Our Feeds



Saturday, September 5, 2026

Zameera

குளத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்து 17 வயது இளைஞன் பலி!


 திவுல்வெவ, வெலிகொல்லேவ வீதியில் ரம்பவெல குளக்கரையின் மீது பயணித்துக் கொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


 


குளக்கரையில் கட்டப்பட்டிருந்த மாடொன்றைக் காப்பாற்ற முயன்றபோது உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து  குளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


 


விபத்தில் படுகாயமடைந்த உழவு இயந்திர சாரதி உட்பட அதில் பயணித்த மூவர் கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


 


எனினும், வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளான். இவ்வாறு உயிரிழந்தவர் வெலிகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.


 


சம்பவம் தொடர்பாக திவுல்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Zameera

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு

 





நுகர்வோர் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக  லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்த விலைக் குறைப்பானது இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


இதன்படி, பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தத்தைத் தொடர்ந்து, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விற்பனை விலை 4,365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

மேலும்,  5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 42 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,750 ரூபாவாக மாற்றமடைந்துள்ளது.


அதேபோன்று, 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 815 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

Zameera

மின்வெட்டு ஏற்படாது – எரிசக்தி அமைச்சர்


 மின்சார விநியோகம் தடையின்றித் தொடர்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்று எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.


 


2026 மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான நிலக்கரியைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


 


நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு இடம்பெறவுள்ளதாக பரவிவரும் செய்திகள் உண்மையற்றவை என நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்திற்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.

Zameera

இன்றைய வானிலை நிலவரம்


 நாட்டின் பல மாகாணங்களில் இன்று (5) பிற்பகலில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


 


அதற்கமைய ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


 


சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.


 


இதற்கு மேலதிகமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.



இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.



சூரியனின் தோற்ற தென்திசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.


 


அதற்கிணங்க இன்று (05) நண்பகல் 12.08 அளவில் மொரட்டுவ, கெஸ்பேவ, பொல்கஸ்ஓவிட்ட, ஹந்தபாங்கொட, ஸ்ரீ பலாபத்தல, பொகவந்தலாவ, இதல்கஸ்சின்ன, யுதகனாவ, கொட்டியாகல மற்றும் பாணம ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. 

 

Friday, September 4, 2026

Zameera

நாமல் ராஜபக்ஷ கைது: ஐ.தே.க. கடும் கண்டனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும்  ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.



அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அக்கட்சி, வரும் 12 ஆம் திகதி அனுராதபுரம் நகரில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியை சீர்குலைப்பதே இதன் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளது.



தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கு நாடு முழுவதும் சென்று கூட்டங்களை நடத்துவதற்கு இருக்கும் ஜனநாயக உரிமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Zameera

கொழும்பு, புறநகர்ப் பகுதிகளில் நீர் விநியோகத் தடை நீடிப்பு


 அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள நீர் விநியோகத் தடை இன்று (04) இரவு 11.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நுவகொட, கொஹுவல, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவ உள்ளிட்ட பல பகுதிகளிலும், சேத்சிறிப்பாய, ஹிம்புத்தான, உடுமுல்ல வீதி, கொழும்பு 06 மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நீர் விநியோகம் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர் விநியோகத் தடை நீட்டிக்கப்பட்டதால் நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை வருத்தம் தெரிவித்துள்ளதுடன், இந்தக் காலப்பகுதியில் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Zameera

நாமல் ராஜபக்ஷ்வை கைது செய்தது, பொதுஜன பெரமுனவின் அநுராதபுர கூட்டத்துக்கு பிரச்சாரமாக அமைந்து விட்டது - முஜிபுர் ரஹ்மான்


 எம்.ஆர்.எம்.வசீம்)


நாமல் ராஜபக்ஷ்வை கைதுசெய்ததன் மூலம் அரசாங்கம் பொதுஜன பெரமுனவின் அநுராதபுர கூட்டத்துக்கு போதுமான பிரசாரத்தை வழங்கி இருக்கிறது.

அரசாங்கம் தனது இயலாமையை மறைப்பதற்கே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என ஐ்க்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்

யார் தவறு செய்திருந்தாலும் அது தொடர்பில் விசாரணை நடத்தி, சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் எதிர்ப்பில்லை. ஆனால் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தற்போது தொடர்ச்சியாக அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக தெரிவிக்கப்பட்டிருக்கும் முறைப்பாடுகள் தொடர்பானவர்களையே விசாரணைக்கு அழைத்து, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வருவதை காணக்கூடியதாக இருக்கிறது.


அரசாங்கத்தில் இருக்கும் பலருக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் பல முறைப்பாடுகள் கையளிக்கப்பட்டிருக்கின்றபோதும் அது தொடர்பில் எந்த விசாரணையும் இடம்பெறுவதாக தெரியவில்லை.

துறைமுகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை, தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்தமை உள்ளிட்ட பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

அதேநேரம் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ்வுக்கு எதிராக தெரிவிக்கப்பட்டிருந்த முறைப்பாடு ஒன்றுக்காக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருந்தது.

பொதுஜன பெரமுன அடுத்தவாரம் அநுராதபுரத்தில் மக்கள் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கும் நிலையில், நாமலின் கைதானது, பொதுஜன பெரமுனவின் கூட்டத்துக்கு அரசாங்கம் பாரிய பிரசாரத்தை வழங்கி இருக்கிறது.

என்றாலும் அரசாங்கம் மக்களுக்கு செய்யவேண்டிய முக்கிய பல விடயங்கள் இருக்கும்போது, அவை அனைத்தையும் மறந்துவிட்டு எதிர்க்கட்சியினரை கைது செய்து, சிறையில் அடைப்பதற்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதன் மூலம் அரசாங்கம் தனது இயலாமையை மறைப்பதற்கே முயற்சிக்கிறது என்றார்.

SHAHNI RAMEES

நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில்...

 


இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்

Zameera

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில்


 இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


 


பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ மண்டபத்திற்காக நாற்காலிகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்திற்காகத் தகுதியான முறையில் தெரிவுசெய்யப்பட்ட நிறுவனத்தை நீக்கிவிட்டு, தனக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்கி 79 இலட்சம் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

Zameera

நாமல் ராஜபக்ஷ கைது


  நாமல் ராஜபக்ஷ கைது
இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜராகிய நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்

Zameera

கடும் வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு


 நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,000 ஐத் தாண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 


வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் 06 மாவட்டங்களைச் சேர்ந்த 96,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. 


இதற்கமைய அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, மொனராகலை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 29,584 குடும்பங்களைச் சேர்ந்த 94,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 


மொனராகலை மாவட்டத்திலேயே அதிகளவானோர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


இதற்கமைய அந்த மாவட்டத்தில் மாத்திரம் 11,751 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 


இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கான குடிநீர் விநியோகப் பணிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 


இதன்படி, அனர்த்தத்திற்கு உள்ளான 6 மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


Zameera

16 வயது சிறுவன் சித்திரவதை: சிறுவர் இல்ல காப்பாளர் தம்பதி கைது


 கண்டி, மைலப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் வதிவிடமாகத் தங்கியிருக்கும் 16 வயது சிறுவன் சித்திரவதைக்கு உள்ளான சம்பவம் தொடர்பில், அதன் காப்பாளர் மற்றும் அவரது கணவனை தலாத்துஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர். 


சந்தேகநபர்கள் குறித்த சிறுவனின் அந்தரங்கப் பகுதியில் மிளகாய்த் தூள் தூவி துன்புறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


பாதிக்கப்பட்ட சிறுவன் மாரஸ்ஸன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 


சந்தேகநபர்களை கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர், எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 


இச்சம்பவம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHAHNI RAMEES

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் கைது!

 


முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ