Our Feeds



Friday, February 20, 2026

Zameera

மின் கம்பியில் சிக்கி நபரொருவர் உயிரிழப்பு


மஹியங்கனை, மெதஓயா பகுதியில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின் கம்பியில் சிக்கி நேற்று (19) நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

விவசாய நடவடிக்கைகளுக்காக தனது வயலில் இருந்தபோது, அந்தப் பகுதி முழுவதும் இழுக்கப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத கம்பியில் சிக்குண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விலங்குகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க இந்த சட்டவிரோத மின் கம்பி அமைக்கப்பட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கம்பியை பொருத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Sri Lanka

அமெரிக்க விமானம் தாக்கி கப்பலை அழிக்கும் ஈரானின் ஆயுதம் ஆபத்தானது - காமனீ ட்ரம்புக்கு எச்சரிக்கை.


அமெரிக்க விமானம் தாக்கி கப்பலை அழிக்கும் ஈரானின் ஆயுதம் ஆபத்தானது - காமனீ ட்ரம்புக்கு எச்சரிக்கை.





Zameera

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதியால் 10,000 கோடி ரூபாய் நட்டம்


 தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையினால் நாட்டிற்கு 10,000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தரம் குறைந்த நிலக்கரிகேள்விப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்குப் போதுமான ஏற்பாடுகள் இருந்தபோதிலும், அதனை இரத்து செய்யாமை பாரதூரமான விடயமாகும்.

ஒப்பந்தத்தின்படி இரண்டு நிலக்கரி கப்பல்கள் வராவிட்டால் அந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

டிசம்பர் மாதம் ஒரு கப்பலும், ஜனவரியில் நான்கு கப்பல்களும் மட்டுமே வந்துள்ளன.

பெப்ரவரி மாதத்தில் இதுவரை நான்கு கப்பல்களே வந்துள்ளன. 

மொத்தம் 15 கப்பல்கள் வந்திருக்க வேண்டிய நிலையில் இதுவரை 8 கப்பல்களே வந்துள்ளன. 

இந்தக் கப்பல் தாமதத்தினால் மட்டும் நாட்டிற்கு 31 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

தரம் குறைந்த நிலக்கரி கேள்வி பத்திரத்தால் இதுவரை 7,500 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

இது 10,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்கும் என டி.வி. சானக்க தெரிவித்தார்.

Sri Lanka

புனித மஸ்ஜிதுல் அக்ஸாவில் ஜூம்ஆ தொழுகைக்கு தடை | அநியாயம் செய்கிறது இஸ்ரேல்




புனித ரமழான் மாத நோன்பு உலகம் முழுவதும் நோற்க்கப்பட்டு வரும் நிலையில், இன்று ரமழான் மாத முதலாவது வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்காக பாலஸ்தீனத்தின் புனித மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு சென்ற பாலஸ்தீன முஸ்லிம்களை ஜூம்ஆவுக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி அநியாயம் செய்தது இஸ்ரேல். 


காஸாவில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற பாரிய யுத்தத்தில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீன அப்பாவிகளை கொன்று குவித்த இஸ்ரேல் மேற்க்குக் கரை பகுதியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன அப்பாவிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் புனித ரமழான் மாதத்தில் மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு செல்ல விடாமல் தடுத்து அநியாயத்தில் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம். 
SHAHNI RAMEES

'பாதாள உலகக் கோஷ்டியினருடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் விபரங்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படும்!'

 


'கெஹெல்பத்தர பத்மே' உள்ளிட்ட பாதாள உலகக்

Zameera

அனுஷ பெல்பிட்டவுக்கு பிணை


 முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டிய சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


 

Zameera

யாழ்ப்பாண விமான நிலைய அபிவிருத்தி ஆய்வு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறவிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் குழுவொன்று பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (20) விஜயம் செய்துள்ளது.

குறித்த விஜயத்தில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதி அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் அமைச்சின் பிற தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பு.கஜிந்தன்

 

Zameera

போதை மாத்திரைகளுடன் பாலத்துறையில் ஒருவர் கைது


 ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர், மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினரால் நேற்று (19) மாலை கொழும்பு பாலத்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 


குறித்த சந்தேக நபரிடமிருந்து 21,000 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 


இவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 30 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. 


மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவின் இரண்டாம் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் அத்துல பாலசூரிய உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கிராண்ட்பாஸ் பகுதியில் சோதனையிடச் சென்றபோது கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 


போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் பாலத்துறை பகுதியில் உள்ள வீட்டிற்கு வரவுள்ளதாக அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


அதற்கமைய, பதுங்கியிருந்த பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரை மாத்திரை தொகுதியுடன் கைது செய்துள்ளனர். 


அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த மாத்திரைகளை மொத்தமாகப் பல்வேறு நபர்களுக்கு விநியோகித்து வந்தமை தெரியவந்துள்ளது. 


கைது செய்யப்பட்டவர் 54 வயதுடையவர் என்பதோடு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 


மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 

Zameera

எல்லா அரசினாலும் புறக்கணிக்கப்படுகின்றோம் - செ.நிலாந்தன்


 மட்டக்களப்பு மாவட்ட தளவாய் வட்டாரம், வீதி அபிவிருத்தி விடயங்களில் எல்லா அரசினாலும் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவதாக ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் 19ஆவது அமர்வில் கலந்து கொண்ட உரையாற்றியபோது அவர் இது குறித்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அதிகூடிய வீதிகளைக் கொண்ட வட்டாரமாக தளவாய் வட்டாரம் காணப்படுகின்றது. ஆனால் வீதி அபிவிருத்தி திட்டங்களில் தளவாய் வட்டாரம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.

செங்கலடி - 01, ஐயன்கேணி, தளவாய் ஆகிய மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட தளவாய் வட்டாரத்தில் சுமார் 50 இக்கு மேற்பட்ட வீதிகள் காணப்படுகின்றது. இவற்றில் 30இக்கு மேற்பட்ட வீதிகள் மணல் வீதிகளாகவும், கிரவல் வீதிகளாகவும் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. இந்த வீதிகளை புனரமைப்பு செய்வதிலும், புதிதாக அமைப்பதிலும் எல்லா அரசுகளும் புறக்கணித்தே வந்துள்ளன. 

கடந்த ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி பிரதி அமைச்சர் இருந்தார். அப்போதைய அரசாங்கம் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததாக கூறினார்கள். மாவட்டத்தில் வீதிகளை புனரமைப்பு செய்வதற்கு வீதிகளை தேடித் தேடி புனரமைப்பு செய்ததாக கூறினார்கள் ஆனால் எனது வட்டாரத்தில் ஒரு வீதியைக் கூட புனரமைப்பு செய்யவில்லை. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதி கூடிய மக்கள் வாழும் எமது தளவாய் வட்டாரத்தில் வருடா வருடம் ஏற்படும் மழை வெள்ளத்தினால் அம்மக்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதுடன் இடம்பெயர்ந்து வரும் நிலையையே காணப்படுகின்றன.

திட்டமிடப்பட்டு வீதிகள் எதுவும் அமைக்கப்படுவதில்லை. பொதுமக்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலைமையில்தான் எல்லா வீதிகளும் காணப்படுகின்றது. வீதிகள் புனரமைப்பு செய்யும் போது வடிகால்கள் இல்லாமல் வீதிகளை புனரமைப்புச் செய்வதால் வெள்ள நீர் வழிந்தோடுவதற்கு வழியின்றி மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் நீர் செல்கின்றது. இதனால் மழைகாலங்களில் வீடுகளில் வசிக்க முடியாமல் பாடசாலைகளிலும், உறவினர் வீடுகளிலும் தங்க வேண்டிய அவலநிலை ஏற்படுகின்றது.

பிரதேச சபையில் போதிய நிதி இல்லாததால் வீதி புனரமைப்புகளை பிரதேச சபை ஊடாக மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. இதேவேளை மத்திய அரசு மாற்றும் மாகாண திணைக்களங்களும் எங்களை புறக்கணித்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்.

எனவே பாதிக்கப்பட்ட வட்டார மக்களின் பிரதிநிதி என்ற வகையில் எமது முன்மொழிவுகளை கருத்தில் கொண்டு எமது கிராம வீதிகளை புனரமைப்பு செய்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

சீலாமுனை நிருபர்


Zameera

ஆளுந்தரப்பு எம்.பி.க்களின் சம்பளம் குறித்து பிரதமர் விளக்கம்


 ‘‘ஆளுந்தரப்பு எம்.பிக்களின் மாதச் சம்பளம் மக்கள் விடுதலை முன்னணியின் நிதியத்துக்கு செல்கிறது என்பது ஒன்றும் புதிய விடயமல்ல. ஆளுந்தரப்பின் 159 எம்.பிக்களும் எப்படி வாழ்கிறார்கள் என்பதை என்னால் குறிப்பிட முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. அதில் எம்மால் அரசியல் தீர்மானங்கள் மற்றும் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது’’ என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட எம்.பி.சமிந்த விஜேசிறி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘‘ஒரு எம்.பிக்கு இன்றளவில் 54,285 ரூபா மாத சம்பளம், 1,000 ரூபா உபசரிப்பு கொடுப்பனவு, சாரதி கொடுப்பனவு 3,500 ரூபா, (பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக சாரதியை பெற்றுக்கொண்டால் பாராளுமன்றத்தின் ஊடாக 3,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது).

தொலைப்பேசி கொடுப்பனவு 50,000 ரூபா, போக்குவரத்து கொடுப்பனவு 15,000 ரூபா, அலுவலகக் கொடுப்பனவு 100,000 ரூபா, கூட்டத்துக்கான கொடுப்பனவு (நாள் ஒன்றுக்கு) 2,500 ரூபா, பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு 2,500 ரூபா (நாளொன்றுக்கு) பாராளுமன்ற குழுக்களில் கலந்துகொண்டால் 2,500 ரூபா (நாளொன்றுக்கு), பாராளுமன்ற கூட்டத்தொடர் அமர்வு இல்லாத நாட்களில் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டால் 2,500 ரூபா (நாளொன்றுக்கு) என்ற அடிப்படையில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.

அதேபோல் எம்.பிக்களின் தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு இடைப்பட்ட தூரத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுகிறது. தேசிய பட்டியல் உறுப்பினருக்கு மாதாந்தம் 419.76 லீற்றர் எரிபொருளுக்கான சந்தைப் பெறுமதிக்குரிய கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. நயன வாசலதிலக தமக்கு எம்.பிக்குரிய சம்பளம் வேண்டாம் என்று 2025.08.20ஆம் திகதியன்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு எழுத்துமூலமாக அறிவுறுத்தியுள்ளார். அதற்கமைய அவருக்கு அந்தக் கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை.

பிரதமர், சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் தலைவர், பிரதி குழுக்களின் தலைவர், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா ஆகியோர் எரிபொருள் கொடுப்பனவை பெறுவதில்லை.

ஆளுந்தரப்பின் 159 எம்.பிக்களினதும் மாதச் சம்பளம் ஜே.வி.பியின் நிதியத்துக்கு செல்கிறது என்பது ஒன்றும் புதிய விடயமல்ல. ஆளுந்தரப்பின் 159 எம்.பிக்களும் எப்படி வாழ்கிறார்கள் என்பதை என்னால் குறிப்பிட முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. அதில் எம்மால் அரசியல் தீர்மானங்கள் மற்றும் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது.

ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் நிதியம் பற்றி வெளிப்படையாக உங்களினால் குறிப்பிட முடியுமா? அவ்வாறு குறிப்பிட்டால் அது ஏனையவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்’’ என்றார்.

Zameera

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில்சார் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன


 தோட்டக் கம்பனிகள் ஒரு கையால் சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு, மறு கையால் தொழில்சார் உரிமைகளைப் பறித்துள்ளன. சம்பள அதிகரிப்பு குறித்து கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு எவ்வித சட்ட அதிகாரமும் இல்லை யென்று அந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சம்பள அதிகரிப்பை இடைநிறுத்தினால் எவரும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்ற நீதித்துறை திருத்தச் சட்டமூலம் மற்றும் நஞ்சுகள், அபீன் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தின்போதே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

‘‘எமது மக்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு நாங்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தற்போதைய சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் மற்றும் சரத்துக்கள் என்னவென்று நாங்கள் பலமுறை வினவியுள்ளோம். தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை தவிர்த்து விட்டு சம்பளம் வழங்குவது தவறு என்றே நாங்கள் குறிப்பிடுகிறோம்.

சம்பள அதிகரிப்புடன் முன்மொழிந்த இந்த ஒப்பந்தத்தில் தோட்டக் கம்பனிகள், பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் தொழில் அமைச்சின் செயலாளரும் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் பற்றி பல்வேறு தரப்பினர் கோரியுள்ள நிலையில் இதுவரையில் ஒப்பந்தம் வெளிப்படுத்தப்படவில்லை. நாங்களும் கேட்டோம் கிடைக்கவில்லை. தகவலறியும் உரிமைச்சட்டம் ஊடாக கேட்டும் அதனூடாகவும் கிடைக்கவில்லை.

முதலில் இது ஒரு ஒப்பந்தமே அல்ல, புரிந்துணர்வு உடன்படிக்கை மாத்திரமே. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் 4.1 பிரிவில் தோட்டத்தொழிலாளர்கள் 180 நாட்கள் கட்டாயம் சேவையில் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் சம்பள அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றபோது தோட்டக் கம்பனிகள் இதே 180 நாள் நிபந்தனையை முன்வைத்தன. நாங்கள் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

தோட்டத் தொழிலாளர்களை 180 நாட்கள் தொடர்ச்சியாக வேலை செய்ய வைத்தால் அவர்களை நிரந்தர வேலைக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதால் பெரும்பாலான தோட்டங்கள் 180 நாள் தொழில் வழங்காமல் 170 நாட்கள், 175 நாட்கள் என்ற அடிப்படையில் தொழில் வழங்கி, பின்னர் ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டதன் பின்னர் ஆரம்பத்தில் இருந்து வேலை வழங்கலை புதுப்பிக்கின்றன.

தற்போது 25 நாட்கள் கட்டாய வேலை என்று குறிப்பிடப்படுகிறது. எந்த தோட்டங்களுக்கும் தற்போது 25 நாட்கள் வேலை வழங்குவதில்லை. ஆகவே, இந்த 180 நாள் கட்டாய வேலை என்ற நிபந்தனைக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கக்கூடாது.

அதேபோல், உடன்படிக்கையில் 08ஆம் சரத்தில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு எவ்வித சட்ட அங்கீகாரமும் கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தற்போது வழங்கப்படும் சம்பள அதிகரிப்பை ஒரு காலத்தில் இடைநிறுத்தினால் எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது’’ என்றார்.

Zameera

கைதான பிரித்தானிய முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ விடுவிப்பு


 அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்- வின்சர், விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 


நேற்று (19) தேம்ஸ் வேலி பொலிஸார், நோர்போக்கில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும், பெர்க்சையர் மற்றும் நோர்போக்கில் உள்ள சில முகவரிகளில் சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தது. 


அண்ட்ரூவின் கைது குறித்துப் பதிலளித்த மூன்றாம் சார்ள்ஸ் மன்னர், சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்றும், பொலிஸாருக்கு தனது முழுமையான மற்றும் இதயப்பூர்வமான ஆதரவும் ஒத்துழைப்பும் உண்டு என்றும் தெரிவித்தார். 


மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டினுடனான தொடர்பு மற்றும் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக அண்ட்ரூவிடம் விசாரணை நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக பொலிஸ் முன்னதாகத் தெரிவித்திருந்தது. 


அமெரிக்க அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஆவணங்களின் தொகுப்பில் இவர்கள் இருவருக்கும் இடையிலான தொடர்பாடல்கள் இடம்பெற்றிருந்தன. 


எவ்வாறாயினும், அந்த நபர் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை தேம்ஸ் வேலி பொலிஸார் உறுதிப்படுத்தியது. 


இந்நிலையில் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிய முன்னாள் இளவரசர், வாகனத்தின் பின் இருக்கையில் சாய்ந்தபடி அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. 


அண்ட்ரூ கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். அவர் எந்தவொரு தவறும் செய்யவில்லை என்பதைத் தொடர்ந்து உறுதியாகவும் கடுமையாகவும் மறுத்து வருகிறார். 


ஒரு முழுமையான மதிப்பீட்டைத் தொடர்ந்து, தற்போது முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தேம்ஸ் வேலி பொலிஸார் தெரிவித்தது. 


மேலும், 2010 ஆம் ஆண்டில் அண்ட்ரூவுடன் பாலியல் ரீதியான சந்திப்பிற்காக எப்ஸ்டினால் இரண்டாவது பெண் ஒருவர் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார் என்ற தனிப்பட்ட குற்றச்சாட்டு குறித்தும் தாம் ஆராய்ந்து வருவதாக பெப்ரவரி தொடக்கத்தில் பொலிஸ் தெரிவித்திருந்தது. 


பிரித்தானியர் அல்லாத அந்தப் பெண், அந்தச் சமயத்தில் 20 வயதுகளில் இருந்துள்ளார். 


அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் கைது செய்யப்படுவதற்கு முன்னர், உள்துறை அமைச்சுக்கு தேம்ஸ் வேலி பொலிஸ் முன்கூட்டியே தகவல் வழங்கியிருந்ததாக பிபிசி செய்தி சேவை தகவல் வௌியிட்டுள்ளது. 


எவ்வாறாயினும் இடம்பெற்ற இந்தக் கைது நடவடிக்கை, பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, February 19, 2026

Zameera

கைதான 22 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நெடுந்தீவு கடற்பரப்பினுள் இரண்டு படகுகளுடன் 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட 12 கடற்தொழிலாளர்களையும் அவர்களின் படகினையும் மயிலிட்டி மீன்பிடித்துறை முகத்திற்கு கொண்டு வந்த கடற்படையினர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். 

இதனை அடுத்து குறித்த 12 மீனவர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதேவேளை, தலைமன்னார் கடற்பரப்பில் இன்று கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளின் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர் படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.