பனை, வேம்பு உள்ளிட்ட பயன்தரு மரங்களும் காணப்படுகின்றன.

மக்களுடைய பெருமளவான கால்நடைகளை இராணுவத்தினர் அந்தப் பகுதிக்குள் அபகரித்து வைத்திருப்பதாகவும், பால் உற்பத்தியை பெறுவதாகவும் மக்களால் எம்மிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமது வளங்களைப் பயன்படுத்தி இராணுவத்தினர் இயற்கை உரம் தயாரித்து விற்பனை செய்வதுடன், நந்திக்கடல் வாழ்வாதார வளத்தினை பயன்படுத்திக்கொள்ள முடியாதவாறு இராணுவத்தினர் முடக்கிவைத்திருப்பதாகவும் மக்களால் எம்மிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16ஆம் திகதி பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைதரவுள்ளதாக அறிய முடிகின்றது. அவ்வாறு வருகை தருகின்ற பாதுகாப்பு பிரதி அமைச்சர் காணி விடுவிப்பை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களைச் சந்தித்துக் கலந்துரையாட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன். என குறிப்பிட்டுள்ளார்.

(விஜயரத்தினம் சரவணன்)

Zameera

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய்: 4 பேருந்துகள் சிக்கின


 மண்ணெண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்தி இயக்கப்பட்ட 4 பயணிகள் பேருந்துகளை அம்பலாங்கொடை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர். 


அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் லங்காதேவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குழுவினர், நேற்று (07) மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இந்தப் பேருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 


காலி - கொழும்பு மற்றும் அம்பலாங்கொடை - எல்பிட்டிய ஆகிய வழித்தடங்களில் சேவையில் ஈடுபட்டிருந்த நான்கு பேருந்துகளே இவ்வாறு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த பேருந்துகளில் சில முற்றிலும் மண்ணெண்ணெயை மட்டுமே பயன்படுத்தி இயக்கப்பட்டிருப்பதும், மற்றையவை டீசலுடன் மண்ணெண்ணெயைக் கலந்து இயக்கப்பட்டிருப்பதும் இந்தச் சுற்றிவளைப்பின் போது தெரியவந்துள்ளது. 


மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட இந்த நான்கு பேருந்துகளின் சாரதிகளும் பலப்பிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். 


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Zameera

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கான சி.டி. ஸ்கேனர் இயந்திரம் இவ்வருடம் டிசம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ




 (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)



மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கான  சி.டி. ஸ்கேனர்  இயந்திரம் இவ்வருடம் டிசம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும். வைத்தியசாலயில் நிலவும் ஆளணி பற்றாக்குறைக்கும் தீர்வளிக்கப்படும் என  சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனினால் கடந்த பாராளுமன்ற அமர்வில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இன்று (08) புதன்கிழமை நடைபெற்ற அமர்வின்போது மேற்கண்டவாறு  பதிலளித்தார்.


 அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,


மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்   ஒரு சி.ரி ஸ்கானர்  இயந்திரம் இல்லை என்பதால் அவசர  சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குச் சரியான நேரத்தில் நோயறிதல்  செய்ய முடியாமல் போவதோடு,நீண்ட தூரப் பயணங்களினால் பல உயிர்கள் வழியிலேயே பிரியும் ஆபத்துக்கள் தொடர்வதாக  பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார்.


 நான்  கடந்த 24.04.2025 அன்று  மன்னார் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது, '2026 ஆம் ஆண்டில் மன்னார் வைத்தியசாலைக்குக் கண்டிப்பாக சி.ரி ஸ்கானர் இயந்திரம் வழங்கப்படும்' என உத்தியோகபூர்வமாக உறுதியளித்திருந்தேன்   மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சி.ரி ஸ்கானர் இயந்திரம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக மதிப்பிடப்பட்டுள்ள ரூபா 250 மில்லியன் நிதியை, இந்த 2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுக்குள் வழங்குவதற்கு அமைச்சரவை நடவடிக்கை எடுத்துள்ளது.



 அதற்கமைய மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கான  சி.ரி ஸ்கானர்  இயந்திரம் இவ்வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் வழங்கப்படும்.அத்துடன் வைத்தியசாலையில் நிலவும் ஆளணி பற்றாக்குறைக்கு தீர்வு வழங்கப்படும் என்றார்.

Zameera

16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டை குறைக்கும் முன்னோடித் திட்டம் வெற்றி


 16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைப்பதற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முன்னோடித் திட்டம் வெற்றியளித்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 


பாராளுமன்றத்தில் இன்று (08) பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் குறிப்பிட்டார். 


அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 


"16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைப்பதற்காக தேசிய வழிகாட்டுதல் நெறிமுறையை தயாரித்தல் மற்றும் பிள்ளைகளின் மனநலனை மேம்படுத்தும் நோக்கில் Brain Health என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தேசிய மட்டத்திலான விழிப்புணர்வு கலந்துரையாடலொன்றை ஆரம்பித்தல். 


இதற்கமைய, தற்போது மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் மூலம் குடும்பங்களை வலுவூட்டும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னோடித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


இதன்மூலம் 18 வயதிற்குட்பட்ட பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களில் உள்ள, கையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையான பிள்ளைகளை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், இந்த முன்னோடித் திட்டங்களில் வெற்றிகரமான முடிவுகள் கிடைத்துள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது. 


இது அரசாங்கத்தின் முன்னுரிமையாகக் கருதி நாங்கள் தலையிடும் ஒரு விடயமாகும். இதனை ஒரேயொரு நடவடிக்கையின் மூலம் மட்டும் எம்மால் கட்டுப்படுத்தவோ அல்லது ஒழுங்குபடுத்தவோ முடியாது. 


சமூக ஊடகங்களைத் தடை செய்வது பற்றி மாத்திரம் நாங்கள் பேசவில்லை, பலதரப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசி வருகிறோம். கல்வியின் ஊடாகவும் மற்றும் பிற சந்தர்ப்பங்களிலும் சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் Digital Health குறித்து ஆலோசனைகளைப் பெற்று, எமது நாட்டிற்கு மிகவும் பொருத்தமான நடவடிக்கைகள் எவை என்பது குறித்து நாங்கள் கலந்துரையாடி வருகிறோம். இவற்றை இந்த வருடத்திற்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

Admin

BIG_BREAKING: அமெரிக்கா, ஈரான் சமாதான ஒப்பந்தம் முறிவு - டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு



அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 


இருநாடுகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் குறித்து அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 


நேட்டோ உச்சிமாநாட்டில் ஊடவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட அவர், நான் இனி அவர்களுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார். 


என்னைப் பொறுத்தவரை,அது முடிந்துவிட்டது. அவர்களுடன் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல், அவர்கள் பொய்யர்கள் என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். 


இரு தரப்பு பேச்சுவார்த்தையாளர்களும் பேசலாம், ஆனால் அவர்கள் தங்கள் நேரத்தை வீணடிப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

Admin

JUST_IN: இலங்கையில் ஒரே நேரத்தில் 7 பேருக்கு மரண தண்டனை - ஏன்?



2006ம் ஆண்டு இடம்பெற்ற மனித படுகொலைச் சம்பவம் தொடர்பாக 7 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.


குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 7 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது.

SHAHNI RAMEES

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வழக்கு ஒத்திவைப்பு!

 

அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின்
Admin

2 சம்பளங்கள் பெற்றதாக கைதான “கோட்டா”வின் சகாவுக்கு பிணை இல்லை.



சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (08) நிராகரித்துள்ளது.


ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.


இதனையடுத்து, அவரை எதிர்வரும் 22ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.