Our Feeds



Friday, September 11, 2026

Zameera

அதிக சூடான தேநீர், கோப்பி அருந்துவதால் உணவுக்குழாய் புற்றுநோய் ஆபத்து மூன்று மடங்குக்கு மேல் அதிகரிக்கலாம்

 

(மனோகரன் பிரியங்கா)



ஒரு மில்லியன் மக்களை உள்ளடக்கி பிரித்தானியாவில்  மேற்கொள்ளப்பட்ட மாபெரும் ஆய்வொன்றின் மூலம், அதிக சூடான தேநீர், கோப்பி மற்றும் ஏனைய பானங்களைக் குடிப்பதால் உணவுக்குழாய் புற்றுநோய் (Esophageal Cancer) ஏற்படும் ஆபத்து மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கக்கூடும் என தெரியவந்துள்ளது.


‘இன்டர்நேஷனல் ஜர்னல் ஒஃப் கென்சர்’ (International Journal of Cancer) இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வின் மூலமே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மிதமான சூட்டில் பானங்களை அருந்துபவர்களுடன் ஒப்பிடுகையில், "அதிக சூட்டில்" (Hot) பானங்களை விரும்பிக் குடிப்பவர்களுக்கு 'எசோபேகியல்ஸ்குவாமஸ் செல் கார்சினோமா' (Esophageal Squamous Cell Carcinoma) வகை புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இரண்டு மடங்கு அதிகமாகும்.


பானங்களை "மிக அதிக சூட்டில்" குடிப்பவர்களுக்கு இந்த ஆபத்து மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கிறது.


உணவுக்குழாய் (Esophagus) என்பது வாயிலிருந்து வயிற்றுக்கு உணவையும் பானங்களையும் கொண்டு செல்லும் தசைநார் குழாயாகும்.


வெப்பநிலையைக் கருத்திற் கொண்ட பின்னரும் கூட, ஒரு நாளைக்கு 6 அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் சூடான பானங்களைக் குடிப்பவர்களுக்கு, 6 தடவைகளுக்கும் குறைவாகக் குடிப்பவர்களை விட இந்நோய் ஏற்படும் ஆபத்து 71% அதிகமாக உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.



சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகவரகம் 65°C க்கும் அதிகமான வெப்பநிலையில் குடிக்கப்படும் பானங்களை "மிக அதிக சூடான பானங்கள்" என வரையறுத்துள்ளதுடன், இவற்றை அருந்துவது மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்கக்கூடிய சாத்தியக்கூறு கொண்டது (Pஎனவும் வகைப்படுத்தியுள்ளது.


அதேவேளை, பொதுமக்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஒட்டுமொத்த சாத்தியக்கூறு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளதாகவும், இந்த ஆய்வு முடிவுகள் சூடான பானங்களுக்கும் புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்பை மட்டுமே சுட்டிக்காட்டுகின்றனவே தவிர, சூடான பானங்களே நேரடியாகப் புற்றுநோயை உண்டாக்குகின்றன என்பதை முழுமையாக நிரூபிக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Zameera

வரலாற்றிலேயே உலகின் மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு

 வரலாற்றில் இதுவரை பதிவான மிக வெப்பமான மாதமாக கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 


ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை (C3S) மையம் வெளியிட்ட தகவலின்படி, ஓகஸ்ட் மாதத்தில் பூமியின் சராசரி உலகளாவிய வெப்பநிலையானது தொழில்துறைக்கு முந்தைய கால கட்டத்தை விட 1.5°C அதிகரித்துள்ளது. 


கடந்த மாதத்தில் உலகெங்கிலும் கடுமையான காலநிலை மாற்றங்களும் பேரழிவுகளும் பதிவாகின. நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப் பெருக்குக்கு காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 


மேலும், இந்தோனேசியா முதல் கிரீஸ் மற்றும் பெல்ஜியம் வரை காட்டுத்தீ பரவியதுடன், ஹங்கேரி மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் கடுமையான வறட்சியை எதிர்கொண்டுள்ளன. 


2015 பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் கீழ், காலநிலை மாற்றத்தின் கடுமையான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக சுமார் 200 நாடுகள் முயற்சிப்பதாக உறுதியளித்த வரம்பானது, பல தசாப்தகால சராசரியாக அளவிடப்படும் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாகும். 


2025 நவம்பர் மாதத்திற்குப் பிறகு, உலகின் சராசரி வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய கால அளவை விட 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டிய முதல் மாதமாக ஓகஸ்ட் மாதம் அமைந்துள்ளது. 



உலகளாவிய மேற்பரப்பு காற்று வெப்பநிலை 16.96 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி, கடந்த மாதமானது 2023 ஜூலை மாதத்துடன் இணைந்து வரலாற்றில் உலகின் மிக வெப்பமான மாதமாகச் சமநிலையைப் பெற்றுள்ளது. 


மனிதர்கள் தொழில் ரீதியாக எண்ணெய், நிலக்கரி மற்றும் எரிவாயுவை எரிக்கத் தொடங்குவதற்கு முன், அதாவது 19 ஆம் நூற்றாண்டில் பூமியில் நிலவிய சராசரி வெப்பநிலையை விட இது 1.65 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். 


இந்த புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் வெளியாகும் உமிழ்வே காலநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணமாகும். 


பூமியின் பெருங்கடல்கள் மற்றும் துருவப் பகுதிகளைத் தவிர்த்து, ஏனைய கடல் மேற்பரப்பு வெப்பநிலையும் சாதனை அளவில் அதிகரித்துள்ளதாக கோபர்நிகஸ் நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Zameera

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டி மீட்பு

 


தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்று, பாதுக்க இஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று (11) அதிகாலை 3.15 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவர் கைக்குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தார். 


இதற்காகச் சந்தேகநபர் முச்சக்கரவண்டியில் பயணிக்கும் விதம் அங்கிருந்த சிசிடிவி காணொளியில் பதிவாகியிருந்தது. 


சந்தேகநபர் வீட்டின் கதவைத் தட்டியதுடன், வீட்டிலுள்ளவர்கள் கதவைத் திறந்தவுடன் வீட்டின் உள்ளே கைக்குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 


இத்தாக்குதலில் தூங்கிக்கொண்டிருந்த 11 மற்றும் 17 வயதுடைய இரு பிள்ளைகளும் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர். 


இத்தாக்குதலில் அவர்களின் 55 வயதுடைய தந்தையின் காலிலும் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


எவ்வாறாயினும், அவர் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


இச்சம்பவம் தொடர்பான இடத்திற்குரிய நீதவான் விசாரணை இன்று காலை மேற்கொள்ளப்பட்டது. 


குண்டுத் தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் ஊடாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

SHAHNI RAMEES

2 Years ஆ NO Problem! - உலமா சபை NPP அரசாங்கத்திற்கு பாராட்டு!

 


கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் எவ்வித இனவாத

SHAHNI RAMEES

இந்தியா வந்தார் ரஷ்ய ஜனாதிபதி புடின்!

 

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா உள்ளிட்ட
SHAHNI RAMEES

இனி புதிய சிம் அட்டைகளை வாங்க இது கட்டாயம்!

 

முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப்
Zameera

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: விசாரணைக்கு 03 பொலிஸ் குழுக்கள் நியமனம்

 


தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரி சங்க போ பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது இன்று வெள்ளிக்கிழமை (11) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


அதிகாலை இடம்பெற்ற இத்தாக்குதலில் காயமடைந்த 55 வயதுடைய நபர் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.


இனந்தெரியாத நபர் ஒருவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர்கள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என  பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


இதேவேளை, சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளில் ஈடுப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Zameera

சீனத் துறைமுகத்தில் சரக்குக் கப்பலில் தீவிபத்து: 25 பேர் பலி

 


கிழக்கு சீனாவின் முக்கிய வர்த்தக மையமான கிங்டாவோ துறைமுகத்தில் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகச் சீன அரசு ஊடகமான சிசிரிவி செய்தி வெளியிட்டுள்ளது.


கப்பலில் இருந்த 42 பேரில் 17 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்களில் காயமடைந்த 05 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி கிங்டாவோ துறைமுகத்திற்கு வந்தடைந்த லைபீரியக் கொடி தாங்கிய 190 மீற்றர் நீளமுடைய 'ஓஷன் மெலடி' என்ற சரக்குக் கப்பலிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.


கப்பல் கட்டும் தளத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது உள்ளூர் நேரப்படி காலை 11:15 மணியளவில் தீப்பற்றியுள்ளது. 03 மணிநேரத் தீவிர போராட்டத்திற்குப் பின்னரே தீ முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.



இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தீவிரத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை ஆரம்பிக்குமாறு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதுடன், மேலதிக அசம்பாவிதங்களைத் தடுக்குமாறு சீனப் பிரதமர் லி சியாங் வலியுறுத்தியுள்ளார்.


விபத்துக்கான காரணம் தொடர்பில் சீன அதிகாரிகள் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்

Zameera

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

 


தெஹிவளை, கவுடான சிரி சங்க போ பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து இன்று வெள்ளிக்கிழமை (11) அதிகாலை  நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த தாக்குதலில் அந்த வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் என மூன்று பேர் காயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அவர்களில் 10 மற்றும் 14 வயதுகளையுடைய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த சிறுவர்களின்  தந்தை (55) தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Zameera

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

 

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. 


இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், 


மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். 


மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள். 


மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள். 


மு.ப. 11.30 - பி.ப. 5.00 பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன, 


(i) பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருதல் (நலீன் பண்டார ஜயமஹ). 


(ii) இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குதல் (அஜித் பி. பெரேரா). 


(iii) தியகம வனத்தைப் பாதுகாத்தல் ((கலாநிதி) ஹர்ஷ த சில்வா). 


(iv) பிரிவென ஆசிரியர்களின் ஓய்வூதியத்திற்காக அவர்களின் ஊதியத்திலிருந்து கூடுதலாக ஆறு சதவீதத் தொகையை அறவிடுவதை நிறுத்துதல் (சுஜீவ திசாநாயக்க). 


(v) மலைப்பாங்கான பிரதேசங்களில் உணவுப் பயிர்களைப் பயிரிடுதல் (நந்த பண்டார). 


(vi) கித்துள் கைத்தொழிற்றுறையை முன்னேற்றுதல் (ரீ.கே. ஜயசுந்தர). 


(vii) இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்றை நிறுவுதல் ((கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்). 


பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள். 

Zameera

உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்வு

 


ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்ந்து வருகின்றது


இதன்படி, இன்று (11) காலை வேளையில் உலகச் சந்தையின் முக்கிய எண்ணெய் குறியீடான பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108 அமெரிக்க டொலர்களையும் கடந்து பதிவாகியுள்ளது.


இது கடந்த மே மாதத்திற்கு பின்னர் பதிவாகும் அதிகூடிய விலையாகும்.


கடந்த ஜூலை 24 ஆம் திகதிக்குப் பிறகு, கடந்த 9 ஆம் திகதி பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலர் எல்லையைக் கடந்த நிலையில், அன்றிலிருந்து தொடர்ச்சியாக இவ்வாறு எண்ணெய் விலை உயர்ந்து வருகின்றது.


பிரெண்ட் எண்ணெய் விலை உயர்வுக்கு இணையாக, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 103.34 டொலராக உயர்ந்துள்ளது.


அத்துடன், மேர்பன் (Murban) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 122.48 டொலராகப் பதிவாகியுள்ளது.

Zameera

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்




 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார். 


மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


Zameera

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


இதேவேளை புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பகுதிகளில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். 


காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். 


ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு (50-60) கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். 


சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக கங்கேசன்துறை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். 


ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக கங்கேசன்துறை வரையான கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். 


சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் கடல் அலையானது சுமார் (2.0 - 2.5) மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.