Our Feeds



Sunday, June 21, 2026

Zameera

உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரி கண்டுபிடிப்பு


 தெற்கு அல்பேனியாவில் உள்ள அட்டோமஸ் குகைக்குள் உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'லேக் நியூரோன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏரியின் முழுமையான அளவை விஞ்ஞானிகள் 3D ஸ்கேனர்கள் மூலம் தற்போது உறுதி செய்துள்ளனர்.

மேலும், இதை முதன்முதலில் 2021-ல் செக் குடியரசு விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டது. தற்போது அதிநவீன கருவிகள் மூலம் முழுமையாக அளவிடப்பட்டுள்ளது.

இது சுமார் 138.3 மீட்டர் நீளம், 42 மீட்டர் அகலம் மற்றும் 345 மீட்டர் சுற்றளவு கொண்டது. இதன் மொத்த பரப்பளவு 34,450 சதுர அடி, ஆழம் 25 அடி ஆகும்.

அத்துடன் இந்த ஏரியில் 79 டிகிரி வெப்பநிலைக் கொண்ட 8,335 கன மீட்டர் வெப்ப கனிம நீர் உள்ளது. இதில் 2.9 இலட்சம் கன அடி கனிமங்கள் நிறைந்துள்ளன.

எனவே விஞ்ஞானிகள் இந்த ஏரியை ஒரு அசாதாரண இயற்கை அதிசயம் என்று விவரிக்கின்றனர்.

Zameera

அரச மருத்துவமனைகளுக்கு அதிநவீன சி.டி. ஸ்கேன் இயந்திரங்கள்


 நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், அதிநவீன சி.டி. ஸ்கேன் இயந்திரங்கள் அரச மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்,நாட்டின் பொது சுகாதாரத் துறையை நவீனமயமாக்கி, நோயாளர்களுக்கு உயர்தர மருத்துவச் சேவைகளை தடையின்றி வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதற்காக 1,950 மில்லியன் ரூபாய் (195 கோடி ரூபாய்) என்ற பெரும் நிதி ஒதுக்கீட்டில், 11 அதிநவீன சி.டி. ஸ்கேன் இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

அத்துடன்,இந்த இயந்திரங்களானது,பக்கவாதம், புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட தீவிர நோய்களைத் துல்லியமாகக் கண்டறிந்து, அவற்றுக்கான சிகிச்சைகளைத் தாமதமின்றி நோயாளர்களுக்கு வழங்குவதற்கு மிகவும் இன்றியமையாதவை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்ட பொது மருத்துவமனைகளில் இந்த அதிநவீன சி.டி. ஸ்கேன் இயந்திரங்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதேவேளை, எஞ்சிய இயந்திரங்களும் திட்டமிடப்பட்ட ஏனைய மருத்துவமனைகளில் விரைவில் பொருத்தப்பட்டு, நோயாளர் பராமரிப்புச் சேவைகள் விரிவுபடுத்தப்படும் என சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Zameera

அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்

அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 


ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு செயற்திட்டத்தின் கீழ், கண்டி தேசிய வைத்தியசாலைக்கு, 48 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹீமோ டயாலிசிஸ் இயந்திரமொன்றை கையளிக்கும் நிகழ்வு இன்று (21) வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது. 


இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 


அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் தற்போதுள்ள உரிமைகளுக்கு மேலதிகமாக, இலவச சுகாதாரம் மற்றும் கல்வி, வாழ்வாதாரத்திற்கான உரிமை, கைத்தொழில்களுக்கான உரிமை மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் என்பன அடிப்படை என்பன உரிமைகளாக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 


ஐக்கிய மக்கள் சக்தி கொள்கை ரீதியான தீர்மானங்களை இதற்கு முன்னமே எடுத்துள்ளது. 


தேர்தல் கொள்கை அறிக்கைகளில் கூட இவற்றை காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 


நமது நாட்டு அரசியலமைப்பில் பிரஜைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும் விதம் விவரிக்கப்பட்டுள்ளன. 


அதன் 3 ஆம் அத்தியாயத்தில் அடிப்படை உரிமைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 


அதன்கீழ் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் என்பன உள்ளடக்கப்பட்டிருந்தாலும் சுகாதாரம், கல்வி, விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் துறைகள் மட்டுமன்றி வறுமை ஒழிப்பு என்பன உள்ளடக்கப்படவில்லை. 


இவை அரசியலமைப்பின் 6 ஆம் அத்தியாயத்திலேயே உள்ளடக்கப்பட்டுள்ளன. 


இந்த 6 ஆம் அத்தியாயத்திலுள்ள உரிமைகளை பிரஜைகளால் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியாது. 


எனவே அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் தற்போதுள்ள உரிமைகளுக்கு மேலதிகமாக, இலவச சுகாதாரம் மற்றும் கல்வி, வாழ்வாதாரத்திற்கான உரிமை, கைத்தொழில்களுக்கான உரிமை மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் என்பன அடிப்படை உரிமைகளாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Zameera

பரீட்சையை ஒத்திவைக்க வேண்டிய எந்த அவசியமும் இல்ல - கல்வி அமைச்சு


 எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் குறித்து கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

2026 உயர்தரப் பரீட்சைக்குத் தயாராவதற்குப் போதுமான காலம் உள்ளதால், பரீட்சை நடத்தப்படும் காலப்பகுதியைத் திருத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என அந்த அறிக்கையில் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

தேசிய கல்வி நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ஆசிரியர் வழிகாட்டிக்கு இணங்க, உயர்தரப் பாடத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்குத் தேவையான நாட்களின் எண்ணிக்கை 300 ஆகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் 2026 ஓகஸ்ட் 07 ஆம் திகதி வரை பாடசாலைகள் நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கை 343 ஆகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், 2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவை தோற்றவிருக்கும் மாணவர்களுக்காக, கடந்த பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்ட நாள் முதல் இந்த முறை பரீட்சை நடத்தப்படும் நாள் வரையிலான இடைவெளி 4 மாதங்களும் 10 நாட்களும் ஆகும் என அந்த அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, 2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தயாராவதற்குரிய முறையான காலம் கிடைத்துள்ளதால், பரீட்சை நடத்தப்படும் காலப்பகுதியைத் திருத்தம் செய்ய வேண்டிய எந்தவொரு தேவையும் எழவில்லை என கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

Admin

மலையக தித்வா அகதிகளை இன்னும் கூடாரங்களில் வைத்துள்ளது அனுர அரசு - மனோ அவுஸ்திரேலிய தூதரிடம் முறையீடு!


தித்வா புனருத்தாரணம்  தொடர்பில் நீங்கள், இலங்கைக்கு பாதுகாப்பான நிலத்தை தெரிவு செய்வது எப்படி என்ற தொழில் நுட்ப உதவிகள் செய்வதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். பாதுகாப்பான காணி இல்லை என  நம் தித்வா மலையக அகதிகளை இன்னும் கூடாரங்களில் இந்த அரசு வைத்துள்ளது. கண்டி, நுவரெலியா, பதுளை, மாவட்டங்க‌ளி‌ல் இந்நிலை தொடர்கிறது.

ஆகவே உங்கள் உதவி வழங்கப்படும் வேளைகளில் மலையக மக்களுக்கு அது பயன்படுகிறதா என்பதை கண்காணியுங்கள் என தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன், அவுஸ்திரேலிய தூதர் மெத்யூ டக்வொர்த்திடம் எடுத்து கூறினார்.

அவுஸ்திரேலிய ஹவுஸில் தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA) தூதுக்குழுவினருக்கும், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த் அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி  தலைவர் மனோ கணேசன், இரத்தினபுரி பிரதேச சபையின் உப தவிசாளர், ஜ.ம.மு சிரேஷ்ட உபதலைவர் சந்திரகுமார், சர்வதேச விவகாரங்கள்  தொடர்பான உப தலைவர் பாரத்  அருள்சாமி, மற்றும் அவுஸ்திரேலிய தூதுவர் மெத்திவ் டக்வர்த், துணை தூதர் ரூத் பைர்ட், அரசியல் அதிகாரி மெத்யூ லார்ட் கல‌ந்து கொண்டனர். 

இது பற்றிய கூட்டணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் உள்ளதாவது -

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தை (NBRO) பலப்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கி வரும் ஆதரவிற்காக, கூட்டணி தூதுக்குழுவினர் தமது நன்றியை தெரிவித்து கொண்டனர். 

தித்வாவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான  மீள்குடியேற்றத்திற்கு பொருத்தமான காணிகளை அடையாளம் கண்டு விடுவிப்பதில் NBRO நிறுவனத்தின் அனுமதி தாமதம் பிரதான தடையாக இருகிறது. 

டிஜிட்டல் வரைபடமாக்கல் (Digital Mapping) மற்றும் தொழில்நுட்ப திறனை மேம்படுத்துவதற்காக அவுஸ்திரேலியா வழங்கும் ஆதரவானது, பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் பாதுகாப்பான மற்றும் நிலையான மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்த உதவும் மிக முக்கிய பங்களிப்பாகும்.

இந்த பங்களிப்பு எமது மக்களுக்கு உதவி அவர்களது மீள்குடியேற்றத்துக்கு உதவுகிறதா என கண்காணியுங்கள் என மனோ கணேசன் தலைமையிலான தூத்துகுழு, அவுஸ்திரேலிய தரப்பை கேட்டு கொண்டது.

Admin

அடுத்த வாரம் இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு!


சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

அதன்படி, அவர்கள் எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் தங்கியிருந்து இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கையின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சியை மதிப்பீடு செய்யவும், இலங்கையின் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடவும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Admin

மீண்டும் துமிந்தவுக்கு அழைப்பாணை!


தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை மீண்டும் ஒரு சந்தேகநபராகப் பெயரிட்டு, கல்கிஸ்சை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாக அழைப்பாணை விடுக்குமாறு கல்கிஸ்சை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ஹவ்லொக் வீடமைப்புத் தொகுதியில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பெண் ஒருவரின் பையிலிருந்து தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 துப்பாக்கியைக் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கிலிருந்து கடந்த வருடத்தின் ஜூலை மாதம் 29 ஆம் திகதி துமிந்த திசாநாயக்க விடுவிக்கப்பட்டிருந்தார்.

இருப்பினும், பயங்கரவாத ஒழிப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் இந்தத் துப்பாக்கி தொடர்பாக மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் அறிக்கைகளுக்கு அமைய, துமிந்த திசாநாயக்கவை ஒரு சந்தேகநபராகப் பெயரிட முடியும் என சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்த நிலையிலேயே இந்த உத்தரவு நேற்று முன்தினம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Admin

எரிபொருள் விற்பனை மூலம் இலாபம் ஈட்டும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை - பிமல் ரத்நாயக்க!



உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்குமாயின், எதிர்வரும் ஓகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமளவில் அதன் சலுகைகளை நாட்டு மக்களுக்கு வழங்க முடியும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விற்பனை மூலம் இலாபம் ஈட்டும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய நிலைமை குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; தற்போதைய சூழலிலும் அரசாங்கம் ஒவ்வொரு லீற்றர் டீசலுக்கும் சுமார் 100 ரூபாவையும், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு சுமார் 20 ரூபாவையும் மானியமாக மக்களுக்கு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.

எரிபொருள் கொள்வனவு என்பது சாதாரண சந்தையில் பொருட்களை வாங்குவதைப் போன்றதல்ல என்றும், அது முறையான டெண்டர் நடைமுறைகளின்படி ஒப்புக் கொள்ளப்பட்ட விலையிலேயே கொள்வனவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க - 

"இப்போதும் அரசாங்கம் ஒவ்வொரு லீற்றர் டீசலுக்கும் 100 ரூபா மானியத்தையும், பெற்றோலுக்கு 20 ரூபா வரையிலும் வழங்கி வருகின்றது. கடையிலிருந்து ஒரு பொருளை வாங்குவது போல எரிபொருளை உடனடியாக வாங்கிவிட முடியாது. முன்கூட்டியே டெண்டர் கோரப்பட்டு, அந்த டெண்டர்களின்படியே ஒப்புக் கொள்ளப்பட்ட விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.

எனினும், இதே நிலைமை நீடித்தால் ஓகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமளவில் மக்களுக்கு ஒரு சலுகையை வழங்க முடியும் என நாம் நம்புகிறோம். நாட்டின் பொருளாதாரத்திற்கும் அது அவசியமாகும். பொருளாதாரத்தின் மேல் மட்டத்தை நாம் கட்டியெழுப்பியிருப்பதனாலேயே இவை அனைத்தையும் செய்ய முடிந்துள்ளது. எரிபொருள் மூலம் இலாபம் ஈட்டும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை. எங்களால் முடிந்தவரை விரைவில் எரிபொருள் விலையைக் குறைக்குமாறு நாமும் கோரியுள்ளோம்" என்றார்.

Admin

'அலரி மாளிகைக்குச் செல்ல வேண்டாம் என ஜனாதிபதி தடுத்தார்' - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இரகசியங்களை வெளிப்படுத்தும் ரணில்!


உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவத்தின் போது பாதுகாப்புத் துறையினரிடையே முறையான ஒருங்கிணைப்பு இருக்கவில்லை என்றும், அலரி மாளிகைக்குச் செல்ல வேண்டாம் என அதிகாரிகளுக்கு அன்றைய ஜனாதிபதியால் உத்தரவிடப்பட்டிருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதுடன், குண்டுத்தாக்குதல் அரங்கேறிய உடனே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது கைபேசிக்கு நேரடியாக அழைத்து இரங்கல் தெரிவித்ததோடு, எப்.பி.ஐ புலனாய்வு அமைப்பின் ஒத்துழைப்பை பெற்றுக் கொடுத்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு 7இல் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற  பொது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவுக் கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதியும் தாக்குதல் சம்பவத்தின் போது பிரதமராக இருந்தவருமான ரணில் விக்ரமசிங்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளிவராத பல உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளார். தாக்குதல் நடந்த போது அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் இல்லாததால், ரணில் விக்ரமசிங்கவே நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் சம்பவம் அறியக்கிடைத்த உடனேயே பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளை அலரி மாளிகைக்கு வருமாறு தான் பணித்ததாகவும், அப்போது அங்கு வந்திருந்த அப்போதைய சட்டமா அதிபர் ஜெயந்த ஜயசூரிய உள்ளிட்ட அதிகாரிகள், 'அலரி மாளிகைக்குச் செல்ல வேண்டாம்' என்று ஜனாதிபதி தமக்கு உத்தரவிட்டதாகக் கூறியதாகவும் ரணில் தெரிவித்தார்.

இதனால், பாதுகாப்பு அமைச்சிற்கே தாம் செல்ல நேரிட்டது என்றும், அங்கு அப்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவின் அறையில் அதிகாரிகள் கூடி விவாதங்களில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அங்கு நிலவிய குழப்பகரமான சூழலில், ஒருபுறம் ஹேமசிறி பெர்னாண்டோவும் மறுபுறம் மற்றுமொரு அதிகாரியும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனரே தவிர, யார் என்ன செய்கிறார்கள் என்ற ஒருங்கிணைப்பு எவரிடமும் இருக்கவில்லை என ரணில் சுட்டிக்காட்டினார்.

அதிகாரிகள் அனைவரும் கூட்டு முயற்சியில் ஈடுபடாமல், தனித்தனி அறைகளில் இருந்துகொண்டு கடிதப் பரிமாற்றங்களை மட்டுமே செய்திருந்ததாகவும், மோட்டார் சைக்கிள் வெடிப்புச் சம்பவம் பற்றி கூட தனக்கு எவரும் அறிவிக்கவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டார். அத்துடன், சிங்கள புத்தாண்டு வார இறுதி என்பதால் பொலிஸார் கொழும்புக்கு வெளியேயான கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையும் நிலைமையை மோசமாக்கியது.

பாதுகாப்புத் துறையினரிடையே ஒற்றுமை இல்லை என்பதை உணர்ந்த பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவல்களைப் பகிர்ந்து விசாரணைகளை ஆரம்பித்ததாக குறிப்பிட்ட ரணில், பாதுகாப்பு அமைச்சில் நிலவிய கடுமையான குழப்பம் காரணமாக அன்றைய தின மாலைக் கூட்டத்தை முப்படைப் பிரதானியின் அலுவலகத்திலேயே நடத்த வேண்டியேற்பட்டது என்றும் கூறினார்.

மகாநாயக்க தேரர்கள் மற்றும் கர்தினால் ஆகியோரைத் தொடர்புகொண்டு நிலைமைகளைத் தெளிவுபடுத்திய அதேவேளை, கொச்சிக்கடை தேவாலயப் பகுதிக்குத் தாம் சென்றபோது அங்கு அருகில் இருந்த வானில் வெடிகுண்டு இருந்ததை தாம் அறிந்திருக்கவில்லை என்றும், அதன் பின்னரே கட்டுவாப்பிட்டியவிற்குச் சென்றதாகவும் அவர் விவரித்தார்.

தொடர்ந்து அநுர குமார திஸாநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சித் தலைவர்களை அலரி மாளிகைக்கு அழைத்து நிலைமைகளை விளக்கியதாகக் கூறிய அவர், இத்தாக்குதலில் அமெரிக்கப் பிரஜைகளும் உயிரிழந்ததால் அமெரிக்க அரசாங்கத்தின் பிரதிநிதி ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது கைபேசிக்கு நேரடியாக அழைத்து தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்ததாக ரணில் விக்ரமசிங்க நினைவு கூர்ந்தார். அந்த உரையாடலின் போது, இலங்கையின் பாதுகாப்பு நிறுவனங்களிடையே தற்போதைய சூழலில் ஒருங்கிணைப்பு இல்லாததால், எமது அதிகாரிகளை அமெரிக்காவின் எப்.பி.ஐ அமைப்போடு இணைந்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு டிரம்ப் உடன்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அழைப்பிற்குப் பின்னர், 2019 ஏப்ரல் 22 அன்று மாலை 6.05 மணிக்கு ஜனாதிபதி டிரம்ப் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், 'பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா இலங்கையுடன் நிற்கிறது என்பதை உறுதிப்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசினேன்' எனப் பதிவிட்டிருந்ததை ரணில் சுட்டிக்காட்டினார்.

எப்.பி.ஐ அதிகாரிகள் எமது தரப்போடு இணைந்து செயல்பட்டே அந்த இறுதி விசாரணை அறிக்கையைத் தயாரித்ததாகவும், பாராளுமன்றக் குழுக்கள் உட்பட அனைத்தும் அதன் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டதால் அந்த அறிக்கையை யாரும் நிராகரிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், தனது ஆட்சிக் காலத்திலேயே செனல் 4 ஊடகம் இதுகுறித்த ஒளிபரப்பைச் செய்ததாகவும், அது குறித்து ஆராய நீதியரசர் ஒருவரின் தலைமையில் குழுவொன்றை நியமித்ததாகவும் குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, தேவாலயத்திற்குத் தேவையான அனைத்து அறிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் எப்.பி.ஐ அறிக்கையே முதன்மையானது என்றும் தெரிவித்துள்ளார்.   

Admin

மாகாண சபை தேர்தல் நடத்தப்படுமா? - மஹிந்த தேசப்பிரியவின் கணிப்பு!


இலங்கையில் நிலுவையில் உள்ள மாகாண சபை தேர்தல்களை இந்த ஆண்டுக்குள் நடத்துவது சாத்தியமற்றது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல்கள் இத்தனை காலம் தாமதமாகியிருப்பதற்கு நாடாளுமன்றம் மற்றும் நாட்டை ஆட்சி செய்த, ஆட்சி செய்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளுமே கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டும். அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு இதில் பெரும்பங்கு உண்டு.

தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பதைத் தீர்மானிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளதால், பழைய முறையிலா அல்லது புதிய முறையிலா தேர்தலை நடத்துவது என்பது குறித்து அவர்களால் தீர்மானிக்க முடியும்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இது தொடர்பான பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இந்த விவகாரத்தை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அனுப்பி, அதன் அனுமதியைப் பெற்று தேர்தலை நடத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

பல வருடங்களாக மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இன்றி, ஆளுநர்கள் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் மட்டுமே இயங்கி வருகின்றன.

மக்கள் பிரதிநிதிகள் இல்லாத அதிகாரிகளின் ஆட்சி ஒருபோதும் மக்கள் ஆட்சியாகாது, இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரானது.

ஒருவேளை கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தலை நடத்தத் தீர்மானித்தால், எல்லை நிர்ணய அறிக்கையை மறுசீரமைக்க புதிய எல்லை நிர்ணயக் குழுவொன்றை அமைத்து அந்தப் பணிகளை முடிக்கக் குறைந்தது 4 மாதங்களாவது தேவைப்படும்.

எனவே, இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த முடியாது.

திறைசேரியில் பணம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, நிதி இல்லை என்றும் அந்தப் பணம் டிட்வா பாதிப்புகளை சீர்செய்ய செலவிடப்பட்டுவிட்டதாகவும் கூறியிருந்தார்.

பணத்தை அவ்வாறு டிட்வா செலவுகளுக்கு செலவிட்டதாகக் கூறுவது ஒரு சுவாரசியமான விடயம். நாங்கள் அரச சேவையில் இருந்த காலத்தில் அப்படி ஒரு விடயத்தைக் கேள்விப்பட்டதில்லை. இப்போது அப்படி ஏதும் முறை இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Saturday, June 20, 2026

Admin

மீண்டும் மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் ஜலசந்தி - ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை எச்சரிக்கை!



ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்பட்டுள்ளதாகவும், கப்பல்கள் அதனை நெருங்க வேண்டாம் எனவும் ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை எச்சரிக்கை.

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (ஐ.ஆர்.ஜி.சி) கடற்படை, கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை நெருங்க வேண்டாம் என எச்சரித்துள்ளதுடன், அவ்வாறு நெருங்கினால் தாக்குதல் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது.

ஐ.ஆர்.ஜி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், லெபனானில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் மற்றும் வாஷிங்டன் தனது போர்நிறுத்த உறுதிமொழிகளை மீறியதே இந்த முக்கிய நீர்வழிப்பாதை மூடப்பட்டதற்குக் காரணம் என குறிப்பிட்டுள்ளது.

Zameera

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையை நீக்குவது குறித்து இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை


 எரிபொருள் விநியோகத்திற்காக தற்பொழுது நடைமுறையிலுள்ள QR குறியீட்டு முறைய (QR Code) முழுமையாக நீக்குவது தொடர்பாக அரசாங்கமோ அல்லது கூட்டுத்தாபனமோ இதுவரை எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்கவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஆலோசனைகளோ அல்லது கலந்துரையாடல்களோ இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதேவேளை, உலக சந்தையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ச்சியாக சரிவைச் சந்தித்து வந்த மசகு எண்ணெய் விலைகள், நேற்றைய தினம் மீண்டும் சற்றே அதிகரிப்பைக் காட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, உலக சந்தையில் ஒரு கொள்கலன் டீசலின் விலை 1.06 டொலராலும், 92 ரக பெற்றோல் கொள்கலன் ஒன்றின் விலை 2.58 டொலராலும் நேற்றைய தினம் அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் தற்போதைய விலை நிலவரம் ஸ்திரமாக நீடிக்கும் பட்சத்தில், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எவ்வித நட்டமும் ஏற்படாது என்பதால், உள்நாட்டில் தற்போதைய விலையிலேயே தொடர்ந்து எரிபொருளை விநியோகிக்க முடியும் என நிர்வாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வரும் நாட்களில் உலக சந்தையில் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்தால், அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தத்தின்போது உள்நாட்டிலும் விலைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறிய அவர், கூட்டுத்தாபனம் உலக சந்தை நிலவரங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Zameera

ஆசனப் பட்டி பொருத்த 3 மாத அவகாசம்


  வாகனங்களில் ஆசனப் பட்டிகள் இல்லாதிருப்பின், அவற்றை பொருத்துவதற்காக மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என வீதி பாதுகாப்பு பற்றிய தேசிய சபை தெரிவித்துள்ளது.



இதன் தலைவர் மஞ்சுள குலரத்ன வலியுறுத்துகையில், அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான ஆசனப் பட்டி சட்டம் இன்று (20) முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.



எவ்வாறாயினும், உற்பத்தியாளரினால் ஆசனப் பட்டிகள் வழங்கப்படாத வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தலைவர் தெரிவித்தார்.



இதன்படி, எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் ஆசனப் பட்டிகளைப் பொருத்த வேண்டும் என்றும், அந்த அவகாசம் இன்று (20) முதல் அமுலுக்கு வருவதாகவும் அந்த அதிகாரசபை குறிப்பிடுகிறது.



இதுவே இறுதி நீடிப்பாகக் கருதப்படும் அதேவேளை, வாகனத்தினுள் ஆசனப் பட்டிகள் இருக்குமாயின் சாரதியும் அதேபோல் பயணியும் கட்டாயமாக அதனை அணிய வேண்டும், தவறும்பட்சத்தில் அபராதத் தொகைக்கு உள்ளாக நேரிடும்.