Our Feeds



Thursday, March 12, 2026

Zameera

ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்படும் - மொஜ்தபா கமேனி


 ஈரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். 


அந்த நாட்டு அரச தொலைக்காட்சியில் வௌியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் ஊடாக, நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். 


அத்துடன், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள அனைத்து அமெரிக்க இராணுவத் தளங்களையும் உடனடியாக மூடிவிடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 


அவ்வாறு செய்யத் தவறினால், அந்தத் தளங்களைக் இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்த நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 


எவ்வாறாயினும், ஈரான் அண்டை நாடுகளுடன் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பிற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், தாக்குதல்கள் அமெரிக்க இராணுவத் தளங்களை மட்டுமே இலக்காகக் கொள்ளும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 


அதேபோல், ஈரானுக்கு எதிரான தரப்பினருக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், ஹோர்முஸ் நீரிணையை தொடர்ந்து மூடிவைக்கப் போவதாகவும் புதிய அதி உயர் தலைவர் அந்த உரையில் தெரிவித்துள்ளார்.

SHAHNI RAMEES

ஒரு சொட்டு பெற்றோல் கூட இனி அமெரிக்காவுக்கு கிடைக்காது - ஒரு பெரல் பெற்றோல் விலை 200 டாலருக்கு உயரும் - ஈரான் கடும் எச்சரிக்கை.

 


ஒரு சொட்டு பெற்றோல் கூட இனி அமெரிக்காவுக்கு கிடைக்காது

Zameera

இலங்கையில் 1,800 எலி காய்ச்சல் நோயாளர்கள் பதிவு


 இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1,800 எலி காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா இதனை தெரிவித்தார்.

“இலங்கையில் இரண்டாவதாக அதிகளவில் பதிவாகும் தொற்றுநோய் எலி காய்ச்சல் ஆகும். ஆண்டுதோறும் சுமார் 13,000 நோயாளர்கள் தொற்றுநோயியல் பிரிவுக்கு அறிக்கையிடப்படுகின்றனர். இது இதைவிட அதிகமாகவும் இருக்கக்கூடும். கடந்த சில ஆண்டுகளாக 100 முதல் 200 மரணங்கள் வரை பதிவாகின. 2024 ஆம் ஆண்டில் 300 மரணங்கள் பதிவாகின. 2025 ஆம் ஆண்டில் அந்த மரணங்கள் 200 க்கும் குறைவாகக் குறைந்தன. 2026 ஆம் ஆண்டில் 1,800 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் இந்நோய் அதிகளவில் பதிவாகியுள்ளது. அதேநேரம் குருநாகல், கம்பஹா மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளில் நெற்பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின் அல்லது அவதான நிலைமைகள் காணப்படுமாயின் அங்கிருந்தும் நோயாளர்கள் பதிவாகின்றனர்.”

அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட  விசேட வைத்திய நிபுணர் கோலித ஜயசுந்தர, எலி காய்ச்சல் அறிகுறிகள் குறித்து பின்வருமாறு விளக்கமளித்தார்:

"காய்ச்சல் சாதாரணமாக மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு இடையில் இருக்கும். இங்கு நோயாளியின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் 'வரலாறு' ஆகும். இவர் எங்கே சென்றார் என்பது போன்ற விடயங்கள் அவை. நோயைக் கண்டறிவதற்கு நோயாளியின் வரலாறு பற்றித் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. வயிறு வலிக்கும், வாந்தி வரும். கடுமையான தலைவலி இருக்கும். மூட்டு வலி வரும். தசை வலிக்கும். அதற்கு மேலதிகமாக, முதல் மூன்று நாட்களுக்குப் பின்னரும் காய்ச்சல் இருக்குமானால், ஒரு வைத்தியரை அணுகி அது குறித்து ஒரு முடிவுக்கு வருவது முக்கியமானது. நோய் தாமதமானால், சிறுநீரகங்கள், நுரையீரல் ஆகியவை பிரதானமாகப் பாதிப்படையும். அதற்கு மேலதிகமாக மூளைக்குக் கூட பாதிப்பு ஏற்பட்டு மரணம் சம்பவிப்பதற்கும் இடமுண்டு."

Zameera

மத்திய கிழக்கு போர்: 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பு அல்லது காயம்


 அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே தீவிரமடைந்து வரும் போர், மத்திய கிழக்கு முழுவதும் வாழும் மில்லியன் கணக்கான சிறுவர்களுக்கு பேரழிவு தரும் நிலையை உருவாக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என்ற யுனிசெஃப் (UNICEF) அமைப்பு கூறுகிறது. 


பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் இதுவரையில் இடம்பெற்ற வன்முறைச் செயல்களால் 1,100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்து அல்லது காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 


அறிக்கையிடப்பட்டுள்ளபடி, உயிரிழந்த சிறுவர்களில் ஈரானில் 200 பேரும், லெபனானில் 91 பேரும், இஸ்ரேலில் நால்வரும் மற்றும் குவைத் நாட்டில் ஒருவரும் உள்ளடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


யுத்தம் மேலும் தீவிரமடைந்து வருவதால், இந்த எண்ணிக்கைகள் மேலும் அதிகரிக்கும் என யுனிசெஃப் அமைப்பு எச்சரித்துள்ளது. 


இந்த நெருக்கடி காரணமாக மில்லியன் கணக்கான சிறுவர்களுக்கு கல்வி பறிபோயுள்ளதுடன், இடைவிடாது நடத்தப்படும் குண்டுத் தாக்குதல்கள் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 


"குழந்தைகளின் உயிர்களைப் பறிப்பது, அவர்களை ஊனமுற்ற நிலைக்கு ஆளாக்குவது அல்லது குழந்தைகள் தங்கியிருக்கும் அத்தியாவசிய சேவைகளை அழிப்பதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது" எனவும் அந்த அமைப்பு கூறுகிறது.

SHAHNI RAMEES

#BREAKING: போரை முடிக்க ரெடி - ஈரான் ஜனாதிபதியின் மூன்று நிபந்தனைகள்!

 

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். 

மூன்று நிபந்தனைகள்!

ஈரானின் நியாயமான உரிமைகளை அங்கீகரித்தல் (Recognizing Iran's legitimate rights): ஈரானின் இறையாண்மை மற்றும் அதன் அணுசக்தித் திட்டங்களை உருவாக்குவதற்கான உரிமையை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் 

​இழப்பீடு வழங்குதல் (Payment of reparations): போரினால் ஈரானின் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இழப்பீடு வழங்க வேண்டும்.

​சர்வதேச உத்தரவாதங்கள் (Firm international guarantees): எதிர்காலத்தில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் அல்லது தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாது என்பதற்கு உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும் 


SHAHNI RAMEES

அயதுல்லா அலி காமேனியின் படுகொலை எதிரொலி - FIFA உலகக்கிண்ணத்திலிருந்து ஈரான் விலகல்!

 


இந்த ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக்கிண்ணப்

SHAHNI RAMEES

ஈராக் கடல் எல்லைக்குள் அமெரிக்காவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்!

 

ஈராக் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த

SHAHNI RAMEES

நூதன முறையில் டீசல் திருடிய கும்பல்: 19,000 லீற்றர் மீட்பு!

 


சட்டவிரோதமான முறையில் டீசல் தொகையைச்
Zameera

மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட பேருந்து சேவை


 

இலங்கையின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் இதுவரை போதிய கவனம் செலுத்தப்படாத மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியேக முன்னுரிமை பஸ் சேவை ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.



‘அனைவருக்கும் சம வாய்ப்புகள் மற்றும் மானுட கௌரவத்தைப் பாதுகாக்கும் நாடு’ என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை யதார்த்தமாக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.



430.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், வெறும் போக்குவரத்துச் சேவை மட்டுமல்லாது, ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தினால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் நலத்திட்ட வரிசையில் மற்றுமொரு விசேட திட்டமாகும். பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் உள்ள பௌதிகத் தடைகளை நீக்கி, மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் சமூகத்துடன் ஒன்றிணைவதற்கான பின்னணியை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.



முதற்கட்டமாக, சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துபவர்கள் இலகுவாக ஏறி இறங்கக்கூடிய தாழ்தள வசதி கொண்ட 10 நவீன குளிரூட்டப்பட்ட பஸ்கள் நேற்று முன்தினம் (10) ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. இவை எதிர்வரும் சனிக்கிழமை கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டு 'மெட்ரோ பஸ்' நிறுவனத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்படவுள்ளன.



33 ஆசனங்களைக் கொண்ட இந்தப் பஸ் ஒன்றில் ஒரே நேரத்தில் 80 பயணிகள் பயணிக்க முடியும். சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட தொழில்நுட்ப அம்சங்கள் இதில் உள்ளடங்குகின்றன.



ஒரு முன்னோடித் திட்டமாக இச்சேவை மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படும். அதன்படி, மாகும்புரவிலிருந்து புறக்கோட்டை வரையிலும், மாகும்புரவிலிருந்து கடவத்தை வரையிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கு ஒருமுறை பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.



குறிப்பாக மகரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகிய பிரதான சுகாதார மையங்களை நேரடியாக உள்ளடக்கும் வகையில் இந்த போக்குவரத்துத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

 

இச்சேவைக்காகத் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபையின் 28 சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்படவுள்ளது. சமூக சேவைகள் அமைச்சினால் வழங்கப்படும் இப்பயிற்சியில் பஸ் தொழில்நுட்பம், பயணிகள் பாதுகாப்பு, தொழில்சார் ஒழுக்கநெறிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் தொடர்புகொள்வதற்கான சைகை மொழி ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.



இந்த முன்னோடித் திட்டத்தின் வெற்றியைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் மேலும் 100 பஸ்களை நாட்டுக்குக் கொண்டு வந்து பொதுப் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.



இதனுடன் இணைந்ததாக, ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் பஸ் நிலையங்களையும் மாற்றுத்திறனாளிகள் இலகுவாக அணுகக்கூடிய தரங்களுக்கு ஏற்ப புனரமைக்கவோ அல்லது புதிதாக நிர்மாணிக்கவோ திட்டமிடப்பட்டுள்ளது.

Zameera

அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடரவேண்டும் – சமிந்த விஜேசிறி


 (எம்.ஆர்.எம்.வசீம்)

குறைந்த விலைக்கு கொண்டுவந்த எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு தேவையான எரிவாயு இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையியிலே தற்போது எரிவாயு விலையை அதிகரித்து மக்களை நடுத்தெருவிற்கு கொண்டுவந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (11)  நடத்திய செய்தியாளர் சந்திப்பொன்றில்  கலந்துகாெண்டு  கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

மத்திய கிழக்கில் யுத்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. என்றாலும் எமது  நாட்டில்  ஒரு மாதத்துக்கான எரிபொருட்கள் கைவசம் வைத்திருப்பதாகவும் இப்போதைக்கு விலை அதிகரிப்பு மேற்கொள்ளத் தேவைப்படாது எனவும் ஜனாதிபதி கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதனை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவரும் நாட்டுக்கு தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அரசாங்கம் திடீரென் எரிபொருட்களின் விலையை அதிகரித்திக்கிறது. அப்படியாயின் அரசாங்கம் கையிருப்பில் வைத்திருந்த எரிபொருட்களுக்கே அரசாங்கம் விலை அதிகரித்திருக்கிறது. குறைந்த விலைக்கு கொண்டுவந்த எரிபொருளை, அதிக விலைக்கு விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்த அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதுை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதிகரித்த விலைக்கு எரிபொருளை இறக்குமதி செய்திருந்தால், அதன் விலையை அதிகரிப்பது தொடர்பில் நாங்கள் அரசாங்கத்துக்கு குற்றம் சாட்டுவதில்லை. ஆனால் தற்போது அதிகரித்திருப்பது, கையிருப்பில் இருந்த எரிபொருட்களுக்காகும். 

அதேபோன்று எரிவாயு விலையை நேற்று முதல் அரசாங்கம் அதிகரித்திருக்கிறது. ஒரு மாதத்துக்கு தேவையான 8ஆயிரம் மெட்ரிக் தொன் எரிவாயு கைவசம் இருப்பதாகவும்  ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அப்படியாயின் தற்போது எரிவாயு விலை அதிகரித்திருப்பதும் கைவசம் இருந்த எரிவாயு தொகைக்காகும். அரசாங்கத்தின் இந்த விலை அதிகரிப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது. 

இந்த விலை அதிகரிப்பு சட்ட விராேத நடவடிக்கையாகும்.இந்த நடவடிக்கையை மேற்கொண்ட அரசாங்கத்தின் அமைச்சர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும். கடந்த கால அரசாங்கங்களை குறைகூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தில் இவ்வாறான நடவடிக்கைகளை மக்கள் எதிர்பார்க்கவில்லை. 

அரசாங்கம் கறுப்புக்கடை வியாபாரிகள் போன்று செயற்பட்டு, எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை அதிகரித்து, பாரிய லாபத்தை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று  கறுப்பு கடை முதலாளிமார்கள் போன்று செயற்படுகிறது. 

இவர்கள் எதனை செய்வதில்லை என தெரிவித்தார்களோ அதனை செய்கிறார்கள். மின்சார சபையை தனியார் மயமாக்கப்போவதில்லை என்றார்கள். அதனை தற்போது செய்திருக்கிறார்கள்.

தரம் குறைந்த  நிலக்கரி கொண்டுவருவதில்லை என்றார்கள்.  தற்போது அதனை செய்திருக்கிறார்கள். அதனால் அரசாங்கம் செய்வதில்லை என மக்களுக்கு வாக்குறுதியளித்த அனைத்து விடயங்களையும் இன்று செய்துவருகிறது. அதனால் தொடர்ந்தும் மக்கள் இந்த  அரசாங்கத்தை நம்பப்போவதில்லை என்றார். 


Zameera

சுரேஷ் சலேவுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள்


 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக 3 பிரதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (11) நீதிமன்றத்தில் தெரிவித்தது. 


கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டது. 


குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த 25 பக்கங்கள் கொண்ட மேலதிக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 


2018 நவம்பர் 29 அன்று வவுணதீவில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டமை மற்றும் 2019 ஏப்ரல் 26 அன்று சாய்ந்தமருது வீட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளைத் திட்டமிட்டு திசைதிருப்பியமை. 


இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் ஒருவரைப் பயன்படுத்தி, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குச் சுரேஷ் சலே அடையாளம் காட்டிக் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


பாணந்துறைப் பகுதியில் உள்ள மற்றுமொரு புலனாய்வாளர் இவ்வாறான தாக்குதல் ஒன்று நடைபெறவுள்ளதாக முன்னரே எச்சரித்தும், புலனாய்வுப் பிரிவு அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. 


தாக்குதலுக்குப் பின்னர், அந்த புலனாய்வாளர் விடுதலையான போது, சுரேஷ் சலே அவரை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து நன்றி தெரிவித்துள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 


சாய்ந்தமருது குண்டுவெடிப்பின் போது உயிரிழந்ததாகக் கூறப்படும் சாரா ஜஸ்மின் என்பவரின் உடல் பாகங்கள் இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட DNA பரிசோதனைகளிலும் உறுதிப்படுத்தப்படவில்லை. 


எனினும், மூன்றாவது முறையும் DNA பரிசோதனை செய்யுமாறு சுரேஷ் சலே விசாரணை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது. 


முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் இது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர். 


சுரேஷ் சலே சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த போது சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை எனவும் அவர் மலேசியாவில் இருந்தார் எனவும் குறிப்பிட்டார். 


ஏற்கனவே 25-க்கும் மேற்பட்ட விசாரணைகள் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது பக்கச்சார்பானது என தெரிவித்தார். 


சுரேஷ் சலே மிகவும் கொடூரமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது மகனைப் பார்க்கக் கூட பொலிஸ் சான்றிதழ் கேட்கப்படுகிறது. சட்டத்தரணிகளுடன் அவர் பேசும் விபரங்கள் இரகசியமாகப் பதிவு செய்யப்படுகின்றன. இது அடிப்படை உரிமை மீறலாகும் என சுட்டிக்காட்டினார். 


இந்த விசாரணை அதிகாரிகள் என்ன பேசுகிறார்கள்? அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளராக இருந்த எனது கட்சிக்காரர், எவ்வாறு பாதுகாப்புச் சபையைக் கூட்டி, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட விசாரணை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க முடியும்? 


அரச புலனாய்வுச் சேவையும் பொலிஸ் மா அதிபரின் கீழேயே இயங்குகின்றது. நீங்கள் குறிப்பிடும் அந்த பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் அக்காலத்தில் சீருடை அணிந்துதானே கடமையாற்றினார்கள்? இது வெட்கக்கேடானது. 


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த போது இந்த மூன்றாவது சந்தேகநபர் இலங்கையில் இருக்கவே இல்லை. அவர் மலேசியாவில் இருந்தார். அவர் 2018 ஜனவரி மாதமே இலங்கையை விட்டு வெளியேறிவிட்டார். 


அதுமட்டுமன்றி, இதுவரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து 25-க்கும் மேற்பட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து முன்னெச்சரிக்கை தகவல் கிடைத்ததாகவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 


ஆனால் இப்போது யாரோ ஒருவர் புலனாய்வுப் பிரிவுக்கு முன்கூட்டியே தகவல் வழங்கியதாகக் கூறுகிறார்கள். 


யார் தகவல் கொடுத்திருந்தாலும், அந்தத் தகவல் கிடைத்தும் தாக்குதலைத் தடுக்கத் தவறிய அன்றைய CID அதிகாரிகள் தான் இன்றும் இந்த விசாரணைகளை வழிநடத்துகிறார்கள். அவர்கள் அன்றே தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரானை கைது செய்திருந்தால் இந்த எந்த விசாரணைகளுமே தேவையில்லையே! 


இந்த ஜயகி டி அல்விஸ் அறிக்கையை வாசித்துப் பாருங்கள். இதை வாசித்தால் யார் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்பது புரியும். இவ்வாறானவர்கள் இந்த விசாரணையை முன்னெடுக்கும் போது, இது எவ்வாறு ஒரு பக்கச்சார்பற்ற விசாரணையாக அமைய முடியும்? 


இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதவான் இசுரு நெத்திகுமார, சுரேஷ் சலே தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் நேரடியாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவை. 


இந்தச் சாட்சிகள் போதுமானதா என்பதை மேலதிக விசாரணைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்க முடியும் என்று குறிப்பிட்டார். 


சுரேஷ் சலே தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கின் மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க மார்ச் 25ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்

Zameera

அநீதியாக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை குறைக்கவும் - சஜித் பிரேமதாச


 அநீதியாக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை மீண்டும் குறைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை கோரியுள்ளார்.

பழைய கையிருப்புக்களுக்கு இவ்வாறு எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் நுகர்வோருக்கு கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளன. 

ஒரு பீப்பாய் எண்ணெய் 70 அமெரிக்க டொலராக அமைந்து காணப்படும் போது இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் கையிருப்புகளுக்கு மத்திய கிழக்கு போர்ச் சூழல் நிலைமையை பயன்படுத்தி விலை சூத்திரத்தை மாற்றி, அதிக விலை அறவிடுவது மிகவும் ஊழல் நிறைந்த செயலாகும்.

எரிபொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கின்றன என்று காரணம் காட்டி அதிகரிக்கப்பட்ட விலை மூலம் அரசாங்கம் நாட்டிற்கு பொய் சொல்லியுள்ளது. 

அதிகரித்த எண்ணெய் விலை சில மணி நேரங்களிலேயே மீண்டும் வீழ்ச்சி அடைந்து கொண்டிருப்பதாகவும், ஒரு பீப்பாய் எண்ணெய் விலை இருந்ததை விட மேலும் குறைந்து கொண்டிருப்பதால் இந்த விலை அதிகரிப்பை நியாயப்படுத்த முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்

Zameera

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ஈரான் பங்கேற்க வாய்ப்பில்லை

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பீஃபா உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளில் ஈரானின் ஆண்கள் தேசிய கால்பந்து அணி பங்கேற்கும் நிலையில் இல்லை என்று அந்த நாட்டின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அஹ்மத் துன்யமாலி தெரிவித்துள்ளார். 

ஊடகம் ஒன்று அவர் வழங்கிய நேர்காணலின் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்கான பொருத்தமான சூழல் எந்தவொரு நிலையிலும் எம்மிடம் இல்லை. 

எமது வீரர்கள் பாதுகாப்பாக இல்லை. எனவே, போட்டியில் பங்கேற்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது நிலவவில்லை. 

கடந்த எட்டு அல்லது ஒன்பது மாதங்களில், இரண்டு போர்கள் எம்மீது திணிக்கப்பட்டுள்ளன. 

இதில் எமது மக்களில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டு தியாகிகளாக்கப்பட்டுள்ளனர். எனவே, பங்கேற்பதற்கான வாய்ப்பு நிச்சயமாக இல்லை என தெரிவித்துள்ளார். 

அதேவேளை ஈரானிய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் மெஹ்தி தாஜ், இதேபோன்ற கருத்தை முன்வைத்துள்ளார்.​ 

இம்முறை உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரை அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பீஃபா உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளில் ஈரானின் ஆண்கள் தேசிய கால்பந்து அணி பங்கேற்கும் நிலையில் இல்லை என்று அந்த நாட்டின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அஹ்மத் துன்யமாலி தெரிவித்துள்ளார். 

ஊடகம் ஒன்று அவர் வழங்கிய நேர்காணலின் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்கான பொருத்தமான சூழல் எந்தவொரு நிலையிலும் எம்மிடம் இல்லை. 

எமது வீரர்கள் பாதுகாப்பாக இல்லை. எனவே, போட்டியில் பங்கேற்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது நிலவவில்லை. 

கடந்த எட்டு அல்லது ஒன்பது மாதங்களில், இரண்டு போர்கள் எம்மீது திணிக்கப்பட்டுள்ளன. 

இதில் எமது மக்களில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டு தியாகிகளாக்கப்பட்டுள்ளனர். எனவே, பங்கேற்பதற்கான வாய்ப்பு நிச்சயமாக இல்லை என தெரிவித்துள்ளார். 

அதேவேளை ஈரானிய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் மெஹ்தி தாஜ், இதேபோன்ற கருத்தை முன்வைத்துள்ளார்.​ 

இம்முறை உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரை அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.