
Thursday, September 17, 2026
ஞானசார தேரர் வழக்கை விரைவாக முடிக்க கோரிக்கை
( எம்.எப்.எம்.பஸீர், செ.சுபதர்ஷனி)
இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டி சட்டமா அதிபரால் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை (16) தெரியப்படுத்தியிருந்தார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஞானசார தேரரின் சட்டத்தரணியினால் இந்த விடயம் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணைகளுக்காக புதன்கிழமை (16) பிரதிவாதியான கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இதன்போது பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி சஞ்சய மாரம்பேயுடன் ஆஜரான சட்டத்தரணி அசோக வீரசூரிய, தனது சேவைபெறுநரான ஞானசார தேரர் இந்த வழக்கு நடவடிக்கைகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர எதி்ர்பார்ப்பதாக மன்றில் தெரிவித்தார்.
இது தொடர்பில் சட்டமா அதிபரிடம் விடயங்களை முன்வைப்பதுக்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சட்டத்தரணி இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார். இது குறித்து நீதவான் எழுப்பியிருந்த நிலையில், பிரதிவாதியின் இந்த கோரிக்கைக்குத் தனது ஆட்சேபனை எதுவுமில்லை என்றும், இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு எழுத்துப்பூர்வமான விளக்கங்களைச் சமர்ப்பிக்க பிரதிவாதி தரப்புக்கு இயலுமை உள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணி மன்றில் தெரிவித்திருந்தார்.
அதன்படி, எதிர்வரும் நாட்களில் சட்டமா அதிபருக்கு எழுத்துப்பூர்வ அறிக்கைகளைச் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார். மன்றில் முன்வைக்கப்பட்ட இரு தரப்பு சாட்ச்சியங்களையும் பரிசீலித்த நீதிவான், இவ்வழக்கை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் இது தொடர்பான முன்னேற்றங்களை நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறும் தரப்பினருக்கும் உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை உயர்நீதிமன்றம் அண்மையில் இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதன்கிழமை (16) ஞானசார தேரர் ஆமற்படி வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரவிந்த டி சில்வா, மனைவி பிரியங்காவுக்கு கோட்டை நீதிமன்றம் பிடியாணை
(செ.சுபதர்ஷனி)
முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோருக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
புதன்கிழமை (16) இந்த வழக்கு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது இடம்பெற்ற சர்ச்சைக்குரிய இலஞ்சக் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிவான் இவ்வாறு உத்தரவிட்டிருந்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்காக எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த கபில சந்திரசேன கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கடந்த மே மாதம் 8 ஆம் திகதி அன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.
மேற்படி வழக்கில் கைதான நயோமாலி விஜேநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டதை அடுத்து வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு எதிராக கோட்டை நீதிவான் நீதிமன்றம் ஏற்கனவே பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோர் சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்காக பிணையாளர்களாக முன்னிலையாகியிருந்தனர்.
அதற்கமைய நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர் இல்லாத நிலையில், அவரின் பிணையாளர்களும் மன்றில் முன்னிலையாகாததால் அவர்களுக்கு எதிராக நீதிவான் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தார். நேற்றைய தினம் பிணையாளர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, அரவிந்த டி சில்வாவின் தாயார் உயிரிழந்த நிலையில் அவரது இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் இடம்பெற உள்ளதாக தெரிவித்திருந்தார்.
மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதிவான், பிடியாணை உத்தரவை மீளப்பெறுவதற்கான விடயங்களைப் பரிசீலனை செய்யும் சந்தர்ப்பத்தில் அதற்குரிய ஆவணங்களை மன்றில் சமர்ப்பிக்குமாறும், இது தொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவருமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை - மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளர்
(இராஜதுரை ஹஷான்)
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை. சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றுள்ளார்.எதிர்வரும் 24 ஆம் திகதி நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷ கடந்த வாரம் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
மேலதிக சிகிச்சைக்காகவே அவர் சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றுள்ளார். அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படும் ஒருசில ஊடகங்கள் இதனை திரிபுப்படுத்தி தவறாக செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான அவசியம் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு கிடையாது. நிதி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி முன்னிலையாகுவார்.
அதிகாரம் நிலையற்றது என்பதை ஜனாதிபதி நினைவில் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் ஏதம் நடக்கலாம்.ஆகவே போலியான கருத்துக்களை சமூகமயப்படுத்தி உண்மையை மறைக்க முடியாது.சகல சவால்களையும் நீதித்துறை ஊடாக எதிர்கொள்வோம் என்றார்.
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரான திஸ்ஸ குட்டியாராச்சி 5 மணி நேர விசாரணையின் பின் வெளியேற்றம்
(செ.சுபதர்ஷனி)
அரச ஊவா முதலீட்டு வங்கியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முறைகேடு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய புதன்கிழமை (16) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியிடம் சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
அரச ஊவா முதலீட்டு வங்கியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முறைகேடு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, நேற்றைய தினம் காலை 9.00 மணியளவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி குற்றப்புலனாய்வு பிரிவின் நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.
விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் அளிக்கும் பொருட்டே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி நேற்றைய தினம் காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “விசாரணை ஒன்றுக்காகவே தான் அழைக்கப்பட்டதாகவும். உள்ளே சென்று அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பின்னரே தெரிவிக்க முடியும். நான் எவ்வித மோசடியையோ அல்லது ஊழலையோ செய்யவில்லை" என தெரிவித்திருந்தார்.
NPP அரசாங்கத்திற்குள் கருத்து வேறுபாடு இல்லை – லால் காந்த
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குள் எவ்வித கருத்து வேறுபாடுகளோ அல்லது நெருக்கடிகளோ இல்லை, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் அடிப்படையற்றவை. குறிப்பாக, பிரதமர் ஹரிணி அமரசூரிய தனித்துச் செயல்படப்போவதாகவும், கட்சிக்குள் முரண்பாடுகள் இருப்பதாகவும் வெளியாகும் தகவல்கள் அரசியல் உள்நோக்கம் கொண்ட வதந்திகள் என்பதால், மக்கள் இவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்று கால்நடை மற்றும் விவசாய அமைச்சர் கே.டி.லால் காந்த தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (16) நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது உடனடியாக எந்தவொரு தேர்தலும் நடத்தப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ள அரசாங்கம், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான சட்ட ரீதியான ஏற்பாடுகள் மற்றும் எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் அது குறித்த அறிவிப்புகள் வெளியாகும். மேலும், திறைசேரியில் நிதி வசதிகள் இருந்தாலும், அதனை வினைத்திறனாக பயன்படுத்தும் வகையில் அரச நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்துவதே தற்போதைய பிரதான சவாலாக உள்ளதுடன், பழைய அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைத்து, ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் உறுதியுடன் முன்னெடுத்து வருகிறது.
இதனிடையே, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் நடத்தையானது ஏனைய உறுப்பினர்களிடமிருந்து மிகவும் மாறுபட்டு காணப்படுகிறது. அவர் ஒரு மருத்துவராக இருந்தபோதிலும், அவருக்கு ஏதேனும் மன அழுத்தமோ அல்லது மனநலப் பாதிப்போ இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுகிறது. இருப்பினும் அவரைத் தரக்குறைவாகப் பேசுவதற்காக இதனைச் சொல்லவில்லை, ஒரு மனிதனாக அவர் மீது அனுதாபம் கொண்டே அணுக வேண்டும்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குப் புலம்பெயர் அமைப்புகளிடம் இருந்து நிதியுதவி கிடைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துபவர்களே அவற்றை நிரூபிக்க வேண்டும், இதுபோன்ற நபர்கள் பேசும் பொய்யான கருத்துகளுக்கெல்லாம் ஊடக அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்க முடியாது, அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் அதற்கு என்று தனியாக ஒரு பிரிவை உருவாக்க வேண்டி வரும்.
மேலும், அர்ச்சுனாவைத் தமது மேடைகளில் பேச அனுமதித்த அரசியல் கட்சிகள், அவரது பேச்சு மற்றும் நடத்தை தங்களது கொள்கைகளுக்குப் பொருத்தமானதா என்பதைச் சிந்தித்து முடிவெடுத்திருக்க வேண்டும். இறுதியாக, அர்ச்சுனா எதையும் தீவிரத்தன்மையுடன் பேசுபவர் அல்ல என்பதால், அவரது பேச்சுகளால் சமூகத்தில் இனவாதப் பதற்றமோ அல்லது பெரிய அளவில் தாக்கங்கள் உருவாக வாய்ப்பில்லை. சிறிது காலத்தில் இத்தகைய ஆதாரமற்ற பேச்சுகள் மக்களால் பொருட்படுத்தப்படாமல் போய்விடும்.
3 முக்கியப் பிரிவுகளின் கீழ் சுகாதாரத்துறை வலுப்படுத்தப்படுகிறது – ஜனாதிபதி
நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்குவதற்காக 3 முக்கியப் பிரிவுகளின் கீழ் நாட்டின் சுகாதாரத் துறை வலுப்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நவீன இருதய சிகிச்சைத் தொகுதியின் நிர்மாணப் பணிகளை நேற்று (16) ஆரம்பித்து வைத்ததன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலவச சுகாதாரத் துறையை மேலும் மக்களிடம் நெருக்கமாக்குதல், உலகின் அதிநவீன உபகரணங்கள் மற்றும் மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் முறையான முகாமைத்துவ முறைமையை ஸ்தாபித்தல் என்பவையே அந்த முக்கியப் பிரிவுகள் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
குறிப்பிடத்தக்க காலப்பகுதிக்குப் பின்னர் நாட்டின் சுகாதார சேவையைப் பலமாகப் பேணிச் செல்வதற்குத் தேவையான மனிதவளம் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகாமைத்துவ நிறுவனத்தின் (JICA) கடன் உதவியின் கீழ் 3,545 மில்லியன் ரூபாய் செலவில் 8 மாடிகளுடன் நிர்மாணிக்கப்படும் இந்த இருதய சிகிச்சை தொகுதியின் மூலம், அதிநவீன இருதய நோய் மற்றும் இருதய - மார்பு நாடி சத்திரசிகிச்சை வசதிகளைப் பிரதேச மக்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உருவாகவுள்ளது.
மேலும், இத்தொகுதியானது அதிநவீன இருதய தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (Coronary Care & ICU), கெதீட்டர் பரிசோதனைக் கூடங்கள் (Catheterization Labs), எக்ஸ்ரே (X-Ray), ஈ.சி.ஜி (ECG) வசதிகள், விசேட சிகிச்சை நிலையங்கள், வாட்டுக் தொகுதிகள், ஆய்வுக்கூடங்கள், கேட்போர் கூட வசதிகள் மற்றும் நூலகம் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டுள்ளது.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
அநுராதபுரம் வைத்தியசாலையை மேம்படுத்துவதற்காக சுமார் 19,000 மில்லியன் ரூபாய் செலவிலான திட்டங்களை 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களுடன் சேர்த்து அநுராதபுரம் வைத்தியசாலையின் மேம்பாட்டுக்காக சுமார் 34,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பாரிய முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படாத காரணத்தினால் நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நவீன இருதய சிகிச்சை தொகுதியின் நிர்மாணப் பணிகளை 18 மாதங்களுக்குள் வெற்றிகரமாக நிறைவு செய்து மக்களிடம் கையளிக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
இன்று நாங்கள் மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்ட வைத்தியசாலைகளின் அத்தியாவசியமான சில நிர்மாணப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினோம்.
எங்கள் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைந்திருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஒரு பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது அது பொருளாதார மட்டத்தில் மாத்திரம் இருப்பதில்லை. வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை பாரியளவில் அதிகரிக்கும் போதும், அல்லது எமது வெளிநாட்டு நாணயச் சேமிப்பு பாரியளவில் வீழ்ச்சியடையும் போதும், எமது அரச வருமானம் பாரியளவில் சரியும் போதும் அதன் இறுதி விளைவு மக்களின் வாழ்க்கைத் தரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகும்.
எனவே, நாடென்ற வகையில் நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அவல நிலையின் அனுபவங்களை எதிர்கொண்டிருந்தோம் என்று நான் நினைக்கிறேன்.
அது மக்களுக்கு பாரிய துயரத்தைக் கொண்டு வந்தது. எங்கள் நாட்டின் பொருளாதாரம் எங்கு சென்று முடியப்போகிறது என்று உறுதியாகக் கூற முடியாத அளவுக்குப் பிரச்சினைகள் எழுந்தன.
அந்த சமயத்தில் ஒரு பொருளாதார நிபுணர் என்னிடம், "எங்கள் பொருளாதாரம் மலையிலிருந்து கீழே சரிந்து கொண்டிருக்கிறது, அது எங்கு நிற்கும் என்று கூற முடியாதளவுக்கு பேரழிவு" என்று கூறினார்.
அந்த நெருக்கடியால் "வாகனத்தில் செல்பவர்கள் துவிச்சக்கர வண்டி ஓட்டுகிறார். தொலைதூரப் பாடசாலைகளுக்குச் செல்லும் பிள்ளைகள் கிராமப் பாடசாலைகளுக்கு செல்கின்றனர்" என்று அவர் கூறினார். அந்தளவுக்கு நிச்சயமற்ற பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டோம்.
அந்தப் பொருளாதார நெருக்கடி பாரிய சமூகத் துயரத்தை உருவாக்கியது. ஒரு பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த அரசியல் மாற்றத்தின் விளைவாகத்தான் தற்போதைய அரசாங்கம் உருவாகிறது.
இந்த வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த பொருளாதாரத்தை எவ்வாறு ஸ்திரப்படுத்துவது என்பதுதான் எமக்கு முன்னால் இருந்த பிரதான சவாலானது. தற்போது நாட்டின் பொருளாதாரத்தின் ஒவ்வொரு புள்ளிவிவரத்திலும் மிக முக்கியமான பல ஸ்திரத்தன்மைகள் பதிவாகியுள்ளன. இன்று ஒரு நாடாக எங்களிடம் பலமான பொருளாதாரம் உள்ளது என்று எங்களால் கூற முடியும்.
உலக வங்கி அண்மையில் எங்களை உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடாகப் பெயரிட்டதை நான் பார்த்தேன். அவை எங்களுக்கு சாதகமான புள்ளிவிவரங்களாக இருக்கலாம். இருப்பினும், மக்கள் அடைந்துகொள்ளும் அந்த வெற்றிகள் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு வழிவகுத்துள்ளதா இல்லையா என்பதே மக்களின் தேவையாகும்.
ஆனால் பொருளாதாரம் நல்லதா கெட்டதா என்பதைத் தங்களது வாழ்க்கைத் தரம் எந்தளவுக்கு எளிதாகியுள்ளது என்பதன் அடிப்படையிலேயே மக்கள் அளவிடுகிறார்கள். எனவே, நாம் இப்போது அடைந்துள்ள பொருளாதார வெற்றிகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கே நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.
அடுத்த மிக முக்கியமான விடயமாகக் கல்வி குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் கல்வியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாங்கள் பெரும் முயற்சி எடுத்து வருகிறோம். அதில் சில முரண்பாடுகள் உள்ளதை நாங்கள் அறிவோம்.
உலகில் எப்போதுமே மக்களைப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிப்பது சற்று கடினமானது. பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிக்க முற்படும்போது முரண்பாடு ஏற்படுகிறது.
இருப்பினும், நாங்கள் அதே பழக்கவழக்கங்களிலேயே தொடர்ந்து இருந்தால் மனித சமூகம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது. அந்தந்தக் காலப்பகுதியில் தோன்றிய அரசியல் அதிகாரங்கள், தலைமைத்துவங்கள், பழங்குடி தலைவர்களாக இருக்கலாம், அந்த பழங்குடி சமுகங்களிலிருந்து அந்தப் பழக்கவழக்கங்களை விடுவித்ததன் காரணமாகத்தான் இந்த மனித சமூகம் ஒரு வளர்ந்த சமூகமாக உருவானது.
எனவே, எங்களில் சிலர் அந்தப் பழைய பிற்போக்கான, அதாவது பழைய நிலைக்குள், இந்தச் சமூகத்தை முடக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் நாங்கள் முற்போக்கான, எதிர்கால நோக்குடைய அரசியல் இயக்கமாகும். எனவே, அந்த முரண்பாடுகளை எதிர்கொண்டு நாங்கள் முழுமையாக இந்தக்கல்வித் துறையில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறோம். இல்லாவிட்டால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முடியும் என்று நான் நினைக்கவில்லை.
அடுத்த மிக முக்கியமான விடயம் ஆரோக்கியமான வாழ்க்கை. எங்களுக்கு என்ன கிடைத்தாலும் பிரயோசனமில்லை, எங்களுக்கு ஒரு நோய் நொடியுடன் கூடிய வாழ்க்கை அமைந்திருந்தால், எங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டால் சிறந்த மருத்துவ சேவை இல்லையெனில் ஏனைய செல்வங்களால் எங்களுக்கு எந்தப் பயனுமில்லை. எனவே, எமது மிக முக்கியமான செல்வம் சிறந்த, ஆரோக்கியமான வாழ்க்கைதான்.
எனவே, இந்த ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்குவதற்காகவும், அதற்கான சேவைகளை விரிவுபடுத்துவதற்காகவும் எமது அரசாங்கம் பாரிய கவனம் செலுத்தியுள்ளதுடன், இதற்காக மூன்று துறைகள் மீது நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்.
இலவச சுகாதார சேவையை மேலும் மக்களுக்கு நெருக்கமாக்குவது அதில் ஒன்றாகும். இப்போதும் எங்களிடம் கிராமப்புற வைத்தியசாலைக் கட்டமைப்பொன்று உள்ளது.
இருப்பினும், இந்தச் சேவையை கிராம மக்களுக்கு மேலும் நெருக்கமாக்க முடியுமா? அதற்காகத்தான் நாங்கள் "ஆரோக்கியா" வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
குறிப்பாக, உலகில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, கடந்த காலங்களில் உலகளாவிய சுகாதார சேவை மிகப் பெரிய முன்னேற்றங்களை அடைந்துள்ளது. எனவே, நாம் பழமையான உபகரணங்கள், பழைய தொழில்நுட்பம் மற்றும் பழைய மருத்துவ முறைகளுடன் தொடர முடியாது.
உலகில் உருவாகியுள்ள நவீன மேம்பட்ட உபகரணங்கள் மற்றும் மருத்துவ முறைகளை நமது நாட்டிற்கு கொண்டு வர வேண்டும். எனவே, மேம்படுத்தப்பட்ட மிக நவீன சுகாதார சேவையை உருவாக்குவது நமது இரண்டாவது எதிர்பார்ப்பாகும். மிகவும் சிறந்த முகாமைத்துவ முறையொன்றை உருவாக்குவதே மூன்றாவது எதிர்பார்ப்பாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ரயில் ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்
ரயில் ஊழியர் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பமாகியுள்ளது.
தற்போதைய புகையிரத பொது முகாமையாளரை பதவியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (16) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் பணிப்புறக்கணிப்பு இடம்பெற்று வருகின்ற போதிலும் அனைத்து ரயில்களும் தற்போது அட்டவணைப்படுத்தப்பட்ட இடங்களிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக புகையிரத போக்குவரத்து அத்தியாட்சகர் தெரிவித்துள்ளார்.
Wednesday, September 16, 2026
அமெரிக்க தூதுவர் - பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயருக்கும் (Eric Meyer) பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வளர்ச்சி பெற்றுவரும் அமெரிக்க - இலங்கை பாதுகாப்புப் பங்காண்மை குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புச் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
பத்து TH-57 ஹெலிகொப்டர்கள், அமெரிக்க கடலோரக் காவல் படையின் நான்காவது கட்டர் (Cutter) கப்பல் மற்றும் இலங்கை கடற்படையின் கரைவெளியோர ரோந்துக் கப்பல்களுக்காக 4 மில்லியன் டொலர் பெறுமதியான அதிநவீன செயற்கைக்கோள் தகவல் தொடர்புத் தொகுதி என்பவற்றை இலங்கைக்கு வழங்கியது உட்பட, அண்மைக்காலத்தில் அமெரிக்கா வழங்கிய ஆதரவு இதன்போது பாராட்டப்பட்டது.
இந்தப் பாதுகாப்புத் திறன்களை மேலும் மேம்படுத்துதல், இராணுவத் தயார்நிலையை உயர்த்துதல் மற்றும் சமுத்திரப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்தியப் பெருங்கடலிலும் இந்தோ - பசுபிக் பிராந்தியம் முழுவதிலும் இரு நாடுகளின் பொதுவான நலன்களை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.



