
Friday, March 20, 2026

நாளை மற்றும் நாளை மறுதினம் எரிபொருள் நிலையங்கள் மூடப்படாது
நாளை மற்றும் நாளை மறுதினங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவதற்கு எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அந்த கூட்டுத்தாபனத்தின் முகாமை பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார்.
சாதாரண நடைமுறைக்கு அமைவாக ஒவ்வொரு மாதமும் ஒரு சனிக்கிழமை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மூடப்படுவது வழமையாகும்.
இதனை அடிப்படையாகக் கொண்டே சனிக்கிழமை கூட்டுத்தாபனம் மூடப்படவுள்ளதாக செய்திகள் பரவி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், தற்போதுள்ள விசேட தேவை மற்றும் சனிக்கிழமை இரவு QR குறியீடு (QR Code) மீளமைக்கப்பட உள்ளதால், அன்றைய தினம் பெற்றோலிய கூட்டுத்தாபனம் திறந்திருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன், தேவை ஏற்படின் ஞாயிற்றுக்கிழமையிலும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார்.
இதேவேளை, மொத்த களஞ்சிய முனைய நிறுவனமும் சனிக்கிழமை எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இதன் காரணமாக நுகர்வோர் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், நாளை மற்றும் நாளை மறுதினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவது குறித்து எந்த அறிவித்தலோ அல்லது தீர்மானமோ எடுக்கப்படவில்லை என்றும் முகாமை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சட்ட போராட்டத்திற்கு துணை நிற்போம்
கடந்த மாசி மாதம் 4ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தில் தேசிய கொடி இறக்கப்பட்டு கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களின் உணர்வுக்காக சட்டத்தரணிகள் துணை நிற்போம் என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
நேற்று யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மூவரை விசாரணைக்காக அழைத்தபோது சட்ட ஆலோசனை வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் சென்ற நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பல்கலைக்கழக மாணவர்களை சுமார் நான்கு மணித்தியாலங்கள் குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
மாணவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்ப உள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் பிரகாரம் தேவை ஏற்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என தெரிவித்தனர்.
மாணவர்களை பொறுத்தவரையில் அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை பல்கலைக்கழக மாணவர்களாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.
ஆகவே தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்கு தேவையான சட்ட உதவிகளை சட்டத்தரணிகளாக துணை நிற்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.
சட்டத்தரணிகளான திருக்குமரன், சதீஷ் மற்றும் கோல்டன் ஆகியோரும் மாணவர்களுக்கான சட்ட ஆலோசனைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

குவைத் எண்ணெய் நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல்
இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை.
மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க அவசரக்காலக் குழுவினர் போராடி வருகின்றனர்.
அத்துடன் சில அலகுகள் கட்டாயமாக மூடப்பட்டுள்ளன.
ஈரானின் சவுத் பார்ஸ் வளாகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் அதற்குப் பதிலடி கொடுத்து வருகிறது.
இதில் வளைகுடா நாடுகள் ஈரானின் கோபத்திற்கு இலக்குகளாக மாறியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியின் கோரிக்கையின் அடிப்படையில் ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளின் மீதான தமது தாக்குதல்களை இடைநிறுத்தியுள்ளதாக இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தெரிவித்திருந்தார்.
எனினும் தமது இழப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் தொடர்ச்சியான தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்து, இத்துறை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் அதிகபட்சமாக தலையிடும்
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழல் காரணமாக இந்நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, இத்துறையின் பிரதான ஏற்றுமதியாளர்கள் மற்றும் இலங்கை வர்த்தக சபை பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு குறிப்பாக ஏற்றுமதித் துறைக்கும், உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.
தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்து, உருவாகியுள்ள சூழ்நிலையை முகாமைத்துவம் செய்வதற்காக ஏற்றுமதித் துறைக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படுவது குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இத்துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பாக ஏற்றுமதியாளர்கள் மற்றும் இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கம்முவ, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க ஆகியோருடன், பிரண்டெக்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்ரப் ஒமர், ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்கள் மன்றத்தின் (JAAF) தலைவர் பீலிக்ஸ் பெர்னாண்டோ, இலங்கை இறப்பர் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சிசிர ரணதுங்க, இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹஸிபா அக்பரலி மற்றும் இலங்கை வர்த்தக சபை, கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம், இலங்கை தென்னை சார்ந்த தொழிற்துறையினர் சபை, தேசிய ஏற்றுமதியாளர்கள் சபை உள்ளிட்ட ஏற்றுமதித் துறை சார்ந்த உற்பத்தி மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

QR தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க புதிய உதவி எண் அறிமுகம்
தேசிய எரிபொருள் பாஸ் முறைமை (QR) தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க ஒரு புதிய உதவி எண் தொடங்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த அமைப்பில் பதிவு செய்யும்போதும் அல்லது பயன்படுத்தும்போதும் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்பச் சிக்கல்களையும் தடைகளையும் விரைவாகத் தீர்ப்பதே இதன் நோக்கமாகும்.
அதன்படி, வாகனப் பதிவின்போது எழும் எந்தவொரு சிக்கல்களுக்கும் உதவி பெற, 076 019 1919 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சேவை, முறைமையைப் பயன்படுத்துவது குறித்த வழிகாட்டுதலையும் தொழில்நுட்ப ஆதரவையும் வழங்குகிறது, மேலும் மோசடி நடவடிக்கைகள் அல்லது அமைப்பைத் தவறாகப் பயன்படுத்துபவர்களைப் பற்றியும் புகாரளிக்க முடியும்.
எரிபொருளுக்குப் பதிவு செய்ய, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளமான https://fuelpass.gov.lk/ ஐ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMF குழு 26ஆம் திகதி இலங்கை வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் ஜூலி கோசாக் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொள்கை ரீதியான கலந்துரையாடல்களுக்காக இலங்கை வரவுள்ள அந்த குழு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் 5வது மற்றும் 6வது மீளாய்வுகளை ஒன்றிணைத்து நிறைவு செய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாக அமைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது எவ்வித நிதி நெருக்கடியும் ஏற்படவில்லை
நாட்டில் தற்போது எவ்வித நிதி நெருக்கடியும் ஏற்படவில்லை என தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தட்டுப்பாடானது ஒரு வெளிப்புறக் காரணியினால் ஏற்பட்டதாகும்.
அரசாங்கம் இதனை மிகவும் வினைத்திறனுடன் முகாமைத்துவம் செய்து வருகின்றது.
நாட்டில் உள்நாட்டு ரீதியான நிதி நெருக்கடி ஒன்று காணப்படுமாயின், அரசாங்கத்தின் வருமானம் குறைந்திருக்க வேண்டும் அல்லது திறைசேரியில் செலவுகளுக்குப் நிதியில்லாதிருக்க வேண்டும்.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமையானது தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கைகள், மோசடி மற்றும் ஊழல்களினால் ஏற்பட்டதாகும்.
ஆனால், தற்போதைய நிலைமை ஒரு வெளிப்புற விநியோகச் சங்கிலி நெருக்கடியாகும்.
இந்த இரண்டையும் ஒன்றாக இணைக்க வேண்டாம் என தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நெருக்கடிக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுப்பு
மக்கள் நலனுக்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சியினரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், மலையகச் சமூகத்தின் கல்வியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளில் ஆசிரியர் வெற்றிடங்களே பிரதானமானவை எனக் குறிப்பிட்டார்.
நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் 23,000 இற்கும் அதிகமான ஆசிரியர்களைச் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் மாவட்ட ரீதியான கலந்துரையாடல்களின் போது இவை குறித்துக் கூடுதல் கவனம் செலுத்தித் துரித தீர்வுகள் எட்டப்படும்.
உலகளாவிய தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளிலிருந்து நாடு மீண்டு, மீண்டும் மூச்சுவிடத் தொடங்கியுள்ள ஒரு தருணத்திலேயே தற்போதைய நெருக்கடி உருவாகியுள்ளது.
இவ்வாறான நிலையில் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் பங்களிப்பு குறித்து அவர்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் வீணான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் இயலாமை மற்றும் இராஜதந்திரத் தோல்விகள் போன்ற போலி விம்பங்களை உருவாக்கி மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தைத் தூண்டி வருகின்றனர்.
ஜனநாயகத் தேர்தல் முறையினூடாகக் கொள்கைகளை முன்வைத்து மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்குப் பதிலாக, நாடு அழிவுப்பாதைக்குச் சென்றாலும் பரவாயில்லை என்ற நோக்கில் அதிகாரத்தைப் பறிக்க எதிர்க்கட்சி முயல்கிறது.
நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளி, பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்த தரப்பினரே, கடந்த காலங்களில் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணைகளிலிருந்து தப்புவதற்காக, மக்களால் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்வதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
Thursday, March 19, 2026



