Our Feeds



Wednesday, May 27, 2026

SHAHNI RAMEES

மதத்தின் பெயரால் பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டாம்! - ரோட்டுக்கு இறங்கிய பெண்கள்


வடக்கு மற்றும் கிழக்கின் எட்டு மாவட்டங்களிலிருந்தும்

Zameera

நாட்டின் தேர்தல் குறித்து தீர்மானிப்பதற்கு டில்வின் சில்வாவுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? - இம்ரான் மகரூப்




 (சேனையூர் நிருபர்) 


மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, நாட்டின் மாகாண சபைத்தேர்தல்கள் இந்த ஆண்டு நடைபெறாது என்று தன்னிச்சையாக அறிவித்திருப்பது மக்களின் இறையாண்மையை அப்பட்டமாக உதைத்துத் தள்ளும் ஒரு சர்வாதிகாரச் செயலாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 


நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபை முறைமையை ஆரம்பம் முதல் எதிர்த்துவந்த மக்கள் விடுதலை முன்னணி, இவ்வாறான இழுத்தடிப்புகள் மூலம் அதனை இல்லாது செய்ய முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.


ஆளும் தேசிய மக்கள் சக்தியின் தலைமைக்கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவுக்கு இந்த நாட்டின் தேர்தல் குறித்து தீர்மானிப்பதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று கேட்க விரும்புகின்றேன். மாகாணசபைத் தேர்தலை நடத்த விரும்பாத இந்த அரசாங்கம் டில்வின் சில்வா மூலம் அதனை வெளிப்படுத்தியுள்ளது.


சிறுபான்மை மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியும், இந்த அரசாங்கமும் அந்த மக்களின் மாகாண சபை அபிலாசைகளை குழி தோண்டிப் புதைக்கும் நடவடிக்கை எடுப்பது கவலையைத் தருகின்றது. 


இலங்கை அரசியலமைப்பின் படி, தேர்தலை நடத்துவது மற்றும் அது தொடர்பான இறுதித்தீர்மானங்களை எடுக்கும் முழுமையான அதிகாரம் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவிற்கே உரியதாகும். அதேபோல், பொது நிதியை ஒதுக்குவதும், அதனை மாற்றுவதும் பாராளுமன்றத்தின் அனுமதியுடன் நிதி அமைச்சருக்குரியது


இந்த சட்டபூர்வமான நடைமுறைகளில் தலையீடு செய்யும் அதிகாரம் டில்வின் சில்வாவுக்கு எப்படி வந்தது. பாராளுமன்றத்தையோ, தேர்தல் ஆணைக்குழுவையோ மதிக்காமல், மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகமான பெலவத்தையில் எடுக்கப்படும் முடிவுகளை நாட்டின் சட்டமாக திணிக்க முற்படுவது அப்பட்டமான ஜனநாயக மீறலாகும்.



மிக முக்கியமாக, மாகாண சபை முறைமை இந்த நாட்டு சிறுபான்மை மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கான ஒரு அரசியல் தீர்வாக, அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் ஊடாகக் கொண்டு வரப்பட்ட ஒன்றாகும். அதிகாரப் பகிர்வு மற்றும் சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாஷைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய இந்த மாகாண சபை கட்டமைப்பை, தேர்தல் நடத்தாமல் தொடர்ந்தும் முடக்கி வைக்க முற்படுவது சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். 


ஆரம்பம் முதலே மாகாண சபை முறைமையை எதிர்த்துவந்த ஜே.வி.பி, இன்று அதனை அவர்களது தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு தனி நபரின் அறிக்கை மூலம் புதைக்கப் பார்க்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.


சிறுபான்மையினரின் அரசியல் அபிலாசையான மாகாண சபைத்தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைப்பதும், அதனை ஒரு கட்சிச்செயலாளர் ஊடகங்களுக்கு அறிவிப்பதும் 'மாற்றத்தை' நோக்கி வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயலாகும்.


சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்போம் என்று வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இப்போது தம்மை ஏமாற்றுகிறது என்பதை மக்கள் புரிய ஆரம்பித்துள்ளார்கள் என்றார்.

Zameera

இம்மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 10 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை


 இம்மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 10 இலட்சம்  சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளதாக வெளிவிவகார, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.


2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சாதனை அளவிலான வளர்ச்சியைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் சுற்றுலாத்துறை தனது வலுவான நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.


மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஓரளவுக்கு வீழ்ச்சி காணப்பட்டது. மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் மற்றும் உலகளாவிய பயண நிச்சயமற்ற தன்மைகளே இதற்கு முக்கிய காரணம் எனத் துறைசார் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


2026 ஆம் ஆண்டிலும் இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளனர். ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. 


இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித்த ஹேரத், 


கடந்த 2025 ஆம் ஆண்டின் சாதனையைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் மே மாத இறுதிக்குள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தைக் கடந்துள்ளது.


இலங்கையை உலகின் முன்னணி சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்துத் துறைசார் பங்குதாரர்களுக்கும், எமது நாட்டைத் தேர்ந்தெடுத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


இலங்கையின் அந்நியச் செலாவணி ஈட்டும் முக்கிய துறைகளில் ஒன்றாக சுற்றுலாத்துறை விளங்கும் நிலையில், வரும் மாதங்களிலும் இந்த வளர்ச்சி சீராகத் தொடரும் என அதிகாரிகள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.

Zameera

டிக்கோயா இரட்டைக் கொலைச் சந்தேகநபர் தப்பியோட்டம்


  ஹட்டன் - டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் இன்று (27) அதிகாலை சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.


டிக்கோயா பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலைய குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை (21) இடம்பெற்ற இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், பொகவந்தலாவை - பெற்றோசோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்தபோது, பொதுமக்களின் உதவியுடன் கடந்த சனிக்கிழமை (23) கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, எதிர்வரும் ஜூன் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

சிறையிலிருந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சந்தேகநபர் சிறைச்சாலை அதிகாரிகளால் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்தேகநபர் இன்று (27) அதிகாலை தப்பிச் சென்றுள்ளார்.

தப்பிச் சென்ற சந்தேகநபரைக் கைது செய்யப் பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளதால், அவரை மீண்டும் கைது செய்வதற்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

சந்தேகநபர் குறித்து ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

-நுவரெலியா நிருபர் செ.திவாகரன்-

Zameera

அநுராதபுரத்தில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் : நீதி கோரி மட்டக்களப்பில் பெண்கள் ஆர்ப்பாட்டம்




 அநுராதபுரத்தில் பௌத்த பிக்குவால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்குமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (27) காலை பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். 


அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி, "வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு" அமைப்பினர்  மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஒன்றுகூடிய பெண்கள் ஊர்வலமாக சென்று படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் "பிக்குவினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அனுராதபுரம் சிறுமிக்கு நீதி வழங்குக...", “பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியை நிலைநாட்டுங்கள்”, "மதத்தின் பெயரால் பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கவேண்டாம்”, “சட்டத்தினால் மறுக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு பிணை கிடையாது” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பெரிய பதாதைகளை ஏந்தியவாறு தங்களது பலத்த எதிர்ப்பை வெளியிட்டனர்.


பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விரைவாக நீதி கிடைக்கவேண்டும் என்பதுடன், குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பிக்குவுக்கு எதிராக சட்டம் பாகுபாடின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான, குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாட்டில் அதிகரித்துவரும் நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பை அரசு பலப்படுத்தவேண்டும்.


இச்சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவர்கள், உரிய அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.


ஆர்ப்பாட்ட வேளையில் மகஜர் வாசிக்கப்பட்டதுடன் அந்த மகஜர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்திலும்  கையளிக்கப்பட்டது.

Zameera

தம்பதியை மயக்கி நகை திருடிய முச்சக்கரவண்டி சாரதி கைது

கொழும்பு - மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற பணியாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை மயக்கமடையச் செய்து, சுமார் 12 பவுன் தங்க நகைகளைத் திருடிச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தெமட்டகொட பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.City & Local Guides


நண்பகல் நேரம் வீடொன்றினுள் நுழைந்த பெண் ஒருவர் உட்பட நால்வரைக் கொண்ட குழுவொன்று இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


மாளிகாவத்தை, தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த வியாழக்கிழமை (21) அன்று இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. உடல் நலக்குறைவுடன் இருந்த நபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வீட்டில் இருந்தபோது, கர்ப்பிணிப் பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள வீடொன்றினை வாடகைக்குப் பெற்றுக்கொள்ள வந்துள்ளதாகவும், தரகர் மற்றும் உரிமையாளர் வரும் வரை காத்திருப்பதாகத் தெரிவித்து வீட்டினுள் இருவரும் வந்துள்ளனர்.


இந்நிலையில் தண்ணீர் வாங்கி அருந்திவிட்டு, அவர்களுடன் சகஜமாகக் கலந்துரையாடிக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் தரகர், உரிமையாளர் எனத் தெரிவித்துக்கொண்டு இருவர் வீட்டினுள் நுழைந்து, கதவு மற்றும் ஜன்னல்களைப் பூட்டிவிட்டு, அவர்களை மயக்கமருந்து தடவப்பட்ட துணித்துண்டொன்றைக் கொண்டு மயக்கமடையச் செய்துள்ளனர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டிலிருந்த நகைகளையும் திருடி அங்கிருந்து குறித்த குழுவினர் தப்பிச் சென்றுள்ளனர்.


மேற்படி குழு சுமார் 12 பவுன் தங்க நகைகளைத் திருடிச்சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு அருகிலிருந்த சிசிடிவி கமராக்களை ஆய்வு செய்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் கைதுசெய்துள்ளனர். இந்நிலையில் தப்பியோடிய ஏனைய சந்தேகநபர்கள் மற்றும் திருடப்பட்ட நகைகளை மீட்பதற்கான மேலதிக விசாரணைகளை தெமட்டகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Zameera

எந்நாட்டின் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், எமது சுய கௌரவத்தைப் பாதுகாத்து சுயாதிபத்தியத்துடன் முடிவுகளை எடுக்கவேண்டும்


 (க.சிவலிங்கமூர்த்தி)


நாம் அணிசேராக் கொள்கை பற்றிப் பேசினாலும், எதிர்காலத்துக்கு 'பல்தரப்பு கொள்கை' ஒன்றையே நாம் உருவாக்க வேண்டும். அதாவது, அனைத்து நாடுகளுடனும் இணக்கமாகச் செயற்பட வேண்டும், அதேவேளை எந்நாட்டின் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், எமது சுய கௌரவத்தைப் பாதுகாத்து சுயாதிபத்தியத்துடன் முடிவுகளை எடுக்க வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.யு.எம்.அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.


முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எழுதிய 'எக்கட கெடும' (ஒன்றுகூடிய மோதல்)  எனும் நூல் வெளியீட்டு விழா, நேற்று முன்தினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


இன்றைய நவீன உலகில், ஒரு நாடு தனித்து இயங்க முடியாது என்பதை நாம் உணர வேண்டும். யானைகள் சண்டையிடும்போது, கீழே இருக்கும் புற்களே நசுங்கும் என்பது போல, நமக்கு எவ்விதத் தொடர்புமற்ற மத்திய கிழக்கு நாடுகளின் மோதல்கள், எமது நாட்டின் டொலர் கையிருப்பில் பாரிய தாக்கத்தைச் செலுத்துகின்றன. எரிபொருள் இறக்குமதி, ஏற்றுமதிச் சிக்கல்கள் மற்றும் அந்நியச் செலாவணி வருமானம்  குறைவடைதல் என நாட்டின் ஒவ்வொரு மர்மஸ்தானத்திலும் இந்த சர்வதேசப் பாதிப்புகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.


ஒரு நாட்டின் வெற்றிகரமான நிர்வாகத்துக்கு தீர்க்கதரிசனமும், தரவுகளை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்களும் அவசியம். 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை நாம் வென்றபோது, எமது வீரர்களிடம் இருந்த நுணுக்கமான திட்டமிடல் மற்றும் களவியூகமே வெற்றியைத் தந்தது. அதேபோல, 2022 இல் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்த முடியாது என்ற மிகக் கடினமான, ஆனால் தவிர்க்க முடியாத தீர்மானத்தை நாம் எடுத்தோம். உயிர் வாழ்ந்தால் மாத்திரமே கடனை மீளச் செலுத்த முடியும் என்ற தர்க்கத்தின் அடிப்படையிலேயே அது அமைந்தது.


தற்போதைய உலக அரசியலில், ஒரு நாடு மற்றுமொரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையின் நீட்சியாக செயற்படக்கூடாது. இது மிகவும் அபாயகரமானது. நாம் 'அணிசேராக் கொள்கை' பற்றிப் பேசினாலும், எதிர்காலத்துக்கு 'பல்தரப்பு கொள்கை' ஒன்றையே நாம் உருவாக்க வேண்டும். அதாவது, அனைத்து நாடுகளுடனும் இணக்கமாகச் செயற்பட வேண்டும், அதேவேளை எந்நாட்டின் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், எமது சுய கௌரவத்தைப் பாதுகாத்து சுயாதிபத்தியத்துடன் முடிவுகளை எடுக்க வேண்டும்.


அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருப்பதற்கு, அவர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு  முன்னுரிமை அளிப்பதே முக்கிய காரணமாகும். அதேபோல, இலங்கை போன்ற சிறிய நாடுகள், பொருளாதாரம், வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்பு மற்றும் அரச நிர்வாகம் ஆகிய நான்கு துறைகளிலும் சிறந்த நிபுணர்களைக் கொண்டு நாட்டை வழிநடத்த வேண்டும். இந்தியாவின் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர், அந்தந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதாலேயே அந்த நாடுகள் வெற்றிகரமாகச் செயற்படுகின்றன.

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள், தனது நூலின் ஊடாக இவ்வாறான ஆழமான சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் கருத்துகளை எளிய விதத்தில் மக்களிடம் கொண்டு சென்றுள்ளார்.இவ்வாறான தரவுகள் சார்ந்த கொள்கைத் திட்டங்களே நாட்டின் எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை என்றார்.

Zameera

கம்பஹா மற்றும் மஹர பிராந்தியங்களுக்கு இன்று 12 மணித்தியால நீர்வெட்டு


 கம்பஹா மற்றும் மஹர பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (27) 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று இரவு 7.00 மணி முதல் நாளை (28) முற்பகல் 7.00 மணி வரையான காலப்பகுதிக்குள் இந்த நீர் விநியோகம் நிறுத்தப்படும் என அந்தச் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அதிவேக வீதியின் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடைய நீர் குழாய்களை இடமாற்றம் செய்யும் அத்தியாவசிய பராமரிப்புப் பணி காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Zameera

மூளைக் காய்ச்சலால் 203 பேர் பாதிப்பு


 நாட்டின் பல பகுதிகளிலிருந்து இதுவரையில் 203 பேர் மூளைக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தெனியாய, தியத்தலாவ, ரிபில்லகஸ்கட, கண்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பாதிப்புகள் குறித்து பதிவாகியுள்ளது.

நோய் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Zameera

காத்தான்குடியில் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ விபத்து



மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் நேற்றிரவு (26) ஏற்பட்ட பாரிய தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விபத்தினால் பெருமளவிலான சொத்துச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



தீப்பரவல் குறித்துத் தகவல் அறிந்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி நகரசபை மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்புப் படையினர், காத்தான்குடி பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர்.



தீயணைப்புப் படையினரின் கடும் போராட்டத்தின் பயனாகத் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சம்பவ இடத்தில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



இந்த தீ விபத்து காரணமாகக் குறித்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததுடன், மட்டக்களப்பு - கல்முனை வீதியூடான போக்குவரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் வாகனங்களை மாற்று வீதிகளின் ஊடாகச் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டனர்.



தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-


 

Tuesday, May 26, 2026

Zameera

யாழ்ப்பாண உயர் பாதுகாப்பு வலய காணிகளை மிக விரைவில் விடுவிக்க நடவடிக்கை


 யாழ்ப்பாண உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பெருமளவான காணிகளை விடுவிப்பதற்கு மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.


 


உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.



அவர் மேலும் தெரிவிக்கையில்,



"மக்களின் காணி மக்களுக்கே என்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அந்தக் காணிகளை விடுவிக்கும் முகமாக உயர்மட்டக் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு, காணி விடுவிப்பு தொடர்பில் கள ஆய்வுகளையும் மேற்கொண்டோம்.



இதில் உடனடியாக விடுவிக்கப்படக்கூடிய காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பாடசாலைகளை விடுவிப்பதற்கான முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.



அதேவேளை, உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரதான வீதிகளின் சில பகுதிகள் காணப்படுகின்றன. அவற்றை விடுவித்து, முழுமையாக வீதிகளைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.



உடனடியாக விடுவிக்க முடியாத நிலையில் காணப்படும் காணிகள் குறித்து மேலும் ஆராயப்பட்டு, எதிர்காலத்தில் விடுவிக்கக்கூடிய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். அவ்வாறு விடுவிக்க முடியாத காணிகள் தொடர்பில் காணி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, அது குறித்துத் தீர்மானிக்கவுள்ளோம்.



விமான நிலைய விரிவாக்கத்திற்காக எத்தனை ஏக்கர் காணிகள் தேவை என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. அந்தக் காணிகளை வழங்குவது குறித்து எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம்.



அதேபோல், விவசாயக் காணிகளை விடுவிப்பது தொடர்பில் விவசாயத் திணைக்கள அதிகாரிகளிடம் விவரங்களைக் கோரியுள்ளோம். அந்தத் தரவுகள் கிடைத்ததும் அக்காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்" என்றார்.


-யாழ். நிருபர் பிரதீபன்-

Zameera

ஆதிவாசி சமூகத்தினரின் பூர்வீக நிலங்களை மீள ஒப்படைக்க மஹாவலி அதிகாரசபை இணக்கம்


 விவசாய நடவடிக்கைகளுக்காக தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த, ஆதிவாசி சமூகத்தினர்   பயன்படுத்தி வந்த காணிகளை மீண்டும் அவர்களிடமே விடுவிப்பதற்கு மஹாவலி அபிவிருத்தி அதிகாரசபை இணக்கம் தெரிவித்துள்ளது.


ஆதிவாசி சமூகத்தினரின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட்  மனு  மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (26) செவ்வாய்க்கிழமை   பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மஹாவலி அதிகாரசபை இந்த உத்தியோகபூர்வ அறிவித்தலை விடுத்துள்ளது.


விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகக் கூறி, பல்வேறு தனியார் நிறுவனங்கள் கடந்த 2021ஆம் ஆண்டில் பொல்லேபெத்த மற்றும் ரம்பகன் ஓயா ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த வனப்பகுதிகளைக் கனரக இயந்திரங்கள் கொண்டு துப்பரவு செய்திருந்தன. ஆதிவாசி சமூகத்தினரின் வாழ்வாதாரத்தையும் கலாசாரத்தையும் பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நில அபகரிப்பு மற்றும் காடழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவே, ஆதிவாசி சமூகத்தின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த ரீட் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


இந்த மனு இன்றையதினம் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது, ஆதிவாசி தலைவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே முன்னிலையாகியிருந்தார். இதன்போது, குறித்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பூர்வீக நிலங்கள் அனைத்தையும் அந்த நிறுவனங்களிடமிருந்து மீட்டு, மீண்டும் ஆதிவாசி  சமூகத்தினரிடம் ஒப்படைப்பதுக்கு மஹாவலி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றிற்குத் தெரிவித்தனர்.

Zameera

4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு


 தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நேற்று (25) விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நான்கு மாவட்டங்களின் 17 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் இந்த அபாய எச்சரிக்கையை விடுக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது நாளை (27) பிற்பகல் 4.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, இரத்தினபுரி, அயகம மற்றும் எஹலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள விபரம் பின்வருமாறு:

களுத்துறை மாவட்டம்: மத்துகம மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுகள்.

கேகாலை மாவட்டம்: தெரணியகல, யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட, ருவான்வெல்ல மற்றும் புலத்கொஹுபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகள்.

நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவு.

இரத்தினபுரி மாவட்டம்: எலபாத, நிவித்திகல, பெல்மதுல்ல, கிரியெல்ல மற்றும் கலவான பிரதேச செயலாளர் பிரிவுகள்.