Our Feeds



Friday, June 19, 2026

Zameera

பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் - பிரதமர்

 

பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும். புதிய அரசியலமைப்பு மக்களின் அங்கீகாரத்துடன் எமது ஆட்சிக்குள் உருவாக்கப்படும்.


தற்போதைய நிலையில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் ஏழ்மை ஒழிப்புக்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.


சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் தனியார் தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிட்டதாவது,



நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு பல திருத்தங்களை உள்ளடக்கி முரண்பாடுகளை கொண்டதாகவே காணப்படுகிறது.புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதாக தேர்தல் கொள்கை பிரகடனத்தில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தோம் என்பதை நாங்கள் மறக்கவில்லை.


புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது பாரியதொரு பொறுப்பாகும். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அதற்கு விசேட முன்னுரிமை வழங்க முடியாத நிலைமை காணப்படுகிறது.


யாப்புருவாக்கத்தில் அனைத்து இன மக்களும் பங்காளிகளாக வேண்டும்.


ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டது.


அதன் பிரதிபலன் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.வழங்கிய வாக்குறுதிக்கமைய புதிய அரசியலமைப்பினை மக்களின் அங்கிகாரத்துடன் நிச்சயம் உருவாக்குவோம்.


பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எவ்வித மாற்றுக்கருத்துக்களும் கிடையாது.


அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் விசேட நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.அந்த குழுவின் பரிந்துரைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் முற்றாக நீக்கப்படும்.


நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கம் என்பது புதிய அரசியலமைப்புடன் தொடர்புடையது.


அரசியல் மற்றும் அரச நிர்வாக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை சிக்கல்களுக்கு புதிய அரசியலமைப்பு ஊடாக நிலையான தீர்வளிக்கப்படும் என்றார்.


-இராஜதுரை ஹஷான்

Zameera

செம்மணி புதைகுழியில் மேலும் 3 என்புக்கூடுகள் அகழ்வு; புதிதாக 7 என்புக்கூடுகள் அடையாளம்




 செம்மணி மனித புதைகுழியில் இருந்து 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை 03 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.


செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 29ஆம் நாள் அகழ்வு பணிகள் வெள்ளிக்கிழமை (19) நடைபெற்றது.


அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 394 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 370என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.


வெள்ளிக்கிழமை (19) நீதி அமைச்சர் உள்ளிட்ட விசேட குழுவினர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் ஆணையாளர்கள் உள்ளிட்ட குழுவினரும் புதைகுழி  அகழ்வு பணிகளை பார்வையிட்டனர்.

Zameera

கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான "குஷ்" போதைப்பொருளுடன் ஒருவர் கைது


 ரூபாய் ஏழு கோடியே ஐம்பது லட்சம் பெறுமதியான "குஷ்" போதைப்பொருள் தொகையை நாட்டுக்குள் கடத்தி வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 


சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த இவரிடம் நடத்திய சோதனையின் போது, அவரது பயணப் பையினுள் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 07 கிலோ 500 கிராம் "குஷ்" போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 


சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Zameera

இலங்கைக்கு 104 புதிய மெட்ரோ பேருந்துகள்


 நாட்டின் பொதுப் போக்குவரத்துச் சேவையை மிகவும் திறமையானதாகவும், தரமானதாகவும் மாற்றுவதற்காக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள 104 புதிய 'மெட்ரோ' பேருந்துகளை நாட்டுக்கு அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளன. 


சீனாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஃபொட்டோன் இன்டர்நேஷனல் கோர்ப்பரேஷன் (Foton International Corporation) நிறுவனத்திடமிருந்து இப்பேருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. 


இப்பேருந்துகளின் தொழில்நுட்ப நிலைமைகளை ஆராய்வதற்கும், இலங்கையின் வீதி அமைப்புக்கு ஏற்றவாறு அவற்றை மேலும் வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்வதற்கும் மெட்ரோ ட்ரான்ஸிட் (Metro Transit) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் தற்போது சீனாவின் ஃபொட்டோன் தொழிற்சாலைக்குச் சென்றுள்ளனர். 


அங்கு அந்த நிறுவனத்தின் உற்பத்தி வரலாறு, சீனாவில் மெட்ரோ பேருந்து சேவை இயங்கும் விதம் மற்றும் மெட்ரோ பேருந்து வடிவமைப்பு அமைப்பின் செயல்பாடு குறித்து விரிவாக ஆராய்வதற்கு இலங்கை தூதுக்குழுவினருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 


இந்த புதிய மெட்ரோ பேருந்துகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் கடந்த மே மாதம் கையெழுத்திடப்பட்டதுடன், அந்த ஒப்பந்தத்தின்படி 104 பேருந்துகளும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன. 


இதேவேளை, இப்பேருந்து சேவைகளை மையமாகக் கொண்டு மேல் மாகாணத்தில் கடவத்தை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் புதிய மெட்ரோ சேவை முனையங்களை அமைக்கும் பணிகளும் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Zameera

லங்கா உப்பு நிறுவனத்தின் பொது முகாமையாளருக்கு பிணை


 இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (19) கைதுசெய்யப்பட்டுள்ள லங்கா உப்பு நிறுவனத்தின் பொது முகாமையாளர் ரத்நாயக்க முதியன்சேலாகே குணரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி, சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்லவும் வெளிநாட்டுப் பயணத்தடையும் விதித்தும் அவரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

Zameera

சஷிந்திர ராஜபக்‌ஷ உட்பட மூவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல்

(எம்.எப்.எம்.பஸீர், செ.சுபதர்ஷனி)


முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்‌ஷ உட்பட மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. 


மே 9 வன்முறையின்போது மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான செவனகல, கிரியிப்பன்கடவ பகுதியில் உள்ள சேதமடைந்த சொத்துகளுக்கு, தனது அதிகாரத்தை பயன்படுத்தி இழப்பீடாக 88 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை பெற்று மோசடி செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்‌ஷ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்  இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.


இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிகையில் சஷீந்திர ராஜபக்ஷ, சேபாலிகா சமன்குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கொடகம ஆகியோர் பிரதிவாதிகளாக பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.



இத்தோடு மேற்படி வழக்கின் பிரதிவாதிகளுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், சாட்சியாளர்களாக 30 பேரின் பெயர்களும், வழக்கு பொருட்களாக 38 ஆவணங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.


மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான செவனகல, கிரியிப்பன்வெவ பகுதியில் அமைந்துள்ள அரச காணியொன்றில், சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டடம் உள்ளிட்ட சொத்துக்கள், கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி ஏற்பட்ட 'அரகலய' போராட்டத்தின் போது சேதமடைந்திருந்தன.


குறித்த சொத்துக்களுக்காக இழப்பீடு வழங்குவது நிராகரிக்கப்பட்டிருந்த பின்னணியில், அதற்கு முரணான வகையில் இழப்பீட்டுக்கான காரியாலயத்துடன் இணைக்கப்பட்டிருந்த சில அரசாங்க அதிகாரிகளுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தம் பிரயோகித்து, 8,850,000 ரூபா பணத்தை இழப்பீடாகப் பெற்றுக்கொண்டதன் மூலம் ஊழல் புரிந்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்ததாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

 

Zameera

தடுப்பூசி இல்லாத வைரஸ் திரிபு உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல்!


 கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு மாகாணங்களில் 17-வது எபோலா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருவதை உலக சுகாதார ஸ்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. தீவிர ஆயுத மோதல்கள், உட்கட்டமைப்பு வசதி இல்லாமை மற்றும் தற்போதைய திரிபுக்குத் தடுப்பூசி இல்லாத நிலை ஆகியவற்றால் இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது உலகளாவிய சவாலாக மாறியுள்ளது.


கடந்த மே 15 ஆம் திகதி கொங்கோ அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த எபோலா பரவல், அதற்கு பல வாரங்களுக்கு முன்பிருந்தே சுரங்க நகரமான மொங்ப்வாலு போன்ற பகுதிகளில் "மர்ம நோய்" என்ற பெயரில் பரவி வந்துள்ளது.


முந்தைய எபோலா வெடிப்புகள் 'ஜைர்' என்ற வைரஸ் திரிபு மூலம் ஏற்பட்டவை, அதற்கென 2018-2019 காலப்பகுதியில் பிரத்யேக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டன. ஆனால், தற்போதைய 17-வது அலை 'புண்டிபுக்யோ' எனப்படும் மிகவும் அரிய வகை எபோலா திரிபினால் ஏற்பட்டுள்ளது.


இந்த புண்டிபுக்யோ திரிபுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட வைரஸ் எதிர்ப்பு மருந்தோ உலகிலேயே இல்லை.


ஆரம்பத்தில் இதன் அறிகுறிகள் மலேரியா, டைபாய்ட் அல்லது மஞ்சள் காய்ச்சல் போலக் காட்சியளிப்பதால் வைத்தியர்கள் குழப்பமடைந்தனர். மேலும், உள்ளூர் ஆய்வகங்களால் 'ஜைர்' திரிபை மட்டுமே கண்டறிய முடிந்ததால், இந்தத் தொற்றை ஆரம்பத்தில் உறுதிப்படுத்த முடியாமல் போனது.



கொங்கோவின் இட்டூரி மாகாணத்தை மையமாகக் கொண்டு பரவிய இந்த வைரஸ், தற்போது எல்லை கடந்து அண்டை நாடான உகாண்டாவின் தலைநகர் கம்பாலா வரை பரவியுள்ளது.  


ஆபிரிக்கா நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தற்போதைய புள்ளிவிபரங்களின்படி, கொங்கோவில் இதுவரை 890-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 230-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 


உகாண்டாவிலும் 19 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதன் தீவிரத்தன்மை மற்றும் பரவல் வேகம் காரணமாக, உலக சுகாதார ஸ்தாபனம் இதனை 'சர்வதேச கவலைக்குரிய பொதுச் சுகாதார அவசரநிலை' ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளது.


தொற்றுப் பரவலின் மையப்பகுதியான இட்டூரி, ஐஎஸ் பயங்கரவாத அமைப்போடு தொடர்புடைய ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால், மருத்துவக் குழுக்களால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குச் செல்ல முடிவதில்லை.


அரசு மற்றும் நவீன வைத்தியம் மீது நம்பிக்கையற்ற உள்ளூர் மக்கள், எபோலாவை ஒரு "மந்திர நோய்" என நம்பி பாரம்பரிய வைத்தியர்களிடம் செல்கின்றனர். வைத்தியசாலைகளில் உயிரிழப்போரின் உடல்களை உறவினர்கள் வலுக்கட்டாயமாக வீட்டிற்கு எடுத்துச் செல்வதால் தொற்றுப் பரவல் பல மடங்கு அதிகரிக்கிறது.


பாதுகாப்பு உடைகள் இன்றி மோட்டார் சைக்கிள் டாக்சிகளில் நோயாளிகள் அழைத்து வரப்படுகின்றனர். மேலும் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் சர்வதேச மருத்துவ உதவிகள் வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


எவ்வாறாயினும், புண்டிபுக்யோ திரிபுக்கான புதிய தடுப்பூசிகளின் மருத்துவப் பரிசோதனைகள்  தீவிரமாக நடந்து வருவதாகவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிய தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரலாம் என்றும் ஆபிரிக்கா நோய் கட்டுப்பாட்டு மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Admin

புனித குர்ஆன் பிரதிகளை விடுவிக்கக் கோரி பாதுகாப்பு அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் | முஸ்லிம் கலாசார திணைக்கள பணிப்பாளர் தெரிவிப்பு



சவுதி அரேபியாவிலிருந்து அனுப்பப்பட்ட குர்ஆன் பிரதிகள் மீளாய்வுக்குழு உலமாக்களினால் 2 வருடங்களாக தடுக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் குர்ஆன் பிரதிகளை விடுவிக்க மீளாய்வுக்குழு அனுமதி கடிதம் வழங்கியதை தொடர்ந்து முஸ்லிம் கலாசார திணைக்களம் சார்பில் பாதுகாப்பு அமைச்சிடம் குர்ஆன் பிரதிகளை விடுவிக்குமாறு கோரி கடிதம் அனுப்பியுள்ளதாக பணிப்பாளர் நவாஸ் தெரிவித்துள்ளார். 


சமூக செயல்பாட்டாளர் சகோதரர் ரஸ்மின் மற்றும் ஊடகவியலாளர் சகோதரர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் திணைக்களத்திற்கு நேரில் சென்று விசாரித்த போது பணிப்பாளர் அவர்கள் மேற்கண்ட தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். 


இது தொடர்பில் சகோதரர் ரஸ்மின் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ள விரிவான கருத்துக்கள் இதோ.


தடுக்கப்பட்டுள்ள குர்ஆன் பிரதிகளை விடுவிப்பது பற்றிய தொடர் செயல்பாட்டின் அங்கமாக முஸ்லிம் கலாசார திணைக்கள பணிப்பாளர் சகோதரர் நவாஸ் உள்ளிட்ட அதிகாரிகளை நானும் சகோதரர் Mahusooq Abdur Rahman அவர்களும் நேரில் சந்தித்து கலந்துரையாடினோம். 


சுமார் 2 வருடங்களுக்கு மேல் ரிவீவ் கமிட்டி - மீளாய்வுக் குழுவின் பரிந்துரையின் காரணமாக குர்ஆன் பிரதிகள் தடுக்கப்பட்டிருக்கும் நிலையில் மீளாய்வுக் குழு 2 வருடங்களின் பின் கடந்த வாரம் அவற்றை விடுவிக்க தமக்கு ஆட்சேபனை இல்லையென கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அடுத்த கட்டமாக  Department of Muslim Religious and Cultural Affairs - முஸ்லிம் கலாசார திணைக்களம் பாதுகாப்பு அமைச்சு மூலம் அவற்றை விடுவிப்பதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதால் அது தொடர்பில் கலாசார திணைக்களம் எடுத்துள்ள முயற்சிகள் பற்றி பணிப்பாளரிடம் கேட்டோம்.


ரிவீவ் கமிட்டி - மீளாய்வுக்குழு வின் கடிதம் கிடைத்தவுடன் பாதுகாப்பு அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சுகளுக்கு முஸ்லிம் கலாசார திணைக்களம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்காக தம்மால் முடிந்த அனைத்து வழிகளிலும் முயற்சிப்பதாகவும் பணிப்பாளர் நவாஸ் மற்றும் அதிகாரிகள் விளக்கமளித்தனர். 


ரிவீவ் கமிட்டி எனும் பெயரில் செயல்பட்ட சில உலமாக்களின் தவறான அனுகுமுறைகளினால் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தடுக்கப்பட்டுள்ள புனித குர்ஆன் பிரதிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்கான எல்லா முயற்சிகளையும் பல தரப்பிலும் செய்து வருகிறோம். இன்ஷா அல்லாஹ் முயற்சி கைகூடி குர்ஆன் பிரதிகள் நம் கரம் சேர அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரர்களே.

Zameera

லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளர் கைது


 லங்கா உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ரத்நாயக்க முதியன்சலாகே குணரத்ன இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 


முறையான கொள்முதல் செயன்முறையின்றி,விடுக்கப்பட்ட மீள் கொள்வனவு ஒன்றின் மூலம் ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்திற்கு பொதியிடல் உறைகளைப் பெற்றுக்கொண்டதன் ஊடாக, அரசாங்கத்திற்கு சுமார் ஒரு கோடியே நாற்பத்து மூன்று இலட்சம் ரூபாய் நஷ்டத்தை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இதனால் பிரதான விநியோகஸ்தர் நிறுவனம் அநியாயமான முறையில் இலாபம் ஈட்டுவதற்கு வழிவகுத்துள்ளதாக குற்றஞ்சாட்டியே அவர் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார். 


கைதான சந்தேகநபரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Zameera

சமிந்த குலரத்னவின் மனு ஜூலையில் விசாரணைக்கு


 தம்மை பணிநீக்கம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி, பாராளுமன்ற பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் சபாநாயகர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இந்த மனு இன்றைய தினம் (19) தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் அழைக்கப்பட்டது. 


இதன்போது மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், இந்த மனு தொடர்பான காரணங்களை உறுதிப்படுத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார். 


அதேவேளை, குறித்த மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள சபாநாயகர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே. கணக-ஈஸ்வரன் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், இந்த மனுவைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துத் தாம் நீதிமன்றத்தில் ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை முன்வைப்பதாகத் தெரிவித்தார்.

Zameera

சுவிட்சர்லாந்தில் இடம்பெறவிருந்த அமைதி பேச்சுவார்த்தை திடீரென ரத்து


 அமெரிக்காவுக்கும் - ஈரானுக்கும் இடையே சுவிட்சர்லாந்தில் இன்று (19) இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 


சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. 


குறித்த பேச்சுவார்த்தை பர்கன்ஸ்டாக் மலை உச்சியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தெஹ்ரானுக்கும், வொஷிங்டனுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று ஆரம்பமாகவிருந்தது. 


சுவிட்சர்லாந்தில் ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்த பயணத்திலிருந்து அமெரிக்கத் உப ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் பின்வாங்கியுள்ளதாக வௌ்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் நேற்றிரவு தெரிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

SHAHNI RAMEES

முஸ்லிம் ஊடகங்கள் தொடர்பான பிரதியமைச்சர் முனீர் முளப்பரின் பாராளுமன்ற உரைக்கு முஸ்லிம் மீடியா போரம் அதிருப்தி!

 


முஸ்லிம் ஊடகங்கள் தொடர்பான பாராளுமன்ற உரைக்கு அதிருப்தி!

Zameera

பெண் சடலமாக மீட்பு: சந்தேக நபரை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்


 (நுவரெலியா நிருபர்)


நுவரெலியா நகரில் உள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில், கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காணப்பட்ட காரிலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட பெண் (வயது 33), அம்பாறை வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த  உடற்பயிற்சி நிபுணர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தொடர்பான சிசிடிவி மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நுவரெலியா பொலிஸார், சந்தேக நபர் பற்றிய விபரங்களை தெரிவித்து உதவுமாறு கோரியுள்ளனர். 


நுவரெலியா நகரில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர், கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் இருந்த காரிலிருந்து  நேற்று புதன்கிழமை (17) மாலை சடலமாக கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  


அந்தப் பெண், நுவரெலியாவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் பல நாட்கள் இரண்டு முறை தங்கியிருந்தமையும் நுவரெலியா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


பெண்ணுடன் தனியார் விடுதியில் தங்கியிருந்த நபரே இந்த மரணத்துடன் தொடர்புடையவர் என பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகிறது.


சந்தேக நபர் கடந்த செவ்வாய்க்கிழமை (2) அந்த இளம்பெண்ணுடன் விடுதிக்குச் சென்று, புதன்கிழமை (10) விடுதியிலிருந்து வெளியே சென்றுள்ளார். 


அதன் பின்னர் செவ்வாய்க்கிழமை (16) அந்த பெண் மாத்திரம் தனியாக விடுதிக்கு சென்றுள்ளார். அதனையடுத்து, நேற்று புதன்கிழமை (17) இரவு 9 மணியளவில், சந்தேக நபர் வாடகைக் காரில் விடுதிக்கு சென்று, தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று விடுதிப் பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவித்து, அந்தப் பெண்ணை தூக்கிக்கொண்டு சென்று, காரில் ஏற்றிப் புறப்பட்டுள்ளார். 


விடுதியிலிருந்து காரில் புறப்படுவதற்கு முன் விடுதிக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இந்த சம்பவம் குறித்து விடுதிப் பாதுகாப்பு அதிகாரி பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.


அதனையடுத்து, விசாரணை நடத்திவரும் நுவரெலியா பொலிஸார் கூறுகையில், உயிரிழந்த பெண், அம்பாறை வைத்தியசாலையில் உடற்பயிற்சி நிபுணராக பணியாற்றி வந்ததாகவும் அவர் வெலிகம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். 


2023 முதல் மருத்துவமனையில் அந்தப் பெண் பணியாற்றிவிட்டு வெளிநாடு செல்லவிருப்பதாகக் கூறி, தனது வேலையை ராஜினாமா செய்வதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகச் பொலிஸார் தெரிவித்தனர்.


அவரது காதலரான சந்தேக நபர் கன்னொருவவைச் சேர்ந்த 35 வயதான டி.எம்.எஸ். தினெத் திசநாயக்க, தனது காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு அப்பெண்ணைக் கொலை செய்து, அவரை  விடுதியிலிருந்து வெளியே கொண்டுசென்று,  அவரது உடலை ஒரு காரில் ஏற்றி, கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் இருந்த காரில் விட்டுச் சென்றதன் பின்னர், இது தொடர்பாக தெல்தெனிய பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.


காதலனான சந்தேக நபர் அப்பெண்ணின் முகத்தை மூடியபடி அவரைத் தூக்கிச் செல்லும் காட்சி விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.


எனினும், அந்தப் பெண்ணுடன் நுவரெலியாவில் உள்ள தனியார் விடுதிக்குச் சென்ற சந்தேக நபரை இதுவரை கைது செய்யவில்லை எனவும் இது தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தி வருவதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.


அதனைத் தொடர்ந்து, சந்தேக நபரின் புகைப்படங்களை நுவரெலியா பொலிஸார்  வெளியிட்டு, சந்தேக நபர் குறித்து தகவல் அறிந்தவர்கள், நுவரெலியா பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தன பஸ்நாயக்க நுவரெலியா பொலிஸ் நிலையத்தின்  பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பெடுத்து தகவல் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.


071- 8591096 - உதவி பொலிஸ் கண்காணிப்பாளர், நுவரெலியா


071- 8591097 - தலைமையக பொலிஸ் பிரதம ஆய்வாளர், நுவரெலியா